Friday, October 17, 2025

வள்ளுவன் கள்வன்*

 வள்ளுவன் கள்வன்*

————————————---



காமம் என்பது பழந்தமிழில் காதலைக் குறித்தது. திருக்குறள் மூன்றாம் பாலின் சொல்லாட்சி எண்ணிக்கையில் வாக்கெடுப்பு நடத்தினால் இன்பத்துப்பாலைக் காமத்துப்பால் வெல்லும். 


காமத்துப்பாலுக்கு உரை கண்ட பண்டையோர்,   கூற்று கேட்போர் என்னும் அகப்பொருள் மரபு பேணுவர். இங்கு இலக்கியச் சுவைக்கு இடையூறின்றிப் பொதுப் பொருள் கொண்டால் போதும்.


காலம் சார்ந்து மரபு பேணும் குறள் , காலங்கடந்தும் வென்று நிற்பதற்கு இவ்வாறு பொதுமைக்கு இடந்தருவதும் காரணம்.


தமிழ்ச் சமூக வரலாற்றில் வள்ளுவர் காலத்தில் நேர்ந்த மாறுதலைத் தெரிந்துகொண்டு நகர்வோம்.


பழந்தமிழ்ச் சமூகத்தில் பரத்தமை புறத்தொழுக்கம் என்று சற்றே ஒதுக்கிவைக்கப்பட்டாலும் , சமூகத்திற்கு முரணானதென்று விலக்கிவைக்கப்படவில்லை. 


அகப்பொருள் மரபில் பரத்தையிற் பிரிவுக்கு இலக்கண ஏற்பு உண்டு. அகப் பாடல்களில் பரத்தமையே  ஊடலுக்குக் காரணமாயிருந்தது.


அவ்வாறே பழந்தமிழ்ச் சமூகத்தில் கள் ஒழுக்கக்கேடாகக் கருதப்படாதது மட்டுமன்று ; வளத்தின் அடையாளமாகவே கொள்ளப்பட்டது.


மாறாக வள்ளுவர் கள்ளையும் பரத்தமையையும் கடுமையாகக் கண்டித்தார்.


அகப்பொருள் மரபின் தொடர்ச்சியைப் பேணிய வள்ளுவர் காதல் இன்பத்தில் ஊடலுக்கு இன்றியமையா இடமுண்டு என ஏற்றார் ;  ஆனால்,  காரணத்தை மாற்றினார் ; இல்லாத புறத்தொழுக்கம் இருப்பது போன்ற புனைவுகளால் ஊடலை உருவாக்கி இலக்கிய நயத்தை மிகுவித்தார்.


நாடக வழக்காக - வெறும் மரபாகக் கூட - பரத்தமையை அவர் அனுமதிக்கவில்லை.


ஆனால் கள்ளும் களிப்பும் உவமை என்கிற சாக்கில் உள்ளே நுழைந்துவிட்டன.


 ' உயர்ந்ததன் மேற்றே உள்ளுங்காலை ' (தொல். உவமையியல், 3)என்னும் உவம இலக்கண மரபு பிறழாமல் ,  ' தம்மில் இருந்து தமதுபாத் துண்ணல் ' (1107), ' அறிதோ றறியாமை காணல் ' (1110)  முதலிய மேன்மைகளைக் காதல் இன்பத்திற்கு , உவமையாக்கிய வள்ளுவரா இவர் !  மதுவின் இழிவுகளை வகைவகையாகக் கூறி மதுவிலக்கை வலியுறுத்திய வள்ளுவரா இப்படி! என்று நாம் கருதும்படியான உவமைகளை அவரிடம் காணமுடிகிறது.


           இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்

           கள்ளற்றே கள்வநின் மார்பு (1288)


பிறர் இகழ்வார்கள்  என்று தெரிந்தும்  குடிகாரர்கள் மதுவை மீண்டும் மீண்டும் அருந்த விரும்புகிறார்கள். தன் நாணம் முதலியவற்றை நெகிழச்செய்து, காதலன் மார்பு  மீண்டும் மீண்டும் தழுவத் தூண்டுகிறது என்கிறாள் காதலி.


             உண்டார்கண் அல்லது அடுநறா, காமம்போல்

             கண்டார் மகிழ் செய்தல் இன்று (1090)

      

அடு நறா  – வடித்தெடுத்த மது.  அந்த மது உண்டால் போதை தரும். காதல் கண்டாலே போதை தரும் என்கிறார் ; ஒருபடி மேலேபோய்,


               உள்ளினும் தீராப் பெரு மகிழ் செய்தலால்

               கள்ளினும் காமம் இனிது ( 1201)

         

கள் உண்டால்தான் களிப்பை – போதையைத் தரும் . ஆனால் காதலில் நினைவே களிப்பைத் தரும். எனவே கள்ளை விடவும் காதல் இனியது என்கிறார் (கள் இனிது என்று ஏற்றால்தான் கள்ளினும் இனிது என்று கூறமுடியும் ! )


இந்தக் குறள் இரண்டையும் இணைத்து ஒரு குறளாக்குகிறார்.


                உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்

                கள்ளுக்கில் காமத்திற் குண்டு (1281)

  

நினைத்தால் களிப்பு, கண்டால் மகிழ்ச்சி. இரண்டும் காதலில் உண்டு; கள்ளுக்கு இல்லை என்கிறார்.


          'களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்

          வெளிப்படுந் தோறும் இனிது  ( அலர் அறிவுறுத்தல் 1145)


களிப்பு (போதை) ஏற ஏற மதுவை விரும்புதல் போலக் காதல் இருவரிடத்தும் புலப்படப் புலப்பட இனிமை தரும்[ பண்டை உரையாசிரியர்கள் அலர் வெளிப்படுதலோடு தொடர்பு படுத்துவார்கள். அது மரபு ]


வள்ளுவர் கள்ளை , களிப்பைக் கடிதலில் கண்டிப்புடையவர்தான்  என்றாலும் 

காதல் மயக்கத்தைத் துல்லியமாக உணர்த்த ,  கள் தரும் இன்பத்தை, மகிழ்ச்சியை ஒப்புக்கொள்வதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை போலும்.


இங்குதான் அவர் முற்றிலும் இலக்கியப் படைப்பாளராக மிளிர்கிறார். காமத்துப்பால் காதற் பொருளால் மட்டுமன்றிக் காதலைக் காட்டும் முறையாலும் இலக்கியமாகிறது.


ஆம். திருக்குறள் ஓர் அற இலக்கியம் ; வெறும் அறநூல் மட்டுமன்று . 


* தலைப்புக்கு நன்றி கவிஞர் சேரன் !


( எழுத்தாக்கத்திற்காகச் சில மாறுதல்கள் செய்யப்பட்ட , வானொலி உரையின் பகுதி)

இருபதாம் நூற்றாண்டின் ஒரு தனிக் ' கோவை '

 இருபதாம் நூற்றாண்டின் 

ஒரு தனிக் ' கோவை '


சிலம்பு நா. செல்வராசு அவர்களின் 'இருபதாம் நூற்றாண்டுச் சிற்றிலக்கியங்கள்' - என்னும் நூலைப் படித்தபோது, அப்பாவின் ' கரந்தைக் கோவை ' தான் இருபதாம் நூற்றாண்டின் ஒரே கோவை இலக்கியம் என அறிந்தேன்.


செல்வராசு , இருபதாம் நூற்றாண்டில் கோவை நூல் இயற்றப்படவில்லை என்கிறார்.அவர்பார்வையில் அப்பாவின் கோவை படாததற்கு அவரைக் குறை சொல்ல முடியாது.


அதிலிருந்துதான் அப்பாவின் கோவை ஒன்று மட்டுமே இருபதாம் நூற்றாண்டின் கோவை என்னும் முடிவுக்கு வந்தேன். இருபதாம் நூற்றாண்டில் 400க்கு மேற்பட்ட துறைகளமைத்துக் கோவை பாடுதல் எளிதன்று. எனவே பிறர் யாரும் பாடியிருக்க இயலாதென்று உறுதியாக நம்புகிறேன்.


கோவை ஒரு சிற்றிலக்கிய வகை.

சிற்றிலக்கியங்களின் பொதுத்தன்மை , அவை ஒரு பாட்டுடைத்தலைவர் அல்லது தலம் முதலியவற்றைப் பலபடப் போற்றிப் புகழும் நோக்கின என்பதே . இந்த ஒற்றை மையம் காரணமாகச் சிற்றிலக்கியம் எனல் பொருந்தும். 


பாராட்டுக்குரியவருக்கு மாலை, பூச்செண்டு, பொன்னாடை முதலியன அணிவித்துப் போற்றும் மரபில் பாமாலையால் போற்றுவதும் அடங்கும்.


மாலை முதலியவற்றின் வேலைப்பாடு போன்றதுகோவை முதலியவற்றின் புலமைசான்ற செய்திறம்.இந்தச் செய்திறம் சார்ந்து அவற்றின் இலகிய மதிப்பு அமையும்.


நவீனக் கவிதை நோக்கில் அவற்றை மதிப்பிடக் கூடாது.சிற்றிலக்கியங்கள் கவித்துவத்தை விடவும் புலமைசால் செய்திறனுக்கே முதன்மை தந்தன.


தமிழ் நவீனக் கவிதை முன்னோடி பாரதிதானும் சிற்றிலக்கியம் புனைவதினின்றும் தப்பி விடவில்லை என்பதை உளங்கொள்ள வேண்டும்.


இந்தப் பின்னணியில் அப்பாவின் கரந்தைக் கோவையை மதிப்பிட்டால் ,  முதலிடத்தில் நிற்பது அதன் தங்கு தடையற்ற ஓட்டம் . மரபில் ஊறித் திளைத்தால் மட்டுமே இது வாய்க்கும்.


யாப்பு மரபிலமைந்த பா வடிவங்களின் உள்ளார்ந்த ஓசை உணராமல், புறநிலைப் பட்ட வெற்றுவிதிகளைக் கொண்டு சொற்களைக் கோக்கும்போது உரைநடையாகவே நின்று வற்றும்.


கரந்தைத் தமிழ்ச் சங்கத்தைப் பாட்டுடைத் தலமாகக் கொண்டு , தம் நன்றியறிதலைப் புலப்படுத்திப் போற்றும் வண்ணம் 469 கட்டளைக் கலித்துறைப் பாடல்களால் - தலைவன் தலைவியின் காதல் நிகழ்ட்சிகளின் தொகுப்பாக - ஆனது இக்கோவை. அத்தனை பாடல்களும் மரபார்ந்த ஓசையும் ஓட்டமும் குன்றாதவை.


கரந்தைத் தமிழ்ச் சங்கம், கல்லூரி, சங்கத்தின் தமிழுணர்வு, தமிழ்ப் பணிகள்,  சங்கத்தோடு தொடர்புடைய சான்றோர் , தம் தமிழ்ப் புலமை, தமிழ் மொழி, இலக்கிய, இலக்கணங்கள் பற்றிய பார்வை,  தமிழ் உணர்வு யாவற்றையும் இடைமிடைந்து யாப்பின்வரம்பு பிறழாமலும் கோவை மரபு இகவாமலும் இலக்கியச் சுவை குன்றாமலும் புனைந்திருக்கிறார்; புகுந்து விளையாடியிருக்கிறார்.

(இக் கோவை பற்றிய மதிப்பீட்டினை - நூல் நிறை, தென் மொழி - கட்டளைக் கலித்துறையிலேயே பாடியளித்தவர் பாவலர் ம .இலெ.தங்கப்பா என்பதைப் புலவர் செந்தலை கவுதமன் அவர்கள் சொல்லித் தெரிந்து கொண்டேன்.

மென்சுவைமேல் நடந்தானோர் ஆசிரியன்


 மென்சுவைமேல் நடந்தானோர் ஆசிரியன்


" மலரினும் மெல்லிது காமம் " என்றார் வள்ளுவர்.


இறையனார் களவியல் உரையாசிரியர் "  மென்சுவை " என்கிறார் 


               ஓதல் காவல் பகைதணி வினையே

               வேந்தர்க் குற்றுழி பொருட்பிணி பரத்தையென்று

               ஆங்க ஆறே அவ்வயிற் பிரிவே (௩௫)

               

எனக் கற்புக்காலத்தில் (இல்லறத்தில்) தலைவனின் அறுவகைப் பிரிவை (தலைவியைப் பிரிந்து செல்லலை) வரையறுக்கிறது இறையனார் களவியல்.


பரத்தையிற் பிரிவு பற்றிய நூற்பா (௪௦)வுரையில்


" மற்றைப் பிரிவெல்லாம் வேண்டுக ஆள்வினை மிகுதி உடைமையான் ; இப்பிரிவு எற்றிற்கோ எனின் , மற்றைப் பரத்தையிற் பிரிந்தான் தலைமகன் என்றால், ஊடலே புலவியே துனியே என்றிவை நிகழும். நிகழ்ந்தால், அவை நீக்கிக் கூடின விடத்துப் பெரியதோர் இன்பமாம்; அவ்வின்பத் தன்மையை வெளிப்படுப்பன அவை எனக்கொள்க. இவன் மென்சுவைமேல் நடந்தானோர் ஆசிரியனாகலான் இப்பிரிவு வேண்டினான் என்பது." என்கிறார் நக்கீரர்.


ஆள்வினை x மென்சுவை  என எதிர்வுகளைக் கொள்கிறார்.


" பத்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய " சேக்கிழாரும் நினைவுக்கு வருகிறார்.

பத்திச்சுவை மட்டுமன்று இலக்கியச் சுவையும் நனி சொட்டச் சொட்டப் பாடியவர் அவர். இறையற்புத நம்பிக்கைகளோடு கூடிய அண்மைக்கால வாழ்க்கை  வரலாறு சார்ந்த கதைகளைப் பாடிய சேக்கிழாருக்கு வரம்புகள் மிகுதி ; உரிமை குறைவு. 


இந்தக் குறைந்த உரிமையைக் கொண்டே நடப்பியச் சாயலும் உணர்வு நுட்பமும் பொதுளக் கதை வடித்தார் சேக்கிழார். ஓர் இடம் :


            அளவு_இலா மரபின் வாழ்க்கை மண் கலம் அமுதுக்கு ஆக்கி

            வளர் இளம் திங்கள் கண்ணி மன்று உளார் அடியார்க்கு என்றும்

            உளம் மகிழ் சிறப்பின் மல்க ஓடு அளித்து ஒழுகும் நாளில்

            இளமை மீது ஊர இன்பத் துறையினில் எளியர் ஆனார்

(பெரியபுராணம்,தில்லைவாழந்தணர் சருக்கம்,திருநீலகண்ட நாயனார் புராணம் 03)


" இளமை மீதூர இன்பத் துறையினில் எளியரானார் " -  இந்த ஒற்றைத் தொடரில்  சொட்டும் நாகரிகமும் நயமும்  சேக்கிழார்தம்  இலக்கியப் பேராற்றலின் மின்னற்கீற்று !


" எளியரானார் - அது வலிமைபெறத் தாம் அதன் ஆட்சிக்குட்பட்டு

எளியராக ஆயினார் " என்பார் சிவக்கவிமணி சி.கே.சுப்பிரமணிய முதலியார்.


எளிமை x அருமை எனல் பெரும்பான்மை. ௸ பாட்டில், எளிமை x வலிமை எனக் கொள்கிறார் சிவக்கவிமணி.


" எளியார் வலியாம் இறைவா சிவதா " எனச் சிவகாமி ஆண்டார் கூற்றில் எளிமை x வலிமை எனச் சேக்கிழாரே ஆண்டுள்ளார் (இலை மலிந்த சருக்கம்,எறிபத்த நாயனார் புராணம் 16)


திருநீலகண்டர் எளியரானார் என்பதை மெலியரானார் என்று கொண்டாலும் இழுக்கில்லை.


"இந்நூல்[ களவியல்] செய்தார் யாரோ எனின், மால்வரை புரையும் மாடக்கூடல் ஆலவாயிற் பால்புரை பசுங்கதிர்க் குழவித்திங்களைக் குறுங்கண்ணியாகவுடைய அழலவிர் சோதி அருமறைக் கடவுள்" அஃதாவது சிவபெருமான். அந்தச் சிவபெருமான்தான்  " மென்சுவைமேல் நடந்தானோர் ஆசிரியன் "

கல்கியால் கேட்ட மன்னிப்பு


 கல்கியால் கேட்ட மன்னிப்பு


வந்துவிட்டது ; வணிகத்தில் வென்றுவிட்டது(?) ; என் மாணவப் பருவ நினைவைத் தூண்டிவிட்டது.


முதுகலை  மாணவர்கள் சுழல் முறையில் வகுப்புக் கருத்தரங்கில் கட்டுரை படிக்க வேண்டும். ஓர் ஆண்டில் இரண்டு முறைக்குக் குறையாமல் ஒவ்வொரு மாணவரும்

படிக்க நேரும். அதை வெறும் சடங்காக அன்றி உயிரோட்டத்துடன் நடத்தினார் எங்கள் பேராசிரியர் அ.மா.பரிமணம் ஐயா . வினா எழுப்புதல் , விடையிறுத்தல் ஆகியவற்றைக் கூர்ந்து நோக்கி மதிப்பெண் தருவார். அது, அகமதிப்பீட்டில் பதிவாகும்.


நான் ஒருமுறை கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் இதழியல் பங்களிப்புப் பற்றிக் கட்டுரை படித்தேன் :


1928 பிப்ரவரியில் ஆனந்த விகடன் எஸ்.எஸ்.வாசனின் இதழாக வெளிவந்தது. முதல் இதழிலேயே உள்ளடக்கத்தில் பல  மாறுதல்கள் செய்தார்; மொழி நடையைக் சரளமான பொதுநடையாக்கினார்;ஆண்டுக் கையொப்பத் தொகையை உருபா இரண்டிலிருந்து ஒன்றாகக் குறைத்தார்: போட்டிப் பந்தயமொன்றை அறிவித்து அடுத்தடுத்த இதழ்களில் பரிசுத் தொகையை உயர்த்திக் கொண்டே போனார். போட்டி முடிவுகளை அறிவிக்கவே 'நாரதர்'எனும் இதழை 1933இல் தொடங்குமளவுக்கு அப்போட்டிகள் செல்வாக்குப் பெற்றன.   


வாசன் ஆனந்த விகடனைத் தொடங்கியபோது கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி திரு.வி.க.வின்  'நவசக்தி'யில் துணையாசிரியராகப் பணியாற்றி வந்தார். அப்போதே, அவர் ஆனந்த விகடனுக்கு 'ஏட்டிக்குப் போட்டி', 'பூரியாத்திரை' முதலிய நகைச்சுவைக் கட்டுரைகளை எழுதியனுப்பினார். கல்கியின் நகைச்சுவை எழுத்தாற்றலை இனங்கண்ட வாசன்  கல்கியைப் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்து அழைப்பு விடுத்தார்.


கல்கியும் அழைப்பையேற்று, 'நவசக்தி' யிலிருந்து விலகினார். இடையில் ராஜாஜியின் ஆணைக்கிணங்கத் திருச்செங்கோடு ஆசிரமம் சென்று 'விமோசனம் ' என்னும் மதுவிலக்குப் பரப்புரை இதழில் பொறுப்பேற்க நேர்ந்தது. எனினும் விகடனின் ஒவ்வோரிதழுக்கும்  கதை  கட்டுரை அல்லது தலையங்கம் ஆகியவற்றுள் ஒன்றைத் தொகை செலுத்திப் பெறும் அஞ்சவில் (வி.பி.பி.) அனுப்பக் கோரினார் வாசன். கல்கியும் அவ்வாறே அனுப்பி வந்தார். இது , ஒருவகை வணிக உறவுதான்.


வாசனுக்கு இந்த வி.பி.பி. உத்தி புதிதன்று. அவர் ஏற்கெனவே சென்னையில் புதுமையாக விற்பனைக்கு வரும் பொருள்களின் பட்டியல் (கேட்டலாக்கு)களை , அக்காலத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலில் பொருளாதார நிலையில் மேல்தட்டிலிருந்த  அரசு அலுவலர்கள் , சுக சீவனம் நடத்திய நிலவுடைமையாளர்கள் போன்றோருக்கு அனுப்பிவந்தார் . அவர்கள் தேவையான பொருளைக் குறிப்பிட்டு எழுதுவார்கள். அவர்களுக்கு வி. பி.பி.யில் அவற்றை அனுப்பிவிப்பார் வாசன் ( இன்றைய இணையவழி வணிகத்தின் முன்னோடியான அஞ்சல் வழி வணிகம்!)


வி. பி.பி.  வழி விற்பனைக்கும் விகடன் இதழுக்கும் அடிப்படை ஒன்றுதான் : வணிகம்.


ஆனந்த விகடனுக்கு முன் தமிழில் இதழியல் வணிகமயமாகவில்லை. வாசன் இதழியலை வெற்றிகரமான வணிகமாக்கினார். அதற்கேற்ப வெகுமக்களைக் கவருமாறு  பொதுச் சுவைபட எழுதும் திறன் கல்கியிடமிருந்தது. அது வணிக இதழியல் எழுத்து.


- என்று தொடங்கிக்  கல்கியின் புனைகதை , அரசியல் எழுத்துகள் யாவும் வணிக இதழியல் கூறுகளுடன் இயன்றவை என்று தொடர்ந்தேன். நான் ஆராய்ந்து எழுதியவை என்று சொல்லமுடியாது;  எனக்கு உடன்பாடான நிலை நின்று தொகுத்து எழுதியவை.


விவாதத்தின்போது, நான் மிக மதிக்கும் , பாடத்தைக் கலையாக நிகழ்த்தும் ஓர் ஆசிரியர் , ' கல்கி இதழாளராக இருந்த அதேவேளையில் , தலைசிறந்த இலக்கியப் படைப்பாளியாகவும் திகழ்ந்தார் என்பதற்குப் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்றவையே சான்று ' என்றார் .


நான் , ' அவை தொடர்கதைகள் ; புதினங்கள் அல்ல. அவற்றையும் இதழியல் எழுத்துகளாகவே கொள்ளவேண்டும் ' என்றேன். 


அவர்  மறுத்தார். 


கல்கி  மிகுந்த தன்னடக்கத்துடன் பொன்னியின் செல்வனுக்கு எழுதிய முடிவுரையில்  முதலில் தொடர்கதை என்றுதான் குறிப்பிடுகிறார்; இறுதியில் ,

" பொதுவாக நாவல்கள்எழுதுவதற்கும், முக்கியமாகச் சரித்திர நவீனங்கள் எழுதுவதற்கும் சட்ட திட்டங்கள் ஏற்பட்டிருக்கவில்லை. (அப்படி ஏற்பட்டிருந்தாலும் அவற்றை நான் படித்ததில்லை.) ஒவ்வொரு ஆசிரியரும் தமக்குரிய முறையை வகுத்துக் கொண்டு எழுதுகிறார்கள் "என்கிறார். இது, படைப்புக்கும் இதழியல் எழுத்துக்குமிடையிலான அவரது ஊசலாட்டம் என்றேன்.


பேராசிரியர் முகம் வாடியது . அவர் விவாதத்தைத் தொடர விரும்பவில்லை. நானும் வருந்தினேன். 


அவர் இல்லம் கடந்துதான் எங்கள் இல்லத்திற்குச் செல்லவேண்டும். கல்லூரியிலிருந்து நேராக அவரது இல்லத்திற்குச் சென்று மன்னிக்குமாறு வேண்டினேன். அவர் பொருட்படுத்தாதுபோல் , சுவையான காப்பி  தந்தார். அருந்தி இல்லம் திரும்பினேன்.


இப்போது கல்கிக்கு ஆதரவாக வாதாட மிகப்பெரிய இலக்கியக் கோட்பாட்டாசான் வழக்கறிஞராக வாய்த்திருப்பது கல்கியின் உம்மைப் பயன்.

Monday, December 23, 2024

வேரில் வெந்நீர் விடவேண்டாம்!*

 



எனது மொழியியல் அறிவு பாமர அளவினது . நான் அறிந்தவரை விளக்க மொழியியல் என்பது சமகால/ஒருகால மொழியமைப்பை விளக்குவது. எழுத்து வழக்கற்ற மொழிகளுக்கு இலக்கணம் உருவாக்க வல்லது. விளக்கட்டும் ; இலக்கணம் வகுக்கட்டும். பிரச்சினையில்லை.


தமிழ்நாட்டில் மொழியியல் அறிமுகமானபின் அறிஞர் சிலர்   தற்காலத் தமிழில் தீட்டிக் கூர் பார்க்கத் தொடங்கியது இயல்புதானே ! தமிழின்  ஐ , ஒள- களை நீக்கலம் ழ  ற க்களை  நீக்கலாம்  க, ச, ட , த, ப  ஆகியவற்றுக்கு இனமான ஒலிப்புடைத் தடையொலிகளைச் சேர்க்கலாம் என்றெல்லாம்  பரிந்துரைக்கத் தொடங்கினார்கள்.

(மரபிலக்கணம் விதிக்கிறது . நாங்கள் விளக்குகிறோம் என்றவர்கள் விளக்கி  விதிக்கத் தொடங்கியது நகை முரண்.)


சோ ராமசாமி சில காலம்   ை Fல்  F̊ , F  , Fா , Fி (ஃப் , ஃப ,ஃபா , ஃபி ...) என்று அச்சிட்டார்(  இதுகளுக்குத் தமிழ் என்றால்  கிள்ளுக் கீரை. அது சரி! தமிழுக்குத் தகும் உயர்வளிக்கத் தோன்றிய பாரதியே தடுமாறியபோது,      இந்தத் தொகளக் அறிவுச் சீவி வகையறா பற்றிச் சொல்லவேண்டியதில்லை)


கிரந்த வரிவடிவங்கள் தமிழுக்காக உருவாக்கப்பட்டிருக்கலாம் (விவாதத்திற்குரியது); தற்காலத்தமிழில் பரவலாகக் கையாளப்படலாம்; கற்பிக்கவும் படலாம். ஆனால் அவை தமிழல்ல என்ற தெளிவு வேண்டும். 


' வட சொற் கிளவி ' பற்றிய தொல்காப்பிய விதியைக் கம்பன் போன்ற மேதைகள் - கிரந்தம் புகுந்ததற்குப் பின்னும் , வீரசோழியத்திற்குப் பின்னும் - கடைப்பிடித்தார்களே !    [கம்பன் ' என்றுமுள தென்றமிழ் ' என்றானே ! ] அவர்கள் மொழி மாற்றங்களை அறியாத மூடர்களா என்ன ?

   

                                                             ***


மொழி மாறவில்லை என்று யாரும் சொல்ல முடியாது . மாற்றம் வெளிப்படை . வட்டார வழக்குகளுக்குத் தமிழ் மரபிலேயே இடமிருக்கிறது. அவற்றின் உயிரோட்டத்திலும் எனக்குக் கருத்துவேறுபாடில்லை. வட்டார வழக்கை எழுத்தில் ஆள்வதையும் நான் மறுக்கவில்லை; ஏற்கிறேன். மொழியியல் அடிப்படையில் விளக்கமுறை இலக்கணம் வரைந்து அவற்றைக் காலந்தோறும்ஆவணப் படுத்தவேண்டும். ஆனால், இக்கால வழக்குத் தமிழ் மட்டுமே தமிழ் என்று சொல்ல முடியாது.


வரலாறும் மரபு வழி இலக்கிய இலக்கணமும் உடைய மொழிகளின் இக்கால வழக்கில் மரபுக்கும்  கணிசமான இடம் உண்டு. மரபும் சேர்ந்ததுதான் தற்காலத் தமிழ் ; எழுத்துத் தமிழ். மரபே ஒருங்கிணைக்கும் ஆற்றலாக இயங்குகிறது; இதில் வரி வடிவ மரபுக்கும் கணிசமான பங்குண்டு . இந்த  ஒருங்கிணைப்பாற்றலைச் சீர் திருத்த, சேர்திருத்தங்களால் சிதைப்பது மொழி என்னும் பண்பாட்டுத் தொடர்ச்சியைத் துண்டித்து அடையாளமழித்துவிடும் .


எனது பாமர மொழியியல் அறிவிலிருந்து ஓர் ஊகத்தை முன்வைக்கிறேன். மொழியியல் வல்லுநர்களின் தெளிவுறுத்தலைக் கோருகிறேன் .


Standard dialect: That dialect of a language which has gained literary cultural supremacy over other dialects and is accepted by the speakers of other dialects as the most proper form of that language[ Dictionary of Linguistics, M.A. Pei & B. Gaynor (Ed.) ] 


என்பதைக் காட்டி, அறிஞர்  செ.வை. சண்முகம் அவர்கள் ,

" தகுமொழி என்பது ஒரு மொழியில் வழங்கும் பல கிளை மொழிகளில் அரசியல் முக்கியத்துவம், வணிகச்சிறப்பு, கலாச்சார நடவடிக்கைகளின் மையம் போன்ற காரணங்களினால் சிறப்பு வாய்ந்த ஒரு கிளைமொழியே. அந்தக் கிளைமொழி பிற கிளை மொழி மக்களாலும் அறிந்து பயன்படுத்தப்படும் என்று மொழியியலார் தகுமொழிக்கு விளக்கம் கொடுத்துள்ளார்கள் " என உடன்பட்டுத் தமிழாக்கித் தந்துள்ளார்.(சொல்லிலக்கணக் கோட்பாடு - தொல்காப்பியம் - முதல் பகுதி , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் , சென்னை , 2008, பக். 60 - 61)


ஆனால் இக்காலத் தமிழின்  எந்தக் கிளைமொழியும் பொது எழுத்துமொழியாகவில்லை; அதாவது, தகுமொழியாகவில்லை. மரபு வழித் தமிழ்   இக்காலத்தில் எய்திய ஒரு கட்டமைப்பே தமிழின் தகுமொழி. 


எந்தக் கிளை மொழியிலிருந்தும்  உருவாகாததால் தமிழ் இரு நிலை வழக்கு மொழியாக - பேச்சுத் தமிழிலிருந்து எழுத்துத் தமிழ் வேறுபட்டு - காணப்படுகிறது.


ஒரே நேரத்தில் இரட்டைக் குதிரையில் செல்லும் நிலைதான் .  சமநிலை தடுமாறும்தான் . தடுமாறினாலும்  இரண்டையும் பேணியாக வேண்டும் . இது தமிழின் இயல்பு.ஒன்றைக் கொன்று மற்றொன்றைக் கொள்வது வசதியானதென்று  தமிழை ஊனப்படுத்தக்கூடாது.


மொழி பண்பாட்டுப் பொறுப்போடு கையாளவேண்டிய கருவி.

- முகநூல் இடுகை, 22 டிசம்பர் 2013

____ ____ ____ ____ ____ ____ ____ ____ 

* மொழியியலறிஞர் தெய்வ சுந்தரம் நயினார்   அவர்களின் ' கிரந்த எழுத்துக்களும் மொழியியலும்' என்னும் இடுகை பற்றிய என் கருத்தாக இதனை எழுதினேன். ஆனால் எழுத்தெண்ணிக்கை வரம்பு காரணமாக முகநூல் ஏற்க மறுத்துவிட்டது. தனி இடுகையாகத் தந்துள்ளேன்.

Thursday, June 27, 2024

அகப்பொருள் உவமையும் அலங்கார உவமையும்


 

அகப்பொருள் உவமையும் அலங்கார உவமையும்

" சான்றோர் செய்யுள்களில் உவமை , தத்துவ இயலின் பிரமாணமோ  அலங்காரவியலின் அணியோ அன்று. அதுவே  பொருளுமாகி நிற்கும். 'உவமப்பொருள்' என்பார் தொல்காப்பியரும் " ( எனது முகநூல் இடுகை ,'பாடல் பெற்ற பறவை! ' 30 அக்டோபர் 2020) - என்று எழுதியிருந்தேன்.

இக்கருத்து வீரசோழியத்தாலும் வலிமையுறுகிறது.

தொல்காப்பியத்திற்குப்பின் தம் காலத்துப் பன்மொழி வரவையும் உலக வழக்கின் இயல்புகளையும் சங்கத இலக்கண மேலாதிக்கத்தையும் உளங்கொண்டு புத்த மித்திரர் வீரசோழியமியற்றினார். அவருடைய மாணாக்கராகிய பெருந்தேவனார் அந்நூலுக்கு இயற்றிய விரிவுரை நூலோடு இயைந்தது ; பிந்தைய இலக்கணப் போக்குகளில் செல்வாக்குச் செலுத்தியது.

இன்று கிடைக்கும் தமிழ் இலக்கண நூல்களுள் - எழுத்து , சொல், பொருள், யாப்பு, அணி எனும் -  ஐந்திலக்கணங் கூறும் முன்னோடி நூல் வீரசோழியம் .

வீரசோழியப் பொருட்படலத்தில் அகப்பொருளுக்கு உரை என 27 கூறுகள் சுட்டப்பட்டுள்ளன (காரிகை 90 ,  91). இவை தொல்காப்பியப் பொருளதிகாரச் செய்யுளியல் கூறும் திணை, கைகோள் முதலிய செய்யுள் உறுப்புகளையும் , நம்பியகப்பொருள் கூறும் அகப்பாட்டுறுப்புகளையும் ஒத்தவை.

அந்த 27 உரைகளில் ஒன்றாக உவமை இடம்பெற்றுள்ளது. இந்த உவமை பற்றிப் பெருந்தேவனார் தம் உரைச் சூத்திரங்களுடன் (?) விரிவாக விளக்கியுள்ளார்.

அலங்காரப் படலத்தில் " ... அலங் காரங்கள் தண்டிசொன்ன/ கரைமலி நூலின் படியே யுரைப்பன்"(காரிகை 143) என்கிறார் புத்தமித்திரனார். அந்த அலங்காரங்களுள் ஒன்று உவமை என்பது சொல்லித்தெரியவேண்டியதில்லை( அப்போது தமிழ்த் தண்டியலங்காரம் வரவில்லை என்பது மனங்கொள்ளத்தக்கது)

உவமையணி பற்றி மிகச் சுருக்கமாகவே உரை வரைந்துள்ளார் பெருந்தேவனார்.

தொல்காப்பியத்திற்கும்  சான்றோர் செய்யுள்களுக்குமிடையிலான சில இடைவெளிகள் இயைபின்மைகள் ஏற்கெனவே அறியப்பட்டவைதாம்.

எட்டுத் தொகையின் குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, புறநானூறு (அகமும் புறமும்) ஆகியவற்றின் உவமை இயல்புகளுக்கும்  தொல்காப்பிய உவமையியலும் பிற இயல்களின் உவமை பற்றிய கருத்துகளும் காட்டும் உவமை இலக்கணத்திற்கும் இடைவெளிகள் இயைபின்மைகள் காணப்படலாம் என்று தோன்றுகிறது.

அவ்வாறெனில் சங்கதச் செல்வாக்கிற்குட்பட்ட , பிற்காலத்து வீரசோழியம் அதனை இட்டு நிரப்ப இயலுமா என்ன!

சான்றோர் செய்யுள் மரபில் - குறிப்பாக அகப்பொருளில் - வரும் உவமை வேறு ; சங்கத அலங்கார இலக்கண வழிவந்த உவமை வேறு எனப் புத்த மித்திரனாரும் பெருந்தேவனாரும் உணர்ந்திருக்கின்றனர். அந்த அளவில் வீரசோழியம் போற்றத்தக்கது.

Sunday, March 3, 2024

இலக்கண மறுப்பு என்னும் பொறுப்பின்மை

வட்டார வழக்குதான் மக்கள் மொழி .அதுதான் உயிருள்ளது என்று மிகையழுத்தம் தரும் குழு ஒன்று விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்படித்தான் எழுத்துச் சீர்திருத்த, சேர்திருத்த, இலக்கண மறுப்புக் குழுக்களும். 

தமிழில் அரசாணை வழி எழுத்துச் சீரைத் திருத்தியது தவறான முன்னுதாரணம்.

தமிழில் கிரந்த வடிவங்கள் சில புழங்குகின்றன ; மிகுதியாகப் புழங்குகின்றன. ஆனாலும் அவை  அயல் வரவு என்கிற நிலையில்தான் கற்பிக்கப்படுகின்றன. அவற்றையும் வேறுபல கிரந்த வடிவங்களையும் தமிழில் சேர்க்க வேண்டுமென்கிறவர்கள் பேசாமல் தெலுங்கு அல்லது கன்னடத்தை வரித்துக்கொள்வதுதான் நேர்மை. குறைந்தது மலையாளத்தின் பக்கம் போய்விடலாம்.

சங்கத வருக்க எழுத்துகளையும் பிறவற்றையும் ஏற்றபின்னும் - மலையாளத்தை விட்டு விடுவோம் - தெலுங்கும் கன்னடமும் இருவேறு மொழிகளாக இயங்குவது ஏன் ? ஒவ்வொரு மொழிக்கும் அதற்குரிய தனித்தன்மை உண்டு.

மொழி என்பது பயன்படு கருவியாகவும் பண்பாட்டுச் சொத்தாகவும் ஒருசேர இயங்குவது. உள்ளார்ந்து நிகழும் மாற்றங்களையும் பிறமொழி ஆதிக்கத்தால் நேர்ந்த மாற்றங்களையும் காட்டி , வலிந்து மாற்றங்களைத் திணிக்கக் கூடாது. 

பயன்பாடு கருதி ஆங்கிலம் போன்ற அயல் மொழிகளை - அவ்வவற்றின் இலக்கணம் பிறழாமல் - கற்கும்போது ; கற்க முடியும்போது, தமிழுக்கு மட்டும் இலக்கணம் வேண்டாம் என்பது உள்நோக்கமுடையது.



இந்த உள்நோக்கத்துக்கு வரலாற்று, அறிவியல் முலாம் பூசி மருட்டும்போது தாழ்வு மனப்பான்மையுள்ள தமிழ்த் துறையினர் சிலர் ஆமாஞ்சாமி என்கின்றனர்.

இலக்கணம் தமிழ் மொழிக்கு மட்டுமன்று ; உலகத்து மொழி யாவற்றுக்கும் உண்டு. மரபார்ந்த மொழிகள் வெறும் தற்காலப் பேச்சு வழக்கை மட்டுமே கணக்கில் கொள்ளக்கூடாது. தமிழ் போன்ற இரு நிலை ( பேச்சு, எழுத்து) வழக்கு மொழிகளில் எழுத்து வழக்குக்கும் உயிர் உண்டு. 

விதிவிலக்குகள் இருக்கலாம் ; கருத்து வேறுபாடுகள் , விவாதங்கள் இருக்கலாம்,

'கல்த்தாரைக் கல்த்தாரே காமுறுவர் 'என்பது போன்ற - டி.கே.சி. வகையறாக் - குறுக்குச் சால்கள் இருக்கலாம்.

இவை இலக்கண மறுப்பிற்குரிய நியாயங்கள் அல்ல. இலக்கணம் இருப்பதால்தான் இவை உயிர்த்திருக்கின்றன.

இலக்கணம் தெரியாதிருப்பது குற்றமில்லை. மொழிப் பயிற்சி காரணமாக இலக்கணம் தெரியாமலே , மீறியே கூட, தம் நடையில் நுட்பங்களைக் கொணர்ந்த எழுத்தாளர் பலருண்டு.

வானொலி நேர்காணல் ஒன்றில், " தமிழ்'ல எழுதறவாளுக்குத் தமிழ் இலக்கணம் தெரிஞ்சிருக்கணுமா என்ன ?" என்று,போகிற போக்கில் , எதிர்மறையான விடைக்குக் கொக்கிபோடும்  உள் நோக்க வினாவைத் தொடுத்தார் அந்த எழுத்தாள அம்மையார்.

" தெரிந்திருக்கக் கூடாதா என்ன ?" என்று தாமொரு கொக்கியை விடையாக மாட்டினார் ஜெயகாந்தன்.

தமிழ்த் துறையாளர்கள் இலக்கணப் பெருமிதத்தை அணிந்து நின்றிடுக.

[ கொசுறு : சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எனக்கு இலக்கணம் தெரியாது. அதனாலேயே இலக்கண மறுப்புக்குத் தலையாட்டுவது ... தனம்]

Thursday, February 15, 2024

அம்மாவின் உறுதி! (பாலசுந்தரனார் நாட்குறிப்புகளில் ...)



 அம்மாவின் உறுதி! 

(பாலசுந்தரனார் நாட்குறிப்புகளில் ...)


சென்னைப் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளில் இளநிலைப் பட்ட வகுப்புகளுக்குப் பகுதி I தமிழில் பாலசுந்தரனாரின் ' புலவர் உள்ளம் (தொண்டு) ' பாடமாக வைக்கப்பட்டுவிட்டது. அந்தக் காலத்தில் திங்கள் தோறும் ஊதியம் வராது. கீழ்த்திசை (Oriental) மொழியாசிரியர்களுக்கு ஊதியமும் குறைவு.பெரும் எண்ணிக்கையில் அச்சிட அவரிடம் பணமில்லை. வெளிப் பதிப்பகங்களுக்குக் கொடுக்க மனமில்லை (இது சரியானது).


இந்த நிலையில் வேறு வழி தோன்றாமல்  மாமனாரிடம் - கடனாகத்தான் -  கேட்டுப் பார்க்கலாம் என்ற எண்ணம் எழுந்ததது .  துணைவியார் பங்கசவல்லி அம்மையாரிடம் தெரிவித்தார். இது பற்றி 1971 பிப்பிரவரி 20 ஆம் நாட்குறிப்பில் எழுதியுள்ளார்.


துணைவியார் மறுத்துவிடுகிறார். 


       கொண்ட கொழுநன் குடிவறன் உற்றெனக்     

       கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள் ( நற்றிணை 110)


 என்றது  இலக்கியக்  குறிக்கோளன்று ; நடப்பு - இருபதாம் நூற்றாண்டிலும்.


அம்மாவிடமிருந்த இந்தச் சமரசமற்ற உறுதியை, பிடிவாதத்தை, கடுமையை நான் நன்குணர்ந்தவன். இதனால் உறவினர் பலரும் அவரிடம் ஒரு பாதுகாப்பான தொலைவைப் பேணிக்கொண்டிருந்தார்கள். 


இத்தகைய சூழல்களில் பிடிவாதமான நிலையெடுத்து நிற்கும் குணம் ஓரளவாவது என்னிடம் இருப்பதற்குக் காரணம் அம்மாதான் என்று எண்ணுகிறேன்.


அப்பாவுக்கு நண்பர் உதவியதை பிப்.22 ஆம் நாட்குறிப்பில் எழுதியுள்ளார்.

நிருவாகம் : அதிகாரப் பொழுதுபோக்கும் வக்கிரமும் (பாலசுந்தரனார் நாட்குறிப்புகளில் ...)

 நிருவாகம் : அதிகாரப் பொழுதுபோக்கும் வக்கிரமும்

(பாலசுந்தரனார் நாட்குறிப்புகளில் ...)


ஆசிரியர் x நிருவாகம் → பணி நீக்கம்

சம்பளப் பிடித்தம் என்னும் அச்சுறுத்தல் 

- ஆகிய இரண்டு இடுகைகளில் , 31.01.1969 ஆம் நாளிட்ட  சம்பளப் பிடித்தம் பற்றிய கடித நகலைத் தந்து பாலசுந்தரனாருக்கு நிருவாகம் இடையூறு செய்தது பற்றி முகநூலில் எழுதியிருந்தேன்  (31 Jul 2023)  . தொடர்ந்தும் ஏதேனும் வாய்ப்புகள் தேடி இடையூறிழைத்து - முதல்வர் கு.சிவமணி அவர்களைப் போல் - வெளியேற்றி விடுவதே நோக்கம். பாலசுந்தரனாரும் அந்த மன நிலைக்கு வந்து விட்டதை இந்த நாட்குறிப்புகள் புலப்படுத்துகின்றன.






1970 மார்ச் 23 : வெளி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முன்னனுமதி பெற வேண்டும் என்று விதித்து, இது, ஒரு முறைமைக்கான ஏற்பாடுதான் , போய் வந்தபின் தெரிவித்தால் கூடப்  போதும்  என்று சொல்லி [ இது அண்டியவர்களுக்கானது], அப்புறம் முன்னதாகத்  தெரிவிக்காமல் போனது பற்றி எச்சரிக்கும் இத்தகு நடைமுறைகள் நிருவாகத்தின் அதிகாரப் பொழுதுபோக்கு.


1970 அக்டோபர் 12 :தனிப்பாடல் திரட்டு, சம காலத்தில் விவாதத்திற்குரிய எதுவும் இல்லாத ஒரு தொகை நூல்;  சரசுவதி மகால்  வெளியீடு. இத்தகு பதிப்புப் பணியில் ஓர் ஆசிரியர் ஈடுபடுவது அவர் பணியாற்றும் நிறுவனத்தின் மதிப்பைக் கூட்டும். ஆனால் நிருவாகங்கள் அதிகாரப் பொழுதுபோக்கில் தொடங்கி வக்கிர முடிவுகளை எடுக்கும் எல்லைவரை போவதை இன்றும் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்.


1970 டிசம்பர் 18 : ஒரு வக்கிரம். முதல்வர் கு.சிவமணி அவர்களுடன் நிருவாகம் முரண்பட்டது. அவரும் வெளியேறிவிட்டார். ஆனால் கரந்தைத் தமிழ்ச் சங்க/ புலவர் கல்லூரி நிருவாகம் திரு .கு.சிவமணி அவர்களின் தந்தையார் என்னும் ஒரே காரணத்திற்காகத்  திரு. சிவ.குப்புசாமி பிள்ளையவர்கள் மறைந்த போது கூட உரிய மரியாதை செய்யாமல் புறக்கணித்தது வக்கிரத்தின் உச்சம். 


இத்தனைக்கும் திரு. சிவ.குப்புசாமி பிள்ளையவர்கள் தமிழவேள் உமா மகேசுவரனாராலேயே மதிக்கப்பட்டவர்; வெள்ளிவிழா மலரில் படம் இடம்பெறுமளவு முதன்மை பெற்றவர் ; ஓய்வுக்குப் பின்னும் சங்கப் பணிகளில் ஈடுபட்டவர். தமிழ்ப் பொழிலில் குன்றக் கூறலாக  ஒரு குறிப்பு இடம் பெற்றதே நிருவாகத்தின் ' பெருந் ' தன்மை என்று கொள்ளவேண்டியதுதான். (நானும் என் பங்கிற்குக் கல்லூரி நிருவாகத்தின் வக்கிரத்தால் துன்புற்றவன்தான்!)

"தேவாரத் திருமுறைகளுக்கு ஒரு நல்ல பதிப்பு"பாலசுந்தரனார் நாட்குறிப்பு




 " தேவாரத் திருமுறைகளுக்கு ஒரு நல்ல பதிப்பு"-மூதறிஞர் நீ.கந்தசாமிபிள்ளை

______________________________________________________________________________________


பாவலரேறு ச.பாலசுந்தரனார் நாட்குறிப்பு எழுதும் வழக்கத்தை 1970 இலிருந்து  தொடங்கியிருக்கவேண்டும். 1970 முதல் 2003 வரை அவர் எழுதியுள்ள நாட்குறிப்பேடுகள் - இடையில் ஓரிரு ஆண்டு விடுபாடுகளுடன் - கிடைத்துள்ளன.


அவர் நாட்குறிப்பேடுகளை விலை கொடுத்து வாங்கியதில்லை ;  அன்பளிப்பாகக் கிடைத்தவற்றில் எழுதியுள்ளார்.  முந்தைய ஆண்டின் ஏட்டில் அச்சிடப்பட்ட நாள் முதலியவற்றைத் திருத்தியும் , தாமே தைத்த ஏட்டில் நாளிட்டும் எழுதியுள்ளார். 


கல்லூரி நிகழ்வுகள், ஊதியம், வங்கி இருப்பு , பணம் எடுத்தல் போடுதல், கொடுக்கல் வாங்கல்கள், நிகழ்ச்சிகளுக்குச் செல்லல், மதிப்பூதியம் , நூலாக்கத்திற்கான புற அகத் தூண்டல்கள், நூல் அச்சாக்கம்,  நூல்களை விற்பனைக்கு அனுப்புதல், நூலக ஆணை,வரவு செலவு , மாதாந்திர அன்றாடச் செலவுகள் , இவற்றால் நேரும் இன்ப துன்ப மன நிலைகள் , சந்திப்புகள் , உடல் நலக்குறைவு , ஆங்காங்கு இவை சார்ந்த கருத்துகள் முதலியன இடம் பெற்றுள்ளன. 


ஒரு கட்டத்தில் தொடர்ந்த குருதிப் போக்கும், பிற்காலத்திய தலை சுற்றலும் பற்றி அவ்வக் கட்டத்தில் மீண்டும் மீண்டும் எழுதியுள்ளார்.


சில நாள்களில் , "எங்கும் செல்லவில்லை "  என்று மட்டுமே இருக்கும் ; ஓரிரு சொற்களில் காரணத்தை எழுதுவதுமுண்டு. சில நாள்கள் எதுவும் எழுதாமல் விடுவது முண்டு.


ஒரு கட்டத்தில் துணிகளைத் துவைத்துப் பெட்டி போட்டது பற்றி அவ்வப்போது எழுதியுள்ளார்.¹


சலிப்பூட்டும் குறிப்புகளோடும் ,இடையிடையே சில போது , குடும்பம், உறவு, நட்பு , தமிழ்ப் புலமையுலகம் முதலியன பற்றிய நெருடலான குறிப்புகளோடும் அவர் எழுதியவற்றை  அப்படியே  இப்போது வெளிப்படுத்த இயலாது; கூடாது ( அவர் இருந்திருந்தால் நானே கூட இவற்றில் தலையிட்டிருக்கமாட்டேன்).


வெளிப்படுத்த வாய்த்த சிலவற்றைத் தேர்ந்தெடுத்து - காலவரிசை கருதாமல் - அவ்வப்போது பகிர்ந்துகொள்ளலாம் என்று கருதுகிறேன்.


1970 பிப்பிரவரி 02 ஆம் நாள், " மாலை N.K. அவர்களிடம் சென்றிருந்தேன்... தேவாரத் திருமுறைகளுக்கு ஒரு நல்ல பதிப்பு அடையாறு நூல் நிலையத்திற்காகச் செய்ய வேண்டுமென்றார் " என்று எழுதியுள்ளார் ச. பா.

தொடர்ந்து ,  பிப்பிரவரி 13 அன்று நீ.க. 26 பதிகங்களைப் பிரித்தெழுதச் சொன்னதாகவும் , மார்ச் 03 அன்று பிரித்தெழுதிய தாள்களை ஒப்படைத்ததாகவும் எழுதியுள்ளார். ஆனால் இப்பதிப்பு வந்ததாகத் தெரியவில்லை. கையெழுத்துப் படிகள் ஏதும் அடையாறு ( பிரம்ம ஞான சபை ?) நூலகத்தில் இருக்குமா? ²


-----------------------------------------------------


1.   துணிகளை வாரிப்போட்டு - சோப்பும் வீணாகாமல் துணியும் நோகாமல் மாங்கு மாங்கென்று துவைத்து , காயப்போடும் போதே முடிந்த வரை சுருக்கம் நீக்கிவிடுவார்.


பெட்டி போடுவதற்குச் சடங்கு போன்ற வரிசையான செயல்முறைகள் உண்டு. முதலில் தரையில் ஒரு கெட்டிச் சமுக்காளம் பரப்பி அதன்மேல்  தூய விரிப்பைச் சுருக்கமில்லாமல் மெத்தென்று விரித்துக்கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரையும் ஒரு துணி முடிச்சையும் ஆயத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பெட்டி போடப்படும்  துணியில் சுருக்கம் இருந்தால் நீரைத் துணியில் நனைத்து நீவவேண்டியிருக்கும். இருப்புச் சலவைப்பெட்டியில் கரி நிரப்பி எரியூட்டிச் சூடேற்ற வேண்டும்.  சலவைப்பெட்டியின் வழவழப்பான கீழ்ப்பக்கத்தைத் தரையில் வைக்கக் கூடாது; அதற்கென்று உள்ள மனையில்தான் வைக்க வேண்டும். அவ்வப்போது கரியில் பூக்கும் சாம்பலை விசிறிவிட வேண்டும்.தீப்பொறி படாதவாறு காற்றுக்கு எதிர்த்திசையில் அமர வேண்டும்.  பொறி விழாதவாறு துணிகளையும் அத்திசையில் வைத்துக் கொள்ள வேண்டும். சலவைப்பெட்டியின் எடை ஒரு கிலோவுக்குக் குறையாது. குத்துக் காலிட்டுத் தரையில் அமர்ந்து சலவைப் பெட்டியைத்தூக்கித் துணியின்மேல் வைத்துக் குறிப்பிட்ட திசையில் தேய்ப்பதற்குக் குறைந்தபட்சத் தொழில் திறனும், உடல் வன்மையும் வேண்டும். ஏறத்தாழ முப்பது துணிகளை ஒரே அமர்வில் பெட்டிபோட்டுவிடுவார்.அப்புறமும் துணிகளை அடுக்கி வைத்தல் பெட்டியிலுள்ள சாம்பல் பூத்த கரியைக் கொட்டிவிட்டு , பெட்டியில் கீறல் விழாமல் உரிய இடத்தில் வைத்தல் முதலியவற்றையும் நறுவிசாகச் செய்து முடிப்பார். 


அது , ஏறத்தாழ முழு நாளை எடுத்துக் கொள்ளும். எனவேதான் அதனைக் குறிப்பிட்டுள்ளார் என்று தோன்றுகிறது.



2.  பிரஞ்சு இந்தியக் கழகம் வாயிலாக,  பேரறிஞர் பண்டித வித்துவான் தி.வே.கோபாலையர் பதிப்பித்து மூன்று பகுதிகளாக (1984, 1985, 1991 ) வெளியிட்ட தேவாரம் - பண்முறைப் பதிப்பு , தேவாரப் பதிப்புகளின் உச்சம். தேவார ஆய்வுத்துணை என்னும் மூன்றாம் பகுதி ஒரு தேவாரக் களஞ்சியம். இப்பதிப்புக்கு நீ. க. அவர்களின் திருவாசகப் பதிப்பை முன்னோடி எனலாம் ]

Sunday, February 4, 2024

' மட்டையாட்ட மான்மியம் '

 ' மட்டையாட்ட மான்மியம் ' 



 2015ஆம் ஆண்டு டென்னிசு விளையாட்டாளர்  மரியா சரபோவா, ' சச்சின் டெண்டுல்கர் யாரென்று தெரியாது ' என்று சொல்லப்போக  அப்போது  அவரைச் சமூக ஊடகங்களில் மாற்றி மாற்றி வறுத்தெடுத்துவிட்டனராம்.  

இப்போது  ' உழவர் போராட்டம் எங்கள் உள்நாட்டுப் பிரச்சினை '  என்றும் ' இந்திய இறையாண்மை ' என்றும்  டெண்டுல்கர் கீச்சிட , போராட்ட  ஆதரவு உணர்வுடன்,    அப்போது  ‘சச்சினைத் தெரியாது’ என்று கூறிய மரியா சரபோவாவிடம் மன்னிப்புக் கேட்டுச் சரமாரியாகக் கீச்சிடுகிறார்களாம். இது செய்தி.


இனிக் கதை !


நாங்கள் தஞ்சாவூர் வடக்கு வீதியில் வசித்துவந்தோம். இருபுறமும் நான்கைந்து மணித்துளிகளில் நடந்து சென்றடைய வாய்ப்பாகத் தூய பேதுரு பள்ளி, கலியாண சுந்தரம் பள்ளி ஆகிய புகழ்மிகு பள்ளிகள் இருந்தன. 


ஆனால், ஏறத்தாழ இருபது மணித்துளிகளுக்குக் குறையாமல் நடந்து செல்லும் தொலைவிலிருந்த , நகரம் சிற்றூர் இரண்டுக்கும் இடைப்பட்ட, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் உமாமகேசுவரர் பள்ளியில் நான் படித்தேன். சங்கம் நடத்திய புலவர் கல்லூரியில் பணியாற்றியதால் அப்பா என்னையும் உடன் அழைத்துச் சென்றார்கள்.


எனக்குப் பள்ளி நண்பர்கள் வேறு; தெரு நண்பர்கள் வேறு. 


உமாமகேசுவரர் பள்ளியில் அப்போது சாஃப்ட் பால் அல்லது பேஸ்பால் எனப்படும் குண்டாந்தடி ஆட்டத்தில் வல்ல உடற்பயிற்சி ஆசிரியர் இருந்ததால் அதுவே பயிற்றுவிக்கப்பட்டது.


நான் வேடிக்கை பார்ப்பேன். விளையாடியதில்லை.


தூய பேதுரு பள்ளி விளையாட்டுத் திடலில் இக்பால் அரங்கில் , ஆண்டுதோறும் ஒருவார காலத்திற்குக் குறையாமல்  நடக்கும் அனைத்திந்திய அளவிலான கூடைப்பந்துப் போட்டிகளைத் தவறாமல் பார்ப்பேன்.  கூடைப்பந்தில் ஆர்வமிக்க பார்வையாளர்கள் கணிசமாக வருவார்கள். ஆனால் ,தெரு நண்பர் எவருக்கும் அதில் ஆர்வமில்லை. நான் தனியாகத்தான் செல்வேன்.பெரிய அளவுக்கு விதிகளோ ஆட்ட நுணுக்கங்களோ தெரியாவிட்டாலும் அதன் விறுவிறுப்பு என்னை ஈர்த்தது. 


கோலிக்குண்டு , கிட்டிப்புள் , பம்பரம் (தலையாரி என்றொரு ஆட்டம் விறுவிறுப்பானது) முதலியவற்றில் தெரு நண்பர்களோடு நானும் விளையாடுவேன் ; குறிப்பாகக் கிட்டிப்புள் நன்றாக ஆடுவேன். கிட்டிப்புள்ளில் இருந்துதான் கிரிக்கெட் வந்தது என்று கலைச்சொல்லறியாக் காலத்திலேயே பண்பாட்டாராய்ச்சிப் பகடி செய்திருக்கிறேன்.


அப்போது, தெருவில் சந்து பொந்துகளில் எல்லாம் சிறுவர்கள் தாமே அமைத்துக் கொண்ட  சிறுசிறு மட்டையாட்டக் குழுக்கள்  இருக்கும். ஒவ்வொரு குழுவுக்கும் நீள் வடிவ ஓவிய ஏடு  ஆட்டப் பதிவேடாக இருக்கும் . குழுக்களுக்குள் கையெழுத்துப் பந்தயம்(மேட்ச்)நடக்கும். ஓட்டங்களும் விக்கெட்டுகளும் இன்ன பிறவும் முறையாகப் பதிவாகும். இரு அணியின் வெற்றி தோல்விகள் பதிவாகும். ஆட்டம் உணர்ச்சிகரமாக இருக்கும். சண்டை சச்சரவுகள் சிலவேளை அடிதடியாகக் கூட முற்றிவிடும்.


தெருக் குழுக்களில் வேறுபாடற்றுச் சிறுவர்கள் உறுப்பினர்களாக இருந்தார்கள். என்றாலும் என் விருப்பின்மைக்கு விறுவிறுப்பின்மை மட்டுமல்ல , மட்டையாட்டம் மேட்டுக்குடி/மேற் சாதிச் சார்புடையது என்று உள்ளத்தில் பதிந்து போனதே  காரணம்.

அலட்டுவார்கள். 


ஆனால் , தெருக் குழுக்களின் பந்தயங்களில் பார்வையாளனாக மணிக்கணக்கில் கலந்துகொள்வேன்.  அப்போது , திரைப்படச் செய்திக்காட்சியில் சில மணித்துளிகள் பெரிய ஆட்டத்தின் முனைப்பான காட்சிகளைக் காண்பது தவிர , ஏடுகளில் வரும் படங்களும் வானொலி நேர்முக வருணனைகளும்தாம் வடிகால்கள். 


மட்டையடி, பந்துபிடி முதலியன இயக்க விறுவிறுப்புடன் காட்சி வடிவில் ஏடுகளில்  இடம்பெறும். அவற்றைக் கத்தரித்து விவரங்களுடன் ஏட்டில் ஒட்டி மட்டையடிப் படத்தொகுப்புகளாகப் பலரும் வைத்திருப்பார்கள். எம் தெருச் சிறுவர்கள் அத்தகு நிலைக் காட்சிகளை உளங்கொண்டு , பந்தை அடித்தல் பிடித்தல் முதலியவற்றின்போது சில நொடிகள் நிலைக்காட்சியில் உறைந்திருப்பார்கள்.சிறுவர்களின் பாவனைகள் - அவர்களையொத்தவனே ஆனாலும் - எனக்குக் கேலிக்கூத்தாய் நகை நல்கும் ; கிண்டலடித்துக்கொண்டிருப்பேன். அதுஎன் இரசனை. மற்றபடி அந்த ஆட்டம் பற்றித்  தானாக வந்து சேர்ந்ததற்கு மேல்  நான் ஏதும் தெரிந்துகொள்ள முயலவில்லை. (என் இரசனை முறையால் நண்பர்கள் எரிச்சலுறுவார்கள் . வாயாலாகாதவர்கள் கை ஓங்குவதும் உண்டு. எனினும்  என்னைத் தவிர்க்க மாட்டார்கள்) இன்றளவும் தொலைக்காட்சியில் போகிறபோக்கில் கூட அதைப் பார்ப்பதில்லை.


அந்தக் காலத்தில் வானொலிப் பெட்டியில் நேர்முக வருணனை கேட்காத மட்டையாட்டப் பித்தர்கள் இல்லை என்றே சொல்லிவிடலாம். 


கல்லூரி மாணவர் சிலர் கையடக்க வானொலியை ஒய்யென வருணனை  இரையக் காதில் வைத்துக்கொண்டு போவார்கள். 'முற்போக்காளர்' கள் சிலர் கூட இதற்கு விதிவிலக்கில்லை. கையடக்க வானொலி அரிதான காலத்தில் ,

பித்து இல்லையென்றாலும் கொஞ்சம் தொற்று உள்ளவர்கள் ஓட்ட எண்ணிக்கை , விக்கெட் வீழ்ச்சி பற்றியெல்லாம் ' அவல் மெல்லு 'மளவுக்காவது கேட்டறிவார்கள். அதுவும் தெரியாதவர்கள்  

நவீன இந்திய வாழ்க்கைக்கே இலாயக்கற்றவர்களாகிவிடுவார்களே ! இந்த மனநிலையிலிருந்துதான் மரியா சரபோவாவை அன்று பார்த்திருக்கிறார்கள்.


கையடக்க வானொலிக் கால்நடைகளைக் கண்டால் பற்றிக்கொண்டு வரும். கல்லூரிக் காலத்தில் ,கையடக்கக் குறள் நூல் எனக்குக் கைகொடுத்தது. அதைக் கைக்குட்டையில் சுற்றிக் காதருகே பிடித்துக்கொண்டு உற்றுக் கேட்பது போன்ற பாவனையில் ( மட்டையடி வருணனை கேட்பதற்கென்றே வியப்பை, அதிர்ச்சியை இன்ன பிறவற்றைக் காட்டும் ஒரு பாவனை உண்டு)  நடப்பேன். பின்தொடர்வோர்   சிலர் பலராகி " ஃபிரண்டு ரன் எத்தன? " என்பார்கள் . எதுவும் சொல்லாமல் கைக்குட்டையைப் பிரித்துக் குறளைப் பிற புத்தகங்களோடு சேர்த்துக்கொண்டு நடப்பேன். வக்கிரம் !


ஊடகங்களில் என்னை மீறிப் புலன்களில் படும் பட்டோடி நவாப் முதல் சச்சின் டெண்டுல்கர் வரை பெயரளவில் மட்டுமே சிலரை அறிவேன். இப்போது தமிழ்நாட்டு நடராசனை மேட்டிமை ஊடகங்கள் கையாளும் முறை பற்றி மட்டுமே கருத்துச் செலுத்தினேன். மற்றபடி மிக மிக மிகப் பெரும்பாலான மட்டையாடுநரை இன்றளவும் எனக்குத் தெரியவே தெரியாது.


வாணாள் வீணாள் கழித்துவிட்டேன். அகவை அறுபத்துமூன்று கடந்துவிட்டது.

Monday, October 2, 2023

வரலாற்று நகைமுரண்*

 


 “சங்க நூல்களெல்லாம் புத்தசமண சமயச் சார்புடையன ; 

   அவைகளைப் பயிலுதல் கூடாது"

நமது சமாஜம் சங்க இலக்கியத்தை வெளியிடுதல் பொருத்தமாகுமா என்றுசிலர் ஐயுறுதல் கூடும். “சங்க நூல்களெல்லாம் புத்தசமண சமயச் சார்புடையன ;  அவை களைப் பயிலுதல் கூடாது" என்று எனதுஇளமைப்பருவத்திற் சில சிவனடியார்கள் கூறியதுண்டு. இக்காலத்தின் நல் வினைப் பயனாக இக்கொள்கை மறைந்துவிட்டது.

என்று சமாஜக் சைவசித்தாந்த மகா சமாஜக் காரியதரிசி எழுதியிருப்பினும் அக் கொள்கை மறைந்துவிடாமல்  எச்ச சொச்சம் இருந்ததை அவர் தொடர்ந்து எழுதியுள்ள ஒன்றரைப் பக்கம் உணர்த்துகிறது.


நம்பியாண்டார்நம்பிகள்  , திருஞானசம்பந்தர்,சேக்கிழார் ஆகியோர் குறிப்புகள், சிவபெருமான் பற்றிய சங்க இலக்கியக் குறிப்புகள், திருவிளையாடற் புராணக் கதை , சிவஞான முனிவர் தம் உரைகளுள் சங்கப் பாடல்களை எடுத்தாண்டமை என அடுக்கடுக்கான சான்றுகளால்  சங்க இலக்கியங்கள் சைவத்திற்கு முரணானவையல்ல என்று நிறுவ முற்படுகிறார்¹.


அச்சாக்கக் காலத்தில் சான்றோர் செய்யுள் மீட்பு   சி.வை.தாமோதரம்பிள்ளையின் கலித்தொகைப் பதிப்பில் தொடங்கியது(1887). மொழியாராய்ச்சியில் பாய்ந்த புதுவெளிச்சம் பழந்தமிழ்ச் சான்றோர் செய்யுள்களை மீட்கத் தூண்டியது.அந்த உணர்வெழுச்சியைத் தாமோதரனாரின் வீரசோழிய,கலித்தொகைப் பதிப்புரைகளில் காணலாம்².அதற்கு அரை நூற்றாண்டுக்குப் பின்னும் , பாட்டும் தொகையும் முழுவதும் தனித்தனி நூல்களாக வெளிவந்தபின்னும், அவை சைவத்திற்கு முரணானவை என்னும்  கடுஞ்சைவக்  கொள்கை எஞ்சி நின்றது .


ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கிப் போவோம்.


பொதுக் காலம் 12 ஆம் நூற்றாண்டு தொடங்கிச் சான்றோர் செய்யுள்களுக்கும் தொல்காப்பியத்திற்குமான  பழையவுரைகள் கிடைக்கின்றன. 

இடைக்காலத்தில் சங்கத் தமிழின் இனிமை, தெளிவு, சுருக்கம், நேர்மை முதலிய பண்புகள் நீங்கி , வடமொழிச் சொற்களும் காவிய மரபுகளும் புகுந்தன.இவற்றால் பல நல்லியல்புகள் வந்தமைந்தாலும் தீமைகளாக அலங்காரங்களும் ஆடம்பரங்களும் ஓங்கி, தமிழுக்கு இயற்கையாய் அமைந்திருந்த ஆற்றல் சிறுகலாயிற்று. கல்வியில் தலைசிறந்தோர் சிலர் அந்நல்லியல்புகள் தமிழில் மீண்டும் தழைக்க வேண்டுமென்று கருதி  உழைத்துவந்தனர். சங்கத் தமிழுக்கு மீட்சியியக்கம் (return to classicism) நிகழ்வதாயிற்று. இம்மீட்சி யியக்கத்திற்கு ஓர் அறிகுறியாக, சங்க இலக்கியங்களுக்கும் அவற்றோடொத்த பெருமையுடைய குறள்போன்ற பெருநூல்களுக்கும் செவ்விய உரைகள் எழுதப்பட்டன'³

என உரைகளின் எழுச்சியை ஓர் இலக்கியப் போக்காகக் கருதுகிறார் வையாபுரிப்பிள்ளை.


களப்பிரர் ஒடுக்குமுறையாலும் பத்தி இயக்கத்தாலும் பின்னடைவுற்ற சங்கப் பண்பாடும் இலக்கியமும் , நல்லவேளை சில குடும்பங்களில் உயிர்ப்புடன் தொடர்ந்தன. தொல்காப்பியம் உள்ளிட்ட பழந்தமிழ் நூல்கள் தலைமுறை தலைமுறையாக வாய்மொழி வடிவில் கடந்து வந்திருக்கலாம். சில காலத்திற்குப்பின் எழுத்து வடிவிலான நயம் பாராட்டலும் உரைகளும் தீவிரமாக உணரப்பட்ட நிலையில் 

இடைக்காலத்தில் அங்குமிங்குமாகத் தோன்றிய உரையாசிரியர்கள் சிலரே பழந்தமிழ் மரபின் மீட்பர்களாயினர். அவர்கள் இல்லாமற்போயிருந்தால் ஒட்டுமொத்தப் பழந்தமிழ் இலக்கியங்களும் மறைந்திருக்கலாம் அல்லது முற்றும் பொருள் விளங்காமல் போயிருக்கலாம் என்று வரலாற்றுப் பின்னணியில் வைத்து விளக்க முற்படுகிறார் கோ.சுந்தரமூர்த்தி⁴.

நூல்களைப் பேணுவதில் வாய்மொழி மரபிற்கும் கற்றல் கற்பித்தலில் மனப்பாடத்திற்கும் குறிப்பிடத்தக்க பங்கிருப்பினும் , தமிழுக்கேயுரிய வரிவடிவத் தொன்மையை நோக்க⁵   ஒரு கட்டத்தில் நூல்களைச்  செம்மை செய்து நிலைப்படுத்திச் சுவடிகளாகப் பேணினர் என்று கொள்ளவேண்டும். இப்போது கிடைக்கும் சான்றோர் செய்யுள்களின் செறிவு அவற்றின் எழுத்தாக்கத்தோடு தொடர்புடையது ; வாய்மொழி வழக்கின் நேர்ப்பதிவன்று⁶.

ஒரு சமூகத்தின் மதிப்பார்ந்த நூல்தொகுதி பேணப்படுவதும் கைமாறுவதுமாகிய  சமூகப்  பின்னணியையும் ஊகிக்கலாம். 



          கண்ணுதற் கடவு ளண்ணலங் குறுமுனி 

         முனைவேன் முருக னெனவிவர் முதலிய 

          திருந்துமொழிப் புலவ ரருந்தமி ழாய்ந்த 

          சங்க மென்னுந் துங்கமலி கடலு 

          ளரிதி னெழுந்த பரிபாட் டமுதம்

           ...                         ...                          ...                 ...

          மிகைபடு பொருளை நகைபடு புன்சொலிற் 

          றந்திடை மடுத்த கந்திதன் பிழைப்பும்

           ...                         ...                          ...                    ...

           மதியின் றகைப்பு விதியுளி யகற்றி 

           ...                         ...                          ...                 ...


          இப்பாயிரம் ஆழ்வார் திருநகரித் திருமேனி இரத்தின கவிராயர் வம்சத்துத்

          தாயவலந்தீர்த்த கவிராயர் அவர்கள் வீட்டி னும், தேவர்பிரான் கவிராயரவர்கள்

          வீட்டினுமுள்ள திருக்குறட் பரிமேலழகர் உரைப்பிரதிகண் முகத்திருந்தது.

          இச்செய்யுளின் கீழ்ப் "பரிபாடற்கு உரையெழுதினான் பரிமேலழகரையன்

          என்பது  இதனான் உணர்க" என்றும் எழுதப்பட்டுள்ளது.

          இவ்வுரைச்சிறப்புப் பாயிரத்தால், கந்தியாரென்பவர் இப்பரி பாடலுட்டம்

           சொற்களை இடைமடுத்துப் பிழைபடுத்தாரென்பதும், இஃது எழுதியோராற்

           பெரிதும் பாடம் பிழைத்தலின் உண்மை நிலை காண்டல் அரிதாயிருந்த

           தென்பதும், இதனைப்படிப்போரும் ஒரெழு த்தினை மற்றோரெழுத்தாகக்

            கருதிப் பிழைபடப் படித்துப்போந்தா ரென்பதும், அக்காலத்துப் பரிமேலழகர்,

              கந்தியாரது புன்சொற் களைகளைந்து எவ்வகைப் பிழைப்பும் போக்கி

              யாவருக்கும் விளங்கச் சுருங்கியதோர் உரை இயற்றியருளினாரென்பதும்

               நன்குணரலாவன ⁷ .

கந்தியார்  என்போர் சைனப் பெண் துறவிகள் ; கல்வியாளர்கள் ⁸.  சைன மரபினர்க்கும் சான்றோர் செய்யுளுக்குமுள்ள தொடர்பையும் அவர்களிடமிருந்து வைதிக மரபினர் மீட்டதையும் இப்பாயிரம் குறிப்பாலுணர்த்துகிறது. 


தமிழ் இலக்கண வரலாற்றில் சைனத்தின் இடம் வினாக்களுக்கு அப்பாற்பட்டது ⁹. தமிழ் வரிவடிவ வரலாற்றில் - பொதுக் காலத்துக்கு முந்தைய தமிழி வரிவடிவம் தொட்டு - சைனருக்குரிய இடம்  நிறுவப்பட்ட ஒன்று ¹⁰. 


திருமாலையும் முருகக் கடவுளையும் போற்றும் பரிபாடலை அவைதிகராய சைனர் பேணியிருப்பாரா ? என்கிற தடை எழுப்பப்படலாம்.சைனர் தம் சமயம் , சமயம் சாரா உலகியற்( Secular)கலை  இரண்டையும் பயிற்றுவித்தனர் ; தம் கல்வி நிலையங்களில் நூலகங்களைப் பேணிவந்தனர் ¹¹. 


சைவம் மேலோங்கியதற்குப்பின் சைவ மடங்களிலும் சைவப் புலமை மரபினர் இல்லங்களிலும் சிந்தாமணி முதலிய வெளிப்படையான சைன இலக்கிய ஏடுகள் கிடைத்ததை  நோக்கச் சைவரும் பரசமய நூல்களைப் பயிலாவிடினும் பேணியிருப்பதை உணரமுடிகிறது ¹².


முச்சங்கம் என்னும்  தொன்மத்தினூடாகச் சான்றோர் செய்யுள்கள் சைவ மரபிற்குள் கொணரப் படுகின்றன.அவை அதற்கு முன் சைன மரபினரால் பேணப்பட்டதற்கு[பரபக்க]ச்   சான்றாகக் கிடைப்பது பரிபாடல் உரைச் சிறப்புப் பாயிரம்.


தொன்மமெல்லாம் புனைந்து தம்வயமாக்கிக்கொண்டவர்களே ,  பின்னொரு காலத்தில் கைவிட்டதுதான் வரலாற்று நகை முரண் .15 ஆம் நூற்றாண்டு தொட்டுச் சைவச் சார்பற்றவற்றின் பட்டியலில் பாட்டும் தொகையுமாகிய பழந்தமிழ்நூல்களும் சேர்க்கப்பட்டன. அவற்றின் பயிற்சி அற்றுப்போகாவிடினும் குன்றியது¹³ ; உரைமரபு இடையீடுற்றது.   அக்காலம் முதல் சித்தாந்தச் சாத்திர உரை மரபு பரவலாயிற்று. ¹⁴


19 – 20 ஆம் நூற்றாண்டுகளில் மீண்டும் பழந்தமிழ் நூல்கள்  வேறொரு தளத்தில் எழுச்சியுற்றபோது , இடைக்காலக் கடுஞ்சைவ இறுக்கத்திற்கு எதிராக ஒரு காலத்தில் அவற்றைத் தம்வயப்படுத்தும் பொருட்டுச் சைவர் புனைந்த சங்கத் தொன்மத்தைத்  தாமே மீட்டுயிர்ப்பிக்கும் நெருக்கடிக்குத் தாராளச் சைவர்  தள்ளப்பட்டது வரலாற்றின் நகைமுரண்.


-----------------------------------------------


1.ம.பாலசுப்பிரமணியன் ,  ' முகவுரை 'சங்க இலக்கியம் எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும், சைவசித்தாந்த மகா சமாஜம், சென்னை, 1940 , பக்.xvii - xviii.


2.சி.வை.தாமோதரம் பிள்ளை,  தாமோதரம், குமரன் பப்பிளிஷர்ஸ்,சென்னை, 2004.


3. எஸ். வையாபுரிப் பிள்ளை, தமிழ்ச் சுடர் மணிகள்,பாரி நிலையம் , சென்னை, 1959,பக்.197- 98.


4. The Sangam culture and literature went to the background following the Kalabhra suppression and the upsurge of the Bhakti movement. But fortunately the study of these neglected Sangam works should have been continued and alive in some Tamil families. These families should have patiently waited for the revival of the Sangam tradition. The appreciation and the study of the Sangam works including Tolkäppiyam might have been passed on to the next generation most probably by oral tradition. After sometime the need for a written appreciation and explanation should have been very acutely felt by those interested in the study of these works. To fulfil the most urgently and vehemently needed purpose some commentators appeared here and there in Tamilnadu in the mediaeval ages and they were the saviours of ancient Tamil tradition. Without them the entire block of ancient Tamil literature would have either been completely lost or become wholly unintelligible.

G. Sundaramoorthy, Early Literary Theories In Tamil(in comparison with Sanskrit theories),

Sarvodaya Ilakkiya Pannai, Madurai,1974.


5. ஒன்பது காரணங்களை வரிசைப்படுத்தி அசோகன் பிராமியிலிருந்து வேறுபடும்  தமிழி வடிவங்களின் தனித்தன்மை  அசோகர் காலத்திற்கு முன்பே பாகத மொழியாளருடன் தமிழகம் கொண்ட தொடர்பு , அசோகர் காலத்திற்கு முந்தைய, பொ.கா. 6 ஆம் நூற்றாண்டு அளவிலான, தமிழிப் பழமை  ஆகியன பற்றி விளக்கியுள்ளார் கா.ராஜன் .

 K.Rajan , Early Writing System - A Journey from Graffiti to Brāhmī , Panda Nadu Centre for

    Historical Research , Madurai, 2015 , p.397.


6. சான்றோர் செய்யுள்களாக இப்போது கிடைக்கும் பாட்டும் தொகையும் வாய்மொழி வாய்பாட்டுக் கூறுகள் அடங்கிய புலமைப் படைப்புகளாகும். இப்படைப்புகள் முந்தைய வாய்மொழிப் பாடல் மரபில் நினைவிற் பேணப்பட்டவற்றின் மறு ஆக்கங்கள் என்று கொள்ள வாய்ப்புண்டு - பா.மதிவாணன், தொல்காப்பியம் பால. பாடம் , அய்யா நிலையம், தஞ்சாவூர், 2014, ப.89.


 7. பத்திராசிரியர் ரா. ராகவையங்கார் , செந்தமிழ் , சுபகிருது ௵   மார்கழி௴ (1902 டிசம்பர்), பக். ௮௮ - ௮௯.


8.தமிழிக் கற்பொறிப்புப் பற்றிய குறிப்புரைப் பகுதி : 

b. kanti 'Jaina nun'.


cf. LT karanta pal anaiya kanti 'the Jaina nun (pure) as fresh milk (Civaka 2649), Kantiyar (a Jaina nun and poetess) who is said to have interpolated as many as 445 verses in Civakacintamani (Note by U.Ve. Swaminathaiyar, Civaka 1089, 2649 & 3143, 7th edn. reprint). cf. itai matutta kanti tan pilaippum 'the errors of Kanti who interpolated (some verses)' (Pari. Urai. Payiram: 9-10); kavunti atikal 'N. of a senior Jaina nun' (Cilap.11:166); kantiyai-k-käninum 'as soon as they see a kanti (Jaina nun)' (Nilakēci:323); kavunti 'Jaina nun' (Tiva.); kanti, kaunti 'id'. (Cuta.). The term ganti (variant kanti, khanti) occurs in early Kannada inscriptions as an affix to the names of Jaina nuns (A.N. Narasimhia 1941: Nos. 43 & 45). The etymology of the word is obscure. (ibid., Appendix V, and P.B. Desai 1957: p. 85, note, for different interpretations.) However, the most likely derivation is from gamthi (AMg.) one who composes a literary work (PSM). cf. ganthika (pali) hard-studying (PED) (Skt.). grantha 'book', granthin 'one who reads books, well-read' (MW). The occurrence of kanti (< Ka. ganti) in this inscription indicates Kannada influence. 

- Iravatham Mahadevan, Early Tamil Epigraphy From the Earliest Times to the Sixth Century C.E.( Volume I), Central Institute of Classical Tamil, Chennai, 2014, P.629.

9.தெ.பொ. மீனாட்சிசுந்தரனார், சமணத் தமிழ் இலக்கிய வரலாறு, கலைக்கதிர் வெளியீடு, கோவை, 1961.


10.Iravatham Mahadevan, Early Tamil Epigraphy From the Earliest Times to the Sixth Century C.E.( Volume I), Central Institute of Classical Tamil, Chennai, 2014, PP.163 - 173.


11. Debendra Chandra Das Gupta, Jaina System of Education , Bhārathi Mahāvidyālaya , Calcutta,

1942, P.3.


12. சீவகசிந்தாமணிப் பதிப்பில் சிந்தாமணி நூற்சுவடிக் கட்டுகள் இரண்டைத் தருமபுர ஆதீனத் தலைவரும் ஒன்றைத் திருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளையும் தந்ததாகக் குறித்துள்ளார் உ.வே.சா. - உ.வே.சாமிநாதையர் (பதி.), திருத்தக்க தேவரியற்றிய சீவகசிந்தாமணி மூலமும் மதுரையாசிரியர் - பாரத்துவாசி நச்சினார்க்கினியருரையும், ஸ்ரீ தியாகராச விலாச வெளியீடு, ஹேவிளம்பி ௵ சித்திரை ௴, ப.௧௨.


13.  மாணிக்கவாசகர் அறிவால் சிவனே என்பது திண்ணம். அன்றியும் அழகிய திருச்சிற்றம்பலமுடையார் அவர் வாக்கில் கலந்திரந்து அருமைத் திருக்கையாலெழுதினார். அப்பெருமையை நோக்காது சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, சங்கப்பாட்டு, கொங்குவேள்மாக்கதை முதலியவற்றோடு சேர்த்துச் செய்யுட்களோடு ஒன்றாக்குவர். அங்ஙனமுமமையாது, இலக்கணமாவது தொல்காப்பியம் ஒன்றுமே ,செய்யுளாவது திருவள்ளுவர் ஒன்றுமே,  இவ்விரண்டு நீங்கலான இலக்கண இலக்கியமெல்லாம் ஒன்றற்கு ஒன்று பெருமை சிறுமை இணை என்று கொள்வார் என்பது தோன்ற இம்முறை வைத்து அடையைப் பொதுவாக்கினாம். அவர் அதுமட்டோ இறையனார் அகப்பொருள் முதலான இலக்கணங்களையும். தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம், சிவஞானபோதம், சிவஞான சித்தியார், சிவப்பிரகாசம் ,பட்டினத்துப்பிள்ளையார்பாடல் முதலிய இலக்கியங்களையும் ஒரு பொருளாக எண்ணாது, நன்னூல், சின்னூல், அகப்பொருள், காரிகை, அலங்காரம் முதலிய இலக்கணங்களையும், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு, இராமன் கதை, நளன் கதை அரிச்சந்திரன் கதை முதலிய இலக்கியங்களையும் ஒரு பொருளாக எண்ணி வாணாள் வீணாள் கழிப்பர். 

- ஸ்ரீ சுவாமிநாத தேசிகர் (பதி.: ஆறுமுக நாவலர்) , இலக்கணக் கொத்து மூலமும் உரையும் , வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னை , விகிர்தி௵ பங்குனி௴, (பாயிரவியல் - நூற்பா எண். 7 உரைப்பகுதி)ப.௧௪.


14.Lehmann,Thomas , ' A Survey of Classical Tamil Commentary Literature ',Between Preservation and Recreation:Tamil Traditions of Commentary, French Institute,Pondicherry,2009 ,pp.66 - 67 




*சாகித்திய அகாதெமியும் திருச்சி,தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறையும் இணைந்து நடத்திய புலியூர்க்கேசிகன் நூற்றாண்டுக் கருத்தரங்க (26 & 27.09. 2023) நிறைவுரைக்காக எழுதிய இப்பகுதியின் மற்றொன்று விரித்தல் மிகுதி கருதி இதனைத் தவிர்த்துவிட்டேன்.


Sunday, September 24, 2023

பாடம்

 பாடம் 1 : மனப்பாடம்

📚📚📚📚📚📚📚📚📚


மனப்பாடம் என்பது  ஒரு சொல் நீர்மைத்தாக -ஒற்றைச் சொல் போல - வழங்குகிறது.

ஆனால் அது மனம், பாடம் என்னும் இருசொற்களால் அமைந்த தொடர் என்பது வெளிப்படை. 


தற்காலத் தமிழ் அகராதி (க்ரியா) பாடம் என்பதற்குத் தரும் பொருள் :


பாடம்1 பெ. 1: (மாணவர்களுக்குக் கற்பிக்கப்படும்) குறிப்பிட்ட ஒரு துறையின் அறிவைத் தருவதாக அமையும் பிரிவு/மேற்குறிப்பிட்ட பிரிவைச் சார்ந்த நூலின் பகுதி; subject/lesson (in a subject).  


 2: (காவியம், நாடகம், செய்யுள் போன்றவற்றின்) மூலத்தின் தரப்படுத்தப்பட்ட எழுத்து வடிவம்; (written) text (of a literary composition).  

 

 3: குறிப்பிட்ட ஒன்றை உணர்த்துவதாக அமையும் அனுபவம் அல்லது உண்மை; படிப்பினை; lesson (that one learns by experience or by observation). 

 

 4: மனப்பாடம்; text committed to memory. 

 

பாடம்2 பெ. 1: (மனித உடல், விலங்கின் தோல், புகையிலை முதலியவை) கெட்டுப் போகாமல் நீண்ட நாள் நிலைக்கும்படி மேற்கொள்ளப்படும் முறை; (of body) embalming; (of leather, tobacco, etc.) tanning, curing, etc. 


கற்பிக்கப்படும்/ நடத்தப்படும்  பாடம் (1.1) என்பதே பரவலான வழக்கு.

தரப்படுத்தப்பட்ட எழுத்து வடிவம் (1.2) என்பது நெடுங்காலமாகத் தொடர்ந்து வருகிற - புலமையுலகம் சார்ந்த வழக்கு .


ஒன்றை உணர்த்தும் அனுபவம் (1.3) என்னும் பொருள் நடத்தப்படும் பாடத்தோடு (1.1) தொடர்புடையது.மனப்பாடம் என்பதன் சுருக்க வடிவமாகவும் (1.4) பாடம் என்னும் சொல் வழங்கிவருகிறது.


ஒன்றை  நிலைத்திருக்குமாறு பொதிந்துவைத்தலாகிய பாடம் செய்தல் (2)என்பது சற்று வேறுபட்டது ; எனினும் ஏட்டிலோ மனத்திலோ ஒன்றைப் பதிந்துவைப்பதோடு தொடர்புடையது.


புரிந்தோ புரியாமலோ மனப்பாடம் செய்தல் என்பதும் கல்வியோடு தொடர்புடையதுதான். சொல் வரலாற்று நோக்கில் அது 

" தரப்படுத்தப்பட்ட எழுத்து வடிவம் (1.2)" என்பதோடு தொடர்புடையது.


காகிதமும் அச்சும் பரவுவதற்கு முந்தைய காலத் தமிழகத்தில் நூல்களும் ஆவணங்களும் கடிதங்களும் மிகப்பெரும்பாலும் பனையோலைச் சுவடிகளில்தான் எழுதிப் பேணப்பட்டன. அவற்றைப் படியெடுத்துப் பரவலாக்குவது எளிதன்று.


திண்ணைப் பள்ளிகளில் தொடக்க நிலையில் மணற்பரப்பில் விரலால் எழுதச் செய்து எழுத்தறிவித்தார்கள். காகிதக் காலத்தில் கூட,  சடங்காக மணலில் எழுதச் செய்வது தொடர்ந்தது. தொடக்க நிலையில் மாணவர்கள் ஆத்திசூடி , கொன்றைவேந்தன் முதலிய எளிய அறநூல்களை மனப்பாடமாக்கிக்கொள்வார்கள் ; உடன் பொருளையும் பயில்வார்கள்.


அடுத்த கட்டத்தில் நிகண்டுகள்  நன்னூல் முதலியவற்றை மனப்பாடமாக்கிக்கொள்வார்கள். 

அதாவது அந்நூற் பாடங்களை (1.2) மனத்தில் ஏற்றிக்கொள்வார்கள். மனம் இங்கு சுவடி போல் இயங்கும். 


சுவடியில் எழுதப்படும் பாடம் சுவடிப்பாடமெனில், மனத்தில் 'எழுத'ப்படும் பாடம் மனப்பாடம்.


கட்புலன் குன்றி மனப்பாடத்தாலேயே புலமை பெற்ற வீரராகவ முதலியார் தம்மை

'ஏடாயிரங்கோடி எழுதாது தன்மனத் தெழுதிப்படித்த விரகன்' என்று குறிப்பிட்டுக்கொண்டார்.


மனப்பாடமாக்கிக் கொண்ட  பின்னர் அவ்வந் நூல் வல்ல ஆசிரியர்களிடம் பொருளறிந்து நூலை உள்வாங்குவார்கள். நிகண்டுகளை மனப்பாடம் செய்வது அகராதிகளை மனப்பாடம் செய்வதுபோல்தான்.


பொருளுணராமல்  சொல்வதை  நாப்பாடம் என்கிறது நாலடியார்.


நாப்பாடம் சொல்லி நயமுணர்வார் போல்செறிக்கும்

தீப்புலவர் சேரார் செறிவுடையார் தீப்புலவன்

கோட்டியுள் குன்றக் குடிபழிக்கும் அல்லாக்கால்

தோள்புடைக் கொள்ளா எழும்(நாலடியார் 32, அவையறிதல்: 2)


பாடம், உரை, நூல் தொகுத்தல் ஆகிய பலவற்றையும் பற்றித் தமிழ் இலக்கிய வரலாற்றில் முதன்முதலில் விரிவாகக் கூறும் நூல் நாலடியார்தான். பாடம் பற்றியவற்றை மட்டும் இங்குத் தருகிறேன். இவற்றின் பொருளையும் உரை முதலியன பற்றியும் படித்துணர்ந்துகொள்க.


கற்றதூஉம் இன்றிக் கணக்காயர் பாடத்தால்

பெற்றதாம் பேதைஓர் சூத்திரம் மற்றதனை

நல்லா ரிடைப்புக்கு நாணாது சொல்லித்தன்

புல்லறிவு காட்டி விடும்(நாலடியார் 32, அவையறிதல்: 4)


பாடமே ஓதி பயன் தெரிதல் தேற்றாத

மூடர் முனிதக்க சொல்லுங்கால் கேடரும்சீர்

சான்றோர் சமழ்த்தனர் நிற்பவே மற்றவரை

ஈன்றாட்கு இறப்பப் பரிந்து(நாலடியார் 32, அவையறிதல்: 6)


தொடர்பு கருதி நன்னூல் பொதுப் பாயிரம் கூறும் செய்திகளையும் பார்த்துவிடுவோம். இப்பொதுப்பாயிரம் ஒரு கல்வி மரபின் பதிவு ; முற்றும் பவணந்தியார் இயற்றியதல்ல. இம்மரபின் காலத்தால் முந்தைய பதிவை இறையனார் களவியலுரை தொட்டுக் காண்பது வழக்கம்; ஆராய வேண்டும்.


பாடம் கருத்தே சொல்வகை சொற்பொருள்

தொகுத்துரை உதாரணம் வினாவிடை விசேடம்

விரிவதிகாரம் துணிவு பயனோடு

ஆசிரிய வசனமென்(று) ஈரேழ் உரையே (நன்னூல், பொதுப் பாயிரம், 21)


நூல்பயில் இயல்பே நுவலின் வழக்கறிதல்

பாடம் போற்றல் கேட்டவை நினைத்தல்

ஆசான் சார்ந்(து)அவை அமைவரக் கேட்டல்

அம்மாண் (பு) உடையோர் தம்மொடு பயிறல்

வினாதல் வினாயவை விடுத்தல் என்றிவை

கடனாக் கொளினே மடம்நனி இகக்கும்(நன்னூல், பொதுப் பாயிரம், 41)


பழந்தமிழ் நூல்களில் பாடவேறுபாடுகள் தோன்றியதற்கு இம்மனப்பாடக் கல்வியும் காரணம். நூலைப் பயிற்றும் ஆசிரியர் தக்க பாடத்தைத் தேர்ந்து உரைக்க வேண்டும்.

எனவே பாடம் என்பது உரையின் இலக்கணத்தில் முதலிடம் பிடித்துக்கொண்டது.


தொல்காப்பியம் உரையிலக்கணத்தில் பாடம் பற்றிக் கூறாமை அதன் காலப்பழமை காட்டும். விரிப்பிற் பெருகும்.மற்றொன்று விரித்தலை நிறுத்திக்கொள்கிறேன்.


பண்டைக் கல்விசார்ந்த மனப்பாடம் இன்று தேவையில்லை . ஆனால் வலிந்து முயலாமல்  பொருளுணர்ந்து  இயல்பாக அமையும் மனப்பாடம் நல்லது ; மேன்மேலும் ஆராயவும் நயங்காணவும் துணை செய்வது.


பாடம் 2 : மூலபாடத் திறனாய்வு  திறனாய்வாகுமா ?

✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️


நான் மூலபாடத் திறனாய்வியல் பயின்றவனல்லன்.

எஸ்.எம்.கத்ரே என்னும் பெயர் தெரியும். பாடவேறுபாடுகளுடன் கூடிய தமிழ்ப் பதிப்புகளின் அறிமுகமுண்டு. தமிழறிஞர் சிலரின் மூலபாடத் திறனாய்வியல் நூல்களைப் படித்திருக்கிறேன். பாடவேறுபாடுகள் பற்றி எழுதியுமிருக்கிறேன் (தமிழ்கூறு நல்லுலகம் எதையும் தாங்கும்😃).அவ்வளவுதான்.


கண்ணுறும் அன்பர்கள் கருத்துக்கூறும் பொருட்டு இதனை எழுதுகிறேன்.


திறனாய்வு பற்றிய ஒரு நூலின் பொருளடக்கத்தைப் பார்த்தேன். அதில் மூல பாடத்திறனாய்வும் திறனாய்வு வகைகளில் ஒன்றாகச் சேர்க்கப்பட்டிருந்தது. அது Textual Criticism என்பதன் தமிழாக்கப் புழக்கம். இதில் குற்றமில்லை ; இயல்புதான். 


மூலபாடத் திறனாய்வைத் திறனாய்வு வகையில் சேர்க்கலாமா? (ஆங்கிலம் பற்றி அம்மொழி வல்லார்வாய்க் கேட்டுணர்க).


சொற்றொடரின் மூலத்தைப் பிடித்துத் தொங்கவேண்டியதில்லை. தமிழில் புழக்கம் குறிக்கும் பொருளே பொருள். தமிழுக்கு இயையுமா என்பதுதான் வினா.


" Textual Criticismஐ பாடவிமர்சனம் / பாடத் திறனாய்வு/பாட ஆய்வியல் எனக் கொள்ளலாம்"¹ என்கிறார்  சிவத்தம்பி.கலைச் சொற்களில் மிக (மிகை?)த் துல்லியும் நாடும் அவர் சாய்கோடுகளிட்டு மூன்று வாய்ப்புகளைத் தருகிறார்.


சரி!


தற்காலத் தமிழ் அகராதி (க்ரியா, 2020) திறனாய்வு , திறனாய்வாளர் ஆகியவற்றுக்குத் தரும் பொருள்களைப் பார்ப்போம் :


           திறனாய்வு பெ.(புத்தகங்கள், கட்டுரை போன்றவற்றின்)

            குறைநிறைகளை

           ஆராய்ந்து செய்யும் மதிப்பீடு; evaluation. 


            திறனாய்வாளர் பெ. திறனாய்வு செய்பவர்; (literary) critic.

             

'குணம் குற்றம் நாடி மிக்கது கொண்டு' மதிப்பிடுதல் என்று (வள்ளுவர் துணை! ) செறிவாகச் சொல்லலாம். 


இன்னும் செறிவாகச் சொல்வதானால் , மதிப்பீடு!


மூலபாடத் திறனாய்வில்  மதிப்பீடு இல்லை என்றே சொல்லிவிடலாம் ; தேர்ந்தெடுப்பு உண்டு.


உயர்வு /இனிது - அழகியல் அலசல்


பாரதி பாடல்களின் பாடவேறுபாடுகள் சிலவற்றை  எடுத்துக்காட்டி ,அச்சில் வந்த ,அண்மைக்கால இலக்கியங்களும் மூலபாடத் திறனாய்வுக்குரியவை என்பதைச் சற்று விளக்கி முதன்முதலில் விவாதித்தவர் புதுமைப்பித்தன்.  அவற்றுள் ஒன்று :


சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே - அதைத் 

தொழுது படித்திடடி பாப்பா

செல்வம் நிறைந்த ஹிந்துஸ்தானம் - அதைத்

தினமும் புகழ்ந்திடடி பாப்பா (பரலி சு.நெல்லையப்பர் , 1917)

 

சொல்லில் இனிது தமிழ்ச்சொல்லே - அதைத்

தொழுது படித்திடடி பாப்பா

செல்வம் நிறைந்த ஹிந்துஸ்தானம் — அதைத் 

தெய்வமென்று கொண்டாடு பாப்பா!(ஞானபானு, 1915)


'சொல்லில் இனிது தமிழ்ச் சொல்லே' ...  'உயர்வு' என்று பா. பி. பிரசுரத்தில் காணப்படும் வார்த்தையைவிட நயமானதும் அந்தரங்க பாவமானதுமாகும் இனிது என்ற பதம். என்னதான் விதேசி இலக்கியத்தின் அழகுகள் நம்மைப் பிரமிக்க வைத்தாலும், நம் வீட்டுக் குத்துவிளக்கு, நாம் பேசும் பேச்சு இவற்றின் குழைவை நாம் மறக்க முடியாது. இது ஓர் இயற்கையான மனோபாவம். இதைத்தான் கவி கூற முயலுகிறார்.²


புதுமைப் பித்தன் இதைத்-தான் என்று அழுத்தமாகக் கூறிமுடிக்கிறார். 


இரண்டு பாடங்களுள் ஒன்றைத் தேர்ந்தெடுக்க ஓர் அழகியல் அலசலை -திறனாய்வு அமிசத்தை - மேற்கொள்கிறார் புதுமைப்பித்தன்.


ஆராய்ச்சி 


1.'இனிது ' எனில் உணர்ந்து / விழைந்து ... படிக்கலாம் ; தொழுது படிக்க

   வேண்டியதில்லை . பு.பி.யின் தருக்கம் இடிக்கிறது. உயர்வு எனில் தொழுது

   படிக்கலாம் .

2. இனிது என்பது காலத்தால் முந்தைய பாடம். உயர்வு என்பது பிந்தைய பாடம். இது

     பாரதி வாழ்ந்த காலத்திலேயே நேர்ந்திருக்கிறது.

3. பாரதி நோக்கில் தமிழ்ச் சொல் உயர்வு என்தற்கு அகச்சான்றும் காட்டலாம். 


The Occult Element in Tamil Speech³ என்னும் கட்டுரையொன்றை எழுதியுள்ளார் பாரதியார். அதனை,


Among few typical languages with which I am acquainted, the Tamil language seems to to be unique in possessing an extraordinary number of words that have more occult suggestion in them than secular significance  


என்று தொடங்குகிறார். தொடர்ந்து,


உட்கார்- உட்கு+ஆர்' within thyself rest'/' be self composed ஒக்கார் (in.common speech) ஒக்க + ஆர் " Get into harmony, Set thy spirit in unison with mine " , அகம் இல்லம் / உள்ளம் ; துணி - " cloth ", " courage " என்றெல்லாம் உள்ளுறை பொருள்கள் பற்றி விவரிக்கிறார்; Symbolic speech, psychological and metaphysical expression பற்றியெல்லாம் பேசுகிறார்; தம் குருவிடம் விவாதித்ததாக விளக்குகிறார்.


இவற்றின் வன்மை மென்மைகள் ஒருபுறமிருக்க , பாரதி தமிழ்ச் சொற்கள் குறித்துக் கொண்டிருந்த உயர்மதிப்பே இங்குக் கருதத்தக்கது. எனவே,


        சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே - அதைத் 

        தொழுது படித்திடடி பாப்பா

        

என்னும் ' நிறைவேறியபாடமே '⁴பொருந்தும்.

ஆக, பாடத்திறனாய்வு ( மூலபாடத் திறனாய்வன்று) என்பது திறனாய்வு ஆய்வு இரண்டாலும் இயல்வது என்ற முடிவுக்கு வரலாம்; ஆனாலும் மற்ற திறனாய்வு வகைகளில் சேர்க்க இயலாது.


___________________________________


1. கார்த்திகேசு சிவத்தம்பி, ' தமிழில் இலக்கியப் பாட மீட்பு ' , உ.வே.சா. பன்முக ஆளுமையின் பேருருவம் ( தொகுப்பு : பெருமாள் முருகன்), காலச்சுவடு, நாகர்கோவில் ,2007 , ப.138.

2. மணிக்கொடி,15.11.1937 &01.12.1937(ஆ.இரா.வேங்கடாசலபதி பதிப்பு, புதுமைப்பித்தன் கட்டுரைகள், காலச்சுவடு, நாகர்கோவில் ,2007 , ப.153)

3. 'The Occult Element in Tamil Speech ' , The Commonweal, 27-02-1920, pp. 121-122 

- சீனி.விசுவதாதன் (பதி.), கால வரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள், பதினொன்றாந் தொகுதி, சீனி.விசுவநாதன் (வெளியீடு), சென்னை 2010, பக்.30-34.

4. மூலபாடமென்பது original textஐயே கருதும். அதனால் ஒரு பாடம் பற்றிய முதல் வடிவமே மூலபாடம் எனும் நிலையைப் பெறலாம். ஆனால் ஒரு textஇல் வழங்கும் நிலையில் சாதார ணமான அதன் பாடமாகக் கொள்ளப்படுவது எல்லா வேளைகளிலும் முதலில் அல்லது முதற்தடவையில் எழுதப்பட்டவையல்ல. ஆசிரியரே தான் கொண்ட 'நிறைவேறிய பாட'த்தில் தனது முதற்பாடத்தைக் கைவிடலாம் ...

இக்கட்டுரைக்கான சிற்றாய்வினை மேற்கொண்டபொழுது பாடமூலம் எனும் தொடர் பற்றியும் சிந்திக்க வேண்டியதாயிற்று 'பாடமூலம்' என்பது பாடத்தின் மூலமாகும். மூல பாடமென்பதும் பாடமூலமென்பதும் ஒரே பொருள்தரா- கார்த்திகேசு சிவத்தம்பி, ௸, பக். 137 - 38.

Monday, July 10, 2023

தமிழ்த் திறனாய்வின் தொடக்கம் தேடி...*




ஆராய்ச்சிக்கும் திறனாய்வுக்குமிடையே ஊடாட்டங்கள் இருப்பினும் அவை வெவ்வேறு என்பது தெளிவு.

தமிழில் பலவற்றின் தொடக்கப் பதிவைத் தொல்காப்பியத்தில் காண்பது வழக்கம் (நம்பிக்கை?) திறனாய்வின் தொடக்கத்தையும் காண இயலுமா?

                                     ***

இறைச்சியில் பிறக்கும் பொருளுமா ருளவே

 திறத்தியல் மருங்கில் தெரியு மோர்க்கே

 

  உவமப்   பொருளின் உற்ற துணருந்

  தெளிமருங் குளவே திறத்திய லான

என்னும் நூற்பாக்களின் (தொல்.பொருள். பொருளியல் 34 & உவமவியல் 207)" திறத்தியல் ' என்ற சொல் இலக்கியம் பற்றிய மதிப்பீட்டினைச் சுட்டிக்காட்டுவதுபோல உள்ளது" எனக் கருதும் துரை.சீனிச்சாமி அவர்கள் , இவற்றைத் திறனாய்வு பற்றிய குறிப்புகளாகக் கொள்கிறார் (தொல்காப்பியமும் இலக்கியவியலும், என்.சி.பி.எச்., சென்னை, 2013, ப. 16)

                                             ***

உரையாசிரியர்கள் 'நோக்கு' என்னும் செய்யுள் உறுப்பை விளக்குவது திறனாய்வுக்கு நெருக்கமாகிறது.

" யாதானும் ஒன்றைத் தொடுக்குங்காலத்துக் கருதிய பொருளை முடிக்குங்காறும் பிறிது நோக்காது அது தன்னையே நோக்கி நிற்கும் நிலை" என்பார் இளம்பூரணர். 

'கருதிய பொருளை முடிக்குங்காறும் ' என்பது "குறித்த பொருளை முடியநாட்டல் " என்னும் தொல்காப்பியத் தொடரை உளங்கொண்டெழுதியது. பாவலரேறு ச.பாலசுந்தரம் இந் நூற்பாவுரையை, " குறித்த பொருளை முடியநாட்டும் யாப்பமைந்த செய்யுளின்கண்... " என்றுதான் தொடங்குகிறார்.

பேராசிரியர் வழக்கின் வெள்ளைத் (நுட்பமற்ற வெளிப்படைத்) தன்மையிலிருந்து , - நோக்கென்னும் உறுப்பால்  - வேறுபட்டது செய்யுள் என்பது இந்நூற்பா நுதலிய பொருள் என்று சொல்லி உரையைத் தொடங்குகிறார்.

ஒரு பனுவல் (Text) இலக்கியமாதல் பற்றிய இந்தப் பார்வைதான் இலக்கியத்திறனாய்வின் தொடக்கப்புள்ளி.

நச்சினார்க்கினியர் - எடுத்துக்காட்டு உட்பட - ஏறத்தாழ அப்படியே பேராசிரியரைப் பின்பற்றுகிறார்.

இளம்பூரணர் 'நோக்'கை 1) ஒரு நோக்கான ஓட்டம் , 2) பலநோக்காகி வருதல், 3) இடையிட்டு நோக்கல் என ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பாட்டாக மூன்று பாட்டுகளை எடுத்துக்காட்டுகிறார். 

பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் எடுத்துக்காட்டாக, 'முல்லை வைந்நுனை...' (அகநானூறு 4) என்னும் பாட்டை அலசல் முறையை ஒத்த நிலையில் பகுத்து நயம் பாராட்டுகின்றனர். 

பாலசுந்தரம், 'ஈதலுந் துய்த்தலும்...'(குறுந்தொகை 63) என்னும் நான்கே அடியால் அமைந்த பாட்டைக் காட்டி, அதன் பொருள் நுணுகி நோக்குப்பட அமைந்தவாற்றையும் சொற்கள் நோக்குப்பட அமைந்தவாற்றையும் குறிப்புப்பொருள் அமைந்தவாற்றையும் சொற்பொருள்நோக்குப்பட அமைந்தவாற்றையும் புலவனின் குறிக்கோளும் பயனும் தோன்ற யாப்பின் வழியதாய் நிற்குமாற்றையும் விவரித்துள்ளார். நிறைவாக, "மேலும் இதன் நயங்களை விரித்துணர்தற்கு ஏற்றவாறு அமைந்துள்ளமையும் காண்க. விரிக்கின் பெருகும்." என்கிறார். இதுவும் நயம் பாராட்டலே.

இந்நூற்பா உரை நிறைவில் பேராசிரியர் , இவ்வாறு பாட்டில் மாத்திரை முதலாகியவும் தத்தம் இலக்கணத்தில் திரியாது வந்தமையின் அவ்விலக்கணம் அறிவார்க்கு நோக்கிப் பயன்கொள்ளுதற்கு உரியவாயினவாறு கண்டு கொள்க... இவ்வாறு முழுவதும் வந்தன நோக்குதற்குச் சிறப்புடைய எனவும் இவை இடையிட்டு வந்தன சிறப்பில எனவும் கொள்ளப்படும்."

என்கிறார்.

சிறப்புடைய[ ன ] ,  சிறப்பில என்னும் தரமதிப்பீட்டுப்பார்வையும் திறனாய்வு சார்ந்ததே.

மற்றொன்று, 'அவ்விலக்கணம் அறிவார்க்கு...' என்று அவர் சொல்வது கோட்பாடு.


1) இலக்கியப் பனுவலை இனங்காணல்

2) தர மதிப்பீடு

3) கோட்பாட்டு அடிப்படை (யாப்பளவில்) - ஆகிய இவை திறனாய்வுசார்ந்தவை. 

                                                 ***

௧)நோக்கு என்பதைக் கருவி என்கின்றனர் உரையாசிரியர்கள். கருவி உறுப்பாகுமா?

௨)திறனாய்வுப் பார்வை தொல்காப்பியத்தில் இருக்கிறதா? அல்லது உரையாசிரியர்களிடத்தில் இருக்கிறதா?

௩) மேற்குறித்த பண்டை உரையாசிரியர்களிடம் (இக்கால உரையாசிரியர்களை விட்டுவிடலாம்)  தலைகாட்டியிருக்கிற திறனாய்வுப் பார்வை அவர்களுக்கு முன்போ பின்போ எந்த அளவு நடைமுறையில் இருந்தது?

௪) சமயச்சார்போடு கூடிய புலமையாளர்களின் ஈட்டு உரை முதலியவற்றைத் திறனாய்வுக்குள் அடக்கலாமா?

௫)சமயம் சார்த்த கண்டன நிராகரணப் போர்க்கால உரையாசிரியர்களின் வசைவளஞ் சான்ற புலமைச் சிலம்பாட்டங்கள் திறனாய்வுத் தகுதி பெறுமா?

௬)மரபுவழித் திறனாய்வு , நவீனத்திறனாய்வு என வேறுபடுத்த இயலுமா?( இயலும் என்பது என் கருத்து)


"மாத்திரை முதலா அடிநிலை காறும்

 நோக்குதற் காரணம் நோக்கெனப் படுமே" (தொல்காப்பியம், செய்யுளியல், 100)

  'அடி நிறைகாறும்' என்பது பேராசிரியரும் நச்சரும் கொள்ளும் பாடம். பாட வேறுபாட்டால் சற்றுப் பொருள் வேறுபாடு உண்டு; அடிப்படை மாறுபாடு இல்லை.

" காரணமெனினும் கருவியெனினும் ஒக்கும். உண்டற்றொழில் என்றாற்போலக் கொள்க" என்கிறார் இளம்பூரணர் [உண்டற்றொழில் = உண்ணுதலாகிய தொழில். அவ்வாறே நோக்குதற்காரணம் = நோக்குதலாகிய காரணம்.] மேலும் "அஃதாவது யாதானும் ஒன்றைத் தொடுக்குங்காலத்துக் கருதிய பொருளை முடிக்குங்காறும் பிறிது நோக்காது அது தன்னையே நோக்கி நிற்கும் நிலை" என்கிறார். 

" மாத்திரையும் எழுத்தும் அசைநிலையும் சீரும் முதலாக அடிநிரம்புந் துணையும் நோக்குடைய வாகச் செய்தல் வன்மையாற் பெறப்படுவது நோக்கென்னும் உறுப்பாவது என்றவாறு. கேட்டார் மறித்து நோக்கிப் பயன் கொள்ளுங் கருவியை நோக்குதற் காரணமென்றாமென்பது " எனப் பேராசிரியரும் கருவி என்கிறார். ஆனால், 'நோக்குதற்காரணம்' என்னும் தொடரமைதியை இளம்பூரணர் போல் விளக்கவில்லை;  'நோக்குதல் = நோக்குடையவாகச் செய்தல்' என்று கொண்டு 'நோக்குடையவாகச் செய்தல் வன்மையால் ' என மூன்றாம் வேற்றுமைத் தொடராக விரிக்கிறார்.

நச்சர் ஏறத்தாழப் பேராசிரியரையே பின்பற்றுவதால் தனித்து விவாதிக்க வேண்டியதில்லை.(நச்சர் தம் நகாசு வேலையைக் காட்டாமலிருப்பாரா? தனியே பார்ப்போம்)

செய்யுள் செய்வோன்  தான் நோக்கிச் செய்வதா? 

பயில்வோர் நோக்கிக் கொள்ளுமாறு செய்யுளுள் நிற்பதா? 

பயில்வோர்தம் நுண்ணோக்கால் கண்டுகொள்வதா?

(இவை ஒன்றோடொன்று தொடர்புடையனவுமாம்)

இளம்பூரணர் , 'தொடுக்கும் காலத்து ' என்றும் பேராசிரியர் , 'செய்தல் வன்மை' என்றும் வெவ்வேறு தொடர்களைக் கூறினாலும் செய்யுள் செய்வோனால் 'நோக்கு ' அமைக்கப்படுகிறது என்பது பெறப்படுகிறது.

'ஒரு நோக்காக ஓடிற்று ' , ' பலநோக்காகி வந்தது'  , 'இடையிட்டு நோக்கிற்று ' என்றெல்லாம் எடுத்துக் காட்டுகளையடுத்துத் தரும் குறிப்புகளால் 'நோக்கு' செய்யுளுள் அமைந்து கிடப்பது என்னும் பூரணர் கருத்தை உணர முடிகிறது.

"கேட்டார் ... கருவி" எனப் பேராசிரியர் கூறுவதால் பயில்வோர் கொள்வதென்னும் கருத்தும் புலப்படுகிறது. இவ்வுரையினுள் பின்னும் ' கொள்ளுதல் ' என்பதைப் பேணுகிறார் பேராசிரியர்.

பேராசிரியர், 'முல்லை வைந்நுனை ...' (அகம். 4) என்னும் பாட்டில் செறிந்துள்ள நயங்களை அலசிக் காட்டி யாப்பமைதியையும் சுட்டி, " இவ்வாறே பலவும் நோக்கியுணர்தற்குக் கருவியாகிய சொல்லும் பொருளும் எல்லாம் மாத்திரை முதலா அடி நிறைகாறும் அடங்கக் கூறி நோக்குதற் காரணம் நோக்கென்றானென்பது." என்று நூற்பாவுரையின் நிறைவுப் பகுதியில் கூறுகிறார். 

'நோக்கியுணர்தற்குக் கருவி' என்பதை நோக்க நான்காம் வேற்றுமைத் தொடராகவும் பேராசிரியர் கருதியிருப்பதாகத் தோன்றுகிறது.

ச.பாலசுந்தரம் உரையில் பொருள் கூறும்போது , " ஓசையளவும் [ மாத்திரையும் ]... அடியும் ஆகிய கருவி உறுப்புகள் யாவும் அச்செய்யுளைக் கேட்போர் செவியின்பமுறுதலொடு அதன் பொருளையும் பயனையும் மீண்டும் மீண்டும் கருதி இன்புறுதற்குரியதாகச் செய்யப்படும் காரணம் நோக்கு ... " என்கிறார். நோக்கு,  கருவியா? காரணமா? என்பதும் நோக்குதற்காரணம்  என்னும் தொடருக்குப் பொருள் கொண்ட விதமும் பிடிபடவில்லை.உரை தொடரும் போது

 " மாத்திரை முதலியன அடியுள் அடங்குமேனும் அவை ஒவ்வொன்றும் நோக்குதற்குக் காரணமாக அமைதல் வேண்டும் ... " என்கிறார். இங்கு நான்காம் வேற்றுமைத் தொடராகக் கொண்டிருப்பது தெளிவாகிறது.

'நோக்குதற் காரணம்' இருபெயரொட்டாகவும், மூன்றாம் நான்காம் வேற்றுமைத் தொகையாகவும் கொள்ளப்பட்டிருப்பதற்குத் தொல்காப்பிய நூற்பாவிலேயே உள்ள தடுமாறு நிலைதான் காரணம்.

புலவன் வெள்ளை(வெளிப்படை)த்   தன்மையற்ற நுட்பமான செய்யுளைச் செய்யும் நோக்கில் மாத்திரை முதலியவற்றால் நோக்கமையச் செய்கிறான்.

பயில்வோர் நோக்குதற்குக் காரணமாகச் செய்யுளுள் நோக்கு அமைந்துள்ளது.

அது செய்யுளுள் அமைந்துள்ளமையால் நோக்கு என்பது உறுப்பாகிறது.

சொல், பொருள், அணி,குறிப்பு முதலியன மட்டுமன்றி மாத்திரை முதலாக அடிநிலை காறும் உள்ளார்ந்து நிகழ்வது நோக்கு.

"பாவிகம் என்பது காப்பியப் பண்பே" என்னும் தண்டியலங்கார நூற்பா நினைவுக்கு வருகிறது.

மாத்திரை முதலா அடிநிலை காறும் கருவியுள் அடங்கும். 'நோக்கு'க் கருவியாகாதென்றே படுகிறது.இங்கு நான்காம் வேற்றுமைத் தொடராக விரிப்பது பொருந்தும்.

" நவில்தொறும் நூல் நயம் " என்பார் வள்ளுவர். ஆனால் தொல்காப்பியர் நயம் முதலிய சொற்களை விடுத்து நோக்கு என்பதைக் கொள்கிறார்.

நோக்குதற்குக் காரணமான பிறிதொன்றை நோக்கு என்பது ஒருவகை (?) ஆகுபெயர் எனலாம்.

நச்சர், " நோக்கென்று பெயர் கூறப்படுமென்றவாறு "  என்பது இதனை உறுதி செய்யும். அஃதாவது நோக்கு என்பதை ஒரு கலைச்சொல்லாகக் கொள்ள வேண்டும். 

இதில் ஐயத்திற்கிடமின்றித் திறனாய்வு அடிப்படை அமைந்துள்ளது என்பது தெளிவு.

பேரா. தமிழண்ணல் அவர்களின் , 'நோக்கு' , பேரா.கா. சிவத்தம்பியவர்களின் 'தொல்காப்பியக் கவிதை இயல்' ஆகிய நூல்கள் தஞ்சையில் உள்ளன. பேரா. செ.வை. சண்முகம் அவர்களின் யாப்பும் நோக்கும் என்னும் நூலும் வந்துள்ளது.அவற்றைப் பார்க்க இயலாதது ஒரு குறை . வேறு நூல்களும் இருக்கலாம்.

நச்சினார்க்கினியரின் நகாசு வேலை 

நச்சினார்க்கினியரின் தொல்காப்பியச் செய்யுளியல் உரை ஏறத்தாழப் பேராசிரியரைப் பின்பற்றியே அமைந்திருப்பது வெளிப்படை.

நோக்கு என்னும் உறுப்பை வரையறுக்கும் 'மாத்திரை முதலா...' (தொல்.செய். 100) என்னும் நூற்பாவுரையும் விதிவிலக்கன்று.

நோக்கு என்னும் உறுப்பமைந்ததாகப் பேராசிரியர் காட்டும் ' முல்லை வைந்நுனை...' (அகம். 4) என்னும் பாட்டின் விளக்கத்திலும் பெரிதும் பேராசிரியரையே நச்சர் பின்பற்றியுள்ளார். 

ஆனால், அதில் நச்சினார்க்கினியத் தனி முத்திரையும் உண்டு. முதலில், தொல்காப்பியம்- செய்யுளியல்- உரைவளத்தின் பதிப்பாசிரியர் க.வெள்ளைவாரணன் அவர்கள் காட்டிய பகுதியை அப்படியே தருகிறேன்:

" பூத்த பொங்கர்த் துணையொடு வதியும் தாதுண் பறவை பேதுறல் அஞ்சி' § என்ற தொடரில் பொங்கர்த் துணையொடு வதியும் பறவை, தாதுண் பறவை என  இயைத்து , 'பொங்கரிற் பசி தீர்ந்து துணையொடு வதியும் பறவையும் தாதையுண்கின்ற பறவையும் கலக்கமுறுதற்கு அஞ்சி மணியை விலக்கிய தேரன் என்றதனால் காதலும் அருளும் உடைமையின் அவற்றின் பிரிவிற்கும் பசிக்கும் இரங்கினான் ' என நோக்கின் நுட்பத்தை மேலும் விளக்கிய திறம் உணர்ந்து மகிழத்தக்கதாகும்"[§’பூத்த சோலையில் பெடையொடு தங்கும் ,தேனை  உண்ணும் ,வண்டுகள் ' என்பது பொருள்.]

இத்தொடரைத் தம் வழக்கப்படி நச்சர் , " பொங்கரிற் பசி தீர்ந்து துணையொடு வதியும் பறவையும் தாதை உண்கிற பறவையும் " என்று இரண்டாக்கி நயஞ்சேர்க்கிறார். இதற்கு அரணாகத் திருத்தக்கதேவரை நிறுத்துகிறார். 

" வதியும் பறவை வண்டுந் தேனுமென்பதுந் தாதுண்பறவை சுரும்பென்பதும்,   'எங்குமோடி யிடறுஞ் சுரும்புகாள் வண்டுகாள் மகிழ் தேனினங்காள் ' (சீவகசிந்தாமணி, குணமாலையாரிலம்பகம், 42) எனப் பின்னுள்ளோர் கூறியவாற்றானு முணர்க " என்கிறார். இவை பேராசிரியர் கூறாதவை.  நச்சர் சிந்தாமணிக்கும் உரை வரைந்தவர் என்பது தெரிந்ததே.

திறனாய்வில் ஆய்வு ஊடாடுவதற்கு மரபு தரும் செவ்வியல் எடுத்துக்காட்டு இது.

''உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியரெ"ன்றது உண்மை வெறும் புகழ்ச்சியில்லை.

ஒரு செய்முறைப் பயிற்சி




நான் இங்கிருக்கிறேன்.என் பெண்மைநலம் அடங்காத நோயுடன் கடற்கரைச் சோலையில் கிடக்கிறது. அவன் அவர்கள் ஊரில் இருக்கிறான். எங்கள் இரகசியக் காதல் பற்றி ஊரே பேசுகிறது.

" இதை ஒரு சிறுகதை என்று சொல்லமுடியுமா? "

" முடியாதென்றுதான் தோன்றுகிறது."

"சரி, இதைக் கவிதை என்றாவது சொல்ல முடியுமா?"

"கவிதையா? 'பெண்மை நலம் கடற்கரைச் சோலையில் கிடக்கிறது' என்பதில் கவிதைச் சாயல் இருக்கிறது.  ஆனால் மொத்தமாகப் பார்க்கும்போதுஉரைநடை மாதிரி இருக்கிறதே!"

"அப்புறம்?"

"சிறுகதைத் தொடக்கம் என்று வேண்டுமானால் சொல்லலாம்"

மேற்கண்ட தொடர்களின் நால்வேறு மொழிபெயர்ப்புகளைப் பார்க்கலாம். நோக்கம், அவற்றில்  கவிதை காண முடியுமா என்று பார்ப்பதே ;  மொழிபெயர்ப்புப் பற்றிய மதிப்பீடன்று. 

____________________

I am here . My Virtue

lies in grief

in the groves near the sea .

                                 My lover

is back his home town . And our secret

is with the gossips

in public places

-----------------------------------

I am here 

My virtue lies in uncurable grief

in a grove by the sea .

My man is in his town,

and

our secret has become gossip

in public places

______________________


 My friend!  

I remain here, but my feminine charm 

Abides in the coastal grove, 

Being assailed by endless grief! 

The chief stays in his place, 

But alas, our secret affair has become 

A matter of open gossip In the village common!


I am here.

I left my virtue in the

seashore grove, and my

deep pain does not end.

He is back in his town, and

our secret love has become

gossip in the public places.

_____________________________


சரி. இப்போது மூலத்தைப் பார்ப்போம்.அது குறுந்தொகை  97ஆம் பாட்டு. நான்கே அடிகள்.


தலைவி கூற்று

(வரைவு நீட்டித்த வழித் தலைமகள் தோழிக்குச் சொல்லியது)


யானே ஈண்டை யேனே என்நலனே

ஆனா  நோயொடு கான  லஃதே

துறைவன் தம்மூ  ரானே

மறையல  ராகி  மன்றத் தஃதே 

' என் நலன் கானலஃது ' என்பது இயற்கை கடந்தது. இதனை அணி வகையாகத் கருதலாம்.¹ 

யானே, ஆனா & துறைவன், மறை என்னும் எதுகைகளும்(-னே, -னா நெடில் எதுகைகள்) அடிதோறும் இறுதியில் ஏகாரம் வரும் இயைபும் முதலடியில் (வலமிருந்து இடமாக ) 1, 2, 4 ஆம் சீர்களில் வரும் கீழ்த்கதுவாய் இயைபும் தொடைகள்.²

யான் + ஏ, ஈண்டையேன் + ஏ,  நலன் + ஏ, கானலஃது + ஏ , ஊரான் + ஏ, மன்றத்தஃது + ஏ  என்கிற ஆறு ஏகாரங்களும் அசை ³ என்கிறார் உ.வே.சாமிநாதையர். அசைகளுக்குப் பொருளில்லை. 

கானலஃது, மன்றத்தஃது: ஆய்தங்கள் (ஃ) விரிக்கும் வழி விரித்தல் என்பார் உவே.சா. இதனைச் செய்யுள் விகாரம்⁴ என்பர்.தனிப்பொருள் ஏதுமில்லை.

'துறைவன் தன்னூரான்' என்றிருக்கவேண்டும்.  'தலைவனும் அவன் சுற்றத்தாரும் வாழுமிடமாதலின் அவரையும் உளப்படுத்தித் தம்மூரான் என்றாள் ' என்று

இலக்கணச் சமாதானம் செய்கிறார் உ.வே.சா.  இதில் நயங் காணவும் இடமுண்டு.

பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் தொல்காப்பியச் செய்யுளியல் உரையில் இதனை மாட்டின்றி வந்த செய்யுள் என்பர். அதாவது, சொற்களை இடம்மாற்றிப் பொருள் கொள்ளத் தேவையில்லை.உரைநடை போலவே எழுவாய், வினைமுற்றுகள் கொண்ட நான்கு வாக்கியங்களில் பாட்டு அமைந்துள்ளது. 

இப்பாட்டிலுள்ள ¹அணி,  ²தொடைகள்,  ³அசைகள், ⁴விகாரம் ஆகியவை  செய்யுளுக்குரியன;கவிதைத் தோற்றம் காட்டுவன. மொழிபெயர்ப்பில் தொடை, அசை, விகாரம்    ஆகியவற்றைக்  கொண்டுவர இயலவில்லை;இயலாது. 

மேலோட்டமான இந்தக் கவித்தன்மை கடந்து ஆழ்ந்த கவித்துவத்தைக் காட்டுவன பொருளற்ற அசைகளும் விகாரங்களும் பிறவும். அவை ' மாத்திரை முதலா அடிநிலை காறும்'  பாட்டுக்குள் பாலிற்படு நெய்போல , பயில்வோன் கவிதையை நோக்குவதற்குக் காரணமாக,  கலந்துள்ளன. 

" நான்கலந்து பாடுங்கால் " என்பார் வள்ளலார்.

"ஆழ்ந்திருக்கும் கவியுளம் காணல் " என்பார் பாரதி.

"புத்தகமும் நானும் சையோகம் புரிந்ததொரு வேளை "  என்பார் பாரதிதாசன்.

எல்லா வாசகத்தையும் கலந்து பாட இயலாது. 

எல்லாக் காவியத்திலும் ஆழ்ந்த கவியுளம் காண முடியாது.

எல்லாப் புத்தகத்தோடும் சையோகம் (புணர்ச்சி) அமையாது.

அந்தப் பனுவல் அதற்கு இடந்தர வேண்டும்.

அப்படி பனுவலுள் கவிதை/இலக்கிய நயம் உள்ளார்ந்திருப்பதும் அதைக் கண்டுணர்வதும்தான் நோக்கு - என்று தோன்றுகிறது. 

இதை அலசிக் காட்டுவதில் பயனில்லை. மேற்காட்டிய குறுந்தொகைப் பாட்டில் அப்படியொன்றும் கவித்துவமோ நயமோ பெரிதாக இல்லை என்றும் ஒருவர் சொல்லக் கூடும்.

அறிஞர் சிலர் கருத்துகளைப் பார்க்க இயலாத குறையுடன் இப்போதைக்கு நிறைவு செய்கிறேன்.

-------------------

*தமிழ்ப் பல்கலைக்கழக இணையவழித் தமிழாய்வு உரைத்தொடரின் தொடர்ச்சி இது. இதனைத் தூண்டியவர் சுட்டிப் பெயர் கொளப்படாத தமிழ் மாணவர் ஒருவர்.("ஒரு கேள்வி ஐயா"  என்னும் என் இடுகை காண்க)


தொடர்ந்தவர்கள் தோழர் வே.மு. பொதியவெற்பன்(Pothi), பேராசிரியர்கள் சாம் கிதியோன் ( Sam Sam Gideon ), இ. சூசை (Tamil Susai), தென்னவன் வெற்றிச்செல்வன் ஆகியோர்.


பேரா. இ. சூசை அவர்கள் தூண்டலின் துலங்கல் இது.


வள்ளுவன் கள்வன்*

 வள்ளுவன் கள்வன்* ————————————--- காமம் என்பது பழந்தமிழில் காதலைக் குறித்தது. திருக்குறள் மூன்றாம் பாலின் சொல்லாட்சி எண்ணிக்கையில் வாக்கெடுப...