நிருவாகம் : அதிகாரப் பொழுதுபோக்கும் வக்கிரமும்
(பாலசுந்தரனார் நாட்குறிப்புகளில் ...)
ஆசிரியர் x நிருவாகம் → பணி நீக்கம்
சம்பளப் பிடித்தம் என்னும் அச்சுறுத்தல்
- ஆகிய இரண்டு இடுகைகளில் , 31.01.1969 ஆம் நாளிட்ட சம்பளப் பிடித்தம் பற்றிய கடித நகலைத் தந்து பாலசுந்தரனாருக்கு நிருவாகம் இடையூறு செய்தது பற்றி முகநூலில் எழுதியிருந்தேன் (31 Jul 2023) . தொடர்ந்தும் ஏதேனும் வாய்ப்புகள் தேடி இடையூறிழைத்து - முதல்வர் கு.சிவமணி அவர்களைப் போல் - வெளியேற்றி விடுவதே நோக்கம். பாலசுந்தரனாரும் அந்த மன நிலைக்கு வந்து விட்டதை இந்த நாட்குறிப்புகள் புலப்படுத்துகின்றன.
1970 மார்ச் 23 : வெளி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முன்னனுமதி பெற வேண்டும் என்று விதித்து, இது, ஒரு முறைமைக்கான ஏற்பாடுதான் , போய் வந்தபின் தெரிவித்தால் கூடப் போதும் என்று சொல்லி [ இது அண்டியவர்களுக்கானது], அப்புறம் முன்னதாகத் தெரிவிக்காமல் போனது பற்றி எச்சரிக்கும் இத்தகு நடைமுறைகள் நிருவாகத்தின் அதிகாரப் பொழுதுபோக்கு.
1970 அக்டோபர் 12 :தனிப்பாடல் திரட்டு, சம காலத்தில் விவாதத்திற்குரிய எதுவும் இல்லாத ஒரு தொகை நூல்; சரசுவதி மகால் வெளியீடு. இத்தகு பதிப்புப் பணியில் ஓர் ஆசிரியர் ஈடுபடுவது அவர் பணியாற்றும் நிறுவனத்தின் மதிப்பைக் கூட்டும். ஆனால் நிருவாகங்கள் அதிகாரப் பொழுதுபோக்கில் தொடங்கி வக்கிர முடிவுகளை எடுக்கும் எல்லைவரை போவதை இன்றும் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்.
1970 டிசம்பர் 18 : ஒரு வக்கிரம். முதல்வர் கு.சிவமணி அவர்களுடன் நிருவாகம் முரண்பட்டது. அவரும் வெளியேறிவிட்டார். ஆனால் கரந்தைத் தமிழ்ச் சங்க/ புலவர் கல்லூரி நிருவாகம் திரு .கு.சிவமணி அவர்களின் தந்தையார் என்னும் ஒரே காரணத்திற்காகத் திரு. சிவ.குப்புசாமி பிள்ளையவர்கள் மறைந்த போது கூட உரிய மரியாதை செய்யாமல் புறக்கணித்தது வக்கிரத்தின் உச்சம்.
இத்தனைக்கும் திரு. சிவ.குப்புசாமி பிள்ளையவர்கள் தமிழவேள் உமா மகேசுவரனாராலேயே மதிக்கப்பட்டவர்; வெள்ளிவிழா மலரில் படம் இடம்பெறுமளவு முதன்மை பெற்றவர் ; ஓய்வுக்குப் பின்னும் சங்கப் பணிகளில் ஈடுபட்டவர். தமிழ்ப் பொழிலில் குன்றக் கூறலாக ஒரு குறிப்பு இடம் பெற்றதே நிருவாகத்தின் ' பெருந் ' தன்மை என்று கொள்ளவேண்டியதுதான். (நானும் என் பங்கிற்குக் கல்லூரி நிருவாகத்தின் வக்கிரத்தால் துன்புற்றவன்தான்!)
No comments:
Post a Comment