Thursday, February 15, 2024

நிருவாகம் : அதிகாரப் பொழுதுபோக்கும் வக்கிரமும் (பாலசுந்தரனார் நாட்குறிப்புகளில் ...)

 நிருவாகம் : அதிகாரப் பொழுதுபோக்கும் வக்கிரமும்

(பாலசுந்தரனார் நாட்குறிப்புகளில் ...)


ஆசிரியர் x நிருவாகம் → பணி நீக்கம்

சம்பளப் பிடித்தம் என்னும் அச்சுறுத்தல் 

- ஆகிய இரண்டு இடுகைகளில் , 31.01.1969 ஆம் நாளிட்ட  சம்பளப் பிடித்தம் பற்றிய கடித நகலைத் தந்து பாலசுந்தரனாருக்கு நிருவாகம் இடையூறு செய்தது பற்றி முகநூலில் எழுதியிருந்தேன்  (31 Jul 2023)  . தொடர்ந்தும் ஏதேனும் வாய்ப்புகள் தேடி இடையூறிழைத்து - முதல்வர் கு.சிவமணி அவர்களைப் போல் - வெளியேற்றி விடுவதே நோக்கம். பாலசுந்தரனாரும் அந்த மன நிலைக்கு வந்து விட்டதை இந்த நாட்குறிப்புகள் புலப்படுத்துகின்றன.






1970 மார்ச் 23 : வெளி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முன்னனுமதி பெற வேண்டும் என்று விதித்து, இது, ஒரு முறைமைக்கான ஏற்பாடுதான் , போய் வந்தபின் தெரிவித்தால் கூடப்  போதும்  என்று சொல்லி [ இது அண்டியவர்களுக்கானது], அப்புறம் முன்னதாகத்  தெரிவிக்காமல் போனது பற்றி எச்சரிக்கும் இத்தகு நடைமுறைகள் நிருவாகத்தின் அதிகாரப் பொழுதுபோக்கு.


1970 அக்டோபர் 12 :தனிப்பாடல் திரட்டு, சம காலத்தில் விவாதத்திற்குரிய எதுவும் இல்லாத ஒரு தொகை நூல்;  சரசுவதி மகால்  வெளியீடு. இத்தகு பதிப்புப் பணியில் ஓர் ஆசிரியர் ஈடுபடுவது அவர் பணியாற்றும் நிறுவனத்தின் மதிப்பைக் கூட்டும். ஆனால் நிருவாகங்கள் அதிகாரப் பொழுதுபோக்கில் தொடங்கி வக்கிர முடிவுகளை எடுக்கும் எல்லைவரை போவதை இன்றும் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்.


1970 டிசம்பர் 18 : ஒரு வக்கிரம். முதல்வர் கு.சிவமணி அவர்களுடன் நிருவாகம் முரண்பட்டது. அவரும் வெளியேறிவிட்டார். ஆனால் கரந்தைத் தமிழ்ச் சங்க/ புலவர் கல்லூரி நிருவாகம் திரு .கு.சிவமணி அவர்களின் தந்தையார் என்னும் ஒரே காரணத்திற்காகத்  திரு. சிவ.குப்புசாமி பிள்ளையவர்கள் மறைந்த போது கூட உரிய மரியாதை செய்யாமல் புறக்கணித்தது வக்கிரத்தின் உச்சம். 


இத்தனைக்கும் திரு. சிவ.குப்புசாமி பிள்ளையவர்கள் தமிழவேள் உமா மகேசுவரனாராலேயே மதிக்கப்பட்டவர்; வெள்ளிவிழா மலரில் படம் இடம்பெறுமளவு முதன்மை பெற்றவர் ; ஓய்வுக்குப் பின்னும் சங்கப் பணிகளில் ஈடுபட்டவர். தமிழ்ப் பொழிலில் குன்றக் கூறலாக  ஒரு குறிப்பு இடம் பெற்றதே நிருவாகத்தின் ' பெருந் ' தன்மை என்று கொள்ளவேண்டியதுதான். (நானும் என் பங்கிற்குக் கல்லூரி நிருவாகத்தின் வக்கிரத்தால் துன்புற்றவன்தான்!)

No comments:

Post a Comment

இலக்கண மறுப்பு என்னும் பொறுப்பின்மை

வட்டார வழக்குதான் மக்கள் மொழி .அதுதான் உயிருள்ளது என்று மிகையழுத்தம் தரும் குழு ஒன்று விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்படித்தான் எழுத...