Monday, October 2, 2023

வரலாற்று நகைமுரண்*

 


 “சங்க நூல்களெல்லாம் புத்தசமண சமயச் சார்புடையன ; 

   அவைகளைப் பயிலுதல் கூடாது"

நமது சமாஜம் சங்க இலக்கியத்தை வெளியிடுதல் பொருத்தமாகுமா என்றுசிலர் ஐயுறுதல் கூடும். “சங்க நூல்களெல்லாம் புத்தசமண சமயச் சார்புடையன ;  அவை களைப் பயிலுதல் கூடாது" என்று எனதுஇளமைப்பருவத்திற் சில சிவனடியார்கள் கூறியதுண்டு. இக்காலத்தின் நல் வினைப் பயனாக இக்கொள்கை மறைந்துவிட்டது.

என்று சமாஜக் சைவசித்தாந்த மகா சமாஜக் காரியதரிசி எழுதியிருப்பினும் அக் கொள்கை மறைந்துவிடாமல்  எச்ச சொச்சம் இருந்ததை அவர் தொடர்ந்து எழுதியுள்ள ஒன்றரைப் பக்கம் உணர்த்துகிறது.


நம்பியாண்டார்நம்பிகள்  , திருஞானசம்பந்தர்,சேக்கிழார் ஆகியோர் குறிப்புகள், சிவபெருமான் பற்றிய சங்க இலக்கியக் குறிப்புகள், திருவிளையாடற் புராணக் கதை , சிவஞான முனிவர் தம் உரைகளுள் சங்கப் பாடல்களை எடுத்தாண்டமை என அடுக்கடுக்கான சான்றுகளால்  சங்க இலக்கியங்கள் சைவத்திற்கு முரணானவையல்ல என்று நிறுவ முற்படுகிறார்¹.


அச்சாக்கக் காலத்தில் சான்றோர் செய்யுள் மீட்பு   சி.வை.தாமோதரம்பிள்ளையின் கலித்தொகைப் பதிப்பில் தொடங்கியது(1887). மொழியாராய்ச்சியில் பாய்ந்த புதுவெளிச்சம் பழந்தமிழ்ச் சான்றோர் செய்யுள்களை மீட்கத் தூண்டியது.அந்த உணர்வெழுச்சியைத் தாமோதரனாரின் வீரசோழிய,கலித்தொகைப் பதிப்புரைகளில் காணலாம்².அதற்கு அரை நூற்றாண்டுக்குப் பின்னும் , பாட்டும் தொகையும் முழுவதும் தனித்தனி நூல்களாக வெளிவந்தபின்னும், அவை சைவத்திற்கு முரணானவை என்னும்  கடுஞ்சைவக்  கொள்கை எஞ்சி நின்றது .


ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கிப் போவோம்.


பொதுக் காலம் 12 ஆம் நூற்றாண்டு தொடங்கிச் சான்றோர் செய்யுள்களுக்கும் தொல்காப்பியத்திற்குமான  பழையவுரைகள் கிடைக்கின்றன. 

இடைக்காலத்தில் சங்கத் தமிழின் இனிமை, தெளிவு, சுருக்கம், நேர்மை முதலிய பண்புகள் நீங்கி , வடமொழிச் சொற்களும் காவிய மரபுகளும் புகுந்தன.இவற்றால் பல நல்லியல்புகள் வந்தமைந்தாலும் தீமைகளாக அலங்காரங்களும் ஆடம்பரங்களும் ஓங்கி, தமிழுக்கு இயற்கையாய் அமைந்திருந்த ஆற்றல் சிறுகலாயிற்று. கல்வியில் தலைசிறந்தோர் சிலர் அந்நல்லியல்புகள் தமிழில் மீண்டும் தழைக்க வேண்டுமென்று கருதி  உழைத்துவந்தனர். சங்கத் தமிழுக்கு மீட்சியியக்கம் (return to classicism) நிகழ்வதாயிற்று. இம்மீட்சி யியக்கத்திற்கு ஓர் அறிகுறியாக, சங்க இலக்கியங்களுக்கும் அவற்றோடொத்த பெருமையுடைய குறள்போன்ற பெருநூல்களுக்கும் செவ்விய உரைகள் எழுதப்பட்டன'³

என உரைகளின் எழுச்சியை ஓர் இலக்கியப் போக்காகக் கருதுகிறார் வையாபுரிப்பிள்ளை.


களப்பிரர் ஒடுக்குமுறையாலும் பத்தி இயக்கத்தாலும் பின்னடைவுற்ற சங்கப் பண்பாடும் இலக்கியமும் , நல்லவேளை சில குடும்பங்களில் உயிர்ப்புடன் தொடர்ந்தன. தொல்காப்பியம் உள்ளிட்ட பழந்தமிழ் நூல்கள் தலைமுறை தலைமுறையாக வாய்மொழி வடிவில் கடந்து வந்திருக்கலாம். சில காலத்திற்குப்பின் எழுத்து வடிவிலான நயம் பாராட்டலும் உரைகளும் தீவிரமாக உணரப்பட்ட நிலையில் 

இடைக்காலத்தில் அங்குமிங்குமாகத் தோன்றிய உரையாசிரியர்கள் சிலரே பழந்தமிழ் மரபின் மீட்பர்களாயினர். அவர்கள் இல்லாமற்போயிருந்தால் ஒட்டுமொத்தப் பழந்தமிழ் இலக்கியங்களும் மறைந்திருக்கலாம் அல்லது முற்றும் பொருள் விளங்காமல் போயிருக்கலாம் என்று வரலாற்றுப் பின்னணியில் வைத்து விளக்க முற்படுகிறார் கோ.சுந்தரமூர்த்தி⁴.

நூல்களைப் பேணுவதில் வாய்மொழி மரபிற்கும் கற்றல் கற்பித்தலில் மனப்பாடத்திற்கும் குறிப்பிடத்தக்க பங்கிருப்பினும் , தமிழுக்கேயுரிய வரிவடிவத் தொன்மையை நோக்க⁵   ஒரு கட்டத்தில் நூல்களைச்  செம்மை செய்து நிலைப்படுத்திச் சுவடிகளாகப் பேணினர் என்று கொள்ளவேண்டும். இப்போது கிடைக்கும் சான்றோர் செய்யுள்களின் செறிவு அவற்றின் எழுத்தாக்கத்தோடு தொடர்புடையது ; வாய்மொழி வழக்கின் நேர்ப்பதிவன்று⁶.

ஒரு சமூகத்தின் மதிப்பார்ந்த நூல்தொகுதி பேணப்படுவதும் கைமாறுவதுமாகிய  சமூகப்  பின்னணியையும் ஊகிக்கலாம். 



          கண்ணுதற் கடவு ளண்ணலங் குறுமுனி 

         முனைவேன் முருக னெனவிவர் முதலிய 

          திருந்துமொழிப் புலவ ரருந்தமி ழாய்ந்த 

          சங்க மென்னுந் துங்கமலி கடலு 

          ளரிதி னெழுந்த பரிபாட் டமுதம்

           ...                         ...                          ...                 ...

          மிகைபடு பொருளை நகைபடு புன்சொலிற் 

          றந்திடை மடுத்த கந்திதன் பிழைப்பும்

           ...                         ...                          ...                    ...

           மதியின் றகைப்பு விதியுளி யகற்றி 

           ...                         ...                          ...                 ...


          இப்பாயிரம் ஆழ்வார் திருநகரித் திருமேனி இரத்தின கவிராயர் வம்சத்துத்

          தாயவலந்தீர்த்த கவிராயர் அவர்கள் வீட்டி னும், தேவர்பிரான் கவிராயரவர்கள்

          வீட்டினுமுள்ள திருக்குறட் பரிமேலழகர் உரைப்பிரதிகண் முகத்திருந்தது.

          இச்செய்யுளின் கீழ்ப் "பரிபாடற்கு உரையெழுதினான் பரிமேலழகரையன்

          என்பது  இதனான் உணர்க" என்றும் எழுதப்பட்டுள்ளது.

          இவ்வுரைச்சிறப்புப் பாயிரத்தால், கந்தியாரென்பவர் இப்பரி பாடலுட்டம்

           சொற்களை இடைமடுத்துப் பிழைபடுத்தாரென்பதும், இஃது எழுதியோராற்

           பெரிதும் பாடம் பிழைத்தலின் உண்மை நிலை காண்டல் அரிதாயிருந்த

           தென்பதும், இதனைப்படிப்போரும் ஒரெழு த்தினை மற்றோரெழுத்தாகக்

            கருதிப் பிழைபடப் படித்துப்போந்தா ரென்பதும், அக்காலத்துப் பரிமேலழகர்,

              கந்தியாரது புன்சொற் களைகளைந்து எவ்வகைப் பிழைப்பும் போக்கி

              யாவருக்கும் விளங்கச் சுருங்கியதோர் உரை இயற்றியருளினாரென்பதும்

               நன்குணரலாவன ⁷ .

கந்தியார்  என்போர் சைனப் பெண் துறவிகள் ; கல்வியாளர்கள் ⁸.  சைன மரபினர்க்கும் சான்றோர் செய்யுளுக்குமுள்ள தொடர்பையும் அவர்களிடமிருந்து வைதிக மரபினர் மீட்டதையும் இப்பாயிரம் குறிப்பாலுணர்த்துகிறது. 


தமிழ் இலக்கண வரலாற்றில் சைனத்தின் இடம் வினாக்களுக்கு அப்பாற்பட்டது ⁹. தமிழ் வரிவடிவ வரலாற்றில் - பொதுக் காலத்துக்கு முந்தைய தமிழி வரிவடிவம் தொட்டு - சைனருக்குரிய இடம்  நிறுவப்பட்ட ஒன்று ¹⁰. 


திருமாலையும் முருகக் கடவுளையும் போற்றும் பரிபாடலை அவைதிகராய சைனர் பேணியிருப்பாரா ? என்கிற தடை எழுப்பப்படலாம்.சைனர் தம் சமயம் , சமயம் சாரா உலகியற்( Secular)கலை  இரண்டையும் பயிற்றுவித்தனர் ; தம் கல்வி நிலையங்களில் நூலகங்களைப் பேணிவந்தனர் ¹¹. 


சைவம் மேலோங்கியதற்குப்பின் சைவ மடங்களிலும் சைவப் புலமை மரபினர் இல்லங்களிலும் சிந்தாமணி முதலிய வெளிப்படையான சைன இலக்கிய ஏடுகள் கிடைத்ததை  நோக்கச் சைவரும் பரசமய நூல்களைப் பயிலாவிடினும் பேணியிருப்பதை உணரமுடிகிறது ¹².


முச்சங்கம் என்னும்  தொன்மத்தினூடாகச் சான்றோர் செய்யுள்கள் சைவ மரபிற்குள் கொணரப் படுகின்றன.அவை அதற்கு முன் சைன மரபினரால் பேணப்பட்டதற்கு[பரபக்க]ச்   சான்றாகக் கிடைப்பது பரிபாடல் உரைச் சிறப்புப் பாயிரம்.


தொன்மமெல்லாம் புனைந்து தம்வயமாக்கிக்கொண்டவர்களே ,  பின்னொரு காலத்தில் கைவிட்டதுதான் வரலாற்று நகை முரண் .15 ஆம் நூற்றாண்டு தொட்டுச் சைவச் சார்பற்றவற்றின் பட்டியலில் பாட்டும் தொகையுமாகிய பழந்தமிழ்நூல்களும் சேர்க்கப்பட்டன. அவற்றின் பயிற்சி அற்றுப்போகாவிடினும் குன்றியது¹³ ; உரைமரபு இடையீடுற்றது.   அக்காலம் முதல் சித்தாந்தச் சாத்திர உரை மரபு பரவலாயிற்று. ¹⁴


19 – 20 ஆம் நூற்றாண்டுகளில் மீண்டும் பழந்தமிழ் நூல்கள்  வேறொரு தளத்தில் எழுச்சியுற்றபோது , இடைக்காலக் கடுஞ்சைவ இறுக்கத்திற்கு எதிராக ஒரு காலத்தில் அவற்றைத் தம்வயப்படுத்தும் பொருட்டுச் சைவர் புனைந்த சங்கத் தொன்மத்தைத்  தாமே மீட்டுயிர்ப்பிக்கும் நெருக்கடிக்குத் தாராளச் சைவர்  தள்ளப்பட்டது வரலாற்றின் நகைமுரண்.


-----------------------------------------------


1.ம.பாலசுப்பிரமணியன் ,  ' முகவுரை 'சங்க இலக்கியம் எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும், சைவசித்தாந்த மகா சமாஜம், சென்னை, 1940 , பக்.xvii - xviii.


2.சி.வை.தாமோதரம் பிள்ளை,  தாமோதரம், குமரன் பப்பிளிஷர்ஸ்,சென்னை, 2004.


3. எஸ். வையாபுரிப் பிள்ளை, தமிழ்ச் சுடர் மணிகள்,பாரி நிலையம் , சென்னை, 1959,பக்.197- 98.


4. The Sangam culture and literature went to the background following the Kalabhra suppression and the upsurge of the Bhakti movement. But fortunately the study of these neglected Sangam works should have been continued and alive in some Tamil families. These families should have patiently waited for the revival of the Sangam tradition. The appreciation and the study of the Sangam works including Tolkäppiyam might have been passed on to the next generation most probably by oral tradition. After sometime the need for a written appreciation and explanation should have been very acutely felt by those interested in the study of these works. To fulfil the most urgently and vehemently needed purpose some commentators appeared here and there in Tamilnadu in the mediaeval ages and they were the saviours of ancient Tamil tradition. Without them the entire block of ancient Tamil literature would have either been completely lost or become wholly unintelligible.

G. Sundaramoorthy, Early Literary Theories In Tamil(in comparison with Sanskrit theories),

Sarvodaya Ilakkiya Pannai, Madurai,1974.


5. ஒன்பது காரணங்களை வரிசைப்படுத்தி அசோகன் பிராமியிலிருந்து வேறுபடும்  தமிழி வடிவங்களின் தனித்தன்மை  அசோகர் காலத்திற்கு முன்பே பாகத மொழியாளருடன் தமிழகம் கொண்ட தொடர்பு , அசோகர் காலத்திற்கு முந்தைய, பொ.கா. 6 ஆம் நூற்றாண்டு அளவிலான, தமிழிப் பழமை  ஆகியன பற்றி விளக்கியுள்ளார் கா.ராஜன் .

 K.Rajan , Early Writing System - A Journey from Graffiti to Brāhmī , Panda Nadu Centre for

    Historical Research , Madurai, 2015 , p.397.


6. சான்றோர் செய்யுள்களாக இப்போது கிடைக்கும் பாட்டும் தொகையும் வாய்மொழி வாய்பாட்டுக் கூறுகள் அடங்கிய புலமைப் படைப்புகளாகும். இப்படைப்புகள் முந்தைய வாய்மொழிப் பாடல் மரபில் நினைவிற் பேணப்பட்டவற்றின் மறு ஆக்கங்கள் என்று கொள்ள வாய்ப்புண்டு - பா.மதிவாணன், தொல்காப்பியம் பால. பாடம் , அய்யா நிலையம், தஞ்சாவூர், 2014, ப.89.


 7. பத்திராசிரியர் ரா. ராகவையங்கார் , செந்தமிழ் , சுபகிருது ௵   மார்கழி௴ (1902 டிசம்பர்), பக். ௮௮ - ௮௯.


8.தமிழிக் கற்பொறிப்புப் பற்றிய குறிப்புரைப் பகுதி : 

b. kanti 'Jaina nun'.


cf. LT karanta pal anaiya kanti 'the Jaina nun (pure) as fresh milk (Civaka 2649), Kantiyar (a Jaina nun and poetess) who is said to have interpolated as many as 445 verses in Civakacintamani (Note by U.Ve. Swaminathaiyar, Civaka 1089, 2649 & 3143, 7th edn. reprint). cf. itai matutta kanti tan pilaippum 'the errors of Kanti who interpolated (some verses)' (Pari. Urai. Payiram: 9-10); kavunti atikal 'N. of a senior Jaina nun' (Cilap.11:166); kantiyai-k-käninum 'as soon as they see a kanti (Jaina nun)' (Nilakēci:323); kavunti 'Jaina nun' (Tiva.); kanti, kaunti 'id'. (Cuta.). The term ganti (variant kanti, khanti) occurs in early Kannada inscriptions as an affix to the names of Jaina nuns (A.N. Narasimhia 1941: Nos. 43 & 45). The etymology of the word is obscure. (ibid., Appendix V, and P.B. Desai 1957: p. 85, note, for different interpretations.) However, the most likely derivation is from gamthi (AMg.) one who composes a literary work (PSM). cf. ganthika (pali) hard-studying (PED) (Skt.). grantha 'book', granthin 'one who reads books, well-read' (MW). The occurrence of kanti (< Ka. ganti) in this inscription indicates Kannada influence. 

- Iravatham Mahadevan, Early Tamil Epigraphy From the Earliest Times to the Sixth Century C.E.( Volume I), Central Institute of Classical Tamil, Chennai, 2014, P.629.

9.தெ.பொ. மீனாட்சிசுந்தரனார், சமணத் தமிழ் இலக்கிய வரலாறு, கலைக்கதிர் வெளியீடு, கோவை, 1961.


10.Iravatham Mahadevan, Early Tamil Epigraphy From the Earliest Times to the Sixth Century C.E.( Volume I), Central Institute of Classical Tamil, Chennai, 2014, PP.163 - 173.


11. Debendra Chandra Das Gupta, Jaina System of Education , Bhārathi Mahāvidyālaya , Calcutta,

1942, P.3.


12. சீவகசிந்தாமணிப் பதிப்பில் சிந்தாமணி நூற்சுவடிக் கட்டுகள் இரண்டைத் தருமபுர ஆதீனத் தலைவரும் ஒன்றைத் திருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளையும் தந்ததாகக் குறித்துள்ளார் உ.வே.சா. - உ.வே.சாமிநாதையர் (பதி.), திருத்தக்க தேவரியற்றிய சீவகசிந்தாமணி மூலமும் மதுரையாசிரியர் - பாரத்துவாசி நச்சினார்க்கினியருரையும், ஸ்ரீ தியாகராச விலாச வெளியீடு, ஹேவிளம்பி ௵ சித்திரை ௴, ப.௧௨.


13.  மாணிக்கவாசகர் அறிவால் சிவனே என்பது திண்ணம். அன்றியும் அழகிய திருச்சிற்றம்பலமுடையார் அவர் வாக்கில் கலந்திரந்து அருமைத் திருக்கையாலெழுதினார். அப்பெருமையை நோக்காது சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, சங்கப்பாட்டு, கொங்குவேள்மாக்கதை முதலியவற்றோடு சேர்த்துச் செய்யுட்களோடு ஒன்றாக்குவர். அங்ஙனமுமமையாது, இலக்கணமாவது தொல்காப்பியம் ஒன்றுமே ,செய்யுளாவது திருவள்ளுவர் ஒன்றுமே,  இவ்விரண்டு நீங்கலான இலக்கண இலக்கியமெல்லாம் ஒன்றற்கு ஒன்று பெருமை சிறுமை இணை என்று கொள்வார் என்பது தோன்ற இம்முறை வைத்து அடையைப் பொதுவாக்கினாம். அவர் அதுமட்டோ இறையனார் அகப்பொருள் முதலான இலக்கணங்களையும். தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம், சிவஞானபோதம், சிவஞான சித்தியார், சிவப்பிரகாசம் ,பட்டினத்துப்பிள்ளையார்பாடல் முதலிய இலக்கியங்களையும் ஒரு பொருளாக எண்ணாது, நன்னூல், சின்னூல், அகப்பொருள், காரிகை, அலங்காரம் முதலிய இலக்கணங்களையும், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு, இராமன் கதை, நளன் கதை அரிச்சந்திரன் கதை முதலிய இலக்கியங்களையும் ஒரு பொருளாக எண்ணி வாணாள் வீணாள் கழிப்பர். 

- ஸ்ரீ சுவாமிநாத தேசிகர் (பதி.: ஆறுமுக நாவலர்) , இலக்கணக் கொத்து மூலமும் உரையும் , வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னை , விகிர்தி௵ பங்குனி௴, (பாயிரவியல் - நூற்பா எண். 7 உரைப்பகுதி)ப.௧௪.


14.Lehmann,Thomas , ' A Survey of Classical Tamil Commentary Literature ',Between Preservation and Recreation:Tamil Traditions of Commentary, French Institute,Pondicherry,2009 ,pp.66 - 67 




*சாகித்திய அகாதெமியும் திருச்சி,தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறையும் இணைந்து நடத்திய புலியூர்க்கேசிகன் நூற்றாண்டுக் கருத்தரங்க (26 & 27.09. 2023) நிறைவுரைக்காக எழுதிய இப்பகுதியின் மற்றொன்று விரித்தல் மிகுதி கருதி இதனைத் தவிர்த்துவிட்டேன்.


1 comment:

இலக்கண மறுப்பு என்னும் பொறுப்பின்மை

வட்டார வழக்குதான் மக்கள் மொழி .அதுதான் உயிருள்ளது என்று மிகையழுத்தம் தரும் குழு ஒன்று விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்படித்தான் எழுத...