Tuesday, June 22, 2021

சிலப்பதிகாரம் காப்பியமா?

 




சிலப்பதிகாரமும் மணிமேகலையும் பொதுவாகக் காப்பியம் என்னும் வகையினவாகக் கருதப்படுகின்றன; வழங்கப்படுகின்றன. ஆனால், அவை தமிழ்ச் செவ்வியல் செய்யுள் மரபின் தொடர்ச்சியில் உருவானவை.


தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்கள் தனிச் செய்யுள்களால் ஆனவை ; தமக்கென்று அகம், புறம் என்னும் மரபு கொண்டவை. வரலாற்றுச் செய்திகளுள் பெரும்பாலானவை புறத்திணைச் செய்யுள்களில் பதிவு செய்யப்பட்டன. மறுபுறம் மரபு காரணமாக - அந்த மரபை மீறாமல் அதனை உத்தி போலக் கொண்டு -  உவமை முதலியனவாக அகத்திணைச் செய்யுள்களிலேயே வரலாற்றுச் செய்திகளை சார்த்திப் பதிவிடும் போக்கும் உள்ளது.


அதன் உச்சம் கடியலூர் உருத்திரங்கண்ணனாரின்  'பட்டினப்பாலை'.  பட்டினப்பாலையின்  301 அடிகளில் நான்கில் மட்டுமே அகத்திணைச் செய்தி; பிற 297 அடிகளில்-  99% - பாடாண் செய்திகள்தாம். என்றாலும் அதனை  அகத்திணைப் பாட்டு எனல் மரபு¹.

 

பத்துத் தனித்தனி  நெடுஞ்செய்யுள்களின் தொகை பத்துப்பாட்டு.


அதன் அடுத்தகட்டப் பரிணாமமாகத் தமிழ்ச் செவ்வியல் மரபுகளை உள்ளடக்கத்திலும் இடைமிடைந்து புனைந்த ,  கதை தழுவிய முப்பது பாட்டுகளால் ஆனது சிலப்பதிகாரம் . எனவே இதனைக் காப்பியம் என்பதினும் தொடர்நிலைச் செய்யுள் என்பதே பொருத்தமானது. கதையின் தொடர்ச்சி தொடர்நிலைக்குக் காரணமாகிறது. தொடர்நிலைச் செய்யுளுக்கும் (பெருங்)காப்பியத்துக்கும் பொதுவான கூறு கதை. 


சிலம்பு , மேகலைகளில் வடமொழிச் செல்வாக்கு இல்லாமலில்லை.ஆனால், வடிவத்தில் அவை தமிழ் மரபைப் புதுப்பித்துப் பேணிக்கொண்டன.


மணிமேகலை வடிவத்தில் மட்டும் தொடர்நிலைச் செய்யுள் மரபு பேணியது.


தன்னேரில்லாத் தலைவனைக் கொண்ட , வடமொழிவழிக் காப்பியப் போக்கிற்கு இயைந்த ,  சீவகசிந்தாமணியே கூட, தொடர்நிலைச் செய்யுள்தான் என்பது நச்சினார்க்கினியர் கருத்து².


சிலம்பைத் தொடர்நிலைச் செய்யுள் எனல்  முற்றிலும் என் கண்டுபிடிப்பு என்று சொல்லமுடியாது. முன்பே இதனை ஒத்த கருத்து வந்துள்ளது.³


--------------------------------

குறிப்புகள்


1.[முட்டாச் சிறப்பின், பட்டினம் பெறினும்]

    வார் இருங் கூந்தல் வயங்குஇழை ஒழிய,

    வாரேன்; வாழிய, நெஞ்சே!( பட்டினப்பாலை 218-220)


    [திருமாவளவன்தெவ்வர்க்கு ஓக்கிய]

    வேலினும் வெய்ய, கானம்; அவன்

     கோலினும் தண்ணிய, தட மென் தோளே!( ௸,299 - 301)

   - என்னும் நான்கு அடிகளால் மட்டுமே பட்டினப்பாலை அகத்திணைப்பாட்டாகிறது.


2.  " இவ் ஆறு-ஐந்தும்

        உரை இடையிட்ட பாட்டு உடைச் செய்யுள்" ( சிலப்பதிகாரம், பதிகம், 86-87)

    " மாவண் தமிழ்த்திறம் மணிமே கலைதுறவு

      ஆறைம் பாட்டினுள் அறியவைத் தனன்என் " (மணிமேகலை, பதிகம், 97 - 98)

-எனச் சிலம்பும் மேகலையும் ஆறைம் (6x5=30 முப்பது) பாட்டுகள்தாம்  என்று அவற்றின் பதிகங்கள் கூறுகின்றன (காதை = பாட்டு. பாகதச் சிதைவு).


சீவகசிந்தாமணிதானும் காப்பியமன்று என்று சுட்டி மறுக்கும் நச்சினார்க்கினியர் , அது  தொடர் நிலைச் செய்யுள் - அதனுள்ளும் 'தோல்' - என்கிறார்:


இத் தொடர்நிலைச் செய்யுள் தேவர் செய்கின்ற காலத்து நூல் அகத்தியமும் தொல்காப்பியமும் ஆதலானும், ‘முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணி‘ (தொல் - சிறப்பு) என்றதனால், அகத்தியத்தின் வழிநூல் தொல்காப்பிய மாதலானும் , பிறர் கூறிய நூல்கள் நிரம்பிய இலக்கணத்தன அன்மையானும், அந்நூலிற் கூறிய இலக்கணமே இதற்கிலக்கண மென்றுணர்க.

 

   அவ்விலக்கணத்திற் செய்யுளியலின் கண்ணே ஆசிரியர் பா நான்கென்றும், அவற்றை அறம் பொருளின்பத்தாற் கூறுக என்றும் கூறிப் பின்பு அம்மை முதலிய எட்டும் தொடர்நிலைச் செய்யுட்கு இலக்கணம் என்று கூறுகின்றுழி, ‘இழுமென் மொழியால் விழுமியது நுவலினும்‘ (தொல். செய். 238) என்பதனால் , மெல்லென்ற சொல்லான் அறம் பொருளின்பம் வீடென்னும் விழுமிய பொருள் பயப்பப் பழையதொரு கதைமேற் கொச்சகத்தாற் கூறின், அது தோல் என்று கூறினமையின், இச் செய்யுள் அங்ஙனங் கூறிய தோலா மென்றுணர்க.

 

   இச் செய்யுள் முன்னோர் கூறிய குறிப்பின்கண் வந்த செந்துறைப் பாடாண் பகுதியாம்; (தொல் - புறத்- 27). இதனானே, ‘யாப்பினும் பொருளினும் வேற்றுமையுடையது‘ (தொல் - செய். 149) என்பதற்குத் தேவபாணியும் காமமுமே யன்றி வீடும் பொருளாமென்பது ஆசிரியர் கருத்தாயிற்று.

 

   முந்து நூல்களிற் காப்பியம் என்னும் வடமொழியால் தொடர்நிலைச் செய்யுட்குப் பெயரின்மையும் இதற்குப் பிறகு கூறிய நூல்கள் இதற்கு விதியன்மையும் உணர்க( சீவக சிந்தாமணி, கடவுள் வாழ்த்து, உரைப்பகுதி).


3.At some point beyond the Sangam period proper, two closely linked, large - scale lyrical narrative — usually wrongly called epics — were created: The Tale of Anklet, Cilapptikāram, by Ilankovatikal, and twin masterpiece , Manimekalai, by Cāttanār.

_ David Shulman, Tamil a Biography, The Belknap Press of Harvard university Press, London,2016, p.98.  (சுல்மனுக்கு முன்பே இக்கருத்து உண்டு)

Tuesday, June 15, 2021

தனிநாயக அடிகளாரின் நோக்கில் இயற்கைவளமும் இலக்கியவளமும்

 

தமிழ்ச் செவ்வியல் இலக்கியம் எனத் தற்கால நோக்கில்- ஏறத்தாழ ஒரு நூற்றாண்டாக - இனங்கண்டு நிலைநாட்டப் பெற்ற எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியன பொதுக்காலம்(பொ.கா.) பதினோராம் நூற்றாண்டு தொட்டுச் சில காலம் தொடர்ந்த பண்டைத் தமிழ் உரையாசிரியன் மரபில் சான்றோர் செய்யுட்கள் என வழங்கப் பெற்றன. அஃது அக்கால மரபென்பதைக் கம்பனின் வாக்கும் உறுதி செய்கிறது. ‘புவியனுக் கணியாய்…’ என்னும் அக் கம்பன்கவி செவ்வியக் கூறுகளையும் அடுக்கிப் போற்றுவது கம்பனின் மேதைமை காட்டும். (பா. மதிவாணன், ‘தமிழ்மரபில் செவ்வியல் இலக்கிய உணர்திறனும் உலகப் பொதுமையும்’, தொல்காப்பியம் பால.பாடம், அய்யா நிலையும், தஞ்சாவூர், ஆகஸ்ட் 2014, பக்.73-74)

தமிழ்ச் சான்றோர் செய்யுட்களின் தோற்றம் கால இடையீடு மறு செம்மையாக்கம், தொகுப்பு, செல்வாக்குக் குன்றல், உரையாசிரியர் கால மீட்சியியக்கம், மீண்டும் பொ.கா. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இன்னொரு மீட்சியியக்கம் எனும் வரலாற்றுப் போக்கில் (காண்க மேற்படி நூல்…) பத்தொன்பதாம் நூற்றாண்டின மீட்சி ஒருபுறம் தமிழினத் தனித்தன்மையின் பெருமிதமாகவும், மறுபுறம் உலகளாவிய பார்வையின் புதுத் துலக்கமாகவும் வெளிப்பட்டது.

உலகளாவிய பார்வையில் துலக்கிக் காட்டிய முன்னோடிகளுள் ஒருவர் சேவியர் நிக்கொலஸ் என்னும் இயற்பெயரும் சேவியர் ஸ்தனிஸ்லாஸ் தனிநாயகம் எனும் பிற்காலப் பெயரும் கொண்ட,  தனிநாயக அடிகள் (02.08.1913 – 01.09.1980) ஆவார்.

தமிழ்ச் சான்றோரிலக்கியங்கள் பல்வேறு நோக்குகளுக்கு இடம்தரும் கூறுகள் கொண்டவையெனினும், அவற்றில் பதிவுற்றிருக்கும் இயற்கைக் கூறுகள் தமக்கெனத் தனித்த இருப்புடன் இயைந்தவை. இருபதாம் நூற்றாண்டின் நாற்பதுகளில் இரு தமிழறிஞர்கள் தமிழ்ச் செவ்வியல் இலக்கியத்தில் காணும் இயற்கையைத் தத்தம் நோக்கில் ஆராயத் தலைப்பட்டனர். 

ஒருவர் மு. வரதராசனார் (1948- முனைவர் பட்டம்), மற்றொருவர் தனிநாயக அடிகள்(1949 – எம்.லிட்.) மு.வ. பெரிதும் விளக்கமுறையிலும், அடிகள்  ஒப்பியல் நோக்கிலும் ஆய்வு நிகழ்த்தினர்.

அடிகள் தொடர்ந்து செழுமைப்படுத்தி ' A Study of Nature in Classical Tamil Poetry ’  என்னும் தலைப்பில் நூலாக்கினார்.

மு.வ.வின் ஆய்வு சற்றே முந்தையது எனினும் அடிகள் அதனை அறிந்திருக்கவில்லை. மு.வ. நூல் 1957இல் அச்சான பின்னரே அடிகள் கண்ணுற்றதாகத் தெரிகிறது (தனிநாயக அடிகள், நில அமைப்பும் தமிழ்க் கவிதையும், மொ.பெ.: க. பூரணச் சந்திரன், என்.சி.பி.எச்., சென்னை, 2014, ப. xvii இல் உள்ள 11ஆம் குறிப்புக் காண்க).

சங்கப் பனுவலை விரிவாகவும் செறிவாகவும் மு.வ. அலசி ஆய்நதிருப்பதாகவும் தாம் அயலகவாசகரை உளங்கொண்டு ஆய்ந்திருப்பதாகவும் அடிகள் குறிப்பிடுகிறார். (மேற்படி நூல், ப.xvi)

இந்த ஆய்வுக்குத் தூண்டுகோல் அடிகளின் ஆதங்கமே. மேலைப்புலமையாளர்கள் தமிழுக்கு அவ்வப்போது புகழாரம் சூட்டியிருப்பினும் தமிழுக்கு மேக்ஸ்முல்லர்களோ, மெக்டொனால்களோ, கீத்துகளோ , விண்டர் நீட்சுகளோ இல்லை என்கிறார். (மேற்படி நூல், ப.xvi)

வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் நூலில் இந்த அங்கலாய்ப்பு வெளிப்படுகிறது. பழந்தமிழர் நிலப்பகுப்பு இன்றைய இனவரைவியலாளர்க்கும் பழங்குடிப் பண்பாட்டாய்வாளர்களுக்கும் மலைப்பூட்டக்கூடியது (ஏனோ மேலை ஆய்வாளர் கவனம் செலுத்தவில்லை) என்கிறார் (மேற்படி, ப.38)

பேராசிரியர் ரைடரின் காளிதாசன் படைப்புப் பற்றிய ஆய்வைக் குறிப்பிடும்போதும் ரைடரின் பழந்தமிழ்ப் பரிச்சயமின்மை பற்றி வருந்துகிறார். (மேற்படி நூல், ப.42)

இந்த ஆதங்கம் அடிகளை ‘ஒப்பிலக்கியம்’ என்கிற பார்வையை நோக்கி உந்துகிறது. இத்தகு ஒப்பியலக்கிய ஆய்வை நிகழத்துவதற்கு, பன்மொழிப்புலமையும் இலக்கிய உணர்திறனும் இயற்கை ஈடுபாடும் கொண்ட அடிகள் முற்றிலும் தகுதியுடையவர் என்பது வெளிப்படை.

அடிகள் 1934 – 38ஆம் ஆண்டுகளில் உரோமானிய இறையியல் கல்லூரிகளில் பயில்வதற்கு முன்பே ஆங்கிலம் இலத்தின் ஆகிய மொழிகளைக் கற்றிருந்தார். உரோமில் எபிரேயம், கிரேக்கம், இத்தாலி, ஸ்பானிசு, போர்த்துக்கீசு,பிரஞ்ச், செருமன் ஆகிய மொழிகளைக் கற்றார் ; பிற்காலத்தில் உருசியத்தையும் கற்றார்.

1949இல்  ' A Study of Nature in Classical Tamil Poetry ’ என்னும் தலைப்பில் எம்.லிட். ஆய்வேடு அளித்தார்.

1949-51ஆம் ஆண்டுகளில் மலேயா, சீனம், ஜப்பான், அமெரிக்க ஐக்கிய நாடுகள், தென்னமெரிக்க நாடுகளான பனாமா, ஈக்வடார், பெரு, சிலி, அர்ஜென்டீனா, உருகுவே, பிரேசில், மெக்சிகோ, மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த டிரினிடாட், ஜமைக்கா, மார்த்தினீக், நடு ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா மற்றும் இத்தாலி பாலத்தீனம், எகிப்து முதலிய நாடுகளுக்குப் பயணம் செய்து அறிவுத் தேடலோடு – குறிப்பாகத் தமிழியல் தேடலோடு - கூடிய வளமான அனுபவம் பெற்றார்.

இப்பயணங்களுக்குப் பின் தம் எம்.லிட். ஆய்வேட்டைச் செழுமைப் படுத்தி , ' Nature Poetry in Tamil: The Classical Period '   என்றும் அடுத்து, ' Landscape and Poetry: A Study of Nature in Classical Tamil Poetry '  என்றும் தலைப்பினையும் செம்மைப் படுத்தினார். 


அம்சொல் நுண்தேர்ச்சிப் புலவர்பெருமக்களால் செய்யப் பெற்ற செறுத்த செய்யுட்களாலாகிய சங்க இலக்கியப் பரப்பு ஒருபுறமும் பன்மொழிப் புலமையும் பன்னாட்டறியும் இயைந்த அடிகளின் திறம் மறுபுறமும்  இணைந்தமைந்து தொட்ட இடமெல்லாம் ஆய்வு நுட்பமும் அழகியலுணர்வும் புலப்படுமாறமைந்த ஒரு நூலை மதிப்பிடுதல் என்னளவைத்தன்று என்பதை நான் சொல் வேண்டியதில்லை. 


அடிகள் ஓர் அறிமுகத்தோடு, தொடங்கி ‘பின்னணி(The Background)’ முதலிய எட்டு இயல்கள் கொண்டதாக இந்நூலை யாத்துள்ளார்கள்

இலக்கியவில், வரலாறு, நிலத்தியல், அறிவியல், சமயவியல், மெய்யியல், சமூக அறிவியல் முதலிய பலதுறைகளிலும் அவருக்குள்ள பயிற்சி இந்நூலில் ஏற்றபெற்றி இழையோடுவதைக் காண முடிகிறது. ‘விரிப்பின் அகலும் தொகுப்பின் எஞ்சும்’ ஆதலின் வசதி கருதி,


நடுவுநிலை

ஒப்பு

உறழ்வு

தனித்தன்மை

ஆய்வுத்தூண்டல்


என்கிற ஐந்தனுள் அடக்கிப் பிறவற்றையும் சற்றே தொட்டுக்காட்டுமாறு இக்கட்டுரையை அமைத்துள்ளேன்.


நடுவுநிலை

நூலைத் தொடங்கும்போதே அடிகளின் நடுவுநிலை முன்னிற்கிறது. பழந்தமிழிலக்கியங்கள் கிரேக்க இலக்கியங்களை – அளவாலோ வீச்சாலோ பன்முகத் தன்மையாலோ – ஒத்தவையல்ல என்கிறார்; தமிழிலக்கியத்தின் இன்றியமையாமையையும் தெளிவுறுத்துகிறார்(மேற்படி நூல், ப.v).


இவ்வாறே, பழந்தமிழிலக்கிய வரலாற்றுணர்வுக் குறைபாட்டை அவர் ஒப்புக் கொள்கிறார் (மேற்படி நூல், ப.42); தியோக்ரிடஸ் அல்லது வர்ஜில் தீட்டியது போன்ற இடையர் வாழ்க்கை பற்றிய மிகவிரிந்த காட்சிகள் தமிழில் இல்லை என்கிறார் (மேற்படி நூல், ப.141).

சங்கக் கவிதையியல் மிகச்சிறந்த தனித்தன்மையுள்ள இயற்கைக் கவிதைகளைத் தந்திருப்பினும் கவிஞரின் அகத்தெழுச்சியைக் கட்டுப்படுத்திவிட்டது போலவும் தோன்றுகிறது என்கிறார் அடிகள் (மேற்படி நூல், ப.159).

‘சுட்டி யொருவர்ப் பெயர்கொளப் பெறார்’ என்கிறது தொல்காப்பியம்( ). அடிகள் “பெயர் கூறாத்தன்மை, பொதுமைப்பட்ட வெளிப்பாட்டிற்கான ஆர்வம் ஆகியவை பழைய இந்தியக் கவிதைகளின் சிறப்பியல்பு” (மேற்படி நூல், ப.40-41) என்கிறார்.

இந்த நடுவுநிலை அவரது நூலின் நம்பகத்தன்மையை மிகுவிப்பதாக அமைந்து ஆய்வு நலஞ் சான்றதாகிறது. பிறநாட்டார் இந்நூலை எதிர்கொண்ட விதம் காணத் தனித்த தேடல் தேவை.


ஒப்பு

மரஞ்செடிகொடிகள் பூக்கள் முதலியவற்றை அடைகளால் செறிவாக வருணிக்கும் பாங்கில் மேலைப்பாக்களோடு தமிழ்ப்பாக்கள் ஒத்துள்ளமை காட்டுகிறார் அடிகள் (மேற்படி நூல், ப.6-7).

பழங்காலத் தமிழ் சமற்கிருதக் கவிதைகள் நிலத்தைப் பெண்ணாகவும் மலை மூங்கில் முதலியவற்றை முறையே முலைகளாகவும் தோள்களாகவும் கண்டதை அடிகள் ஒப்புநோக்கியுள்ளார் (மேற்படி நூல், ப.13)

பண்டைத் தமிழ் வேந்தர் முதலியோர் அடையாளப் பூக்கள் கொண்டிருந்தமை போல மேலை அரசர்களும் லில்லி, ரோஜா முதலியவற்றைக் கொண்டதுண்டு (மேற்படி நூல், பக்.30-31).

இயற்கை உலகு மனித இயற்கை இரண்டும் இயையும் தன்மையால் சிறக்கும் கவிதை இயல்பு பற்றி ஸ்டாஃபோர் புரூக்ஸ் என்பவரது கருத்தை மேற்கோள் காடடித் தமிழ்க் கவிதை அதற்கு முற்றிலும் பொருந்துகிறது என்கிறார் அடிகள் (மேற்படி நூல், பக்.41-42)

 Humani nihil a me alienuk puto என்னும், ரோமானிய நாடகத்தின் ஆசிரியர் டெரென்சின்(பொ.கா.மு. ஏறத்தாழ 195/185 – 159-?) இத்தொடரைப்போல் “யாதும் ஊரே யாவரும் கேளிர்”(புறம்.192) என்பதும் புகழ்பெற வேண்டிய கவித்தொடர் என்கிறார் அடிகள்( (மேற்படி நூல், ப.46).

இயற்கைக் கவிதைகளில் வரலாற்றை இணைக்கும் போக்கு – தமிழ்போலவே – வர்ஜில் முதலியோர் கவிதைகளிலும் உண்டு (மேற்படி நூல், ப.50).

சகுனம் பார்த்ல் - குறிப்பாகப் பறவை பறத்தல், ஒலித்தல் ஆகியன கொண்டு பார்த்தல் - உரோமானியர் கிரேக்கர்களிடமும் தமிழரைப் போலவே காணப்பட்டது(மேற்படி நூல், ப.79)

பிரிவாற்றாமையை மிகுவிக்கும் பொழுதாக மாலைப் பொழுது உலகம் முழுவதும் கருதப்பட்டதை செல்லி, கிரே, தாந்தே முதலியோரைக் கொண்டு உணர்த்துகிறார் அடிகள் (மேற்படி நூல், பக்.89-90).

கபில, பரணர் பாடல்களை “ஓர் ஐரோப்பியத் திறனாய்வாளன் வர்ஜிலுடனோ டென்னிசனுடனோ மிக எளிதில் ஒப்பிட இயலும்” (ப.111) என்கிறார்.

எட்டாம் இயல் முழுதும் தமிழ்க்கவிதைகளைச் சமற்கிருத , ஐரோப்பியக் கவிதைகளுடன் ஒப்புநோக்குவதாகும்.

ஒப்புநோக்குக்கு ஆங்காங்குச் சில காட்டுகள் தரப்பட்டுள்ளன. நூல் முழுவதுமே வெளிப்படையான இடங்களன்றி ஒப்புமை இழையோடும் இடங்கள் பலவுள்ளன. விரிப்பிற் பெருகும்.


உறழ்வு

நூலைத் தொடங்கும்போதே பாலைவனப் பகுதி, மிதமிஞ்சிய வளம் கொண்ட வட இந்தியா, இயற்கை தெளிவாக எல்லை வகுக்கும் தென்னிந்தியா ஆகியவற்றின் நிலப் பரப்புக்கும் பண்பாட்டிற்குமுரிய இயைபையும், இதனால் அவை தம்முள் வேறுபடுமாற்றையும் அடிகள்தம் பன்மொழி நூலறிவும், மொழித்திறமும் கொண்டு விளக்குகிறார் (மேற்படி நூல், பக்.2-3).

தொடக்கத்தில் முன்வைத்து உணர்த்தப்படும் இந்த உறழ்நிலை நூல் முழுமைக்கும் அடித்தளமாக அமைந்து தாங்குகிறது.

ஐரோப்பிய அமெரிக்க இலக்கியங்களில் அன்புக்கும் பக்திக்கும் மிதவெப்பம் வரவேற்கப்படுகிறது. தமிழ்மரபில் தாள் நிழலின் திளைப்புக் காணப்படுகிறது(மேற்படி நூல், பக்.9-10).

மேலைக் காதல் கவிதைகளில் பெயர் சுட்டுவது போல், தமிழ் அகக்கவிதைகளில் சுட்டப்படாமையையும், இஃதோர் இந்திய மரபென்பதையும் அடிகள் சுட்டுகிறார் (மேற்படி நூல், பக்.40-41).

வர்ஜிலுக்கோ இலத்தீன் கவிஞர்களுக்கோ மலைப்பகுதிகளின் மீது அவ்வளவாக ஆர்வமில்லை என்னும் கருத்தைச் சுட்டிக் காட்டி சில விதிவிலக்குகள் இருப்பினும் இது பொதுவான உண்மையே என ஏற்கும் அடிகள், சங்கக் கவிஞர்கள் இயற்கையின் எந்த ஒரு நிலப்பகுதியையோ தோற்றத்தையோ விட்டுவிடமாட்டார்கள் என்கிறார் (மேற்படி நூல், பக்.44-45).

கவிதைகளை ஒப்புநோக்கும் எட்டாமியல் இயல்பாகவே உறழ்ச்சிகளுக்கு இடம் தருவதாக அமைந்துள்ளது.

மேலை நிலக்கிடக்கை, தமிழக நிலக் கிடக்கைகளின் வேறுபாட்டை விவரித்து, கவிதைகளில் அவை வெளிப்படுவதைச் சொல்வதோடு, இலக்கிய மரபின் வேறுபாட்டையும் - அதாவது நிலப்பரப்பின் பிரதிபலிப்பினால் மட்டுமன்றி மரபாலும், பாங்காலும் வேறுபடுவதையும் - அடிகள் விளக்குகிறார் (மேற்படி நூல், பக்.143-145).

தொடக்க கால ரிக்வேதப்பாடல்களை நோக்கத் தமிழில் தொன்மங்களின் செல்வாக்குப் பொருட்படுத்தத்தக்க அளவிற்கு இல்லாமையையும் சமற்கிருதக் கவிதைகளில் பூக்கள், மாலைகள் முதலியவற்றுக்குப் பரவலான இடமிருப்பினும் சங்க காலத்தில் பூக்களும் மாலைகளும் பயன்பட்ட அளவையும், முக்கியத்துவத்தையும் கவிதைகளில் குறியீட்டுத் தன்மையுடன் இடம் பெறுவதையும் ஒப்பிடவே இயலாதென்கிறார் (மேற்படி நூல், பக்.146-147).

உரோமானிய நாகரிகத்தின் நாட்டுப்புறநேசம் பழந்தமிழர்தம் நகர நேசம் ஆகியவற்றை உறழ்ந்து காட்டி இலக்கியப் பதிவுகள் பற்றியும் அலசியுள்ளார் அடிகள் (மேற்படி நூல், ப.155).

இத்தகு உறழ்ச்சிக் கூறுகளும் நூலில் வெளிப்படையாகவும் குறிப்பாகவும் ஆங்காங்கு இடம்பெற்றுள்ளன.


தமிழ்த்தன்மை

தமிழ் மண்ணுக்கேற்ப விளைந்த இந்நிலப்பண்பாட்டின் எல்லா அடையாளங்களையும் தமிழ்க்கவிதை கொண்டுள்ளது. அதாவது, தமிழர்கள் ஏதோ ஒரு வெளிநாட்டிலிருந்து, ஏற்கனவே வளர்ச்சியடைந்த மொழியோடும் இலக்கியத்தோடும் தமிழ் மண்ணுக்கு வந்தவர்கள் என்பதற்கான எந்த அடையாளமும் தமிழ்க்கவிதையில் இல்லை.(ப.3)

எனத் தமிழின் மண்ணுக்கேயுரிய (indigenous) தன்மையைத் தொடக்கத்திலேயே தெளிவுபடுத்தும் அடிகள், மேலும் விரித்து

நாம் இங்குப் பார்த்துக் கொண்டிருக்கும் இலக்கியத்தின் காலத்தைவிட முற்பட்டதொரு காலத்திலேயே உருவாக்கப்பட்ட மரபு, தமிழ் நிலத்தை ஐந்துகூறுகளாகப் பகுத்தது; அல்லது தமிழ்நிலம் ஐந்து விதமான நிலத்தோற்றங்களைக் கொண்டிருப்பதாகத் தமிழ்மரபு கருதியது என்றும் சொல்லலாம். பூமி முழுவதுமே இந்த ஐவகை நிலங்களாகப் பகுக்கப்படலாம் என்றாலும், பூமியின் பல்வேறு நிலக்கூறுகளையும், தட்பவெப்ப நிலைகளையும் தனது சொந்த நாட்டின் எல்லைகளுக்குள்ளாகவே சிறிய அளவில் காணமுடிந்த தமிழரின் நல்லூழ் என்றே சொல்லத்தகும். (ப.36-37)

என்று போற்றுகிறார்.

சிக்கனமான மொழியில் மிகச்சிறந்த சொல்லோவியங்களைச் செறிவாகச் சித்தரிப்பது சங்கத்தமிழின் பண்பு ("Cankam Tamil has the characteristic of being extremely concise and curt and of delineating magnificient word – pictures with great economy of language" - Complete works of Thaninayaga Adigalr, Vol.I, Poompuhar Pathippagam, Chennai, 2013, P.17) 

  என்கிறார் அடிகள்.

இயற்கைக் கவிதையின் பின்னணி பற்றிய இந்த இயலை முடிக்கும்போது, தமிழ்நாட்டைவிட இயற்கையின் வளத்தை மிகுதியாகப் பெற்ற பல நாடுகள் உள்ளன என்பதையும் குறிக்க வெண்டும். ஆனால் சங்ககாலத்தின் கவிதை மூலவளம், மிகச் சாதாரணமான, எவ்வித ஆர்வத்தையும் எழுப்பாத நிலத்திலும் அழகினைக் கண்டது. பின்னர் நாம் பார்க்கப்போவது போல, பாலைநிலத்திலும் கூட தமிழ்க் கவிஞர்கள் மிகச் சிறந்த கவிதையைக் கண்டனர் என்ற உண்மை, அவர்களின் கவிதை வளத்தையும், கற்பனைத் திறனையும் மிக உயர்வாகக் காட்டுகிறது.(ப.14)

இயற்கை வளம் சற்றே குன்றியிருப்பினும் கவிதை வளம் தமிழில் விஞ்சிநிற்பதை இப்பகுதி காட்டுகிறது.

சங்கக் கவிஞர்கள் இயற்கையிலிருந்து பெற்ற உவமைகளின் நுட்பமும் அசலான தன்மையும் பற்றி எடுத்துக் காட்டுகளால் விளக்கும் அடிகள் “சங்க இலக்கியம் ஓர் இயற்கைவாதியின் சொர்க்கமாகவே காட்சியளிக்கிறது”(ப.44) என்கிறார்.

உள்ளுறை, இறைச்சி ஆகியன – குறிப்பாக உள்ளுறை – தமிழ்க்கவிதையின் சிறப்பியல்புகளுள் ஒன்று என்பதை அடிகள் வலியுறுத்துகிறார் (ப.46).

தமிழ்க்கவிதை மரபின் கட்டுப்பாடு பற்றி,

கவிதை மரபு, கவிதை விதிகளின்படி, ஒரு முழுமையான, துல்லியமான இயற்கை பற்றிய ஆய்வு தமிழ்க்கவிஞர்கள் மீது சுமத்தப்பட்டது. இத்தகைய நிலவியல் - தாவரத்தொகுப்பு – விலங்குத்தொகுப்பு – ஆய்வை மேற்கொள்ள வேண்டிய நிலை பிறமொழிகளில் எக்கவிஞருக்கும் இல்லை.(ப.39)

எனக் கூறும் அடிகள் பிறிதோரிடத்தில் “கவிஞரின் அகத்தெழுச்சியைக் கட்டுப்படுத்திவிட்டது போலவும் உள்ளது”(ப.159)என்று சற்றே குறைப்பட்டுக் கொள்வது முன்னர்ச் சுட்டிக்காட்டப்பட்டது.

வேறெந்த இலக்கியத்திலும் ஒரு பெண்ணின் அழகுக்கு ஒரு நகரத்தின் அழகை ஒப்பிடுவது காணப்படுகிறதா என்பது தெரியவில்லை. ஆனால் இத்தகைய ஒப்புமை, பழந்தமிழ் இலக்கியத்தில் சர்வசாதாரணமாகக் காணப்படுகிறது(ப.155) எனக்கூறும் அடிகள், “ஆனால், அவர்களது நகரநேயம் எவ்வகையிலும் இயற்கை மீதான அன்பில் குறுக்கிடவில்லை” (ப.156) என்றும் தெளிவுபடுத்துகிறார்.


ஆய்வுத்தூண்டல்

அடிகள் ஆங்காங்கே மேன்மேலும் ஆய்வதற்கான தூண்டல்களை இந்நூலில் விட்டுச் சென்றிருக்கிறார்.

சங்க இலக்கியத்தில் குலக்குறி வழிபாடு, இயற்கைப் பொருள்களில் இறை வழிபாடு, பல கடவுள் வழிபாடு, ஒரு கடவுள் வழிபாடு ஆகிய அனைத்திற்கும் சான்று உண்டு என்று கூறி, இவை படிப்படியே மாறி ஒரு கடவுள் கோட்பாடாக ஆயிற்று என்னும் சிந்தனைக் குழுவின் கருத்துக்கு மாறாக ஒரு கடவுள் வழிபாட்டுக்குப் பின்னர் பிறமுறைகள் தோன்றின என்பதற்குத் தமிழ் இலக்கியம் ஆதரவு தருவதாகத் தோன்றுகிறது என்கிறார் (ப.62)

தொடர்ந்து, “தமிழரின் இயற்கை பற்றிய கருத்தாக்கத்தோடு மிக நெருக்கமாக இணைந்ததுதான் தமிழர் மதம் என்பது புலனாகிறது”(ப.73) என்கிறார் அவர்.

‘எற்பாடு’ என்பதற்கு உரையாசிரியரிடையே நிகழும் விவாதம், நெய்தல், மருதத் திணைகளுக்குத் தனித்த பெரும்பொழுது இன்மைக்கு உரையாசிரியர்கள் தரும்  விளக்கம் ஆகியன குறித்து அடிகள் ஆராய்ந்துள்ளார்(பக்.92-93)

பாலைத் திணையும் அதற்குப் புறமான வாகைத் திணையும் தொடக்க வகைப்பாட்டில் இல்லாமல்,பின்னர் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்னும் அடிகளின் ஊகம்(பக.100-101) இன்றளவும் போதிய அளவு ஆராயப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து கைக்கிளை, பெருந்திணை அவற்றின் புறத்தவாகிய காஞ்சி, பாடாண்திணைகள், செய்யுள் தொகுப்புமுறை ஆகியன பற்றிய அவர் கருத்துகளும்(பக்.101-102) ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டியனவாகும்.

உள்ளுறையில் இயற்கை, தாவர விலங்குத் தொகுதிகள் ஆகியன பயன்படுத்தப்படும் முறையை ஆய்ந்து விளக்க வேண்டுமென்கிறார் அடிகள் (ப.132). அடிகளைச் சுட்டியும் சுட்டாமலும் உள்ளுறை, இறைச்சி பற்றிய தொடர் ஆய்வுகள் நிகழந்துள்ளன எனலாம்.


பிற

ஆங்காங்குப் பல்வேறு துறைகள் இரசனைகள் சார்ந்த பல பதிவுகள் அடிகளின் நூல்முழுதும் இழையோடுகின்றன. இவற்றுள்ளும் சிலவற்றையே இங்குக் காட்ட இயலும்.

தமிழ்க் கவிஞர்கள் கையாளலில் மரங்கள், பூக்கள், செடிகளின் பெயர்கள் இசையோடு விளக்குவதாகக் கூறி முல்லைப்பாட்டு(93-96) சிறுபாணாற்றுப்படை (146-149) ஆகியவற்றின் சில பகுதிகளைக் காட்டுகிறார் ஆடிகள்(ப.7). இப்பகுதிகளின் இசைமை நுண்ணுணர்வுடையார்க்கே புலப்படும் என்பதன்றிச் சொல்ல ஏதுமில்லை. ஆனால் பழந்தமிழ்ப் பாக்களில் சொல்லிலும் பொருளிலும் மட்டுமன்றி ஓசையமைதியிலும் அவர் தோய்ந்துணர்ந்திருப்பதை அறிய முடிகிறது.

தென்னிந்தியாவில் இயற்கை அழகுறுத்துவதாகவும், அலங்காரத் தன்மை உடையதாகவும் உள்ளதுபோலவே தென்னிந்தியக் கலையும் - இசை ஆயினும், இலக்கியமாயினும், கட்டடக்கலை ஆயினும், ஓவியமாயினும் - அழகுறுத்தவும் நுட்பமாகவும் அலங்கரிக்கப்படுகின்றன; கடைசிக் கூறுவரை ஆய்வுக்கு உள்ளாகின்றன. தமிழ்க்கவிதைகளைப் போலவே தென்னிந்தியக் கோயில்களும் உள்ளன. தென்னகக் கோயில்களில், செதுக்கப்பட்ட பாறைகள் ஒன்றின் மேலொன்று அடுக்கு அடுக்காக அமைகின்றன. அவற்றின் ஒருங்கிணைவு, பெரிய முழுமையான கோபுரத்தை உருவாக்குகிறது. இதுபோலவே தமிழ்க்கவிதையும் செதுக்கி இணைக்கப்பட்டதோர் முழுமைதான். பழந்தமிழ்க்கவிதைகளில் மிக நீண்ட முழுக்கவிதையும்  இலக்கணத்தின்படி ஒரே ஒருகூற்றாக அமையும் வாக்கியம்தான். கோபுரத்தின் அடுக்குகள் போலப் பல்வேறு கிளவிகளையும் தழுவுதொடர்களையும் கொண்டு, முத்தாய்ப்பாக ஒரு முக்கியக் கிளவியைக் கொண்டு அக்கவிதைகள் அமைகின்றன.(ப.143-144)எனத் தென்னிந்தியக் கலைகளுக்கும் கவிதையமைப்பிற்குமான நுட்பமான இயைபை அடிகள் இனங்கண்டுள்ளார்.

பழைய பழக்கவழக்கங்கள் நடைமுறைகளின் எச்சங்கள் பிந்தைய இலக்கியங்களில் பதிவாயிருப்பதாகக் கருதிச் சங்க இலக்கியப் பகுதிகளை அடிகள் காட்டுகிறார்(ப.20).

தமிழ்க் கவிதை,  வரலாற்றுப் போக்கில் மாற்றமுற்றிருப்பதைப் போகிறபோக்கில் சொல்லிச் செல்கிறார் (ப.43).

“துன்பம், ஆசை, புலம்பல் இவற்றைத் துயரத் தொனியில் வெளியிடுகின்ற கவிதைகளுக்கு உலகம் முழுவதிலுமுள்ள கவிஞர்கள் ஞாயிற்றின் மறைவை, குறிப்பாகக் கடலின் ஓலத்துடன் கூடிய ஞாயிற்றின் மறைவை இயற்கைப் பின்னணியாகத் தேர்ந்தெடுத்துள்ளனர்”(ப.125) என உலகளாவிய கூறுகளைத் தம் பரந்த இலக்கியப் பயில்வால் கண்டு காட்டுகிறார்.

இன்னும் பற்பலவற்றை எடுத்துக்காட்டிக் கொண்டே போகலாமெனினும் விரிவஞ்சி விட்டுவிடுகிறேன்.

ஒட்டுமொத்த நூலிலும் இழையோடுவதாக நான் கண்டது: ஒரு நிலப்பரப்பின் இயற்கைவளம் அப்பரப்பில் உருவாகும்  கவிதையில் இடம்பெறுவது இயல்பே எனினும் அவ்வியற்கை வளத்தோடு கவிதை நேர்விகிதத் தொடர்பு கொண்டிருக்க வேண்டியதில்லை; கவிதை தனக்கெனத் தனித்த வளத்தைக் கொண்டிருக்கவியலும் என்பதைப் பழந்தமிழ்ச் சான்றோர் செய்யுட்களின் அகச்சான்றுகளாலும் கிரேக்க, வடமொழிக் கவிதைகளின் ஒப்பீட்டாலும் அடிகள் நிறுவியிருக்கிறார் என்பதுதான்.

- காலச்சுவடு & இலயோலா கல்லூரித் தமிழ்த் துறை இணைந்து நடத்திய கருத்தரங்கில்   05.12.2014 அன்று படிக்கப்பெற்றது.


Saturday, June 12, 2021

'குநவும்' என்றால் என்ன? (அல்லது) பாடத்தை நடத்தி முடிக்காதது ஏன்?




 பின்னணி: 

03.06.2019 அன்று தஞ்சையில் கவிஞர் தங்க. செந்தில்குமார் பொன் விழா . அதில் பேசும் போது, 'நான் எனது 34 ஆண்டு ஆசிரியப் பணிக் காலத்தில் கறாரான ஆசிரியனாக இருந்ததில்லை;பாடம் நடத்தியதில்லை; பாடப் பகுதிமேலான உரையாடலையே நிகழ்த்தினேன்; எனக்கு ஒதுக்கப் பட்ட பாடப் பகுதியை முழுமையாக முடித்ததும் இல்லை , அதாவது போர்ஷனைக் கவர் செய்ததே இல்லை' என்றேன்.

நேற்றுப் பேரா. மு.இளமுருகன் " என்ன மதி, அப்படி பேசிட்ட. ஒன்னப் பத்தி என்ன நெனப்பாங்க. எங்கிட்ட யே ... லாம் வருத்தப்பட்டாங்க " என்றார்.

சில செய்திகள்:

இன்னும் சிலவற்றையும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில்நான் பதிவு செய்திருக்கிறேன்.

என் வகுப்பளவில் மாணவர் வருகையைப் பதிவு செய்வதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டேன்; பல வகுப்புகளில் வருகையைக் குறிக்க மறந்துவிடுவேன். வகுப்பறையிலோ வெளியிலோ மாணவர்கள் சற்றும் அச்சமின்றி என்னை அணுகலாம்; பேசலாம் என்பது இயல்பாக இருந்தது.

வகுப்பறைக்குள் நான் நுழையும் போதோ அறையிலிருந்து வெளியேறும் போதோ மாணவர்கள் எழுந்து நிற்க வேண்டியதில்லை என்பதை -முதன்முதலாகவகுப்பறைக்குச் சென்ற அன்றுதொட்டு - சொல்லிவந்திருக்கிறேன். என் வகுப்புக்குக் காலம் தாழ்ந்து வரலாம்; இடையில் என் இசைவு பெறாமலேயே எழுந்து செல்லலாம் (ஆனால், மிக மிக அரிதாகவே காலந்தாழ்ந்த வருகையும் இடையில் வெளியேறுதலும் நிகழ்ந்தன). 

இந்தப் போக்குக் குறித்து - சட்டம் ஒழுங்கைப் பேணும் பொறுப்புக்காரணமாக - கல்லூரி முதல்வர், பல்கலைக் கழகத் துறைத் தலைவர் ஆகியோர் தம் கருத்து வேறுபாட்டைச் சொல்லியதுண்டு. நல்ல வேளை குறிப்பாணை முதலிய எல்லைக்குக் கொண்டு செல்லவில்லை. அவர்களுக்கு நன்றி.

இத்தகைய நடைமுறைகள் என்றுமே எனக்கு எந்தச் சிக்கலையும் ஏற்படுத்தியதில்லை . 

இவை என் வழக்கங்களே அன்றிப் பரிந்துரைகள் அல்ல.

நான் வாங்கும் புதிய புத்தகங்களையும் மாணவர்கள் படித்தால் நல்லதென்று கருதும் - பாடத்திட் டத்தில் இல்லாத - பழைய புத்தகங்களையும் மொழி இலக்கியம் சார்ந்த அண்மைச் செய்திகளையும் வகுப்பறையில் முதல் 5 - 10 மணித்துளிகள் அவ்வப்போது அறிமுகப்படுத்துவேன்.

 தேர்வு, மதிப்பெண் இவற்றை மட்டுமே கருதும் வினா - விடை, பாடத் துணை (Notes) நூல்களை அறிமுகப்படுத்தவே கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். 

பாடப்பகுதியை நடத்தி முடிக்காவிட்டாலும் தேர்வு நெருங்கும் கட்டத்தில் மதிப்பெண் நோக்கில் எஞ்சியவற்றை எவ்வாறு படிக்க வேண்டும் என்பதற்கான சில வழிகளைச் சொல்வேன்.

பாடம் நடத்தும்போது , 'இப்படியும் ஐயமா?' என்று தோன்றும் வகையில் எதிர்பாராதவாறு மாணவர்கள் வினவுவதுண்டு. இவற்றை எதிர்கொண்டு நிறைவடையுமாறு விளக்கிக் கடந்து செல்ல வேண்டுமெனில் காலமும் கடந்துதானே போகும்!

                                                xxxxxxxxxxxxxxxxxx

எதிர்பாரா ஐயத்திற்கு ஓர் எடுத்துக் காட்டு : 

" குநவும் என்றால் என்ன?" (எச்சரிக்கை : இலக்கணம்.பொறுமை இருந்தால் தொடரலாம் அல்லது *** க்குப் பிறகு உள்ளவற்றை மட்டும் படிக்கலாம்)


1)எறி கொற்றா (எறி = எ, ற்+ இ. இ-உயிர் எழுத்து)

2)கொணா கொற்றா (கொணா=க் + ஒ, ண் + ஆ.ஆ -உயிர்)


எறி (தல் ) -ஏதேனும் ஒன்றைத் தூக்கி வீசு(தல்)

கொணா = கொண்டு வா


முன்னே இருக்கும் கொற்றனிடம் , எறி/ கொணா - என்று கூறும்போது,  எறி,கொணா இரண்டும் முன்னிலை வினைகள்; உயிர் எழுத்தை இறுதியாகக் கொண்டவை.

இவற்றை உயிர் ஈறு என்பார்கள். இன்னும் துல்லியமாகச் சொன்னால் இவை உயிர்ஈற்று முன்னிலை வினைச்சொற்கள் .

[(நான் )எறிந்தேன் - தன்மை வினை

(கொற்றன்) எறிந்தான் - படர்க்கை வினை]

3)உண் கொற்றா ( உண் - என்பதில் ண் புள்ளியீறு)

4) தின் கொற்றா ( தின் - என்பதில் ன் புள்ளியீறு)

உண்= உண்பாயாக, தின் = தின்பாயாக.

இவை புள்ளியீற்று/ புள்ளியிறுதி முன்னிலை வினைச் சொற்கள் என்று உணர்ந்திருப்பீர்கள்.

கொற்றா - என்பதன் முதல் எழுத்து கொ. அதாவது க்+ஒ.

துல்லியமாகச் சொன்னால் க் - தான் முதல் எழுத்து .

க்- என்பது வல்லெழுத்து ( ச், ட், த், ப், ற் - என்பனவும் வல்லெழுத்துகள்தாம் ; வல்லினம் என்றும் சொல்வார்கள்) 

எறி, கொணா - போன்ற உயிர் ஈற்று முன்னிலை வினைகளும்

உண், தின் முதலிய புள்ளியீற்று முன்னிலை வினைகளும் நிற்க (நிலை மொழி என்பார்கள்) அடுத்து,

வல்லெழுத்தை முதலாக உடைய சொல் வந்தால் (வருமொழி என்பார்கள் ) எந்த மாற்றமும் ஏற்படாது.

இவ்வாறு மாறாமல் இருப்பது இயல்பு புணர்ச்சியாகும்; சுருக்கமாக இயல்புஎன்பார்கள்.

5)நட+ கொற்றா = நட கொற்றா✓/ நடக்கொற்றா✓ 

6) ஈர்+ கொற்றா = ஈர் கொற்றா✓  / ஈர்க்கொற்றா✓

     ஈர்(த்தல்)= இழு(த்தல்)/ பிள(த்தல்)

நட கொற்றா, ஈர் கொற்றா என்பவை இயல்பு.

நடக் கொற்றா, ஈர்க் கொற்றா என்பவற்றில் வருமொழிக்கேற்ப ஒரு வல்லெழுத்து / வல்லின எழுத்து மிகுந்திருக்கிறது / தோன்றியிருக்கிறது. இத்தகைய இடங்களில் இரண்டும் சரி என்கிறது தொல்காப்பியம்.

இவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்டவாறு புணர்ந்தாலும் பிழையில்லை என்றால் உறழ்ச்சி என்பார்கள்.

மேலே உள்ள எடுத்துக் காட்டுகள் (1-6) இளம்பூரணர் உரையில் உள்ளவை. நச்சினார்க்கினியரும் இவற்றையே பின்பற்றி மேற்செல்கிறார் .மேலும் சில விளக்கங்களும் உள்ளன. இப்போதைக்கு இவை போதும்.

சூத்திரத்தைப் பார்ப்போம்.

உயிரீ றாகிய முன்னிலைக் கிளவியும்

புள்ளி யிறுதி முன்னிலைக் கிளவியும்

இயல்பா குநவும் உறழா குநவுமென்

றாயீ ரியல வல்லெழுத்து வரினே

( தொல்காப்பியம், எழுத்ததிகாரம், தொகைமரபு - 9)

புணர்ச்சி இலக்கணத்தை எடுத்துக் காட்டு , விளக்கம், விதி, சூத்திரம் என்ற வரிசையில் நடத்துவது

என் வழக்கம். இதனை விதிவரு முறை என்பார்கள்


                                                             ***

இதை நடத்தி முடிக்க ஏறத்தாழ இருபது மணித்துளியாயிற்று. 

மாணவர் இரா... எழுந்து, " ஐயா, குநவும் என்றால் என்ன?" என்றார். 

எனக்குப் புரியவில்லை.

"என்ன ? " என்றேன். 

" ஐயா, குநவும் " என்று சற்றுத் தெளிவாக அழுத்தமாகச் சொன்னார்.

"குணமுமா?" என்றேன்.

"இல்லை" என்று என்னை நெருங்கிப் புத்தகத்தில் விரல் வைத்துச் சுட்டிக்காட்டினார். எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. இப்படியும் ஐயம் எழும் என்கிற தெளிவும் கிடைத்தது. 

" இரா ... நீங்கள் தொடர்ந்து தயங்காமல் சந்தேகம் கேளுங்கள்" என்று வேண்டி, பிறகுதான் விளக்கம் சொன்னேன். அவரும் இரண்டாண்டுகள் தொடர்ந்து கேட்டார்.

இயல்பு + ஆகுநவும் = இயல்பாகுநவும்

யாப்புநோக்கி,  'இயல்பா'  'குநவும்' என்று இரண்டு சீர்களாக அச்சிடப்பட்டுள்ளன.

இளங்கலை (B.A) தமிழ் பயின்ற ஒருவருக்கு இந்த ஐயம் எழக்கூடாது. ஆனால் பட்டத்திற்கும் தகுதிக்குமான இடைவெளிக்குத் தனிப்பட்ட மாணவரைக் குறைசொல்லக் கூடாது.

ஆசிரியத் தொழிலின் சங்கடங்களுள் ஒன்று, ஆசிரியருக்கு இயல்பாகப் பழகிப்போன ஒன்று , மாணவர் பழகாததாக இருக்கும். மாணவருக்கு எளிதாகப் புரியக்கூடியதுதானே என்று கருதி நகர்ந்துவிடக் கூடாது.

இது கூடவா தெரியாது என்று ஆசிரியர் நினைக்கிற மிகச் சாதாரணமான ஒன்றுகூட ஏதோ காரணத்தால் மாணவர் சிலருக்குத் தெரியாமலிருக்கலாம்.

மாணவரோடு நிகழ்த்தும் சுதந்திரமான உரையாடல் மூலமே இதனைக் கடக்க இயலும் என்பது என் அனுபவம்.

வெறும் போர்ஷன் முடித்தல், தேர்வு, மதிப்பெண் என்பவை உயர்கல்வியல்ல.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

'குநவும்' என்றால் என்ன? - 2

                 (அல்லது)

சந்திப்பேயும்  விகார வெறியும்*

(* புலவர் வேங்கடாசல முதலியார், சந்தி பிரித்து அச்சிட்ட,  கம்பராமாயணம் , அயோத்தியா காண்டப் பதிப்பில் எழுதிய தொடர்)

குநவும் பற்றிய எனது இடுகையைப் படித்த பேராசிரியர் தமிழ் சிவாSiva Krishnan, " முதலில் குநவும் என்றால் புரியவில்லை. எங்கள் வகுப்பில் கொக்கு கொக்க (கொக்கு ஒக்க....) என்று நண்பர்  ஒருவர் படித்தார். புணர்ச்சியைப் படிக்கச் சொல்லித் தராததன் விளைவு இது " என்று கருத்துரைத்தார். அப்போது , அது பற்றிச் சற்று விரிவாக எழுதப் போவதாகக் குறிப்பிட்டிருந்தேன்;இப்போது எழுதுகிறேன்.

                                                            ----------------

பேராசிரியர் பீ.மு.மன்சூர் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை பயின்ற காலத்து நிகழ்ச்சியொன்றைச் சொன்னது நினைவுக்கு வருகிறது:


பேராசிரியர் சோ.ந.க. அவர்கள் வகுப்பறைக்குள் நுழைந்தபோது, மாணவர்களுக்குரிய முதல் வரிசை நீள் மேசையில் சந்தி பிரித்த மர்ரே ராஜம் பதிப்பு ஒன்று இருந்ததாம். அதைத் தூக்கி வீசி எறிந்து விட்டு, எதுவும் நடக்காதது போல், இயல்பாகப் பாடம் நடத்தத் தொடங்கி விட்டாராம்.

                                                                   ----------------

நவீனத்திற்கு முந்தைய காலத்துப் பா இலக்கியங்களைத் தொடர்ச்சி குன்றாமல் இயன்றவரை முழுமையாகவும் தனித்தனியாகவும் சொற்கள் தெளிவுறுமாறு படித்துக் காட்டி,இரசனை சுட்டி,வாய்ப்பு இருப்பின் சமகாலப் போக்கோடு ஒப்புமை தேடி , அருஞ்சொற்பொருள், உள்ளடக்கம் சார்ந்த விளக்கம் என்று நடத்திப் பிறகு மொழியமைப்பைத் தேவைக்கேற்ப விளக்குவது என் வழக்கம்.


மொழியமைப்பை விளக்குவதில் முதற்படி சந்தி பிரித்தல்தான். படித்துக் காட்டும் போதே பேரளவு சந்தி பிரித்தல் நிகழ்ந்துவிட்டாலும், இன்றியமையாதவற்றைக்

கரும்பலகையில் எழுதுவேன் ( சாக் கட்டி கையில் இல்லாமல் என்னால் பாடம் நடத்தவே இயலாது) . இந்தக் கட்டத்தில் மாணவர்களிடையே ஒரு சலிப்புத் தலை தூக்கும். 


என் வகுப்பில் மாணவர்கள் அச்சமின்றி உரையாட இயலும் என்பதால்,  'ஐயா, இலக்கிய வகுப்பிலும் பாதி இலக்கணமா? ' என வெளிப்பட வினவவும் செய்வார்கள்.  

                                       _______________

இரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார் அவர்களின் இலக்கியச் சொற்பொழிவை முதன் முதலாகக்கேட்டுச் சொக்கிய வட்டத்தொட்டி அன்பர் ஒருவர், ' ஐயா, தமிழ் இலக்கியங்கள் இவ்வளவு சுவையானவை என்று இன்று வரை தெரியாதையா. தமிழாசிரியர் எவரும் இப்படிச் சொன்னதே இல்லையே ஐயா! ' என்றாராம்.


அதற்கு டி.கே.சி., தமிழ்ப் பண்டிதரிடம் கம்பராமாயணம் பாடம் கேட்டால், அவர் ' கம்பராமாயணம், கம்பரது ராமாயணம் அல்லது கம்பரால் இயற்றப்பட்ட ராமாயணம், ஆறாம் வேற்றுமைத் தொகை அல்லது மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை ' என்பார். கேட்பவர் கொட்டாவி விடத் தொடங்கிவிடுவார். தமிழ் இலக்கிய இரசனையின் முதல் எதிரிகள் தமிழ்ப் பண்டிதர்கள்தாம்- என்பாராம்.


நான் இதைச் சொல்லிவிட்டு ,  "பேருந்தில் பயணம் செய்பவருக்குப் பேருந்தை ஓட்டும் பயிற்சியோ தொழில்நுட்ப அறிவோ வேண்டியதில்லை. ஆனால் ஓட்டுநருக்கு அவை இன்றியமையாதவை. ஆனால், ஓட்டுநரும் ஒரு வகைப் பயணிதான்.


"இலக்கியச் சொற்பொழிவை இரசிக்கும் பொதுமக்களுக்கு இலக்கண நுட்பம் தேவையில்லை. இலக்கியத்தைச் சிறப்புப் பாடமாகப் பயில்வோருக்கு இலக்கண அறிவு நுட்பமும் தேவை.


"நமக்குள்ள பாடப்பகுதிகள் மாதிரிக் காட்டுகள்தாம். இவற்றின் இலக்கண அமைதியை விளங்கிக் கொண்டால், பிற பிற பாக்களை நீங்களே அணுகிப் பயில்வது எளிது. 


"வெறும் இரசனை முறையில் பாடங்கேட்டால் , கேட்பதற்கு இனிமையாக இருக்குமே தவிர நீங்களாகவே பிறவற்றை அணுகுவது சிரமம்; பிறருக்குச் சுவைபடச் சொல்வதும் சிரமம்" என்பேன்.

                                                        xxxxxxx

பழம் பா இலக்கியங்களைச் சந்தி பிரித்து அச்சிற் பதிப்பிக்கும் வரலாற்றுத் தொடக்கம் ஆராய்தற்குரியது.

தமிழ்ப் பேரறிஞர் , பள்ளியகரம் நீ.கந்தசாமிப் பிள்ளையவர்கள் இடப்புறம் ஓசை கெடாதவாறு சீர் பிரித்து அடி வரையறுத்தும் வலப்புறம் பொருளுணர்ச்சி கருதிச் சந்தி பிரித்து அருஞ்சொற்பொருளுடனும் பதிப்பித்த திருவாசகம் முதற் பகுதி முன்னுரையில், சந்தி பிரித்துப் பதிப்பித்தல் பற்றிய 

முந்தையோர் கருத்துகள் சிலவற்றைத் தொகுத்து முழுமையான மேற்கோள்களாக முன் வைத்துள்ளார்.

                                                            xxxxxxx


சந்தி பிரிப்பதிலும் சில முறைமைகள் தேவை. 

தேர்ந்த தமிழறிஞர்களின் புலமையையும் உழைப்பையும் கொண்டு தமிழ் நூல்கள் பலவற்றைச் சந்தி பிரித்துப் பதிப்பித்துப் புகழ் பெற்ற மர்ரே & ராஜம் கம்பெனியார்

'சந்தி குறியீட்டு விளக்கம்' என்னும் கையேடொன்றை வெளியிட நேர்ந்தது . இதனை  ஒரு வகையில் சந்திபிரித்தலின் இலக்கணம் என்று சொல்லலாம். 

ஏதேனும் ஒரு வடிவில் இலக்கணம் வந்துவிடும்.

                                                         xxxxxxxxxx

 உயர் கல்வி நிலையில் இலக்கியம் பயில்வோர் , சந்தி பிரிக்காத வடிவத்தை முதலாகக் கொண்டு, இலக்கண அமைதியுணர்ந்து சந்தி பிரிக்கப் பயில வேண்டும்.

எனவேதான் பேரா.சோ.ந.க. அவர்கள் முதுகலை வகுப்பில்  சந்தி பிரித்த நூலைத் தூக்கி வீசினார்.

(வேண்டுமானால் சந்தி பிரித்த நூலைத் துணையாகக் கொள்ளும் சலுகையைத் தரலாம்)

                                                  °°°°°°°°°°°°°°°°°°°

சந்தி பிரித்து அருஞ்சொற்பொருள் தந்துவிட்டால் போதுமா? பொருளுணர முடியுமா?

அவ்வாறு அமைந்த, நீ.கந்தசாமிப் பிள்ளையவர்களின் திருவாசகப் பதிப்பிலிருக்கும் திருவண்டப்பகுதியிலிருந்து மாதிரிக்குச் சிலவற்றைப் பார்ப்போம்( இந்தப் பக்கத்தின் நகலைப் பகிர்ந்துள்ளேன்) :




1. 1. உண்டைப் பிறக்கம்        உண்டைப் பிறக்கம்

1. 2. தூலத்துச் சூறை                      தூலத்து, சூறை


1.1.சந்தி பிரிக்காத இடப்புறம்,    சந்தி பிரித்தவலப்புறம் இரண்டிலும் புணர்ச்சியில் தோன்றிய  ' ப் '  உள்ளது.


1.2.இல் இடப்புறம்  த்  உள்ளது, வலப்புறம் த் கைவிடப்பட்டுக் காற்புள்ளி இடப்பட்டுள்ளது. ஏன், 

வலப்புறமும் ' தூலத்துச் சூறை ' என்றே போடலாமே?    


'திருவண்டப் பகுதி' யின் 13-15 ஆம் அடிகளைப் பார்ப்போம்.

2.1. படைப்போற் படைக்கும்        படைப்போன் படைக்கும்

        காப்போற் காக்குங்                காப்போன் காக்கும்

2.2. கரப்போன் கரப்பவை           கரப்போன் ; கரப்பவை


2.1. இன் இரு தொடர்களிலும் புணர்ச்சியில் -ன் > ற் ஆகத் திரிந்திருக்கிறது.

2.2.இல் ஏன் கரப்போற் கரப்பவை என்று - ன் > ற் ஆகத் திரிய வில்லை?

படைப்போன் படைக்கும்

காப்போன் காக்கும்         

என்று சந்தி பிரிப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால், சந்தியை மட்டும் பிரித்துக்காட்டுவது போதாது.


3. நின்றெழில்       நின்ற எழில்


     ' நின்று எழில் ' என்றுதானே பிரிக்கவேண்டும்?


இவை போன்ற இடங்களில் இலக்கணக் குறிப்புத் தேவை.


1.1. உண்டைப் பிறக்கம் = உண்டைகளின் பிறக்கம்

       [உண்டை = உருண்டை; பிறக்கம் = இயக்கம்(எனலாம் என்பது என் கருத்து)] உருண்டை வடிவில் அண்டத்தில் இயங்கும் கோள் முதலியவற்றைச் சொல்கிறார் மாணிக்க வாசகர் . இஃது ஆறாம் வேற்றுமைத் தொகைத் தொடர்.

1. 2.' சூக்கமொடு தூலத்து' - என்னும் இரண்டும் முரண்காரணமாக ஒருங்கு நிற்கின்றன. 

       ' சூறை மாருதத்து' = சூறைக்காற்று என ஒருங்கு நிற்கின்றன.

       'தூலத்துச் சூறை' - எனில் பொருள் இயைபில்லை.

ஓசை காரணமாக 'ச்' என்னும் வல்லெழுத்து மிகுந்துள்ளது; அவ்வளவுதான்.

இவற்றிடையே பொருள் இயைபு காணலாமெனில் சந்தி பிரிக்கும்போதும் 'ச்' இடம்பெறலாம்.


2.1.படைப்போற்படைக்கும் = படைப்போனைப் படைக்கும்.

       காப்போற்காக்கும் = காப்போனைக் காக்கும்

சிவபெருமானை முழு முதற் கடவுள் என்பர் சைவர். அம் முழு முதற் கடவுளே படைப்போனாகிய பிரமனைப் படைத்தவன்; காப்போனாகிய திருமாலைக் காப்பவன் என்பது பொருள்.

       

      படைப்போன் (+ஐ )

      காப்போன் (+ ஐ  )

      என இரண்டாம் வேற்றுமை உருபு

      மறைந்து - தொகையாக - நிற்பதால்தான்  - ன் > ற் ஆகத் திரிந்துள்ளது.

      2.2. இல் ' காப்பவை கரப்போன் ' என்பது ஒரு தொடர், ' கரப்பவை ... கடவுள் ' என்பது மற்றொரு தொடர்.

எனவேதான் இடப்புறத்திலேயே திரிபின்றி இயல்பாக உள்ளது.


3. நின்ற எழில் > நின்றெழில் ஆவதைத் தொகுத்தல் விகாரம் என்பார்கள்.


இவற்றையெல்லாம் பயிற்றுவிக்காமல் போர்ஷனை முடித்தால் , இரா .... போன்ற மாணவர்கள் முதுகலை வகுப்பில் "குநவும் என்றால் என்ன?" என்றுதானே கேட்பார்கள்? (பயிற்றுவித்த பின்னும் மறந்து போய்க் கேட்பதுண்டு. குற்றமில்லை. நினைவூட்டினால் பிடித்துக் கொள்வார்கள். தொடர்ந்து பயில்வதன் மூலம்தான் மொழியமைப்பை நினைவில் தக்கவைத்துக் கொள்ள இயலும். இவற்றைச் சற்றும் பயிற்றுவிக்காமல் போனால்?)

(6 & 13 சூன் 2019 முகநூல் இடுகைகள்)


Thursday, June 10, 2021

ಠ_ಠ) 'தேவலாம்' : சமாளிப்பியம் (ಠ_ಠ)





மூன்று மாதத்திற்குள் , மீண்டும் மூக்குக் கண்ணாடி உடைந்துவிட்டது.

"கொஞ்சம் உறுதியாயிருந்தால் தேவலாம் " என்றேன்.

என் பையன் " வலைவழி வாங்கலாம் "என்றான்.


- என்று தொடங்கியது என் முகநூல் இடுகையொன்று .


அதனைப் படித்த  திரு. அற்புதராஜ் சுந்தரம் அவர்கள் , 

" அன்புள்ள நண்பர் மதி! தேவலாம் என்ற சொல்   எப்படி பயன்பாட்டிற்கு வந்தது ,எங்கிருந்து வந்தது..அதற்கு சமமான பண்பாட்டுச் சொல் என்ன?அகராதியில் தேவலாம் என்ற சொல் இல்லை.அகராதியில் பரவா என்று ஒரு சொல் இருக்கிறது.அதன் பொருள் கவலை,குற்றம் என்று   இருக்கிறது. நாம் பரவா இல்லை என்று சொல்லுததற்கு பதிலாக  பரவாயில்லை என்று எழுதுகிறோம். அப்படி எழுதுவது தவறு என்று தோன்றுகிறது. விளக்கமாக சொல்லுங்களேன்..." என்றார்.


என் விளக்கம்:

தாழ்வி(ல்)லை > தாவிலை > தேவலை ( குறிப்பு வினை முற்று) ¹


 இதிலிருந்து - வரலாம் , போகலாம் என்பன போல் - தேவலாம் என்பது வழக்கில் வந்துவிட்டது. இது , எதிர்பார்ப்புக் குறிப்புடைய நோக்கு வினைச்சொல் (Modal Verb).²


பரவா/ பர்வா - பாரசீகத்திலிருந்து உருது, இந்தி, தமிழ் , கன்னடம் முதலிய மொழிகளுக்கு வந்த சொல். பரவா + இல்லை = பரவாயில்லை (வருமொழி முதல் காரணமாக யகரம் உடம்படுமெய்யாயிற்று)


                           —————————


தேவலாம் பற்றி மட்டும் பார்ப்போம்.


¹. தேவலை  tēvalai , n. < தாழ்வு + இல்லை. cf. தாவிலை. 1. Better condition, as in health ; அனுகூலமான நிலை. இப்போது அவனுக்கு உடம்பு தேவலை. 2. That which is preferable ; விசேடமானது . அதைவிட இது தேவலை - TAMIL LEXICON ( University of Madras)

இப்பேரகராதி n.[noun] என்கிறது. எனக்கு உடன்பாடில்லை.


க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி , ' தேவலாம் வி.மு.* (பே.வ.)^  காண்க: தேவலை

- எனச் சுட்டித் 'தேவலை' என்பதற்கு ஏறத்தாழ ஒத்த மூவேறு பொருள் தருகிறது.

[ * வினை முற்று.  ^ பேச்சு வழக்கு] 


தேவலை , தேவலாம் என்பன வழக்கில் ஒரு பொருட் பன்மொழிகளாகவே இயங்குகின்றன. தரவுத்தளமொன்றை அடிப்படையாகக் கொண்டு புழக்கத்தில் குறிக்கும் பொருள்களைத் தருவதே புறநிலையிலான ஓர் அகராதி ஆக்கத்தின் நியாயமுமாகும்.


தேவலை , தாழ்வில்லை என்பதன் மருவிய வடிவம் எனப் பேரகராதி [ LEXICON ] தெளிவுபடுத்திவிட்டது. தேவலாம் என்பதை அது தரவில்லை.


தேவலாம் - 

நான் வேறு அதைப் பயன்படுத்தித் தொலைத்துவிட்டேன்.

திரு.அற்புதராஜ் சுந்தரம் ," எப்படிப் பயன்பாட்டிற்கு வந்தது?எங்கிருந்து வந்தது? " என்று கிடுக்கிப் பிடி போடுகிறார். 


என்ன செய்வது ? சமாளிப்பியம் தவிர வேறு வழி?


². டாக்டர் பொற்கோ அவர்களின் தற்காலத் தமிழ் இலக்கணம் கைகொடுத்தது. அவரது 'இக்காலத் தமிழ் இலக்கணம்'° வினை நோக்குத்(MODALS) துணைவினைகளை விவரித்துள்ளது. அவற்றுள் ஒன்று செய்யலாம் என்னும் வாய்பாட்டு வினைமுற்று.

" செய்யலாம் என்ற வாய்பாட்டு வினைமுற்றுகள் அனுமதி அளிப்பது போலவும் எதிர்பார்ப்புக்குறிப்பை வெளிப்படுத்துவது போலவும் அமைகின்றன " (ப. 73)

ஆனால்,

தேவலாம் என்பது வரலாம் , போகலாம் , எழுதலாம் , பேசலாம், பாடலாம், ஆடலாம் ... முதலிய பிற செய்யலாம் வாய்பாட்டு வினைகள் போல செய- என்னும் வினையெச்ச வடிவத்திலிருந்து வரவில்லை( 'செயல் - ஆம் ' என்னும் வாய்பாடாகவும் கொள்ளலாமோ!). அவற்றின் பிறழ் ஒப்புமையாக்கமாகத் தேவலாம் உருவாகியிருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. 


தேவலாம் என்பதில் அனுமதிக்குறிப்பு இல்லை ; எதிர்பார்ப்புக்குறிப்பு மட்டுமே உண்டு.


எதிலிருந்து வந்தது?

தேவலை என்பதிலிருந்து  வந்தது.


எப்படி வந்தது?

பிறழ் ஒப்புமையாக்கமாக வந்தது.


 'தேவலாம்' என்பதை எதிர்பார்ப்புக்குறிப்புடையதாக நான்  பயன்படுத்தியிருக்கிறேன்,

 தற்செயலாகத்தான் எனினும் அது மிகப் பொருத்தமான பயன்பாடு என்று தோன்றுகிறது.

 

 அப்பாடா!

-------------------

° பூம்பொழில் வெளியீடு, சென்னை, 2002 .

இலக்கண மறுப்பு என்னும் பொறுப்பின்மை

வட்டார வழக்குதான் மக்கள் மொழி .அதுதான் உயிருள்ளது என்று மிகையழுத்தம் தரும் குழு ஒன்று விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்படித்தான் எழுத...