Thursday, September 23, 2021

எழுத்துச் சீர்திருத்தம்

 எழுத்துச் சீர்திருத்தம்




சீராகத் திருத்துதலும்

சீரைத் திருத்துதலும்


ஈ.வெ.ரா. பெரியாரின் இயல்புகளுள் ஒன்று சிக்கனம் . அவர் காலத் தட்டச்சு, அச்சு இயந்திரங்களை நோக்கி வாகாகச் சில எழுத்துகளை - வரிவடிவங்களை - சீர்மைப் படுத்திக் கையாண்டார். 


அவர் கையால் எழுதும் போது இறுதி வரை பழைய வடிவங்களையே கொண்டார். காரணம் பழக்கம் மட்டுமன்று; தெளிவுமாம்.

(றா, ளை , னை ஆகியவற்றை அவர் கையெழுத்திலிருந்து காட்டியிருக்கிறேன்)






வரிவடிவம் என்பது எழுது முறை, எழுதுகருவிகள் , எழுதப்படு பொருள் ஆகியவற்றுக்கியைய அமையும்; அமைவது நல்லது; தமிழில் அவ்வாறு அமைந்திருந்தது.


T வடிவில் முடியும் ண, ன, இரட்டை வளைவு கொண்ட ற ஆகிய மூன்றன் ஆகார உயிர்மெய்கள் மட்டுமே கீழே வளைக்கப்பட்டன. 

சுழியில் தொடங்கும் ண, ல, ள, ன ஆகிய நான்கன் ஐகார உயிர்மெய்கள் மட்டுமே முன்னாகத் துதிக்கை பெற்றன.

இந்த விதிவிலக்கான வடிவங்களுக்குள் ஒரு சீர்மை இருந்தது.

கோத்தெழுதும் போது குழப்பம் தவிர்க்கவே அம்முறை ஆளப்பட்டது.

தமிழ் வளர்ச்சி விளையாட்டுகளுள் ஒன்று எழுத்துச் சீர்திருத்தம். கணினி வந்த புதிதில் தம்மை அறிவியலறிஞர்கள் என்று கருதிக் கொண்ட சில தொழில்நுட்பர்கள் பத்தாம் பசலிப் பண்டிதர்களை எள்ளி நகையாடி எழுத்துச் சீரைத் திருத்தும் விளையாட்டில் திளைத்தார்கள்.

தமிழ்ப் பற்றாளர்கள்,தமிழாசிரியருட் சிலர் , தாமும் அறிவியல் நோக்கினர் என்று கருதியும், பெரியார் பற்றாளர்கள் காட்டுமிராண்டி மொழியைப் பகுத்தறிவு மொழியாக மாற்றக் கருதியும் சீரைத் திருத்தும் விளையாட்டில் கலந்து கொண்டார்கள்.

ஆய்வாசிரியர் ஏன் இல்லை?

 



இணையவழி இலக்கணக் 'கச்சேரி'. அதுவும் பிற்பகலில்.  

ஆசிரியர்களுக்கான புத்தொளிப் பயிற்சியில்  பிற்பகல் வகுப்பு  அவர்களுக்குச் சலிப்புத்தட்டும்தான்.

எனக்கும் தனிப்பட்ட முறையில் மதியச் சொக்கம்¹ பறிபோய்விடும்.

ஆசிரியர் பற்றிப் புதிதாக  -  அல்லது புதிது போல் தென்படுகிற - எதையாவதுசொல்லித் தொடங்கலாமே! என்று உரை ஆயத்தத்தினூடாகத் துழாவிக்கொண்டிருந்தேன்.

" இலக்கணக் கொத்துடையார் , நூலாசிரியர், உரையாசிரியர், போதகாசிரியரென வகுத்த மூவகை ஆசிரியரோடு யான் பரிசோதனாசிரியரென இன்னுமொன்று கூட்டி, இவர் தொழில் முன் மூவர் தொழிலிலினும் பார்க்க மிகக் கடியதென்றும் அவர் அறிவு முழுவதும் இவர்க்கு வேண்டியதென்றும் வற்புறுத்திச்சொல்கிறேன்." என்பார் சி.வை.தாமோதரம்பிள்ளை (கலித்தொகைப் பதிப்புரை). 

பரிசோதனாசிரியர் என்று அவர் சொன்னதை இன்று பதிப்பாசிரியர் என்கிறோம்.

தொகுத்தோர் தொகுப்பித்தோர் என்போர் தமிழிலக்கிய வரலாற்றில் புதியவரல்லர்.

தொகுத்தோர் இப்போது தொகுப்பாசிரியர் எனப்படுகின்றனர்.

ஆக, நூலாசிரியர்/கட்டுரையாசிரியர்

            உரையாசிரியர்

            போதனாசிரியர் (பயிற்றாசிரியர்)

            தொகுப்பாசிரியர்

            பதிப்பாசிரியர்  - என்றெல்லாம் வழங்குகிறோம்;

            சிறுகதையாசிரியர்

             நாவலாசியர்  - எனவும் பொதுவாகக் கதாசிரியர் எனவும்  குறிப்பிடுகிறோம் ;

              காப்பிய ஆசிரியர் என்பதுண்டு. கவிதையாசிரியர் அரிய வழக்கு. இவர்களை   நூலாசிரியர் என்பதற்குள் அடக்கிவிடலாம்.

பயிற்றாசிரியரை  மட்டுமே அடையின்றி ஆசிரியர் என்பது பெருவழக்கு.

மற்றவர்களையும் ஆசிரியர் என்கிறோமே ஏன்?

ஆனால், ஆய்வாளரை ஆய்வாசிரியர் என்பதில்லையே ஏன்?  

ஒரு மொழியில் சொற்சேர்க்கைகள் தற்செயலாக - பொருட் பொருத்தமின்றிக் கூட - அமைந்துவிடலாம். சில பிழையான சேர்க்கைகள் ஒப்புமையாக்கத்தின் விளைவாக நேர்ந்துவிடலாம் (எ.கா: எதிர்மறை  × நேர்மறை²)

'ஆய்வாசிரியர் '  இன்மைக்குச் சில காரணங்களை உய்த்துணர முயலலாம்.

தாம் பயிற்றும் பாடப்பொருளில் தேர்ந்தவர் என்பதால் போதனாசிரியர் இயல்பாகவே ஆசிரியர்.

நூலின் மீது அதனை ஆக்கியவருக்கு ஓர் அதிகாரப் பொறுப்பு  உண்டு என்கிற அடிப்படையில் நூலாசிரியரை ஆங்கிலத்தில் Author என்கிறோம்.  நூலாசிரியர் முதலியோர் நூல், உரை, போதனை, தொகுப்பு, பதிப்பு ஆகியவற்றின் மீதுள்ள அதிகாரப் பொறுப்புக்காரணமாக ஆசிரியராகின்றனர்³.

ஆனால் ஆய்வாளர் எந்தக் கட்டத்திலும் முடிந்த முடிபான நிலையை எட்டுவதில்லை; எட்ட இயலாது; கூடாது. ஆய்வாளருக்கு இலக்கு விடையை எட்டுவதன்று ,எட்டிய ஒவ்வொரு விடையின் மீதும் வினாக்களைத் தேடுவதும் தொடுப்பதும்தான்.

ஆனால், ஒரு விடையை/முடிபை எட்டாததும் ஆய்வாகாது. விடையொன்றை எட்டிய நிலையில் அதனை முறைப்பட எழுதி ஆய்வு நூலாசிரியராகலாம். இங்கும் அடை நூலுக்குத்தான்.

ஆகவே ஆய்வாசிரியர் இருக்கவே இயலாது.

-------

1. சொக்கம் - உறக்கம் , சொர்க்கம் (மதியத்தில் எனக்கு இரண்டும் ஒன்றுதான்)

2.மறை = மறுத்தல் . 

கொடை = கொடுத்தல், நிறை = நிறுத்தல் முதலியன காண்க.  

'எதிர்' என்பதன் மறுதலை (opposite) ஆகிய 'நேர்' என்பது கொண்டு , நேர்மறை (Positive) × எதிர்மறை (Negative) என்று கையாளும் வழக்கம் பெருகிவிட்டது.நேர்மறை என்பது பிழையான சொல்லாக்கம் ; வழக்கில் பரவி நிலைத்துவிட்டது ; தற்காலத் தமிழ் அகராதியிலும் இடம் பிடித்துவிட்டது. இனி, நேர்மறையை எதிர்மறையாகப் பார்த்துப் பயனில்லை.

3. ஆசிரியனின் சாவு பற்றிய ரோலண்ட் பார்த் ( Roland Barthes ) விவகாரம் இப்போதைக்கு இங்கு வேண்டாம். அது என்ன? என்று அறிய விரும்புவோர் வல்லார் வாய்க்கேட்டுணர்க.



Friday, September 10, 2021

ஆதி இந்தியர்கள்

 


ஒரு குட்டிக்கதையோடு தொடங்கலாம். இது கொசுறு.

மாறுவேடத்தில் சிற்றூர் ஒன்றில் வலம் வந்த இளவரசன் , வயலில் வேலை  செய்துகொண்டிருந்த இளைஞன் ஒருவன் அச்சு அசலாகத் தன்னைப் போலவே இருப்பது கண்டு துணுக்குற்றான்.
" உங்கம்மா அரண்மனையில வேல பாத்தாங்களா? " என்றான் இளவரசன்.
" இல்ல.எங்கப்பாதான்..." என்றான் அந்த இளைஞன்.
*******************************



இந்திய வரலாற்றை ஒற்றை மூலத்திலிருந்து கட்டமைக்கும் வெறி மேலோங்கி அதிகாரம் செலுத்தும் காலத்தில் வாழ்கிறோம்.

அரப்பா நாகரிகத்தோடு ரிக்வேதத்தை முடிச்சுப்போட்டுச்
சிந்து- சரசுவதி நாகரிகம் என்று பேசத்தொடங்கிவிட்டது அதிகாரம்.

கல்வியை ஒற்றை மையத்தின் கீழ்க்கொணர்ந்து சமற்கிருதம் >ரிக் வேதம் > சிந்துவெளி > ஆரிய வர்த்தம் > பாரதம் என்பதன் கீழ் ஒட்டுமொத்த இந்தியப் பண்பாட்டையும் கொண்டுவரும் வேலை தொடங்கிவிட்டது.

ஆனால், பண்டைய ஏடறிந்த வரலாற்றுக்கு முந்தைய இந்தியா, வாய்வழிப் பனுவல் உருவாக்கம், ஏட்டுப் பதிவு என்பனவற்றை  இதுவரை,
தொல்லியல்
மொழியியல்
பண்டைப் பனுவல்கள்
நிலத்தியல், தட்பவெப்பவியல் முதலிய துறைகள்வழியாக ஆராய்ந்தார்கள்.

கடந்த பத்தாண்டுகளில் மரபியல் எனப் பரவலாக வழங்கும் ஈனியல் (Genetics)வளர்ச்சி புதிய தெளிவுகளை உண்டாக்கியிருக்கிறது.

இந்த அடிப்படையில் , தொல்லியல் முதலிய பிறவற்றையும் கொண்டு இதழாளர் டோனி ஜோசஃப் ஆய்வு நூல்கள் பல பயின்றும் அறிஞர்களோடு மணிக்கணக்கில் உரையாடியும் ஆறாண்டுப் பேருழைப்பில் 2018இல் ஆங்கிலத்தில் Early Indians என்னும் நூலை எழுதினார்.

அதன் தமிழாக்கம் இரண்டே ஆண்டுக்குள் வந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது.



ஏறத்தாழ இருநூறாண்டுக் காலமாக நிகழும் ஒரு  தேடலை, அதில் இடம்பெற்ற ஊகங்களை , திட்டமிடப் படாமலும் , திட்டமிட்டும் நேர்ந்த திசைதிருப்பல்களை, புதிய ஆராய்ச்சிகளால் , ஆராய்ச்சி முறைகளால் சம்பந்தா சம்பந்தமற்றவை எனக் கருதப் பட்டவற்றுக்கிடையில் காணும்  வியப்புக்குரியதொடர்புகளை,  சிறிதுசிறிதாக வெளிச்சம் படர்ந்து தென்படும் துலங்கல்களை , பின்தொடரும்போது ஒரு துப்பறியும் கதையின் விறுவிறுப்பை உணரமுடிகிறது. கதை இன்னும் முடியவில்லை ; முடியாது. ஆனால் உண்மையின் பாதை புலப்பட்டுக்கொண்டே வருகிறது என்று சொல்லலாம்.

இது, ஆழமான ஆராய்ச்சி நூல்தான் என்றாலும், ஆர்வமுள்ள பெரும்பாலானோரை நோக்கி எழுதப்பட்டுள்ளது.

ஆசிரியர் ஓர் இதழாளர் என்பதால் மட்டுமன்றி,  ' பதிப்பாசிரியர் பார்த் பி. மெஹ்ரோத்ராவின் பொறுப்பும் தொழில்நேர்த்தியும் இக்கதை கூறப்பட்டுள்ள விதத்தைப் பெரிதும் மேம்படுத்தியிருப்பதும் ' (ப.259)இதன் சரளத்திற்குக் காரணம் .

திரு. பிஎஸ்வி குமாரசாமி நூலின் தன்மையுணர்ந்து தமிழாக்கியிருக்கிறார். குறிப்பாக இதில் பரவலாக இடம்பெற்றுள்ள ஆய்வறிக்கைத் தலைப்புகளை ஆங்கிலத்திலேயே கொடுத்திருப்பதாகக் கூறுகிறார். காரணம் அவற்றைத் தேடிப் படிக்க வாய்ப்பாக இருக்கும் என்பது. இது சரியானது (தமிழாக்கிவிட்டு அடிக்குறிப்பில் ஆங்கிலத்தில் தரலாம்).

இறுதியில் தமிழ் அகரவரிசையில் தமிழ்-ஆங்கிலம் கலைச்சொல் பட்டியலும் பெயர்ப் பட்டியலும் தரப்பட்டுள்ளன. இவை பயனுடையன. இன்னும் சில சொற்களைச் சேர்க்கலாம்.
[ஆனால் 'குறித்தச் சர்ச்சை', ' கள்ளங்கபடமற்றத் தன்மை ', 'இடைப்பட்டக் காலம்'  எனச் சுவையான உணவின் ஒவ்வொரு உருண்டையிலும் கல் தட்டுப்படுவதுபோல், எல்லா இடத்திலும்  சகட்டுமேனிக்கு , வருமொழி வல்லினமாயின் அகர ஈற்று வல்லிரட்டுச் சொற்களின் பின் வலிமிகுத்து எழுதப்பட்டுள்ளது ( தமிழ் முனைவர் யாரேனும் 'திருத்தம்' செய்தார்களோ!)அடுத்த பதிப்பில் கட்டாயம் திருத்த வேண்டும்]

இந்த நூலினூடாகவே இவ்வகை ஆய்வுகளுக்கான ஈனியல் அடிப்படை பற்றி ஓரளவு புரிந்துகொள்ளலாம் . ஆம் ஓரளவு !  எனக்கு ஓரளவே புரிந்தது . மேலும் கருத்தூன்றிப் படிக்க வேண்டும் ('எல்லாவற்றையும் குலோப்ஜாமூனாக்கித் தரவேண்டும் என்று கேட்கக் கூடாது' - சுந்தர ராமசாமி)

இந்தியாவை ஒரு பீட்சாவாக உருவகப்படுத்துகிறார் டோனி ஜோசஃப். எச்சரிக்கையாக  இது, எளிமைப்படுத்தப்பட்ட உருவகம்தான் என்பதையும் அவர் சொல்லிவிடுகிறார்.

65,000 ஆண்டுகளுக்கு ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறிய நவீன மனிதர்கள் (அதாவது, தற்கால மனிதர்களின் முன்னோடிகள்) நுழைந்தபோது பீட்சாவின் அடித்தட்டு ஆயத்தமாயிற்று. பொதுக் காலத்துக்கு முந்தைய 7000 ஆம் ஆண்டுவாக்கில் ஜாக்ரோஸ் மேய்ப்பாளர்கள் பலுசிஸ்தானை அடைந்து பின்பு முதல் இந்தியர்களோடு கலந்தபோது பீட்சாவின் அடித்தட்டின் மீது சாஸ் பரப்பப்பட்டது. இருமக்கள் பிரிவும் இனங்கலந்து உருவாக்கியதுதான் அரப்பா நாகரிகம். பொ.கா.மு.2000ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆரியர்கள் வந்தபோது , பீட்சா மீது சீஸ் தூவப்பட்டது. இன்று ஆஸ்திரோ-ஆசிய, திபெத்திய-பர்மிய மொழிகள் பேசுவோரும் மேற்பரப்பின் சிறு தூவல்களாகச் சற்றே பரவினர்.
பின்னர் கிரேக்கர், யூதர், ஊணர், சிதியர், பார்சிகள், சித்தியர், மொகலாயர், போர்ச்சுக்கீசியர், ஆங்கிலேயர் போன்றோரும் பீட்சாவில் சிறு துணுக்குகளை விட்டுச்சென்றுள்ளனர்.

அரப்பா நாகரிகத்தை நான்கு யுகங்களாகக் காண்கிறார் ஜோசஃப்.

தொடக்ககால உணவு உற்பத்தி யுகம் (பொ.கா.மு. 7000 - 5500)
முற்கால அரப்பா யுகம் (பொ.கா. மு. 5500 - 2600)
முதிர் அரப்பா யுகம் (பொ.கா.மு. 2600 - 1900)
பிற்கால அரப்பா யுகம் (பொ.கா.மு. 1900 - 1300)
அரப்பா நாகரிக அழிவு போரால் நிகழ்ந்ததன்று; பெரும்பஞ்சத்தால் நிகழ்ந்தது.

ஆனால் ரிக் வேதம் வழிபாட்டு மரபுகளின் முரணை, பிறருடைய வழிபாட்டை இழிவாகப் பார்ப்பதைப் பதிவு செய்திருக்கிறது.

மொழிபற்றி மட்டும் பார்ப்போம்.

ஈரான் நாட்டின் வடமேற்கில் தொடங்கி , துருக்கியின் தென்கிழக்கு ஈராக்கின் வட கிழக்கு வரை படர்ந்தது ஜாக்ரோசிய(மலை)ப் பகுதி. அங்கிருந்து வந்த  ஜாக்ரோசியர்களும் இந்தியத் துணைக்கண்ட முதல் இந்தியர்களும்  பொ.கா.மு. 4700 - 3000ஆம் ஆண்டுகளுக்கிடையில்  இனங்கலந்திருக்கவேண்டும் என டி.என்.ஏ. ஆய்வுகள் காட்டுகின்றன. இவ்வாறு கலந்த இனத்தினர் முற்கால, முதிர் அரப்பா நாகரிகத்தை உருவாக்கியவர்கள்.
ஜாக் ரோசியர் இடப்பெயர்வுக்குப் பின் , ஜாக்ரோசியப் பகுதியில் புழங்கிய ஈல மொழிக்கு முந்தைய முதனிலை ஈல/முதனிலை ஜாக்ரோசிய மொழியை  அரப்பாவில் கலந்தவர்கள் பேசியிருக்கலாம். அப்போது அரப்பாவில் பேசப்பட்டது முதனிலைத் திராவிட மொழியாயிருக்கலாம் என்பதற்கான  மொழியியல் சான்றுகளை டி.என்.ஏ. ஆய்வும் உறுதிசெய்வதாகக் கூறுகிறார் ஜோசஃப்.

ஈல , தமிழ் வரிவடிவ ஒப்புமை குறித்து 1853 இலேயே எட்வின் நாரிஸ் எழுதியுள்ளார்.
கால்டுவெல் நோரிசை மேற்கோள் காட்டுவதோடு , இருமொழிகளுக்குமிடையிலான தொடர்பு குறித்தும் எழுதியிருக்கிறார்.

மெக் ஆல்பின் 1981 இலேயே முதனிலை ஈல - திராவிடத் தொடர்பைச் சற்று விரித்து ஆணித்தரமாகக் காட்டினார். 2013 இல் சவுத் வொர்த்துடன் இணைந்து எழுதிய கட்டுரையில் 81 சொற்கள் கொண்டு தொடர்புகளை விளக்கினார்.
இவற்றுள் பத்துச் சொற்களை எடுத்துக்காட்டியுள்ளார் ஜோசஃப் (பக்.165 - 166)

சரி. அரப்பாவில் இந்திய- ஐரோப்பிய மொழிகளுள் ஒன்று பேசப்பட்டிருக்கு முடியாதா?
இந்திய- ஐரோப்பிய மொழிகளின் பரவல் கால அட்டவணைப்படி பொ.கா.மு. 2000 ஆம் ஆண்டுக்குப் பிறகே - அரப்பா நாகரிக வீழ்ச்சிக்காலத்தில் - தெற்காசியாவை அடைந்தது. இதனை டி.என்.ஏ. ஆய்வும் உறுதிசெய்கிறது.

பின்னிணைப்பாக உள்ள 'கக்கர் - ஹக்ரா பள்ளத்தாக்கு ' என்னும் கட்டுரை மிக முக்கியமானது; ரிக்வேதம் குறிப்பிடும் சரஸ்வதி ஆறு பற்றியது.

இன்னும் சாதி உருவாக்கம், சமயங்கள், இந்திய- ஐரோப்பிய மொழிகளின் பெரும்பரவல், சமற்கிருத வளம் ,  வேத , உபநிடத வழி பிராமண மதம், சமண பௌத்தம், உணவுப்பழக்கமும் ஈனியல் பண்பும் என்று பலவற்றையும் பேசுகிறது இந்நூல்.

படித்துப் பாருங்கள்.

இந்தியர் அனைவருமே வந்தேறிகள்தாம். காலமும் வந்த வழிகளும்தாம்  வேறுவேறு. இந்த வந்தேறிகளின் கலப்பில் உருவானதே இந்தியப் பண்பாடு என்று ஒரு சமரச நிலைப்பாட்டுடன் நூலை நிறைவு செய்திருக்கிறார் ஜோசஃப்.

ஆனால், வைதிக சமற்கிருதத் திணிப்பும்  திராவிட மொழிகளை ஒடுக்குதலும்  என்னும் போக்கும் டி.என்.ஏ.வில் ஊறி,வரலாற்றில் தொடர்கிறதோ என 2020இன் முடிவிலும் எதார்த்த வரலாறு வினாவை முன்வைத்துக்     கொண்டிருக் கிறது.
ஆரிய x திராவிடப் போராட்டத்தின் புதுப் போக்கு !

*******************************
தொடக்கத்தில் கொசுறாகத் தந்திருக்கும் குட்டிக்கதையின் புதிரை ஈனியல் எளிதாக விடுவித்துவிடும். இதே போன்று தொல்வரலாற்றுப் புதிர்களையும் அது தீர்க்க முனைகிறது (கதையில் ஒளிந்திருக்கும் ஆணாதிக்கத் தன்மை பொறுத்திடுக).

இலக்கண மறுப்பு என்னும் பொறுப்பின்மை

வட்டார வழக்குதான் மக்கள் மொழி .அதுதான் உயிருள்ளது என்று மிகையழுத்தம் தரும் குழு ஒன்று விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்படித்தான் எழுத...