Friday, October 17, 2025

கல்கியால் கேட்ட மன்னிப்பு


 கல்கியால் கேட்ட மன்னிப்பு


வந்துவிட்டது ; வணிகத்தில் வென்றுவிட்டது(?) ; என் மாணவப் பருவ நினைவைத் தூண்டிவிட்டது.


முதுகலை  மாணவர்கள் சுழல் முறையில் வகுப்புக் கருத்தரங்கில் கட்டுரை படிக்க வேண்டும். ஓர் ஆண்டில் இரண்டு முறைக்குக் குறையாமல் ஒவ்வொரு மாணவரும்

படிக்க நேரும். அதை வெறும் சடங்காக அன்றி உயிரோட்டத்துடன் நடத்தினார் எங்கள் பேராசிரியர் அ.மா.பரிமணம் ஐயா . வினா எழுப்புதல் , விடையிறுத்தல் ஆகியவற்றைக் கூர்ந்து நோக்கி மதிப்பெண் தருவார். அது, அகமதிப்பீட்டில் பதிவாகும்.


நான் ஒருமுறை கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் இதழியல் பங்களிப்புப் பற்றிக் கட்டுரை படித்தேன் :


1928 பிப்ரவரியில் ஆனந்த விகடன் எஸ்.எஸ்.வாசனின் இதழாக வெளிவந்தது. முதல் இதழிலேயே உள்ளடக்கத்தில் பல  மாறுதல்கள் செய்தார்; மொழி நடையைக் சரளமான பொதுநடையாக்கினார்;ஆண்டுக் கையொப்பத் தொகையை உருபா இரண்டிலிருந்து ஒன்றாகக் குறைத்தார்: போட்டிப் பந்தயமொன்றை அறிவித்து அடுத்தடுத்த இதழ்களில் பரிசுத் தொகையை உயர்த்திக் கொண்டே போனார். போட்டி முடிவுகளை அறிவிக்கவே 'நாரதர்'எனும் இதழை 1933இல் தொடங்குமளவுக்கு அப்போட்டிகள் செல்வாக்குப் பெற்றன.   


வாசன் ஆனந்த விகடனைத் தொடங்கியபோது கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி திரு.வி.க.வின்  'நவசக்தி'யில் துணையாசிரியராகப் பணியாற்றி வந்தார். அப்போதே, அவர் ஆனந்த விகடனுக்கு 'ஏட்டிக்குப் போட்டி', 'பூரியாத்திரை' முதலிய நகைச்சுவைக் கட்டுரைகளை எழுதியனுப்பினார். கல்கியின் நகைச்சுவை எழுத்தாற்றலை இனங்கண்ட வாசன்  கல்கியைப் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்து அழைப்பு விடுத்தார்.


கல்கியும் அழைப்பையேற்று, 'நவசக்தி' யிலிருந்து விலகினார். இடையில் ராஜாஜியின் ஆணைக்கிணங்கத் திருச்செங்கோடு ஆசிரமம் சென்று 'விமோசனம் ' என்னும் மதுவிலக்குப் பரப்புரை இதழில் பொறுப்பேற்க நேர்ந்தது. எனினும் விகடனின் ஒவ்வோரிதழுக்கும்  கதை  கட்டுரை அல்லது தலையங்கம் ஆகியவற்றுள் ஒன்றைத் தொகை செலுத்திப் பெறும் அஞ்சவில் (வி.பி.பி.) அனுப்பக் கோரினார் வாசன். கல்கியும் அவ்வாறே அனுப்பி வந்தார். இது , ஒருவகை வணிக உறவுதான்.


வாசனுக்கு இந்த வி.பி.பி. உத்தி புதிதன்று. அவர் ஏற்கெனவே சென்னையில் புதுமையாக விற்பனைக்கு வரும் பொருள்களின் பட்டியல் (கேட்டலாக்கு)களை , அக்காலத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலில் பொருளாதார நிலையில் மேல்தட்டிலிருந்த  அரசு அலுவலர்கள் , சுக சீவனம் நடத்திய நிலவுடைமையாளர்கள் போன்றோருக்கு அனுப்பிவந்தார் . அவர்கள் தேவையான பொருளைக் குறிப்பிட்டு எழுதுவார்கள். அவர்களுக்கு வி. பி.பி.யில் அவற்றை அனுப்பிவிப்பார் வாசன் ( இன்றைய இணையவழி வணிகத்தின் முன்னோடியான அஞ்சல் வழி வணிகம்!)


வி. பி.பி.  வழி விற்பனைக்கும் விகடன் இதழுக்கும் அடிப்படை ஒன்றுதான் : வணிகம்.


ஆனந்த விகடனுக்கு முன் தமிழில் இதழியல் வணிகமயமாகவில்லை. வாசன் இதழியலை வெற்றிகரமான வணிகமாக்கினார். அதற்கேற்ப வெகுமக்களைக் கவருமாறு  பொதுச் சுவைபட எழுதும் திறன் கல்கியிடமிருந்தது. அது வணிக இதழியல் எழுத்து.


- என்று தொடங்கிக்  கல்கியின் புனைகதை , அரசியல் எழுத்துகள் யாவும் வணிக இதழியல் கூறுகளுடன் இயன்றவை என்று தொடர்ந்தேன். நான் ஆராய்ந்து எழுதியவை என்று சொல்லமுடியாது;  எனக்கு உடன்பாடான நிலை நின்று தொகுத்து எழுதியவை.


விவாதத்தின்போது, நான் மிக மதிக்கும் , பாடத்தைக் கலையாக நிகழ்த்தும் ஓர் ஆசிரியர் , ' கல்கி இதழாளராக இருந்த அதேவேளையில் , தலைசிறந்த இலக்கியப் படைப்பாளியாகவும் திகழ்ந்தார் என்பதற்குப் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்றவையே சான்று ' என்றார் .


நான் , ' அவை தொடர்கதைகள் ; புதினங்கள் அல்ல. அவற்றையும் இதழியல் எழுத்துகளாகவே கொள்ளவேண்டும் ' என்றேன். 


அவர்  மறுத்தார். 


கல்கி  மிகுந்த தன்னடக்கத்துடன் பொன்னியின் செல்வனுக்கு எழுதிய முடிவுரையில்  முதலில் தொடர்கதை என்றுதான் குறிப்பிடுகிறார்; இறுதியில் ,

" பொதுவாக நாவல்கள்எழுதுவதற்கும், முக்கியமாகச் சரித்திர நவீனங்கள் எழுதுவதற்கும் சட்ட திட்டங்கள் ஏற்பட்டிருக்கவில்லை. (அப்படி ஏற்பட்டிருந்தாலும் அவற்றை நான் படித்ததில்லை.) ஒவ்வொரு ஆசிரியரும் தமக்குரிய முறையை வகுத்துக் கொண்டு எழுதுகிறார்கள் "என்கிறார். இது, படைப்புக்கும் இதழியல் எழுத்துக்குமிடையிலான அவரது ஊசலாட்டம் என்றேன்.


பேராசிரியர் முகம் வாடியது . அவர் விவாதத்தைத் தொடர விரும்பவில்லை. நானும் வருந்தினேன். 


அவர் இல்லம் கடந்துதான் எங்கள் இல்லத்திற்குச் செல்லவேண்டும். கல்லூரியிலிருந்து நேராக அவரது இல்லத்திற்குச் சென்று மன்னிக்குமாறு வேண்டினேன். அவர் பொருட்படுத்தாதுபோல் , சுவையான காப்பி  தந்தார். அருந்தி இல்லம் திரும்பினேன்.


இப்போது கல்கிக்கு ஆதரவாக வாதாட மிகப்பெரிய இலக்கியக் கோட்பாட்டாசான் வழக்கறிஞராக வாய்த்திருப்பது கல்கியின் உம்மைப் பயன்.

No comments:

Post a Comment

வள்ளுவன் கள்வன்*

 வள்ளுவன் கள்வன்* ————————————--- காமம் என்பது பழந்தமிழில் காதலைக் குறித்தது. திருக்குறள் மூன்றாம் பாலின் சொல்லாட்சி எண்ணிக்கையில் வாக்கெடுப...