Saturday, November 27, 2021

புதுமனை புகுவிழா

புதுமனை புகுவிழா 

சடங்குமுறைகள்

 


                                                பாவலர் ச.பாலசுந்தரம்


பதிப்புரை

அப்பா ஆயிரக்கணக்கான திருமணங்கள் நடத்திவைத்திருக்கிறார்கள். விதிவிலக்காக, அவர் புதுமனை புகுவிழாவை நடத்தவேண்டிய நெருக்கடி ஒன்று வந்தது:

தஞ்சாவூர், பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் திரு. இரத்தினகிரி அவர்கள்  ஒரு நாள் மாலை எங்கள் இல்லத்திற்கு வந்தார் ;அப்பா புதுமனை புகுவிழா ஒன்றை மறுநாள் விடியலில் நடத்தி வைக்க வேண்டும் என்றார்.

சிங்கப்பூரில் வாழும் அவர் தங்கையார் தஞ்சையில் ஒரு திருமண அரங்கைக் கட்டினார். கட்டுமானம் முழுதும் திரு. இரத்தினகிரி அவர்கள் பொறுப்பில் நிறைவேறியது. புகுவிழா சடங்குகளுடன் நிகழவேண்டுமென்பது தங்கை விருப்பம்.நல்லநாளும் குறிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுவிட்டது.திரு. இரத்தினகிரி அவர்களுக்குச் சடங்குகளில் உடன்பாடில்லை , அதைவிடவும்  அவற்றைப் பிராமணரை வைத்து நடத்துவதை அவரால் கற்பனையில் கூட அனுமதிக்க இயலாது. எனவே ஒதுங்கியிருக்க முடிவு செய்தார்.

தங்கைக்கு ஓர் இக்கட்டான நிலை.

சிங்கையில் இசுலாமியர், சீனர் முதலியோர்க்குப் புதுமனை புகுவிழா மரபுகள் உள்ளன. அம்மரபுகள் அவர்தம் பண்பாட்டில் தோய்ந்தவை.  நிலைப் படங்களாக இருந்த நிலைமாறி இயங்கு படங்களாகச் சடங்குகள் பதிவுசெய்யப்படும் காலமும் வந்துவிட்டது. தங்கை சிங்கை செல்லும்போது புகுவிழாப் பதிவுகளுடன் செல்லவில்லையெனில், தமிழர்க்குப் பண்பாட்டு மரபில்லை என்றாகிவிடக்கூடும்.

மறுபுறம், முற்று முழுதாய்ப் பொறுப்பெடுத்துக் கட்டுமானத்தை நிறைவேற்றிய அண்ணன் இல்லாமல் விழா நடத்தவும் மனம் இடந்தரவில்லை.பிராமணர் இல்லாமல், சங்குகளுடன் விழா நடத்தலாம் எனஒரு சமரசம் எட்டப்பட்டது.

அதன்படி நடத்த, அப்பாவை அணுகி நிலைமையை விவரித்தார் திரு. இரத்தினகிரி.இந்த உரையாடலின்போது நான் உடனிருந்தேன்.அப்பா சற்றே தயங்கினாலும் நிலையுணர்ந்து , ஏற்றுக்கொண்டு,இரவே, நடைமுறையில் இருந்த வைதிக மாதிரியைக் கொண்டு   சடங்கு முறைமையொன்றைத் தொகுத்து ஒரு தாளில் குறித்துக்கொண்டு, மறுநாள் சென்று நடத்திவைத்தார்.

பழைய கோப்புகளைத் தூசிதட்டியபோது பாக்களோடு கூடிய கையகலக் குறிப்பேடு கிடைத்தது. பின்னர் விரித்தெழுதியது போலும். பேரளவு முழுமை காணப்படுகிறது.திருமுறை, (ஓரளவு)திவ்வியப் பிரபந்தப் பாக்களைக் கொண்ட தமிழ் முறை என்று சொல்லலாம். 

திருமண முறைகள் பற்றிய அப்பாவின் கருத்தை இங்குச் சொல்லவேண்டும்.சில  நடைமுறைகள் சடங்குகள் முதலியவற்றுடன் கூடிய ஒரு நிகழ்வாகத் திருமணம் நினைவில் பதிய வேண்டுமென்பார்;திருமணத்தைப் பரப்புரை மேடையாக்கக் கூடாதென்பார். வைதிகத் திருமண முறையிலிருந்து மாறிய காலகட்டத்தில் சீர்திருத்த , தமிழ் மணம் பற்றி அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது.அதன் பின்னணியில் கொள்கை இருந்தது. அவற்றை விளக்க நேர்ந்தது. புதிய மணமுறை பரவலாகி இயல்பாக ஏற்கப்பெற்ற நிலையில் எந்தப் பரப்புரையும் தேவையில்லை என்பார்.

ஒரு முறை, "தமிழ்த் திருமணச் செய்முறையை விளக்கி எழுதுங்க ளேன்" என்றேன்.

" ஏற்கெனவே இருந்த வைதிக மணமுறைகளிலிருந்து மாறியிருக்கிறோம்.வைதிக முறையும் இடையில் வந்ததுதான்.இப்போதைய ' தமிழ் ' மணமுறையும் மாறலாம். இதை எழுதி எந்திரமயமாக நிலைநிறுத்த வேண்டியதில்லை" என்றார்

ஆனாலும், இக்கையேட்டில் செய்முறைகளைச் சற்று விரிவாக எழுதியிருக்கலாம் என்று தோன்றியது.

                                                                                                                    பா.மதிவாணன்

                                                                                                                          23.11.2021


புதுமனை புகுவிழா

சடங்கு முறைகள்


1.மேடை -விநாயகர்-அம்மையப்பர்-அமைத்தல்

2.ஓம குண்டம் - குத்துவிளக்கு அமைத்தல் -மணல் - உமி - சமித்து

3.நவதானியம் சூழ அமைத்தல்- உரிய பூசனைப் பொருள்களை அணுக்கமாக வைத்திருத்தல்

4.பசுவும் கன்றும் ஆயத்தம் செய்து வைத்தல்

5.மனைக்குரியவர்களை அமரச்செய்துவிளக்கேற்ற வைத்துப் பூசனை தொடங்குதல் – மங்கலவாச்சியம் - கோமியம்

6.விநாயகர்- அம்மையப்பர் வழிபாடு செய்து மனைக்கு உரியவர்களைக் கொண்டு குடநீரையும் கோசலத்தையும்  தெளித்துத் தூய்மை செய்யச் சொல்லுதல் - பாடல் மந்திரம்

7. மனைக்கு உரியவர்களைக் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்து வரச் செய்தல் -  மங்கல மகளிர் ஐந்து குடங்களில்நீரும் வரிசைப் பொருள்களும் ஏந்திவர, பசுவும் கன்றும் மங்கல வாச்சியத்துடன் வரச் செய்தல்

8. பசுவுக்கு மாலையிட்டு ஆரத்தியெடுத்து முறையாக  உட்புகச் செய்தல்     மேடையில் நீர்க் குடங்களையும் வரிசைப் பொருள்களையும் வைக்கச் செய்தல் -பாடல் மந்திரம்

9. மனைக்கு உரியவர்களைக் கிழக்கு நோக்கி அமர்த்தி, சம்பந்தியாரை மாலை அணிவிக்கச் செய்து புத்தாடை கொடுத்து உடுத்திவரச்  செய்தல் - மந்திரப் பாடல்

10. வேள்வித்தீ வளர்த்து  மந்திரம் ஓதல் மனைக்கு உரியவர்களை நெய் வார்க்கச் செய்தல் - வேள்விக்குப் பின் உள்ளறையில் விளக்கேற்றச் செய்தல். பெரியோரை வழிபடச் செய்தல் - பசுவுக்கு வாயுறை தரச் செய்தல்

 11.பாலுக்கு வழிபாடு இயற்றி , அடுப்பிற்கு அலங்காரம் செய்யச் சொல்லி வேள்வித்தீயில் தீ மூட்டி காய்ச்சச் சொல்லுதல் - உரியவர் முதலில் அருந்த பின் எல்லோருக்கும் வழங்கல்

 12.கட்டிடக் கலைஞர்களுக்கு மரியாதை

 13.ஆசிரியனுக்கு மரியாதை செய்து  ஆசி பெறச் சொல்லுதல்

 14.ஆரத்தி எடுத்துக் கண்ணேறு கழித்தல்-எலுமிச்சம் பழத்தைப் பலியிட்டு வீசுதல்

 15.பூசணிக்காயை முற்றத்தில் கட்டச் செய்தல்

 16.மொய் எழுதுதல் முதலிய சிறப்புச் செய்தல்










பொருள்கள்


மஞ்சள் ( சாந்து விரவி)

குங்குமம்,திருநீறு

சந்தனம், விடு பூ ,சரம் ,மாலை

தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, 

எலுமிச்சம் பழம்

சூடம் ,சாம்பிராணி, பத்தி, திரிநூல்

நவதானியம், உப்பு ,கல்கண்டு,சீனி

நெய், எண்ணெய் ,பால், கோசலம்

பச்சையரிசி

வாழை இலை ,மாவிலை

அருகம்புல் , தருப்பை, சமித்து

பூசணிக்காய்

புதுப்பாய் , சமக்காளம்

செங்கல், மணல் ,

சிறு செம்பு 2, சிறு குடம் 5

தாம்பாளம், தூபக்கால்

குத்துவிளக்கு 2 + 1, மனைப் பலகை

ஆசிரியன், கட்டிடக் கலைஞர்களுக்குப் பரிசு, புத்தாடை












விநாயகர் அகவல் 

சீதக் களபச் செந்தா மரைப்பூம்

பாதச் சிலம்பு பலவிசை பாடப்

பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்

வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்

பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (05)

வேழ முகமும் விளங்குசிந் தூரமும்

அஞ்சு கரமும் அங்குச பாசமும்

நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்

நான்ற வாயும் நாலிரு புயமும்

மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் 

இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்

திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்

சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான

அற்புதம் ஈன்ற கற்பகக் களிறே!

முப்பழ நுகரும் மூஷிக வாகன! 

இப்பொழுது வந்தெமக் கருள்தர வேண்டும்

சித்தி விநாயக சரணம் சரணம்

வித்தக விநாயக விரைகழல் சரணம்

(விநாயகர் அகவலின் முற்பகுதி - இதன் இறுதி மூன்றடிகளில் மாற்றம் , சேர்க்கை)

இல்லத்திற் புகுங்காலை மகளிர் மலர் தூவிவரவேற்றல்

மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள் வஞ்சகர் போயகல 

பொன்னின்செய் மண்டபத்துள்ளே புகுந்து புவனிஎல்லாம் விளங்க

அன்னநடை மடவா ளுமைகோன் அடி யோமுக்கருள் புரிந்து 

பின்னைப்பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே

(சேந்தனார், கோயில், ஒன்பதாந்திருமுறை)

கோயிலிலிருந்து மங்கலப் பொருள்  சீர்வரிசைகளுடன் மனைக்குரியவர் மங்கலப் பெண்டிர் ஐவர் நீர்க்குடத்துடன் பசுவொடுங்கன்றொடும் வருதல்.  மலர்தூவிவரவேற்றல். கோசலங்கொண்டு தெளித்து மனைக்குரியவர் தூய்மை செய்தல்.



தலைமக்கன் உள்ளேவந்தபின்  திருவுடையார் வாழ்த்திவரவேற்றல் 

நல்குரவும் இன்பமும் நலங்கள் அவையாகி 

வல்வினைகள் தீர்த்தருளும் மைந்தனிடம் என்பார் 

மல்கும் அடியார்கள் படியார இசை பாடிச்

செல்வ மறையோர்உறை திருப்புகலி யாமே (திருஞானசம்பந்தர், சீர்காழி)

அமர்தல்

ஒளிவிளக்கின் முன் தலைமக்களைக் கிழக்கு நோக்கி அமரச்செய்து வழிபாடு செய்யச் செய்தல்:

ஆசிரியன் வணக்கம் : ஐந்து கரத்தனை யானை முகத்தனை

                                           இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை

                                            நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்

                                           புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே (விநாயகர் காப்பு, திருமந்திரம்)

கோள் வழிபாடு           : உருவளர் பவளமேனி யொளிநீ றணிந்து 

                                                உமையோடும்   வெள்ளை விடைமேல்

                                            முருகலர் கொன்றைதிங்கண் முடிமே லணிந்தென் 

                                                    உளமே  புகுந்த அதனால்

                                            திருமகள் கலையதூர்தி செயமாது பூமி

                                                    திசைதெய்வ மான பலவும்

                                            அருநெதி நல்லநல்ல வவைநல்ல நல்ல

                                                     அடியா ரவர்க்கு மிகவே (திருஞானசம்பந்தர், கோளறுபதிகம்)

குடநீர் தெளித்தல்         : ஈறான கன்னி குமரியே காவிரி

                                             வேறா நவதீர்த்த மிக்குள்ள வெற்பேழுள்

                                              பேறான வேதா கமமே பிறத்தலான்

                                               மாறாத தென்திசை வையகஞ் சுத்தமே

                                                      (திருமந்திரம், ஒன்பதாம் தந்திரம், பொற்றில்லைக்கூத்து)

மந்திரம்                             : மந்திரம் நான்மறை யாகி வானவர்

                                               சிந்தையுள் நின்றவர் தம்மை ஆள்வன

                                               செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு

                                               அந்தியுள் மந்திரம் ஐந்தெழுத் தாமே

                                                      (திருஞானசம்பந்தர், பஞ்சாக்கரத் திருப்பதிகம்)


தலைமக்களை              சிறையார் வண்டும் தேனும் விம்மு செய்ய மலர்க் கொன்றை

அமரச்செய்து...             மறையார் பாடல் ஆடலோடு மால் விடை மேல் வருவார

                                                 இறையார் வந்தென் இல்புகுந்தென் எழில்நலமும் கொண்டார்

                                              கறையார் சோலைக் கானூர் மேய பிறையார் சடையாரே

                                                   (திருஞானசம்பந்தர், திருக்கானூர் )

                                                 

மாமன் மாமி

புத்தாடை வழங்கல்        :பொன்னும் மெய்ப்பொருளும் தருவானைப்

                                                            போகமும் திருவும் புணர்ப்பானைப்

                                              பின்னை என் பிழையைப் பொறுப்பானைப்

                                                              பிழையெலாம் தவிரப் பணிப்பானை

                                               இன்ன தன்மையன் என்றறிவு வொண்ணா 

                                                             எம்மானை, எளி வந்த பிரானை,

                                                அன்னம் வைகும் வயற்பழனத்தணி 

                                                              ஆரூரானை, மறக்கலும் ஆமே? (சுந்தரர், திருவாரூர்)


பெற்றோரை                    அப்பன்நீ அம்மைநீ ஐய னும்நீ

வணங்கச்                                 அன்புடைய மாமனும் மாமி யும்நீ

செய்தல்                            ஒப்புடைய மாதரும் ஒண்பொரு ளும்நீ

                                                      ஒருகுலமும் சுற்றமும் ஓரூ ரும்நீ

மாமன் மாமியை              துய்ப்பனவும் உய்ப்பனவுந் தோற்று வாய்நீ

அவையோரை                            துணையாயென் நெஞ்சந் துறப்பிப் பாய்நீ

வணங்கச் செய்தல்           இப்பொன்நீ இம்மணிநீ இம்முத் து(ம்)நீ   

                                                         இறைவன்நீ ஏறூர்ந்த செல்வன் நீயே (திருநாவுக்கரசர்)



திருவிளக்கு                        திருவமர் தாமரை சீர்வளர் செங்கழு நீர்கொணெய்தல்

வழிபாடு, பூசனை            குருவமர் கோங்கங் குராமகிழ் சண்பகங் கொன்றைவன்னி

                                                மருவமர் நீள்கொடி மாட மலிமறை யோர்கணல்லூர்

                                                 உருவமர் பாகத் துமையவள் பாகனை யுள்குதுமே 

                                                        (திருநாவுக்கரசர், திருநல்லூர்)



மலரிட்டு                          நாறு மல்லிகை கூவிளஞ் செண்பகம்

வணங்கச்                          வேறு வேறு விரித்த சடையிடை

செய்தல்                            ஆறு கொண்டுகந் தான்திரு மீயச்சூர்

                                             ஏறு கொண்டுகந் தாரிளங் கோயிலே.

                                                    (திருநாவுக்கரசர், திருமீயச்சூர்)



ஆசிரியன்                  களித்துக் கலந்ததொர் காதற் கசிவொடு காவிரிவாய்க்

வாழ்த்து                      குளித்துத் தொழுதுமுன் னின்றவிப் பத்தரைக் கோதில்செந்தேன்

                                       தெளித்துச் சுவையமு தூட்டி யமரர்கள் சூழிருப்ப

                                       அளித்துப் பெருஞ்செல்வ மாக்குமை யாற னடித்தலமே

                                              (திருநாவுக்கரசர், திருவையாறு)



பாரவன்காண் பாரதனிற் பயிரா னான்காண்

    பயிர்வளர்க்குந் துளியவன்காண் துளியில் நின்ற

நீரவன்காண் நீர்சடைமேல் நிகழ்வித் தான்காண்

    நிலவேந்தர் பரிசாக நினைவுற் றோங்கும்

பேரவன்காண் பிறையெயிற்று வெள்ளைப் பன்றிப்

    பிரியாது பலநாளும் வழிபட் டேத்தும்

சீரவன்காண் சீருடைய தேவர்க் கெல்லாஞ்

    சிவனவன்காண் சிவபுரத் தெஞ்செல்வன் தானே

                                        (திருநாவுக்கரசர், திருச்சிவபுரம்)



எழுமைக்கும் எனதாவிக்கு இன்னமுதத்தினை எனதாருயிர்

கெழுமிய கதிர்ச்சோதியை மணிவண்ணனைக் குடக்கூத்தனை

விழுமிய அமரர் முனிவர் விழுங்கும் கன்னற்கனியினைத்

தொழுமின் தூய மனத்தராய் இறையும் நில்லா துயரங்களே (நம்மாழ்வார்)



பால் காய்ச்ச ஆணையிடல்

செந்நெல் அரிசி சிறு பருப்புச் செய்தஅக் காரம் நறுநெய் பாலால்

பன்னிரண் டுதிரு வோணம் அட்டேன் பண்டும் இப்பிள் ளைபரி சறிவன்

இன்ன முகப்பன்நா னென்று சொல்லி எல்லாம் விழுங்கிட்டுப் போந்து நின்றான்

உன்மகன் தன்னை யசோதை நங்காய் கூவிக் கொள்ளாய் இவையும் சிலவே.

(பெரியாழ்வார் திருமொழி)

பாலைக் கறந்து அடுப்பேற வைத்து

   பல்வளையாள் என் மகளிருப்ப

மேலையகத்தே நெருப்பு வேண்டிச் சென்று

   இறைப்பொழுது அங்கே பேசி நின்றேன்

சாளக்கிராமமுடைய நம்பி

   சாய்த்துப் பருகிட்டுப் போந்துநின்றான்

ஆலைக் கரும்பின் மொழியனைய 

    அசோதைநங்காய் உன்மகனைக் கூவாய்!

                                 (பெரியாழ்வார் திருமொழி)

பால் பொங்குக   

பொங்குக உலையே பொங்குக பாலே

பொங்குக பொருளே பொங்குக இன்பம்

தங்குக வளமே தழைக நல்லறமே

பொங்குக இறைவன் அருள் நிறை புகழே.

வாழ்த்து

வான்முகில் வழாது பெய்க

        மலிவளம் சுரக்க மன்னன்

கோன்முறை அரசு செய்க

        குறைவிலாது உயிர்கள் வாழ்க

நான்மறை அறங்கள் ஓங்க

        நற்றவம் வேள்வி மல்க

மேன்மைகொள் சைவ நீதி

        விளங்குக உலக மெல்லாம்.

(கச்சியப்பர், கந்தபுராணம்)

பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்,

நலியும் நரகமும் நைந்த நமனுக்கிங் கியாதொன்று மில்லை,

கலியும் கெடும்கண்டு கொண்மின் கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்,

மலியப் புகுந்திசை பாடி யாடி யுழிதரக் கண்டோம் (நம்மாழ்வார், திருவாய்மொழி)





வேள்வி மந்திரம்

மந்திர நான்மறையாகி வானவர்  

சிந்தையுள் நின்று அவர் தம்மை ஆள்வன 

செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு 

அந்தியுள் மந்திரம் அஞ்செழுத்துமே¹


நமச்சிவாய வாஅழ்க! நாதன் தாள் வாழ்க!

இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!

கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க!

ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!

ஏகன், அநேகன், இறைவன், அடி வாழ்க!

வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க!

பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய் கழல்கள் வெல்க!

புறத்தார்க்குச் சேயோன் தன் பூம் கழல்கள் வெல்க!

கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க!

சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க!²


ஈசன் அடி போற்றி! எந்தை அடி போற்றி!

தேசன் அடி போற்றி! சிவன் சேவடி போற்றி!

நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி!

மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி!

சீர் ஆர் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி!

ஆராத இன்பம் அருளும் மலை போற்றி!

மான்நேர் நோக்கி மணாளா போற்றி

வான்அகத்து அமரர் தாயே போற்றி

பார்இடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி

நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி

தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி

வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி 

வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி

அளிபவர் உள்ளத்து அமுதே போற்றி

அருவமும் உருவமும் ஆனாய் போற்றி

மருவிய கருணை மலையே போற்றி

ஆளா னவர்கட்கு அன்பா போற்றி

ஆரா அமுதே அருளா போற்றி

பேர் ஆயிரம் உடைப் பெம்மான் போற்றி 

சிந்தனைக்கு அரிய சிவமே போற்றி

மந்திர மாமலை மேயாய் போற்றி

எந்தமை உய்யக் கொள்வாய் போற்றி

ஒழவற நிறைந்த ஒருவ போற்றி

செழு மலர்ச் சிவபுரத்து அரசே போற்றி

புரம்பல எரித்த புராண போற்றி

பரம்பரஞ் சோதிப் பரனே போற்றி

போற்றி போற்றி புயங்கப் பெருமான்

போற்றி போற்றி புராண காரண

போற்றி போற்றி சய சய ³

1. பஞ்சாக்கரத் திருப்பதிகம், ௨ - திருஞான சம்பந்தர்

2. சிவபுராணம் - மாணிக்க வாசகர் (முற்பகுதி மட்டும்)

3. போற்றித் திரு அகவல் - மாணிக்க வாசகர் (இடையிட்டுத் தொகுத்த பகுதி)


                                                        


Sunday, November 21, 2021

'மணிமேகலை'க் காப்பிய மாந்தர் உளவியல் நோக்கில் அணுகும் வாய்ப்புகள்

 தமிழ்க் காப்பிய வரலாற்றினைத் தொடங்கி வைத்தவை சிலப்பதிகாரமும். மணிமேகலையும். பெருங்கதையே முன்னோடி என்னும் வையாபுரிப்பிள்ளையவர்கள் கருத்தை(காவியகாலம், ப.77)  எளிதாய் மறுத்தல் இயலாதெனினும் இலக்கியச்செல்நெறி(Trend) ஒன்றன் முன்னோடியாக, இலக்கியத் தகுதி சான்றவையாக முன்னிற்பன சிலம்பும், சிலம்பைச் சார்ந்த மேகலையுமே எனல் பொருந்தும். மணிமேகலையின் மற்றொரு தனித்தன்மை அதன் கிளைக்கதைப் பன்மையாகும்.

சிலம்பு, மேகலை இரண்டும் இலக்கிய நயஞ்சான்ற தத்தம் பெயர்களாலேயே கற்போரை ஈர்த்துக் களிகொள்ளச் செய்வன. சிலம்பு என்னும் மகளிர் அணி கதையில் திருப்பு முனையாயமைகிறது . மணிமேகலை என்பது மகளிர் அணியாயினும் மணிமேகலா தெய்வத்தான் பெயரமைந்த தலைவியைச் சுட்டிக் காப்பியப் பெயராய் நிற்கிறது.

மணிமேகலையே, இக்காப்பியத்தின் தலைமையும் மைய இழையுமான மாந்தர்; குறிக்கோள் மாந்தர்; காப்பியத்தின் ஒருதனி  முழுநிலை மாந்தர் (Round Character). உணர்ச்சிக் கொந்தளிப்பு, உளப்போராட்டம், குறிக்கோள் வேட்கை முதலியவற்றிடையே ஊசலாடும் மணிமேகலையை ஓரளவு உளவியல் நோக்கில் காணும் வாய்ப்பைச் சீத்தலைச் சாத்தனார் தருகிறார் என்றே சொல்லலாம். 

மாதவி,  வயந்தமாலையிடம் கோவலனுற்ற கொடுந்துயரையும் பத்தினிப்பெண்டிருள்

மாறுபட்ட கண்ணகி வனமுலை திருகி மதுரையைத் தீயழற்படுத்தியதையும், மணிமேகலையை அருந்தவப்படுத்தியதையும் மாதவர் உறைவிடம் புகுந்ததையும் கூறக்கேட்டு, 

வெந்துய ரிடும்பை செவியகம் வெதுப்பக்

காதல் நெஞ்சங் கலங்கிக் காரிகை 

மாதர் செங்கண் வரிவனப் பழித்துப்

புலம்புநீ ருருட்டிப் பொதியவிழ் நறுமலர் 

இலங்கிதழ் மாலையை இட்டுநீ ராட்ட (மலர்வனம் புக்க காதை, 5-10)

மணிமேகலையின்  மென்மை புலனாகிறது.


சோழர் குல இளவரசன் உதயகுமரன் காமங்காழ்க்கொள அவளை  அடைய முயன்று தோற்றுத் திரும்பியபின் மணிமேகலை, தோழி சுதமதியிடம்

கற்புத் தானிலள் நற்றவ உணர்விலள் 

வருணக் காப்பிலள் பொருள்விலை யாட்டியென்

றிகழ்ந்தன னாகி நயந்தோ னென்னாது 

புதுவோன் பின்றைப் போனதென் னெஞ்சம்

இதுவோ அன்னாய் காமத் தியற்கை

இதுவே யாயிற் கெடுகதன் றிறமென

(மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை. 86-91)

கூறும்போது மணிமேகலையின் ஊசலாட்டம் புலனாகிறது. இதனை உளவியல் நோக்கில் விளக்கலாமெனினும் சாத்தனார் முற்பிறப்புணர்வின் தொடர்ச்சியைக் காரணம் காட்டித் தம் பௌத்தக் கருத்துநிலையை நாட்ட முயல்கிறார். முற்பிறவியில் மணிமேகலை இலக்குமி என்னும் பெயரிலும், உதயகுமரன் இராகுலன் என்னும் பெயரிலும் கணவன் மனைவியராய் இணைந்தோராவர். இராகுலனின்அடாத செயலொன்றால் திட்டிவிடம் என்னும் பாம்பு தீண்டி இறந்தான். இலக்குமியும் தீப்பாய்ந்து உயிர் விட்டாள்.  


மணிமேகலை தன் முற்பிறப்புப்பற்றிப் பின்னர்ப் புத்தபீடிகையால் தெரிந்துணர்கிறாள். அதன் பின்னர்க் காயசண்டிகை கணவன் காஞ்சனனால், உதயகுமரன் வெட்டுண்ட கிடந்தபோது,


வைவாள் விஞ்சையன் மயக்குறு வெகுளியின் 

வெவ்வினை யுருப்ப விளித்தனை யோவென

விழுமக் கிளவியின் வெய்துயிர்த்துப் புலம்பி 

அழுதன ளேங்கி அயாவுயிர்த் தெழுதலும்

செல்லல் செல்லல் சேயரி நெடுங்கள் 

அல்லியந் தாரோன் தன்பாற் செல்லல் (கத்திற்பாவை வருவதுரைத்த காதை, 23-28)

என  உணர்ச்சி வயப்பட்டு நெருங்கிய மணிமேகலையைக் கத்திற்பாவை தடுத்து,

தடுமாறு பிறவித் தாழ்தரு தோற்றம்

விடுமாறு முயல்வோய் விழுமங் கொள்ளேல்

 (கந்திற்பாவை வருவதுரைத்த காதை, 33-34)

என மணிமேகலைக்கு, அவளது குறிக்கோளை நினைவுபடுத்துகிறது.  இங்கும் உளவியலை பெளத்தக் கருத்துநிலை விஞ்சி வெளிப்படுதல் காணலாம், 

படிப்படியே, இன்னா செய்தார்க்கும் இனியவே செய்து மன அமைதியுற்று, தத்துவத் திறம்பெற்று, அறிவால் பிற சமயக் கணக்கரை வென்று, நிறைவாகத் தவத்திறம் பூண்டு பவத் திறமறுக என நோற்றுயர்ந்த மணிமேகலை குறிக்கோளின் உச்சத்திற்குச் செல்லக் காணலாம். தொடக்க முதல் மணிமேகலையைப் பௌத்தக் கருத்துநிலை நின்று நகர்த்திச் செல்லும் சாத்தனார், மாந்தர் படைப்பு எனும் இலக்கிய நிலை நின்று நோக்கும்போது பின்னடைவெய்துகிறார். என்றாலும் அவரது கவித்துவத்திறங் காரணமாக உணர்வு நிலைகளை ஓரளவு உளவியற்பாங்கோடு காட்டியுள்ளார் என்றே கூறுதல் வேண்டும்.


பட்டறிவும் பக்குவமும் - சுதமதி, இராசமாதேவி 

மணிமேகலையின் தோழி சுதமதி கதை இருவேறு காதைகளில்(மலர்வனம் புக்க காதை, மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை) இடம்பெறுகிறது.

சண்பை நகரத்துக் கௌசிகள் என்னும் இருபிறப்பாளன் ஒரு மகளாகிய சுதமதி

ஒரு தனி அஞ்சேன் ஓரா நெஞ்சமொடு

ஆரா மத்திடை அலர் கொய்வேன்" (மலர்வனம் புக்க காதை, 31-32) எனத் தனது இளமைக் காலத்தை நினைவு கூர்கிறாள். தனித்து அச்சமற்றிருக்கக் காரணம் அவளது ஓரா நெஞ்சம் எனச் செறிவாகக் காட்டுகிறார் சாத்தனார். பழவினைப் பயத்தால் மாருதவேகன் என்னும் வித்தியாதரனோடு பிழைமணம் எய்தி, இந்திர விழாக்காலத்தில் மகிழ்ந்திருந்த நிலையில், அவன் கைவிட்டு மறைந்துவிடுகிறான். அவள் சமணப் பள்ளியில் தஞ்சம் புகுகிறாள்; தந்தையொடு, அவனது பிச்சையுணவால் உயிர் வாழ்கிறாள்; தந்தையை மாடுமுட்டியபின் சமணர் கைவிட, பௌத்த மாதவர் உறைவிடத்தில் தஞ்சம் புக்கு மாதவிக்குப் பணிபுரிந்து மணிமேகலை தோழியாகிறாள்; இந்தப் பட்டறிவினால் உலகியலுணர்ந்து மணிமேகலையை எச்சரிக்கையுடன் அழைத்துச் செல்கிறாள். கட்டற்ற வாழ்க்கை விடுத்து, கட்டுற்றுப் பிறர்க்கும் வழிகாட்டும் அளவுக்கு முதிரும் மாந்தராகச் சாத்தனார் சுதமதியைப் படைத்துள்ளார். 

சுதமதி கதை சுருக்கமானதெனின், இராசமாதேவி மனமாற்றம் மிகச் சுருக்கமானதெனலாம். சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக்கிய மணிமேகலைபால் ஈடுபாடு கொள்வதும், மகனைக் கொல்லக் காரணமானவள்  எனக்கருதி மணிமேகலைக்குக் கொடுமை இழைப்பதும், மணிமேகலை தன் தவ வலிமையால் மீளக்கண்டு

செய்தவத் தாட்டியைச் சிறுமை செய்தேன்  

என்மகற்கு உற்ற இடுக்கண் பொறாது  

பொன்நேர் அனையாய் பொறுக்கென்று அவள்தொழ(சிறைவிடு காதை,64-66) யாவும்  மிக விரைந்து நடந்தவிடுகின்றன. கதைப் போக்கில் வேகம் காணப்படுகின்றதேயன்றி உளவியல் நுட்பமில்லை.


 ஒருநிலை மாந்தர்(Flat Character) 

 

 தீவகச் சாந்தி செய்தரு நன்னாள் 

மணிமே கலையொடு மாதவி வாராத் 

தணியாத் துன்பம் தலைத்தலை மேல்வரச்

சித்திராபதிதான் செல்லலுற் றிரங்கி, 

வயந்த மாலையை வெருகெனக் கூஉய்ப் 

பயங்கெழு மாநகர் அலர்எடுத் துரை (ஊரலர் உரைத்த காதை, 3 -9)

என்கிறாள் மாதலியின் தாய் சித்திராபதி. மலர் கொய்யக் சென்ற மணிமேகலையை வந்து புறஞ்சுற்றிய கம்பலை மாக்கள்

அணியமை தோற்றத் தருந்தவப் படுத்திய 

தாயோ கொடியன் தகவிலள் (மலர் வனம் புக்க காதை. 149-150)எனக்  கூறுவதாகச் சமூக உளவியல்பைப் புலப்படுத்துகிறார் சாத்தனார். 

மணிமேகலை தவநெறியில் மேம்பட்டுப்  பசிப்பிணி தீர்க்கும் பெரும்பணியில் ஈடுபட்ட நிலையிலும் சித்திராபதி கணிகையர் இயல்புகளும் செயல்களும்

துறவுநெறிக்கு இயையாதன எனக்கொதித்து, உதயகுமரன் மூலம் கணிகையர்

குலத்தொழிற்படுத்துவேன் எனச்  சூளுரைத்து உதயகுமரனைத் தூண்டிவிடுகிறாள். 


சிலப்பதிகாரந் தொட்டுத் தொடரும் ஒருநிலை மாந்தராக  மாதவியின் தாய் சித்திராபதியைக் காணலாம். வகைமாதிரி(Typical)    சமூக உளவியல் நோக்கில் காணத்தக்க வரலாற்று வகைமாதிரி(Typical)  சித்திராபதி எனவும் கூறுதல் தகும்.இருபதாம் நூற்றாண்டின் நவீனத் தமிழ்ப் படைப்புகளிலும் சித்திராபதி வகையிலான மாந்தரைக் காண இயல்வது, சாத்தனாரின் இலக்கியத்துள் நிகழ்ந்த சீரதிருத்தம் சமூக அளவில் வெற்றி பெறாததைக் காட்டுகிறது. கு.ப.ராஜகோபாலனின்  தனபாக்கியத்தின் தொழில், குந்துமணி  ஆகிய கதைகளிலும், தி. ஜானகிராமனின் ரசிகரும் ரசிகையும் முதலிய கதைகளிலும்

தேவதாசி மரபினராகிய தாயர், தம் பெண் மக்கள் குலத்தொழில் செய்தல் வேண்டும்

என வற்புறுத்துவதையும், மாறாகப் பெண்மக்கள் விலகிவிட விரும்புதலையும்

காணமுடிகிறது. கொத்தமங்கலம் சுப்புவின் தில்லானா மோகனாம்பாள்

இவ்வகைப்பட்ட வெகுசன நாவலாகும்.


மணிமேகலைக் காப்பியத்தின் மற்றொரு ஒருநிலை மாந்தர்உதயகுமரன்.  காப்பியத் தொடக்கத்தில், மணிமேகலைமேல் மாறாக் காமம் மீதூர அவளை அடையத் துடித்த உதயகுமரனுக்கும் மறுத்த சுதமதிக்கும் நிகழும் உரையாடல்: 

குருகுபெயர்க் குன்றங் கொன்றோ னன்னநின் 

முருகச் செவ்வி முகந்துதன் கண்ணால் 

பருகா ளாயினிப் பைந்தொடி நங்கை 

ஊழ்தரு தவத்தள் சாப சரத்தி 

காமற் கடந்த வாய்மைய ளென்றே 

தூமலர்க் கூந்தற் சுதமதி யுரைப்பச்

சிறையு முண்டோ செழும்புனல் மிக்குழி 

நிறையு முண்டோ காமங் காழ்க்கொளின்

செவ்விய ளாயினென் செவ்விய ளாகென 

அவ்விய நெஞ்சமோ டகல்வோ னாயிடை 

(மணிமேகலையை தெய்வம் வந்து தோன்றிய காதை, 13-22) மணிமேகலை தவத்தள், சாபசரத்தி, வாய்மையளெனக் கேட்டபின்னும் அவன் மனம் மாறவில்லை.

பின்னரும் சித்திராபதியால் தூண்டப்பட்டு மணிமேகலையைத் தேடி வருகிறான்; சம்பாபதித் தெய்வத்திடம் 'மணிமேகலை ஒழியப் போகேன்' எனச் சூளுரைக்கிறான். மேலும் " ... அத் தோட்டார் குழலியை/ மதியோ ரெள்ளினும் மன்னவன் காயினும் என் பொற்றேரேற்றிக்" (உதயகுமரனை வாளாலெறிந்த காதை. 13-16)) கொணர்வேன் என்கிறான்.

உதயகுமரன் காமத்தால் உந்தப்பட்டு நள்ளிரவில் சம்பாபதி கோயிலுள் நுழைந்ததைச் சாத்தனார்

ஊர்துஞ்சு யாமத்து ஒருதனி எழுந்து  

வேழம் வேட்டுஎழும் வெம்புலி போலக்  

 கோயில் கழிந்து வாயில் நீங்கி  

ஆயிழை இருந்த அம்பலம் அணைந்து  

வேக வெந்தீ நாகம் கிடந்த  

போகுஉயர் புற்றுஅளை புகுவான் போல  

ஆகம் தோய்ந்த சாந்துஅலர் உறுத்த  

 ஊழ்அடி இட்டுஅதன் உள்அகம் புகுதலும்

 (உதயகுமரனை வாளாலெறிந்த காதை , 94-101)

என்று படம்பிடித்துக் காட்டும் போது அவனது உணர்வின் தீவிரத்தை உணர்த்த உலமைகளின் உதவியேற்கிறார் சாத்தனார் ;  புற நடத்தைகளால் அவனது அகம் புலப்படுத்துகிறார். இவ்வாறு புகுந்த உதயகுமரன் விஞ்சையனால் கொல்லப்படும்வரை குணத்தை மாற்றிக்கொள்ளவேயில்லை.

மணிமேகலை மாந்தர்

1.துச்சயன்                        31.காகந்தி                              61. பரதன்               

2. அசலன்                          32. காஞ்சனை                      62. பிரச்சோதனன்

3. இரவிவர்மன்                 33.காயசண்டிகை                63. பிரமதருமன்

4. அத்திபதி                         34. கிள்ளிவளவன்             64.பீலிவளை

5. நீலபதி                              35.கேசகம்பளர்                   65. வளைவணன்

6. இராகுலன்                       36.கோதமை                         66.புண்ணிய ராசன்

7. அபஞ்சிகன்                      37.கோமுகி                            67. பூதி

8. சாலி                                  38. கோவலன்                       68.மண்முகன்

9. அமர சுந்தரி                     39.கௌசிகன்                      69.மணிமேகலை

10. பூமி சந்திரன்                  40. சங்க தருமர்                   70. மதுராபதி

11. அமுத பதி                           41. சந்திர தத்தன்              71. மருதி

12. தாரை                                 42. சனமித்திரன்               72. மாசாத்துவான்

13. வீரை                                  43. சாது சக்கரன்               73. மாதவி

14. இலக்குமி                          44. சாதுவன்                       74. மாருதவேகன்

15. அறவணர்                         45. சார்ங்கலன்                  75. மாவண்கிள்ளி

16. ஆதிரை                              46. சித்திராபதி                 76. மாரன்

17. இமயவரம்பன்                   47. சிந்தாதேவி                 77. பௌகந்தராயணன்

       நெடுஞ்சேரலாதன்         48.சிருங்கி                                யூகியந்தணன்

18. இராசமாதேவி                   49. சீதரன்                            78. வயந்தமாலை

19. இளங்கிள்ளி                       50. சீர்த்தி                           79. வாசந்தவை

20. உதயகுமரன்                       51. சுதமதி                           80.வாச மயிலை

21. எட்டிகுமரன்                          52. செங்குட்டுவன்           81. விசாகை

22. ககந்தன்                                53. தருமசாவகன்             82. விரிஞ்சி

23. காந்தன்                                 54. தருமதத்தன்                83. விருச்சிகன்

24. கண்ணகி                              55.திேலோத்தமை           (வையாபுரிப்பிள்ளை, ப.111-113)

25. கபிலை                                   56. தீவதிலகை

26. சம்பாவதி                                57. தூங்கெயிலெறிந்த

27. மயன்                                              தொடித்தோட் செம்பியன்

28. துவதிகன்                                58. தொடுகழற்கிள்ளி

29. கரிகால்வளவன்                     59. நெடுஞ்செழியன்

30. கவேரர்                                       60. நெடுமுடிக்கிள்ளி


இம்மாந்தருள்  எவரும் உளவியல் தன்மை தோன்றப் புனையைப் பெற்றிலர் என்றே

கூறவேண்டும்.பௌத்தக் கருத்துநிலை சான்ற கதைச்சுவையே மணிமேகலையில் விஞ்சிநிற்கிறது.

 மணிமேகலை தவிரப் பிற மாந்தர் யாவரும் - சற்றே விதிவிலக்காகச் சுதமதி,அரசமாதேவி, சித்திராபதி, உதயகுமரன் ஆகியோரைச் சொல்லலாம்   உளவியல் நோக்கில் காணற்குரியரல்லர். 

மாந்தர் படைப்பை விடவும்பௌத்தக் கருத்துநிலைக்கு முதன்மை தந்தமையால் கவித்திறமுடையரேனும் சீத்தலைச் சாத்தனார் சிலப்பதிகாரம் போன்ற நெஞ்சையள்ளும் காப்பியத்தை ஆக்க இயலவில்லை.சமூகச் சீரதிருத்த இலக்கியமாக  மணிமேகலைக்காப்பியம் மாண்புற்றுத் திகழ்கிறது என்பதில் ஐயமில்லை.

முதன்மை ஆதாரம்

சீத்தலைச்  சாத்தனார்,2009, மணிமேகலை (உரையாசிரியர்கள்: நாவலர் ந.மு.வேங்கடசாமிநாட்டார். ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை), இளங்கணிபதிப்பகம், சென்னை.

துணைமை ஆதாரங்கள்

1.கோவிந்தன், புலவர் கா., 1973,சாத்தன் கதைகள், வள்ளுவர் பண்ணை,சென்னை.

 2.வையாபுரிப்பிள்ளை, எஸ், 1991 காவிய காலம், நூற்களஞ்சியம்: தொகுதி - 3, வையாபுரிப்பிள்ளை நினைவு மன்றம், சென்னை








இலக்கண மறுப்பு என்னும் பொறுப்பின்மை

வட்டார வழக்குதான் மக்கள் மொழி .அதுதான் உயிருள்ளது என்று மிகையழுத்தம் தரும் குழு ஒன்று விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்படித்தான் எழுத...