Sunday, March 3, 2024

இலக்கண மறுப்பு என்னும் பொறுப்பின்மை

வட்டார வழக்குதான் மக்கள் மொழி .அதுதான் உயிருள்ளது என்று மிகையழுத்தம் தரும் குழு ஒன்று விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்படித்தான் எழுத்துச் சீர்திருத்த, சேர்திருத்த, இலக்கண மறுப்புக் குழுக்களும். 

தமிழில் அரசாணை வழி எழுத்துச் சீரைத் திருத்தியது தவறான முன்னுதாரணம்.

தமிழில் கிரந்த வடிவங்கள் சில புழங்குகின்றன ; மிகுதியாகப் புழங்குகின்றன. ஆனாலும் அவை  அயல் வரவு என்கிற நிலையில்தான் கற்பிக்கப்படுகின்றன. அவற்றையும் வேறுபல கிரந்த வடிவங்களையும் தமிழில் சேர்க்க வேண்டுமென்கிறவர்கள் பேசாமல் தெலுங்கு அல்லது கன்னடத்தை வரித்துக்கொள்வதுதான் நேர்மை. குறைந்தது மலையாளத்தின் பக்கம் போய்விடலாம்.

சங்கத வருக்க எழுத்துகளையும் பிறவற்றையும் ஏற்றபின்னும் - மலையாளத்தை விட்டு விடுவோம் - தெலுங்கும் கன்னடமும் இருவேறு மொழிகளாக இயங்குவது ஏன் ? ஒவ்வொரு மொழிக்கும் அதற்குரிய தனித்தன்மை உண்டு.

மொழி என்பது பயன்படு கருவியாகவும் பண்பாட்டுச் சொத்தாகவும் ஒருசேர இயங்குவது. உள்ளார்ந்து நிகழும் மாற்றங்களையும் பிறமொழி ஆதிக்கத்தால் நேர்ந்த மாற்றங்களையும் காட்டி , வலிந்து மாற்றங்களைத் திணிக்கக் கூடாது. 

பயன்பாடு கருதி ஆங்கிலம் போன்ற அயல் மொழிகளை - அவ்வவற்றின் இலக்கணம் பிறழாமல் - கற்கும்போது ; கற்க முடியும்போது, தமிழுக்கு மட்டும் இலக்கணம் வேண்டாம் என்பது உள்நோக்கமுடையது.



இந்த உள்நோக்கத்துக்கு வரலாற்று, அறிவியல் முலாம் பூசி மருட்டும்போது தாழ்வு மனப்பான்மையுள்ள தமிழ்த் துறையினர் சிலர் ஆமாஞ்சாமி என்கின்றனர்.

இலக்கணம் தமிழ் மொழிக்கு மட்டுமன்று ; உலகத்து மொழி யாவற்றுக்கும் உண்டு. மரபார்ந்த மொழிகள் வெறும் தற்காலப் பேச்சு வழக்கை மட்டுமே கணக்கில் கொள்ளக்கூடாது. தமிழ் போன்ற இரு நிலை ( பேச்சு, எழுத்து) வழக்கு மொழிகளில் எழுத்து வழக்குக்கும் உயிர் உண்டு. 

விதிவிலக்குகள் இருக்கலாம் ; கருத்து வேறுபாடுகள் , விவாதங்கள் இருக்கலாம்,

'கல்த்தாரைக் கல்த்தாரே காமுறுவர் 'என்பது போன்ற - டி.கே.சி. வகையறாக் - குறுக்குச் சால்கள் இருக்கலாம்.

இவை இலக்கண மறுப்பிற்குரிய நியாயங்கள் அல்ல. இலக்கணம் இருப்பதால்தான் இவை உயிர்த்திருக்கின்றன.

இலக்கணம் தெரியாதிருப்பது குற்றமில்லை. மொழிப் பயிற்சி காரணமாக இலக்கணம் தெரியாமலே , மீறியே கூட, தம் நடையில் நுட்பங்களைக் கொணர்ந்த எழுத்தாளர் பலருண்டு.

வானொலி நேர்காணல் ஒன்றில், " தமிழ்'ல எழுதறவாளுக்குத் தமிழ் இலக்கணம் தெரிஞ்சிருக்கணுமா என்ன ?" என்று,போகிற போக்கில் , எதிர்மறையான விடைக்குக் கொக்கிபோடும்  உள் நோக்க வினாவைத் தொடுத்தார் அந்த எழுத்தாள அம்மையார்.

" தெரிந்திருக்கக் கூடாதா என்ன ?" என்று தாமொரு கொக்கியை விடையாக மாட்டினார் ஜெயகாந்தன்.

தமிழ்த் துறையாளர்கள் இலக்கணப் பெருமிதத்தை அணிந்து நின்றிடுக.

[ கொசுறு : சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எனக்கு இலக்கணம் தெரியாது. அதனாலேயே இலக்கண மறுப்புக்குத் தலையாட்டுவது ... தனம்]

No comments:

Post a Comment

இலக்கண மறுப்பு என்னும் பொறுப்பின்மை

வட்டார வழக்குதான் மக்கள் மொழி .அதுதான் உயிருள்ளது என்று மிகையழுத்தம் தரும் குழு ஒன்று விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்படித்தான் எழுத...