Friday, October 30, 2020

பாடல் பெற்ற பறவை!


 பாடல் பெற்ற பறவை!

பத்திமையில் தோய்ந்தவர்கள் பாடல்பெற்ற தலமென்பார்கள். 

எனக்கோ , சான்றோர் செய்யுள்களின் தெய்வம் உணா மா மரம் புள் பறை செய்தி முதலியன பின்னரும் தொடரக் காணும்போது சிலிர்க்கும். என்னளவில் அவைதாம் பாடல் சால் சிறப்பின. இது இலக்கியச் சிலிர்ப்பு! பண்பாட்டுச் சிலிர்ப்பு!

வானம்பாடி (1963) என்னும் படத்திற்குக் கண்ணதாசன் " தூக்கணாங் குருவிக்கூடு

தூங்கக் கண்டான் மரத்திலே ..." என்றொரு பாட்டெழுதினார். 

தூக்கணாங்குருவி , பாடல் பெற்ற பறவை.

கிரியாவின் 'தற்காலத் தமிழ் அகராதி' தற்காலப் பெருவழக்கான  தூக்கணாங்குருவி என்னும் ஒரு வடிவத்தை மட்டுமே தருகிறது. சரியானதுதான்.

சென்னைப் பல்கலை.த் தமிழ்ப்பேரகராதி (TAMIL LEXICON) , 

 தூக்கணங்குரீஇ tūkkanan-kurīi , n. "  தூக்கணங்குரீஇ ... பெண்ணைத் தொடுத்த கூடினும் (குறுந்.374)" - என அகரவரிசையில் வாய்த்த முதற் பதிவைத் தருகிறது. 

உ.வே.சாமிநாதையர் குறுந்தொகைப் பதிப்பை எடுத்து 374 ஆம் பாடலைப் பார்த்தேன். அடடா !

அந்தக் காதலர்கள் பற்றி ஊர் பலவாறு அலர் தூற்றிக்கொண்டிருந்தது. காதலியின் தோழி பெற்றோரிடம் பக்குவமாகத் தெரிவித்தாள் (அறத்தொடு நிற்றல் ) .  காதலன் வீட்டாரும் முறைப்படி  பெண் கேட்டுவந்தனர்.   பெண் வீட்டார்  ஏற்றனர். 

நன்றுபுரி கொள்கையின் ஒன்றா கின்றே

முடங்கல் இறைய தூங்கணங்* குரீஇ 

நீடிரும் பெண்ணை°த் தொடுத்த 

கூடினும்¶ மயங்கிய மையல் ஊரே

(* உ.வே.சா. தரும் பாடம் இதுவே. ° பெண்ணை = பனை .   ¶ கூட்டினும் என்பது பாட்டில் எதுகை நோக்கிக் கூடினும் எனத் திரிந்தது)

வளைந்த சிறகையுடைய தூக்கணங்குருவி உயர்ந்த பெரிய பனையில் அமைத்த கூட்டை விடவும் சிக்கலான பல்வகைக் குழப்பம் கொண்டிருந்த ஊராரும் நன்மை புரியும் மணச் செய்தியால் இப்போது  ஒன்றிய கருத்தினராகிவிட்டனர் - என்கிறது பாட்டு. 

பெரும்பாலும் உயரமான பனையில் கூடு கட்டுவது தூக்கணாங்குருவியின் இயல்பு¹. அந்தக் கூடு சிக்கல் மிகுந்ததாக இருப்பது அதன் தன்மை.

சிக்கலுக்குக் கூட்டின் பின்னல் உவமை; குழப்பத்திற்கு அதன் தொங்கல் உவமை. நுண்பொருளுக்குப் பருப்பொருள் !

சான்றோர் செய்யுள்களில் உவமை , தத்துவ இயலின் பிரமாணமோ  அலங்காரவியலின் அணியோ அன்று. அதுவே  பொருளுமாகி நிற்கும். 'உவமப்பொருள்' என்பார் தொல்காப்பியரும்.

துல்லியம் ! பிற்கால இலக்கியம் எதிலும் காண இயலாத துல்லியம்.இந்தத் துல்லியமே சான்றோர் இலக்கியத் தனித்துவம்!  இந்தத் தனித்துவமே இலக்கிய இன்பம்!

சங்கத் தமிழ் நூல்களின் இன்பம் , 'அடங்கா இன்பம்'  என்றார் பாவேந்தர் பாரதிதாசன். சும்மாவா?






ஐயர்  ' தூக்கணங் குருவியின் கூடு : புறநா.225: 11.' என்று ஒத்த பகுதி பற்றிய குறிப்பையும் தருகிறார்.

'வியத்தகு பெரும்படையும் வீரமும் கொண்ட சோழன் நலங்கிள்ளி இருந்தவரை  அவனுக்கு அஞ்சிப் பிற மன்னர்கள்  வலம்புரிச்சங்கினை  முழக்காமல் தூக்கணங்குருவியின் கூடு போலத் தொங்கவிட்டிருந்தனர். இப்போது, போர் கருதாமல் ,  அவர்களின் பள்ளியெழுச்சிக்காலத்தில் அவை முழங்கும் போதும் , நான் நோகின்றேன் ' என்னும் கருத்தமைந்தது ஆலத்தூர் கிழாரின் கையறுநிலைப் பாட்டு.

இங்கே பருப்பொருளுக்குப் பருப்பொருள் என்கிற நிலையில் தூக்கணங்குருவிக்கூடு உவமையாகிறது. குறுந்தொகை (374)நுட்பத்தை  நோக்கக் குறைந்ததாயினும்  இதுவும் துல்லிய உவமைதான்.

தூங்கு (தல்) = தொங்கு(தல்) - தன்வினை .  தூக்கு (தல்) = தொங்கச் செய்(தல்)- பிறவினை.

" தூக்கணங்குருவி tūkkanan-kuruvi , n.  தூக்கணம் + குருவி.  Weaver bird , Ploceus baya , building hanging nests ; தொங்குங் கூடுகட்டும் குருவி வகை." - சென்னைப் பல்கலை.த் தமிழ்ப்பேரகராதி (TAMIL LEXICON).

கூட்டைத் தொங்குமாறு செய்து வசிக்கும் குருவி, தூக்கணங்குருவி .இது காரணப்பெயர் .

'தூக்கணாங் குருவிக்கூடு தூங்கக் கண்டான் மரத்திலே' என்று செவ்வியல் வழக்குத் திரைத் தமிழில் கண்ணதாசனிடம் உயிர்த்தெழுந்து தன்னை நிறுவிக் கொண்டிருக்கிறது

என்றுமுள தென்றமிழ்!

எப்போது கேட்டாலும் இனிக்கும்.

_________________________________________

1.இறையனார் அகப்பொருள் உரையாசிரியர் 'மடலேறுவேன்' என்ற தலைவனின் அருள் உள்ளத்தைச் சுட்டி , 'உம்மால் இயலுமோ?' எனத் தோழி கூறுவதாக ஒரு பாட்டை எடுத்துக்காட்டியுள்ளார். 

       வெள்ளாங் குருகின் பிள்ளையும் பலவே
        அவையினும் பலவே சிறுகருங் காக்கை
        அவையினும் அவையினும் பலவே குவிமடல்
        ஓங்கிரும் பெண்ணை மீமிசைத் தொடுத்த
        தூங்கணங் குரீஇக் கூட்டுள சினையே .


இதிலும் தூக்கணங்குருவி பனையின் மீது கூடுகட்டுவது கூறப்பட்டுள்ளது.


Wednesday, October 28, 2020

தொல்காப்பிய வியப்பு 2: உறழ் துணைப் பொருளும் ஆய்வுரை நடையும்

 

தொல்காப்பிய வியப்பு 2: உறழ் துணைப் பொருளும் ஆய்வுரை நடையும்

ஆராய்ச்சி மொழிநடை பற்றிச் சில சொல்லவேண்டிய தேவை கருதி, ஆங்கெலிக்கா  எச் . ஹோஃப்மன்  அம்மையாரின்  SIENTIFIC WRITING AND COMMUNICATION-PAPERS , PROPOSALS, AND PRESENTATIONS¹ என்னும் நூலைப் புரட்டிக் கொண்டிருந்தேன். 


அதிலுள்ள, FAULTY COMPARISONS என்னும் பகுதியைப் படித்த போது , அட! என வியந்தேன். நூற்பா முந்துற்றது.

செப்பினும் வினாவினும் சினைமுதற் கிளவிக்(கு)
அப்பொரு ளாகும் உறழ்துணைப் பொருளே " (கிளவியாக்கம்16)

எடுத்துக்காட்டுகளைப் பொறுமையாகப் பார்த்துவிட்டு நூற்பாவின் பொருளுக்குப் போகலாம்.

I.செப்பு
    1) இவள் கண்ணின் இவள் கண் பெரிய ----------சினை - உறழ்ச்சி
    2) இவள் கண் ஒக்கும் இவள் கண் ------------------------௸   - துணை
   
     3) நும் அரசனின்  எம் அரசன் முறை செய்யும்---முதல் - உறழ்ச்சி
     4) எம் அரசனை ஒக்கும் நும் அரசன் ----------------------௸ - துணை

II. வினா
     5) இவள் கண்ணின் இவள் கண் பெரியவோ?-----சினை - உறழ்ச்சி
     6) இவள் கண் ஒக்குமோ இவள் கண்?-------------------௸ - துணை

     7) எம் அரசனின் நும் அரசன் முறை செய்யுமோ?---முதல் - உறழ்ச்சி
     8) எம் அரசனை ஒக்குமோ நும் அரசன்?-------------------௸ - துணை
    
[ எ.கா. 1 & 2 .கண்ணின் = கண்களை விட ;  பெரிய = பெரியவை ; ஒக்கும் = ஒத்திருக்கின்றன .
எ.கா. 3&4 அரசனின் = அரசனை விட ; முறை செய்யும் = முறை(ப்படி ஆட்சி) செய்கிறான் ; ஒக்கும் = ஒத்திருக்கின்றான் . எ.கா. 1-4 இன் பொருள்  5 - 8 க்கும்...]

சேனாவரையர் தந்த எடுத்துக்காட்டுகளை , வசதி கருதி வரிசை மாற்றித் தந்துள்ளேன்.

செப்பு (தல்) - சொல்லுதல், தெரிவித்தலாகிய வாக்கிய வகை (declaration or statement as a sentence type)²
வினா -  வினவுதல் ( தெரிந்த பொருள்தான்)

சினை - உறுப்பு (கண் ஓர் உறுப்பு)
முதல் - உறுப்பை உடைய முழுமை( அரசன் முழுமை-யானவன்)³

உறழ் பொருள் - [ஒன்றுக்கொன்று] மாறுபடக் கூறப்படுவது( சேனா. & நச்.)
துணைப் பொருள்   - ஒப்புமை கூறப்படுவது                                  (              ௸      )

அப்பொருள் - " அவ்வப்பொருட்கு அவ்வப்பொருளே " (என்னும்,  தெய்வச்சிலையார் தரும் பொருள் சுருக்கமும் தெளிவும் உடையது. அதை எடுத்துக்கொள்வோம்)

செப்போ வினாவோ சினையைச் சினையோடு உறழவேண்டும் அல்லது ஒப்பிட வேண்டும் என்பது விதி.

வேறு வகையாகவும் ஒப்பிடல் -  உவமை - இலக்கியங்களில் காணப்படுகின்றனவே!
ஆம். உரையாசிரியர்கள் அவை பற்றிப் பேசாமல் இருப்பார்களா? பேசியிருக்கிறார்கள்.

' அவை அணியியலுள் பெறப்படும் என்றும்,  வழக்கிலும் வருகின்றனவே ? என்பதற்கு அவை உரை என்னும் செய்யுள் ' என்றும் கூறும் சேனாவரையர் விளக்கத்தை மட்டும் மாதிரிக்காகத் தந்து நிறுத்திக்கொள்கிறேன்.

உரையாசிரியர்களிடையிலான கருத்துவேறுபாடுகளும் , அவரவர் கூறும் தொடர்புடைய பிற அமைப்புகளும் காணத்தக்கவைதாம் . இப்போது வேண்டாம். 

ஆங்கெலிக்கா அம்மையாரின் , ஆய்வு நடை  பற்றிய அடிப்படை விதி 22க்குப்
( BASIC RULE 21: Avoid faulty comparisons) போவோம்.  



இளம்பூரணர், கல்லாடனார்,[பெயர் தெரியாத ] ஒருவர் - ஆகிய மூவரும் உறழ், துணை இரண்டையும் உள்ளடக்கிய பொதுச் சொல்லாகப்  பொரூஉ என்பதைக் கொண்டுள்ளனர். இந்தப் பொரூஉதான் comparison.

Faulty comparisons can arise because of ambiguous comparisons and incomplete comparisons.

Ambiguous comparison

👎Example
Our conclusions are consistent with Tamseela et al.(2013)

Comparisons such as this are confusing for the reader, as they compare unlike things.To avoid such Ambiguous Comparisons, make sure that you are comparing like items.

தொல்காப்பியம் " அப்பொருள்" என்று சொல்வது, "like items" எனப்படுகிறது. கீழே அவர் திருத்தமாகத் தரும் எடுத்துக் காட்டில், conclusions  'அப்பொருளா'கிய conclusions உடனேயே ஒப்புக் கூறப்பட்டுள்ளது காண்க:

👍Revised Example
Our conclusions are consistent with the conclusions of Tamseela et al.(2013)

இனி, உறழ் பொருளைப் பார்ப்போம்.

Incomplete comparisons

👎Example
This study tested 24 subjects compare to Menon's study

👍Revised Example
a      This study tested 24 subjects; Menon's study tested only 8 subjects.

b       In this study, the number of subjects tested (24 subjects) was three times that of Menon's    
          study (8 subjects)
         
இங்கு உறழப்படும் 'அப்பொருள்'  number of subjects tested  என்பது.

தொல்காப்பியர் முன்பே சொன்னவற்றைத்தாம் ஆங்கெலிக்கா இப்போது சொல்கிறார் என்று சாதிப்பது என் நோக்கமன்று. ஆறு பகுதிகள் ( Parts)கொண்ட அம்மையார் நூலின் முதல் பகுதியை மட்டும் நுனிப்புல் மேய்ந்த அளவிலேயே பிரமித்தேன்.

ESL( English as a Second Language) advice :
In certain foreign languages , incomplete Comparisons occur often.Avoid these when writing in English என்று விதந்து சுட்டுகிறார் .

தொல்காப்பியம் தெரிந்த ஒருவருக்கு , அம்மையார் கூறும் பொரூஉ ( Comparison ) விவகாரம் புதியதாகத் தோன்றாது.

மறுபுறம்,
தொடக்கநிலை மாணவருக்குப் புரியவைப்பது போன்ற ,  மரபுரையாசிரியர்களின் எளிய, எடுத்துக்காட்டுகள் வழிப்பட்ட புரிதலைக் கடந்து மேம்பட்ட தளத்தில் இந்த நூற்பாவைக் காணவேண்டிய நுட்பத்தை நோக்கி இட்டுச் சென்றிருக்கிறார் அம்மையார்.

- - - - - - - - - - - - - - - - - - - - - -- - - - - - - - - - - - - - - - - - - - - -

1.Angelika H. Hofmann, SIENTIFIC WRITING AND COMMUNICATION-PAPERS , PROPOSALS, AND        PRESENTATIONS, OUP, New York,2010.

2.க.பாலசுப்பிரமணியன் ,தொல்காப்பியச் சொற்பொருளடைவு, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் , 2016.

3. முதல், சினை என்பன ஒப்பீட்டளவிலானவை. இவையெல்லாம் முதல், இவையெல்லாம் சினை என்னும் நிலைத்த வரையறையில்லை.
சாத்தன் - முதல் எனில் , கை - சினை; கை - முதல் எனில் விரல் - சினை.
" முதலும் சினையும் பொருள்வேறு படாஅ
  நுவலுங் காலைச் சொற்குறிப் பினவே " (வேற்றுமை மயங்கியல், 6)
  என்று தொல்காப்பியமே அதனைத் தெளிவுபடுத்துகிறது.

- 8 நவம். 2018 முகநூல் இடுகை இப்போது சற்று விரிவாக...

Tuesday, October 27, 2020

தொல்காப்பிய வியப்பு : கிளவியாக்கமும் கிளீசனும்

 

கிளவியாக்கமும் கிளீசனும்

விளக்க மொழியியல் பயிலத் தரமான அறிமுக நூல்களுள் ஒன்று எச்.ஏ. கிளீசனின் 'An Introduction to Descriptive Linguistics'. அவரது நூலின் ஓரிடம் தொல்காப்பியம் பயின்றோரை வியப்பிலாழ்த்தும்.

சில எடுத்துக்காட்டுகளை முதலில் பார்த்துவிடுவோம்.

' பாடுகிறாள் ' என்பது ஒரு சொல். இது, ' பாடு + கிறு + ஆள் ' என்கிற மூன்று உறுப்புகளைக் கொண்டு அமைந்துள்ளது. மொழியியலார் மூன்று உருபன்களால் (Morphemes) அமைந்தது என்பார்கள் ( மரபிலக்கண நூலாரும் மொழியியலாரும் பகுப்பதில் சில நுட்ப வேறுபாடுகள் உண்டு என்றாலும் ஏறத்தாழ ஒத்துப் போகும்)

பாடு (தல்) - வினை (செயல்)

கிறு - நிகழ்கால இடை நிலை

ஆள் - பெண்பாலைக் காட்டும் விகுதி

' பாடினான் ' என்றால் இறந்த காலம் . ' பாடு + இன் + ஆன் ' என்பதில் இடையில் உள்ள - இன் - இறந்தகால இடைநிலை.  - ஆன்  ஆண்பாலைக் காட்டும் விகுதி. இதில் பாடும் செயலைச் செய்தவன் ஆண்.

ஆக இந்த உறுப்புகள் பொருள் குறிப்பைக் கொண்டவை.

கிறுபாடாள்* (கிறு பாடு ஆள்)

ஆனின்பாடு*(ஆன் இன் பாடு)

என்றோ மாற்றிக்கொள்ள இயலாது. ஒரு சொல்லுக்குள் பகுபத உறுப்புகள்  இறுக்கமான விதிகளால் அமைகின்றன.


அடுத்துச் சொற்றொடரைப் பார்ப்போம்.

இராமன் இராவணனைக் கொன்றான் - என்பது முழுமையான வாக்கியம்.

இராமன் கொன்றான் இராவணனை

இராவணனைக் கொன்றான் இராமன்

இராவணனை இராமன்  கொன்றான்

கொன்றான் இராவணனை இராமன்

கொன்றான் இராமன் இராவணனை 

என்றெல்லாம் தமிழில் வரிசையை மாற்றலாம் . அடிப்படைப் பொருள் மாறாது.

ஆனால் ஆங்கில வாக்கிய அமைப்பு இறுக்கமானது. அது அம்மொழி இயல்பு. தமிழிலும் வாக்கியங்கள் சிலவற்றில் விருப்பம்போல் சொற்களை இடம்மாற்ற இயலாது.(அது நல்ல நூல் ✓ நல்ல நூல் அது ✓  அது நூல் நல்ல ×  நல்ல அது நூல் ×)

இந்தப் பின்னணியோடு கிளீசனிடம் போவோம்.

எச்.ஏ.கிளீசன் , சொல்லுக்குள் உருபன்களின் வைப்பு முறை,வாக்கியத்தில் சொற்களின் வைப்பு முறை ஆகியன பற்றிப் பேசிவிட்டுத் தனித்தனி வாக்கியங்களின் வைப்பு முறையும் கூட உண்டு என்று சொல்கிறார் :

'பொதுவாக , சொற்களைப் போன்ற இறுக்கமான கட்டமைப்புடையவற்றில் வைப்புமுறை கடும் விதிகளுக்குட்பட்டிருக்கும். வாக்கியங்களைப் போன்று நெகிழ்வாகப் பின்னப்பட்டவை கூடுதல் சுதந்திரமுடையவை. ஆனால் நீள் தொடர் வரிசைகளிலும்,     சில வேளை நுட்பமான வகையில்,  வைப்புமுறையில் குறிப்பிட்ட கட்டுப்பாடுகள் உள்ளன.
எடுத்துக்காட்டாக , 'ஜான் வந்தான். அவன் போனான்.' என்னும் வாக்கியங்கள், [வருதல், போதல் ஆகிய] இரண்டையும்  செய்தவன் ஜான் என்பதை உணர்த்துகின்றன. ' அவன் வந்தான். ஜான் போனான்.' என்றால் மேலுள்ளவாறு பொருள் தராது. குறிப்பான ஒருவர்  முதலில் இடம் பெற்றபின்னரே அதே நபரைக் குறிக்கும் சுட்டுப் பெயர் வரவேண்டும். இது, தருக்கத்திற்கு உடப்பட்டதன்று எனினும் , தனித்தன்மை வாய்ந்த ஆங்கிலக் கட்டமைப்பு.வேறு சில மொழிகளில் விதிகள் வேறுபடுவதால், இதனை மொழியின் பொது இயல்பு எனல் இயலாது '

இந்த வாக்கியவரிசைக் கட்டமைப்பைத் தமிழில் கண்ட முன்னோரை வழிமொழிந்து  அப்போதே சொல்லியிருக்கிறார் தொல்காப்பியர்.

இயற்பெயர்க் கிளவியும் சுட்டுப் பெயர்க் கிளவியும்

வினைக் கொருங் கியலும் காலம் தோன்றின

சுட்டுப்பெயர்க்  கிளவி முற்படக்  கிளவார்

இயற்பெயர் வழிய என்மனார் புலவர் (கிளவியாக்கம் 38)


இயற்பெயர்க் கிளவியும் சுட்டுப் பெயர்க் கிளவியும் - A specific reference to a person...a pronoun சுட்டுப் பெயர்க் கிளவி முற்படக் கிளவார் இயற்பெயர் வழிய - a person must precede a pronoun வினைக்கொருங்கியலும் - (John) did both


ஏறத்தாழத் தொல்காப்பிய நூற்பாவின் தொடர்கள் கிளீசன் தொடர்களோடு ஒத்துப்போகின்றன.

தொல்காப்பியம் கண்டு கிளீசன் எழுதவில்லை. கிளீசனைக் கண்டு தொல்காப்பியர் விதித்தார் என்று கற்பனை கூட செய்ய முடியாது. இந்த வியத்தகு ஒற்றுமை எப்படி?

This is a peculiarity of English structure என்கிறார் கிளீசன்.   இந்த peculiarity தமிழுக்கும் உரியதாகும். இன்றல்ல ,ஏறத்தாழ இரண்டாயிரமாண்டுகளுக்கு முன் - தமக்கு முந்தைய புலவர் கண்டதை - தொல்காப்பியர் சொல்லியிருக்கிறார் . இரு மொழிகளிலும் உள்ள ஒத்த வாக்கிய வரிசைக் கட்டமைப்புத்தான் -  தொல்காப்பியரும் கிளீசனும் ஒருவரையொருவர் காணாமல் , தத்தம் மொழியியல்பு கண்டதுதான் -  ஒத்துப்போதற்குக் காரணம்.

என்றாலும் வியப்புதான்!

எடுத்துக்காட்டிலும் வியப்புத் தொடர்கிறது. சேனாவரையர் 'சாத்தன் வந்தான். அவன் போயினான்' என்று எடுத்துக் காட்டியிருக்கிறார். கிளீசன் John Came. He went away என்ற எடுத்துக் காட்டைத் தருகிறார்.

சேனாவரையர் எடுத்துக்காட்டின் தழுவல் போல் தோன்றுகிறது கிளீசனின் எடுத்துக்காட்டு.
மறுதலை எடுத்துக்காட்டுத் தந்து வேறுபாட்டை விளக்கியுள்ளார் நச்சினார்க்கினியர்.
" அவன் வந்தான் . சாத்தற்குச்¹ சோறு கொடுக்க². எனின், அவனும் சாத்தனும் வேறாய் , அவன் வருந்துணையும் சாத்தன் சோறு பெறாதிருந்தானாவான்³ செல்லும்." அதாவது பொருள் மாறிவிடும் என்கிறார். (¹ சாத்தனுக்கு , ² கொடுத்திடுக , ³ பெறாதிருந்தவன் ஆவான்  என்னும் பொருள் நோக்கிச் செல்லும்)
" But  He came.John went away. certainly could not have that meaning " என்று கிளீசனும் விளக்கியுள்ளார்.
மறுதலையில் கிளீசன் நச்சரைத் தழுவியது போல் காணப்படுகிறது.

கிளீசனை இங்கே நிறுத்திவிட்டு இதனோடு தொடர்புடைய  தொல்காப்பியத்தின் அடுத்த  இரு நூற்பாக்களையும் பார்க்கவேண்டும் என்பது என் ஆசை .

வாக்கிய வரிசை பற்றி விதித்த தொல்காப்பியர் விலக்குகளைத் தொடர்கிறார்.
'முற்படக் கிளத்தல் செய்யுளுள் உரித்தே' (கிளவியாக்கம் 39)
இதன் நயத்தை , " முற்கூறலாகாது எனப்பட்ட சுட்டுப் பெயர் மொழி மாற்றியும் பொருள் கொள்ளும் நயம் செய்யுட் கண் உண்மையான் அதனகத்தாயின் அமையும் என்று நேர்ந்தவாறாயிற்று" என்னும் கல்லாடர் உரை கொண்டு உணர வேண்டும்.

அவனணங்கு  நோய்செய்தான்  ஆயிழாய் வேலன்
விறன்மிகுதார்ச் சேந்தன்பேர்  வாழ்த்தி - முகனமர்ந்து
அன்னை  யலர்கடப்பந் தாரணியில் என்னைகொல்
பின்னை  யதன்கண் விளைவு

'அவன்' என்னும் சுட்டுப் பெயருக்குப் பின் 'சேந்தன்' என்னும் இயற்பெயர் வரும் இந்த ஒரே பாட்டை  இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், தெய்வச்சிலையார், கல்லாடர் , [பெயர் தெரியத] ஒருவர் - என அனைவரும் காட்டுகின்றனர்.

" இதனாற் சொல்லியது , முற்கூறலாகாது எனப்பட்ட சுட்டுப்பெயர்  மொழிமாற்றியும் பொருள் கொள்ளும் நயம் செய்யுட்கண் உண்மையான் அதனகத்தாயின் அமையும் என்று நேர்ந்தவாறாயிற்று" எனக் கல்லாடர் காட்டும்  நயமான காரணம் பிற உரையாசிரியர் காட்டாதது மட்டுமன்று பொருத்தமானதுமாகும்.

தொல்காப்பிய நோக்கில் ,  செய்யப்பட்ட - பாட்டு, உரை முதலிய - யாவும் செய்யுள்தாம்; இலக்கியம்தாம்.நவீனப் புனைகதைகளுக்கும் கூட சுட்டு முற்கூறும் நயம் பொருந்தும்.

" சுட்டுமுத லாகிய காரணக் கிளவியும்
  சுட்டுப்பெய ரியற்கையின்செறியத்தோன்றும்"
                                                              (கிளவியாக்கம் 40)

என்னும் அடுத்த நூற்பாவைவிட, எடுத்துக்காட்டுகள் சுவையானவை.

சாத்தன் கையெழுதுமாறு⁴ வல்லன் அதனால் தன் ஆசிரியன் உவக்கும்⁵; தந்தை உவக்கும் - இளம்பூரணர்.
( ⁴கையெழுத்தில்/ கையால் எழுதுவதில்.  ⁵உவக்கிறான்/மகிழ்கிறான்)

சாத்தன் கையெழுதுமாறு வல்லன் அதனால் தந்தை உவக்கும் , சாத்தி சாந்தரைக்குமாறு⁶ வல்லள் அதனால் கொண்டான்⁷ உவக்கும் (⁶சந்தனம்;  ⁷கணவன்) - சேனாவரையர்.

தெய்வச் சிலையார் தவிர நச்சினார்க்கினியர், கல்லாடர்,
ஒருவர் ஆகியோரும் , சேனாவரையர் எடுத்துக்காட்டையே
தந்துள்ளனர் (உரை வேறுபாடுகள் பற்றி இப்போது வேண்டியதில்லை).
போற்றப் படுபவை சாத்தனின் கல்வித் திறமையும், சாத்தியின் ஒப்பனைத் திறமையும்.
சாத்தனின் கையெழுத்துத்திறமையால் மகிழ்கிறவன் தந்தை. சாத்தியின் சாந்தரைக்கும் திறமையால் மகிழ்கிறவன் கணவன்.
இவை ஆணும் பெண்ணும் சமூகத்தில் வகித்த பங்கையும் , சமூகப் பார்வையையும் சுவைபடக் காட்டுகின்றன.

எடுத்துக் காட்டுகள் வெறும் இலக்கணப் புரிதலுக்கு மட்டுமன்றி வேறு பயனும் சுவையும் கொண்டவையும் கூட.
-----------------
¶ In general , the more intimate constructions , like words , have the most rigidly fixed order , and the less closely knit constructions , like sentences , allow more freedom.But even longer sequences have some definite restrictions on order , sometimes of a subtle sort. For example John came . He went away. might imply that John did both. But  He came.John went away.
certainly could not have that meaning. A specific reference to a person must precede a pronoun reference to the same person , unless some special device is used. This is a peculiarity of English structure, not of logic. nor of the general nature of speech, since some other languages have quite different rules- H.A.Gleason, An Introduction to Descriptive Linguistics , Oxford & IBH Publishing Co., New Delhi , II edition , 1979, p.57.

- 28 அக்.2017 முகநூல் இடுகை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

மொழி - தோற்றம் - உடைமை - உரிமை - கடமை

 மொழி - தோற்றம் - உடைமை - உரிமை - கடமை*

----------------------------------------------------------------------------------------

பேராசிரியரும் பன்மொழி அறிஞரும் ஆய்வாளரும் பன்னூலாசிரியரும் பழங்குடி மக்களின் மொழிகள்  உட்படப் பன்மொழி பேணும் மொழியியக்கம் கண்டு இயங்கிக்கொண்டிருப்பவருமான கணேஷ் நாராயண் டேவி சொல்கிறார்:

'மற்ற உயிரினங்களிலிருந்து மக்களை மிகத் தனித் துயர்ந்து திகழச் செய்வது அவர்தம் மொழித் திறம்.மக்களின் மொழித்திறம் இயற்கையின் நன்கொடையன்று; மக்கட் சமூகங்களின் பல்லாயிரமாண்டு அளப்பரிய பரிசோதனைகளாலும் ஒப்பிலா உள்ள உழைப்பினாலும் பெறப்பட்டது.மொழி மக்களின் பண்பாட்டாக்கம்; கடவுளின் கொடையன்று.'¹

அதாவது , மொழி இயற்கையாக உருவானதோ கடவுளால் அருளப்பட்டதோ அன்று .



ஏங்கெல்ஸ்  'மனிதக்குரங்கிலிருந்து மனிதராக மாறிய இடைநிலைப்படியில் உழைப்பின் பங்கு' என்னும் தம் ஆய்வுரையில்,கோட்பாட்டு ஒளியில் மொழித் தோற்றத்தை விளக்கியிருக்கிறார் (1876இல் செருமன் மொழியில் எழுதியது; 1895-96 இல் வெளிவந்தது). அவ்வுரையை,  'உழைப்புதான் எல்லாச் செல்வங்களுக்கும் ஆதாரம் என்று அரசியல் பொருளாதார வல்லுநர்கள் உறுதிபடத் தெரிவித்திருக்கின்றனர்'² என்று தொடங்குகிறார் எங்கெல்ஸ்.

இயற்கை→ மனிதக் குரங்கு →கை → உழைப்பு→மொழி → மூளை வளர்ச்சி → முழு மனிதநிலை என்று அவர் அன்றைய அறிவியலின் உச்ச அளவு சான்றுகள் கொண்டு விளக்குவது அறிவார்ந்த சுவை நல்குவதாகும்.

'முதலில் உழைப்பு அடுத்து அதனோடு  பேச்சு  இவ்விரண்டும் மிக முக்கியமான தூண்டுதல்களாக இருந்தன, இவற்றின் செல்வாக்கால் மனிதக்குரங்கின் மூளை படிப்படியாக மக்கள் மூளை என்னும் நிலையை எய்தியது...'³

அதாவது  உழைப்பும் மொழியும்தாம் மூளையை மேம்படச் செய்தன; மக்களினத்தை உருவாக்கின. இதை ஒத்ததுதான் டேவி 'மற்ற உயிரினங்களிலிருந்து மக்களினத்தை உயர்த்திக்காட்டுவது மொழி' என்று சொன்னதும்.

நான் சொல்லக் கருதுவது எங்கெல்ஸ் எழுதிவிட்டாதாலேயே அதை ஓர் அரசியல் கட்சியின் கருத்துப்போல் கருதவேண்டியதில்லை; கருதக் கூடாது. பத்தொன்பதாம் நூற்றாண்டின்  பல்வேறு அறிவுத்துறைகளின் வளர்ச்சியை உள்வாங்கி ஒரு கோட்பாட்டை உருவாக்கியவர்கள் மார்ச்சும் எங்கெல்சும். அவர்கள் அறிஞர்கள்.

சரி. இப்போது ஓர் அரசியல் தலைவர் கருத்துக்கே வருவோம்.

மார்க்சிய நோக்கில் , 'மொழி என்பது மேற்கட்டுமானத்தைச் சேர்ந்ததா? அடித்தளம் சார்ந்ததா' என்கிற வினா எழுப்பப்பட்டபோது தலைவர் ஜே.வி.ஸ்டாலின்  மொழியைக் குறிப்பிட்ட பொருளாதார உற்பத்தி முறை என்கிற அடித்தளத்தின் 

மேற்கட்டுமானமாகக் கொள்ள இயலாது என்பதை மிகத்தெளிவாக , எளிய நடையில் , விளக்கியுள்ளார்⁴. 

மக்கள் தலைவர் ஒருவர் மொழியைக் கையாளவேண்டிய முறைக்கு முன்னுதாரராணமான நடை ; கருத்துக்கு முதன்மை தருகிற  வேண்டா அணிநயமற்ற நடை; மொழிபெயர்ப்பிலும் சரளம் குன்றாத நடை.

'ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் மொழி என்பது எந்த ஒரு அடித்தளத்தின் , குறிப்பிட்ட காலத்தின் உற்பத்தியுமல்ல ; மாறாக அச்சமூகத்தின் பல நூற்றாண்டுக்கால ஒட்டுமொத்த வரலாற்றுப் போக்காலும் பல்வேறு அடித்தளங்களாலும் உற்பத்தியானதாகும். அது ஒரு சில வர்க்கங்களால் அன்றி முழுச் சமூகத்தாலும் நூற்றுக்கணக்கான தலைமுறைகளின் அரு முயற்சியாலும் படைக்கப்பட்டது '⁵- என்கிறார் ஸ்டாலின். அதாவது அடித்தளம் மேற்கட்டுமானம் இரண்டையும் கடந்தது ; இரண்டிலும் ஊடாடுவது மொழி.

மார்க்சியக் கலைச்சொற்களை விட்டுவிட்டால் , டேவியின் கருத்தும் இதுதான்.

ஒரு கோட்பாட்டுப்பார்வையில் இயங்கிய அரசியல் கட்சி ஆட்சியதிகாரத்தை நெருங்கும் நிலையிலும்  ஏற்றபோதும் , பல்வேறு நடைமுறைச்சிக்கல்களுக்கும் கோட்பாட்டுக்கும் இடையிலான தொடர்பைத் தெளிவுறுத்த வேண்டிய நெருக்கடி நேர்ந்தது. அந்த நிலையில் தேசிய இனங்கள்  மொழிகள் பற்றிய மார்க்சிய நோக்கிலான ஆய்வை மேற்கொண்டார் ஸ்டாலின். இன்றைய நிலையில் சிலவற்றை மறுபரிசீலனை செய்யலாம்; செய்ய வேண்டும்.  ஆனால், காலப் பின்னணி கருதாமல் ஸ்டாலினின் அரசியல் நடவடிக்கைகள்- கடும் விமரிசனத்திற்குரியவைதாம் -  சார்ந்த பிம்பத்துடன்  ,அவரது ஆய்வை முற்றிலும் இணையாக வைத்துப் பார்ப்பது பிழை. அவரது மொழிப் பிரச்சினை பற்றிய கருத்துகள் , மார்க்சியம் சோவியத் அரசு ஆகியவற்றையும் கடந்து , பொது நிலையில் கணக்கில் கொள்ள வேண்டியவை .

எல்லாப் பொருளும் இவற்றின்பால் உள என்பதன்று. ஆனால்,இவற்றின்பால் எப்பொருளும் இல்லையால் என்பது கண்மூடித்தனமானது.

வளர்ந்த உருசிய மொழி வழங்கியபோதும் சோவியத் நிகரமை  ஒன்றியக் குடியரசு, அனைத்துத் தேசிய இன மொழிகளையும் ஏற்றது. எழுத்து வழக்கற்ற மொழிகளுக்கும் எழுத்தை உருவாக்கிப் புழங்கச் செய்தது.இது  மக்களாட்சி நடைமுறை. ஜே.வி. ஸ்டாலினே ஒரு ஜார்ஜிய தேசிய இனத்தவர்தாம்.

இப்போது மீண்டும் கணேஷ் டேவியிடம் வருவோம்.

ஒவ்வொரு மொழியும் மரபு வழிப் பண்பாட்டுப் பொதிவு; நுண்ணுடைமை. இந்த உடைமையைப் பேணுவது  விவாதத்திற்கு அப்பாற்பட்ட உரிமை. விவாதத்திற்கப்பால் இவ்வுரிமையைப் பேணுவது அரசின் கடமை⁶ - என்கிறார்  க.நா.டேவி

------------------------------------------------

*தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் குமரி, கோவை மாவட்டக் குழுக்கள் நடத்திவரும் மெய்நிகர் சந்திப்புத்தொடரில் 22.10.2020 அன்று , 'இயற்சொல்லும் அயற்சொல்லும் ' என்னும் தலைப்பில் உரையாற்றியபோது இவற்றைக் குறிப்பிட்டேன். இங்குச் சற்று விரித்தும் தொனி வேறுபடுத்தியும் , அன்றைய பேச்சின் பொருளில்  பெரிய மாறுதல்  எதுவும் செய்யாமல் தந்துள்ளேன்.


1.Among the things that make humans a distinct species, the ability to use language made of verbal icons ranks very high. The ability to speak is not nature’s gift. Human communities had to spend several millennia to acquire it through an enormous amount of experimentation and an unparalleled amount of mental work. It would be entirely appropriate to view language as a cultural production and not god-given. 

 - G.N. Devy ,  Gain in translation , The Hindu, JULY 21, 2017 .


2.Labour is the source of all wealth, the political economists assert.   And it really is the source – next to nature, which supplies it with the material that it converts into wealth.    

- Frederick Engels (1876), The Part played by Labour in the Transition from Ape to Man, marxists.org


3.First labour, after it and then with it speech – these were the two most essential stimuli under the influence of which the brain of the ape gradually changed into that of man  which, for all its similarity is far larger and more perfect. - ibid.


4.Language is not a product of one or another base, old or new, within the given society, but of the whole course of the history of the society and of the history of the bases for many centuries      -J.V.Stalin(1950), Marxism and Problems of Linguistics, marxists.org


5.It was created not by some one class, but by the entire society, by all the classes of the society, by the efforts of hundreds of generations- ibid.


6.A given language...  needs to be seen as cultural heritage, an intangible possession.

From this perspective, the community’s right to its language becomes a non-negotiable right to cultural possession. Similarly, the state’s obligation to secure and protect this right too becomes a non-negotiable duty. - Devy, op.cit.

Saturday, October 24, 2020

சொல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே

 

சொல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே
தொல்காப்பியத்தில் 'சுழி' - ஒரு தேடல்*





தொல்காப்பியம் காலப்பழமையுடையது; தமிழ்கூறு நல்லுலகில் பண்பாட்டு மதிப்புடையது; காலந்தோறும் தோன்றும் புதுப்புதுத் துறைகளின் உரைகல்லில் உரசித் தன்னை நிறுவிக் கொண்டது.

தொல்காப்பியத்தை இக்கால உரைகல்லான மொழியியலோடு உரசும் முயற்சி தொடங்கி ஏறத்தாழ அரைநூற்றாண்டாகிவிட்டது. விளக்க மொழியியல், ஒப்புமொழியியல், வரலாற்று மொழியியல், மாற்றிலக்கணம், சொல்லாடற் பகுப்பாய்வு , மொழிப் பொருண்மையியல் முதலிய பல்வேறு நிலைநின்று தொல்காப்பியத்தை நோக்கும்போதும் தொல்காப்பியம் அவற்றுக்கு ஈடுகொடுக்கிறது.


இதன் பொருள் தொல்காப்பியத்தில் எல்லாப் பொருளும் உள என்பதன்று. தமிழ் என்னும் ஒருமொழி இலக்கணத்தினூடாகப் பொதுவான மொழிக்கூறுகள் பலவற்றைத் தம் கால எல்லைக்குள் நின்றே தொல்காப்பியர் சிந்தித்ததற்கான, சற்றுக் கூடுதல் குறைவான அடையாளங்கள் காணப்படுகின்றன என்பதே கருதத் தக்கது .

அந்த வகையில் தொல்காப்பியத்தை உருபனியற் கோட்பாட்டின் ஒருபகுதியான சுழியுருபு பற்றிய நோக்கில் காண முற்பட்டதன் விளைவு இக்கட்டுரை.

கட்டுரைக்குள் நுழையுமுன் தொல்காப்பியம் என்னும் பனுவலையும், தொல்காப்பியப்பனுவலின் ‘கோட்பாட்டை’யும் சற்றே அறிமுகப்படுத்திக் கொள்வது நல்லது.

தொல்காப்பியப் பனுவல்  ஒரு காலத்தில் ஒருவரால் இயற்றப்பெற்றதென்றும் சிலரால் வெவ்வேறு காலத்தில் இயற்றப்பெற்றதென்றும் இருவேறு கருத்துகளிருப்பினும் மொழிநடையாலும் கருத்து இழையாலும் பேரளவு ஒருநிலைப்படுத்தப்பட்ட வடிவமுடைய பனுவலாகவே காணப்படுகிறது¹; பொதுக்காலம்(CE) பன்னிரண்டாம் நூற்றாண்டுக்கு முன்பே ஒற்றைப்பனுவலாக நிலைபெற்றுப்², பயிலவும்பட்டதைத் தொல்காப்பியத்தின் பழையவுரைகளால் அறியமுடிகிறது.




தொல்காப்பிய எழுத்து, சொல்லதிகாரங்கள் மொழி இலக்கணம் கூறுவன; பொருளதிகாரம் இலக்கியக் கொள்கை கூறுவது எனப் பெரும்பாலாரால் கொள்ளப் படுகிறது.வேறுபட்ட பார்வைகளும் உள்ளன. தொல்காப்பியம் கூறும் மொழி இலக்கணத்தில் இழையோடும் சரடு தொடரிலக்கணம்.

எழுத்ததிகாரத்தின் பின்ஆறுஇயல்களும் பெரிதும் வேற்றுமை, அல்வழி எனப் புணர்ச்சியிலக்கணம் கூறுவன; தொடரிலக்கணம் சார்ந்தன என்பது வெளிப்படை. சொல்லதிகாரத்திலும் கிளவியாக்கமும் வேற்றுமை பற்றிய இயல்களும் எச்சவியலின் சில பகுதிகளும் தொடரிலக்கணம் சார்ந்தவை.

அல்வழித்தொடர் கிளவியாக்கத்துள்ளும் வேற்றுமைத்தொடர் வேற்றுமையோத்துகளுள்ளும் உணர்த்தியதாகவும் பொருளுணர்த்துதற்குச் சிறப்புடையன தொடர்மொழியேயென்றும், தொடர்மொழியைப் பிரித்துப் பெயர், வினை, இடை, உரி எனக் குறியிட வேண்டுதலின் அவை பிற்கூறப்பட்டனவென்றும் எழுவாய், விளிவேற்றுமைகள் எழுத்ததிகார அல்வழிக்கண் முடித்ததாகவும் தெய்வச்சிலையார் கூறுவன³ தொல்காப்பியம் தொடரிலக்கணம் சார்ந்ததென்பதற்கு வலிமை சேர்க்கின்றன.

தெய்வச்சிலையாரோடு உடன்பட்டுத் தம் மொழியியலறிவு நுட்பத்தால், க. பாலசுப்பிரமணியன் மேலும் ஆழ்ந்து நோக்கித் தொல்காப்பிய எழுத்ததிகார ‘ஒலியனியல்’, மாற்றிலக்கண ஒலியனியலோடு பெரிதும் ஒத்துள்ளதாகக் காட்டுகிறார்; தொடரியல் மட்டுமன்றிக் கருத்தாடல்(Discourse) கூறுகளும் காணப்படுதலைக் காட்டியுள்ளார்⁴  இவ்வடிப்படையில் ,தொல்காப்பிய உருபனியற் ‘கோட்பாட்’டை, அதனுள் சுழியுருபு பற்றிய சிந்தனையைக் காண இயலும்.

மொழியும் சுழியும்
--------------------------------



“தொடர்புடைய வடிவங்களின் வரிசைக் கட்டமைப்பில் சில இடங்களில் குறிப்பிடத்தக்க வகையில் வடிவக் கூறு இல்லாமற் காணப்படுமாயின் அதனைச் 'சுழி' என்று விளக்கலாம்” எனக் கூறும் நைடா sheep, trout முதலிய சொற்களை எடுத்துக்காட்டி இவற்றில் பலவின்பால் விகுதிகள்(Plural suffix) இன்மையைச் சுட்டி, இவை பிற பலவின்பால் சொல் வடிவ வரிசையமைப்பினின்றும் வேறுபட்டிருப்பதால் இந்த இன்மையை மாற்றுருபியற் சுழி (allomorphic zero) என வழங்கலாம் என்கிறார்.

டோட்டனாக்(Totonac) என்னும் மொழியில் மூவிடப் பெயர் ஒருமை பன்மை வடிவங்களுள் படர்க்கை ஒருமைப் பெயருக்குப் புலப்படத்தக்க வடிவம் இல்லை. இதனை உருபனியற் சுழி(Morphic Zero) என்கிறார் நைடா.

அதேவேளையில் கண்டவாறெல்லாம் சுழியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் இல்லையெனில் மொழி விளக்கமென்பது தேவையற்ற இடங்களிலெல்லாம் சுழிகளை அள்ளித் தெளிக்கும் அலங்கோலமாகிவிடும் எனவும் எச்சரித்துள்ளார்⁵

எழுவாயும் சுழியும்
--------------------------------
எழுவாய்/முதல் வேற்றுமை, அண்மைவிளி ஆகியவற்றை உணர்த்தத் தனி இடைச்சொல்(உருபு) இல்லாமையைத் தொல்காப்பியம் சுட்டும்.

“எழுவாய் வேற்றுமை பெயர்தோன்று நிலையே” (தொல்.சொல்.வேற்.4)
என்னும் நூற்பாவுரையில் “பெயர் என அமையும்; தோன்றுநிலை என்றதனாற் பயன் என்னை எனின், பெயர் கண்டுழி யெல்லாம் வேற்றுமையென்று கொள்ளற்க என்பது அறிவித்தற்கெனக் கொள்க” என்பார் தெய்வச்சிலையார். பெயர்வேறு; எழுவாய்/முதல் வேற்றுமை வேறு⁶ எனவே எழுவாய்/ முதல் வேற்றுமைக்குரிய உருபனியற் சுழியைக் கொள்ள வாய்ப்புண்டா என ஆய்தல் வேண்டும்⁷.

விளியும் சுழியும்
-----------------------------
“அண்மைச் சொல்லே யியற்கை யாகும்” (தொல்.சொல்.விளி.10)
“ஆனென் னிறுதி யியற்கை யாகும்” (மேற்படி, 15)
லகர, ளகர ஈற்றுப் பெயர்கள் விளியேற்றல் பற்றிய “அயல் நெடிதாயின் இயற்கையாகும்” (மேற்படி, 18) எனும் நூற்பாக்களில் பெயர்கள் இயல்பாகவே நின்று விளயேற்குமென்கிறது தொல்காப்பியம்.
நம்பி வாழி, வேந்து வாழி, நங்கை வாழி - என்பனவற்றில் பெயர்கள் இயல்பாய் நின்று அண்மை விளி ஏற்றன.
சேரமான், மலையமான் - என விளிக்கண்ணும் னகர ஈற்றுப் பெயர்கள் அவ்வாறே நிற்கும்.
பெண்பால், ஆண்பால், எம்மாள், கோமாள் - என்பன ஈற்றயல் நீண்ட லகர, ளகர, ஈறுகள் அவ்வவ்வாறே நின்று விளியேற்றமைக்குச் சான்றுகள்.
“தொழிலிற் கூறு மானென் னிறுதி
யாயா கும்மே விளிவயி னான” (மேற்படி, 16)
என்னும் போது, உண்டான் என்னும் தொழிற்பெயர் (வினையாலணையும் பெயர்) உண்டாய் என விளியேற்கும். இந்நூற்பாவிற்கான தெய்வச்சிலையார் விளக்கத்தை ஒப்பு நோக்கிற்காகக் காணலாம் :
" ஈண்டு ‘விளிவயினான’ என விதந்தோதினமையான் தொழிலால் வருஞ்சொல் முன்னிலை வினையாகிய வழியும், உண்டாய் என வரும்; அஃதன்று இது என்பதூஉம், அதனொடு இதனிடை ஓசை வேறுபாடு உளது என்பதூஉம் அறிவித்தற்கெனக் கொள்க."

எழுத்தோரன்ன பொருள் தெரிபுணர்ச்சி இசையிற்றிரிதலாகிய  (தொல்.எழுத்து.புணரியல் 39) மேல்நிலை இயல்பு (suprasegmental feature) பற்றித் தொல்காப்பியம் கருதியுள்ளது; ஆனால் எழுவாய்/முதல் வேற்றுமை, இயல்புவிளி ஆகியவற்றின் பெயரையும் சொல்வகைகளுள் ஒன்றாகிய பெயர்ச் சொல்லையும் இசைத்திரிபு வேறுபடுத்தும் எனக் கூறவில்லை.

முன்னிலை வினை, விளியேற்கும் பெயர் என இருவேறு சொல்வகை காரணமாகத் தெய்வச்சிலையார் ஓசைவேறுபாடு கருதினரேயன்றிப் பண்டை உரையாசிரியர் எவரும் எழுவாய், இயல்பு விளிவேற்றுமை ஏற்கும் பெயர்களுக்கு ஓசை வேறுபாடு கூறவில்லை.

இடையாறு வேற்றுமைகளுக்கு வெளிப்படையான உருபுகள் இருத்தல்போல் இவற்றுக்கு உருபுகள் இல்லாமை கொண்டு இவ்விடங்களில் உருபனியற் சுழியைக் கருதிப் பார்க்கலாம். ஆனால் தொடரிலக்கண நோக்கில் எழுவாயும் விளியும் வேற்றுமைத்தொடருள் வைத்து எண்ணப்படாமையும் கருத்திற் கொள்ளத்தக்கதாகும்.

தொகையும் சுழியும்
----------------------------------
தொல்காப்பிய எழுத்ததிகாரத் தொகைமரபில் ஐகார வேற்றுமைத் திரிபுகளைத் தொகுத்துக் கூறும் நூற்பா(15) “உயர்திணை மருங்கின் ஒழியாது வருதலும் / அஃறிணை விரவுப் பெயர்க் கவ்வியல் நிலையலும்” என்னும்போது உயர்திணை, விரவுத் திணைப் பெயர்கள் இரண்டாம் வேற்றுமையுருபை ஏற்றே வருதல் வேண்டும் என விதிக்கிறது⁸.இதனால் அஃறிணைப் பெயர்களில் ஐகாரவுருபு இடம்பெறுதல் விருப்பு நிலைசார்ந்ததாக அமைகிறது.
சான்றோர் செய்யுளுள் ‘மழவ ரோட்டிய’(அகம்.1:2)என்பன போல உயர்திணையில் ஐகாரம் தொக்கு நிற்றலை உரையாசிரியர்கள் எடுத்துக்காட்டுவர்.
'மழவர் ஓட்டிய' என்பது இங்கு மழவரை ஓட்டிய என்னும் பொருளில் இடம்பெற்றுள்ளது.
- ஐ உருபு தொக்கி நிற்பதால், 'மழவர் பிறரை ஓட்டிய' என்றும் கொள்ள வாய்ப்பாக,  பொருள் மயக்கம் ஏற்படுகிறது. இவ்வாறு உருபு விரிந்து நிற்பதே இயல்பானதும் பொருள் மயக்கம் அற்றதுமாகும் . எனவேதான் உயர்திணை மருங்கின் ஒழியாது வருதல் விதிக்கப்பட்டது.

செய்யுளின்பம் கருதி மேற்குறித்த பாவில் உருபு ஒழிந்ததுபோலும்.

எவ்வாறாயினும் ஒரு சில பெயர்களோடு ஒழியாது வருதல் வேண்டும் என விதித்தமையால் ஒழிந்து வருநிலையில் மாற்றுருபியற் சுழி பற்றிக் கருதலாம்.

‘-கள்’ளும் சுழியும்
------------------------------
“கள்ளொடு சிவணு மவ்வியற் பெயரே
கொள்வழி யுடைய பலவறி சொற்கே” (தொல்.சொல்.பெயர்.15)
“தெரிநிலை யுடைய வஃறிணை யியற்பெய
ரொருமையும் பன்மையும் வினையொடு வரினே”(மேற்படி, 17)
என்னும் நூற்பாக்கள் அஃறிணையியற் பெயர்கள் பன்மை விகுதியொடும் இன்றியும் வருதலைக் கூறுகிறது. இஃதொரு மொழி வரலாற்று மாறுதற் கட்டத்தைக் காட்டுகிறது.
1. ஆ வந்தது, குதிரை வந்தது - ஒருமை
2. 1.ஆ∅ வந்தன, குதிரை∅ வந்தன - பன்மை
2.2.ஆக்கள் வந்தன, குதிரைகள் வந்தன - பன்மை
2.1.ஆம் காட்டுகளில் பலவின்பால் விகுதி மாற்றுருபியற் சுழி நிலையின எனலாம்⁹.
கள், ∅ எனும் இரண்டும் உளவாகலின். 




நைடா ஆங்கிலத்தில் காட்டும் Sheep, trout முதலியவற்றை இவை ஒத்திருத்தல் காணலாம். வேறுபாட்டையும் கருதுதல் வேண்டும். ஆங்கிலத்தில் சில சொற்களோடு பன்மை விகுதி முற்றிலும் வருதலில்லை. பெரும்பான்மையின் வரிசைச் சீர்மையமைப்புக் கருதிச் சில சொற்களுக்கு மாற்றுருபியற் சுழி கொள்ளப்பட்டுள்ளது. ஆங்கிலத்திலும் புறநிலை வரலாறு கொண்டு அதனைக் காண இடமிருக்கிறது¹⁰

வினையும் சுழியும்
--------------------------------
செய்யாய் என்னும் முன்னிலை வினைச்சொல்
செய்யென் கிளவி ஆகிடன் உடைத்தே (தொல். சொல். எச்ச.          )
" இந்நாள் எம்மில்லத்து  உண்ணாய் என்பது . அது செய்யாய் என்பது; அது செய் இனி என்றுமாம் " என்னும் இளம்பூரணர் எடுத்துக்காட்டை நோக்கச் செய்யாய் என்னும் முன்னிலை எதிர்மறை வினைமுற்று உண்ணுவாய் என்னும்  உடன்பாட்டிற்கும் ஆகும் என்று அவர் கொள்வது புலனாகிறது. நச்சினார்க்கினியர் , தெய்வச் சிலையார் ஆகியோரும் இக்கருத்தினரே.

தெய்வச்சிலையார் " இவ்வாறு வருவதும் இசையெச்சம் " என்று இறந்தது தழீஇய எச்சவும்மையால்  விளிமரபில் செய்யாய் என்னும் வினை முற்றுக்கும் விளிக்கும் ஓசை வேறுபாடு உளது என்ற தம் கருத்தை நினைவூட்டுகிறார்.

செய்யாய் என்னும் வாய்பாட்டு முன்னிலை முற்று - ஆய் என்னும் ஈறுகெடச் செய் என்னும் [ஏவல் வடிவச்] சொல்லாய் நிற்றலுடைத்து என்பது சேனாவரையர் கருத்து.
சேனாவரையர்  பிறர் கருத்தை மறுத்துத் தம் கருத்தை வலியுறுத்தவும் செய்கிறார்.

" தன்னின முடித்தல் என்பதனால் வம்மின் , தம்மின் என்பன   -மின் கெட வம் , தம் என நிற்றலும் ; அழியலை , அலையலை என்னும் முன்னிலை எதிர்மறை - ஐகாரங்கெட்டு அழியல் , அலையல் என நிற்றலும் கொள்க " என்கிறார்.

உண்ø / உண்ணாய்
நடø / நடவாய்
தாø / தாராய்
போø / போவாய்

வம்ø / வம்மின்
தம்ø / தம்மின்

அழியல்ø / அழியலை
அலையல்ø / அலையலை - என்பன சேனாவரையர் கருத்தின்படி மாற்றுருபியற் சுழி கொள்ள வாய்ப்புடையன. இனி,

செய் + ஆய் - முன்னிலை
செய்+ø+ஆய் - எதிர்மறை என எதிர்மறையில் சுழி கொள்ள வாய்ப்புண்டு. முயன்றால் இவை போல்வன பிறவும் சில காண இயலும்.

‘வினை… காலமொடு தோன்றும்’ (தொல்.சொல்.வினை.1) என்பதும், வினையைக் ‘காலக்கிளவி’ (தொல்.சொல்.வினை.10;17;22) என்பதுமாகிய நூற்பாக்களிலிருந்து தொல்காப்பியர் கால இடைநிலை பற்றி நன்கறிந்தவர் என்பது தெளிவாகிறது. ஆனால், தொல்காப்பியம் தொடரிலக்கணத்தை முதன்மைப்படுத்தி இலக்கணங்கூறும் நூல் என்பது முன்னரே கூறப்பட்டது.

‘வினையின் தோன்றும் பாலறி கிளவியும் பெயரின் தோன்றும் பாலறி கிளவியும் மயங்கல் கூடா’ (தொல்.சொல்.கிளவி.11) என்னும் மரபைத் தனித்தன்மையாகக் கொண்டது தமிழ்த் தொடரமைப்பு. இவ்வியைபுக்குக் கால இடைநிலைகளையோ, அவற்றின் அகப்புணர்ச்சி நிலைகளையோ விளக்க வேண்டியதில்லையாதலின் தொல்காப்பியம் அவற்றைக் கருதவில்லை.

இதனால் விதி வினை, மறைவினைஆகியவற்றின் கால இடைநிலைகளிற் காணும் சுழிகள் பற்றிக் கூறும் தேவையும் எழாமற் போயிற்று.

தொகுப்புரை
1. தனி உருபில்லாத எழுவாய் / முதல் வேற்றுமை நிலையிலும்
2. அண்மை விளி, -ஆன் என் இறுதிப் பெயர்கள், ஈற்றயல் நெடிதாகிய பெயர்கள் ஆகியன ஏற்கும் விளிநிலையிலும் உருபனியற் சுழியைக் கருதலாம்.
3. உயர்திணைப் பெயர்கள், விரவுப் பெயர்கள் தவிர்ந்த அஃறிணைப் பெயர்களில் ஐகார உருபு ஒழிந்து வரும் நிலையிலும்
4. -கள்ளொடு சிவணாத அஃறிணை இயற்பெயர் நிலையிலும்
5. செய்யாய் வாய்பாட்டு  முன்னிலை வினைமுற்றுகள் , செய் என்னும் [ஏவலையொத்த] வடிவில் வழங்கும்போதும்  மாற்றுருபியற் சுழியைக் கருதலாம்.

இவையேயன்றித் தொல்காப்பியம் கூறும் வேறு சில சொல்லமைதிகளிலும் சொல்லாச் சொல் பொருள் குறிக்குமாறமைந்த சுழிகளைத் தேடலாமாயினும், தொல்காப்பியர் நெஞ்சறிந்த நிலையில் 'சுழி' என்னும் கருத்தைக் கொண்டிருந்ததாகத் துணிந்து கூறவியலாது.
தமிழில் வெளிப்படையாக உருபு(morph)கள் இடம்பெறாமலும் பொருள் குறிக்கும் வாய்ப்புகள் இருப்பதால், தொல்காப்பியம் அவற்றையும் தமிழின் இயல்பாகக் கருதித்தொகுத்து விதித்திருக்கிறது என்பதில் ஐயமில்லை.

நூல் தோன்றி நெடுங் காலத்திற்குப் பின் தொல்காப்பியத்திற்கு உரை கண்ட ஆசிரியர்கள் - பெரும்பாலும் சங்கத இலக்கண மாதிரிகளின் செல்வாக்கால் என்று கருதலாம் -  சில இடங்களில் 'சுழி' யை ஒத்த அமைப்பு நிலையில்
தொல்காப்பியத்தைக் காண முற்பட்டுள்ளனர்.
தமக்கிடையே குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இருப்பினும் வடமொழி வழித் தமிழிலக்கண ஆசிரியர்கள் பிரத்தியம் போன்றவற்றைத் தமிழுக்கும் பொருத்த முற்பட்டபோது 'சுழி'யமைப்புகளின் முன்னோடிக் கூறுகளைத் தத்தம் நூலுக்குள்ளேயே கொண்டுவந்துவிட்டனர்.
'சுழி' குறித்து மேலும் பல  நுட்பங்கள் அண்மைக் காலத்தில் உருவாகியுள்ளன. அவற்றில் எனக்குப் புலமையில்லை. எனது அடிப்படை மொழியியல் அறிவையும் முக்கால் நூற்றாண்டுக்கு முந்தைய கோட்பாட்டையும் கொண்டு  முயன்றிருக்கிறேன். ஆழ்ந்த மொழியியலறிவினோர் மேலும் இற்றைப்படுத்த இயலும்.


குறிப்புகள்
———————
1. Balasubramanian, Studies in Tolkappiyam, p.16.
2. பா.மதிவாணன், ' தொல்காப்பியத்தில் பாடம் இல்லை ' தொல்காப்பியம் பால.பாடம், பக்.
3.  தெய்வச்சிலையார் (உரை), தொல்காப்பியம் - சொல்லதிகாரம் - கிளவியாக்கம்,  நூ.
4. க. பாலசுப்பிரமணியன், தொல்காப்பிய இலக்கணமரபு, பக்.76-77 & 116-117.
5.    When the structure of a series of related forms is such that there is a significant absence of a formal feature at some point or points in the series, we may describe such a significant absence as "zero." For example, with the words sheep, trout, elk, salmon, and grouse, there is a significant (meaningful) absence of a plural suffix. We determine that there is an absence because the total structure is such as to make us "expect" to find a suffix. This absence is meaningful, since the form with the absence (i.e. with zero) has a meaning which is different from the singular form, which has no such absence. A signif-icant absence in an allomorphic series may be called an allomorphic zero.

Sometimes the general structure suggests a zero element.
  For example, in Totonac the subject pronouns are as follows:
 
k- first person singular              --wi  first person plural
 
-ti second person singular        -tit second person plural
    
— third person singular.                 --qù. third person plural

The third person singular is never indicated overtly, i.e. it has no obvious form. The absence of some other form is what actually indicates the third singular. Structurally, this is a type of significant absence; it is not, however, an allomorphic. zero, but, rather, a morphemic zero. That is to say, this significant absence does not occur in a series of allomorphs, but in a series of morphemes. Both types of. zeros are structurally and descriptively pertinent, but should be carefully distinguished.^
-----------------------------
^It is possible to say that in English the nouns have a zero morpheme for singular and [ -ez] for plural. This would mean that sheep in the singular would have a morphemic zero and in the plural an allomorphic zero. One should, however, avoid the indiscriminate use of morphemic zeros. Otherwise, the description of a language becomes unduly sprinkled with zeros merely for the sake of structural congruence and balance.

Eugene A.Nida, Morphology: The Descriptive Analysis of words, p.46.
6. விரிப்பின் பெருகுமாதலின்தெய்வச்சிலையார் முதலியோர் கூறும் விளக்கங்களை அவரவர் உரைகளிற் கண்டுகொள்க.
7. வீரசோழியம் சங்கத(சமற்கிருத) மரபைப் பின்பற்றி ஒருவன், ஒருத்தி, ஒன்று, கள் விகுதி பெறாப் பலவின்பால் ஆகியவற்றில் சுப்பிரத்தியம் [ - சு] இட்டழித்தல் வேண்டும் என்கிறது.
கொற்றன் சு
கொற்றி சு
யானை சு
என, சுப்பிரத்தியம் இட்டு, பின்னர் அழித்து முறையே
கொற்றன் வந்தான்
கொற்றி வந்தாள்
யானை வந்தது
யானை வந்தன
எனத் தொடராக்க வேண்டும் என்கிறது. வேறு சில இடங்களிலும் சுப்பிரத்தியம் நின்று அழியும் என்கிறது வீரசோழியம்.

" இப்போக்கு பிற்கால உரையாசிரியர்களில் வேறு விதமாகப் புகுந்து கொண்டது. செய்யாய் என்னும் முன்னிலை வினைச்சொல் ஆய்விகுதி குன்றி , செய் என நிற்கும் என, சேனாவரையர் நின்று கெடுதல் அல்லது புணர்ந்து கெடுதலைத் துவக்கி வைத்தார். சிவஞான முனிவர் இப்போக்கை உறுதிப்படுத்தினார் . பிரயோக விவேக ஆசிரியர் இது வடமொழி மதம் பற்றியது என உவகை பூத்தார். நச்சினார்க்கினியர் ஒருவரே இதனை நிராகரித்துத் தமிழ் இயல்பை நிலைநிறுத்தியவர் " க.வீரகத்தி, பிற்கால இலக்கண மாற்றங்கள்(எழுத்து), பக். 36 - 37.

இலக்கணக் கொத்து ஆயவன், ஆனவன் முதலிய ஐம்பாற் சொல்லும் பெயர்ப்பின் அடைதலைப் பலர் உரைத்ததாகக் கூறுகிறது. இது தொல்காப்பியர் காலத் தமிழ் மொழியமைப்பில் இல்லையாதலின் தொல்காப்பிய நோக்கில் எழுவாய் மாற்றுருபுசுழியைக் கருதியதெனக் கூறவியலாது.
8. மொழியியல் அறிஞர் செ.வை.சண்முகம் அவர்கள் இச்சிந்தனையைத் தூண்டினார்கள். அவருக்கு நன்றி.
9. இராதா செல்லப்பன், மொழியியல், ப.109 (தொல்காப்பியக் கருத்தாகச் சுட்டாவிடினும் எடுத்துக்காட்டுகள் தொல்காப்பியக் கருத்தடிப்படையிலேயே அமைந்துள்ளன)
10. ஆங்கிலத்தில் ஏன் சில பெயர்கள் மட்டும் பன்மை விகுதி பெறவில்லை என்று தேடத் தொடங்கியபோது விளக்க மொழியியலிலிருந்து வரலாற்று மொழியியலுக்குப் போகும் நெருக்கடி நேர்ந்துவிட்டது. ஆங்கிலத்தில் Sheep பற்றி வலையுலகில் புகுந்து தேடினேன். ஆக்ஸ்போர்ட் அகராதி வலைப்பூவில் (blog.oxforddictionaries.com) ஒரு சிறு வரலாறு கிடைத்தது. ஆங்கிலத்தில் கடனாளப் பெற்ற சில சொற்கள் வழக்கில் ஆங்கில இலக்கண மரபுக்குள் உள்வாங்கப்பட்டாலும் வேறு சில, தம் மூல மொழி இலக்கண மரபைத் தொடர்கின்றன. இவ்வகையில் சில சொற்கள் - swine, Sheep, deer, folk முதலியன - தொல்பழஞ் செருமானியத்திலிருந்து (earliest Germanic) வந்தவை; பெரும்பாலானவை நீளடிப் (long-stem) பெயர்கள். சில, காலப்போக்கில் ஆங்கிலத்தில் ஒப்புமையாக்கமாக - s போன்ற பன்மை விகுதிகள் பெற்றன (thing என்பதன் பன்மை விகுதியற்ற நிலைமாறி இப்போது things எனப்படுகிறது). தமிழில் இதனையொத்த ஓர் உள்ளார்ந்த மாறுதல் நிகழ்ந்ததென்று கருத இடமுண்டு. சில வடிவங்களுக்கு மட்டும் பன்மை விகுதியில்லாத ஆங்கிலம் போலன்றித் தமிழில் உறழ்ச்சியாக - விகுதியின்மை, விகுதி சேர்த்தல் ஆகிய இரண்டும் சரி என - கொள்ளப்படுகிறது. அஃறிணை இயற்பெயர்களுக்கு ஒருமை வடிவமே பன்மைக்கும் வழங்கியது பெரும்பான்மை. - கள் சேர்க்கும் புதிய வழக்கத்தைத் தொல்காப்பியம் பதிவு செய்கிறது. காலப்போக்கில் பன்மை விகுதி சேர்ப்பது இயல்பான விதி போல ஆகிவிட்டது.பிற்கால இலக்கணிகள் பால்பகா அஃறிணைப் பெயரென்று கூறிய, அஃறிணை இயற்பெயர்கள் மிகப் பெரும் பாலானவை - அதுவும் தொல்காப்பிய, செவ்வியல் இலக்கியக் காலத்தில் - தமிழுக்கேயுரிய வேரும் அடியும் கொண்டவை; கடனாளப்பட்டவையல்ல. தொல்காப்பியத்தில் ‘மக்கள்’ என்னும் பிரிப்பப்பிரியாச் சொல்லாட்சியில் மட்டும் உயர்திணையில் ‘-கள்’ளைக் காணமுடிகிறது. மக, மகவு, மகன், மகள், மகார் முதலியன ‘மக்-‘ என்னும் வேரில் (root) கிளைத்தவை. தமிழுக்குள்ளேயே அரிதான வடிவமான மாக்கள் என்பது மக்களையும் குறிக்க வழங்கியது. மக்- வேர், மக - அடி எனில், -கள் இணையும்போது, மககள் என்பதைவிட மக்கள் எளிதாகவும் இயல்பாகவும் இருந்திருக்கலாம்; மாக்கள் என்று நீண்டது ஒரு வகை ஈடுசெய் நீட்டமாக இருக்கலாம். அந்தக் -கள், அஃறிணை இயற்பெயர்களிலும் விகுதியாக நுழையத் தொடங்கிய ஒரு கட்டத்தைத் தொல்காப்பியம் சொல்கிறது போலும்.
அப்புறம் உயர்திணையில் உயர்வின்மேல் உயர்வின் அடையாளமாய்க் -கள் பரிணமித்ததை மு.வ. தம் ‘கள் பெற்ற பெருவாழ்வு’ என்னும் கட்டுரையில் விவரித்திருப்பார். மன்னன் - உயர்திணை ஆண்பால் ஒருமை (இலக்கணம்) மன்னர் - உயர்வின் அடையாளமாக ஒருமையைப்  பன்மையாக்கல் (வழக்கு) மன்னர்கள் - உயர்வில் பன்மை (வழக்கு) மன்னரவர்கள் - மிகுஉயர்வு (வழக்கு) இப்பெயர்கள் வினைமுற்றிலும் இயைபு (concord) கொண்டன: மன்னர் வந்தார் மன்னரவர்கள் வந்தார்கள்.
ஆங்கிலம் கடனாட்சிகளைத் தன்வயப்படுத்தியதெனில், தமிழ் தெளிவும் உயர்வும் கருதித் தனக்குள்ளேயே மாறுதல்களைச் செய்து கொண்டது. அஃறிணை இயற்பெயர்கள் பன்மை விகுதி கொள்ளாத நிலை தொல்பழஞ் செருமானியத்தை ஒத்தது. இது பழைமையான மொழிகளின் இயல்புபோலும். விளக்க மொழியியல் , வரலாற்றைக் கருதுவதில்லை. அவ்வகையில்தான் பன்மையில் சுழியமாற்றுருபைக் (zero allomorph) கொள்கிறது ஆங்கிலம்.

————

*  தஞ்சை, மன்னர் சரபோசி அரசுக் கல்லூரி(தன்னாட்சி)த் தமிழாய்வுத் துறை(செம்மொழித் தமிழாய்வு நிறுவன
நல்கையுடன்) ' தொல்காப்பியரின் உருபனியற் கோட்பாடு' என்னும் பொருளில் நிகழ்த்திய தேசியக் கருத்தரங்கில்    06.12.2017 அன்று படிக்கப்பட்டது. இப்போது விரிசுபடுத்தப்பட்டுள்ளது.
கருத்தரங்க அமைப்பாளர்  பேரா.மா.கோவிந்தராசு அவர்களுக்கு நன்றி.

   - 

Tuesday, October 20, 2020

'உண்மைத் தன்மைை'யை உரைக்காத நச்சினார்க்கினியர்

 ‘உண்மைத் தன்மை’ யை உரைக்காத நச்சர்!


தமிழ் உயர்கல்விப் பாடத் திட்டங்களில் தொல்காப்பியம் முதலிய மரபிலக்கணங்களின் உரைகள் கைவிடப்பட்ட காலம் போய், இப்போது மூலமும் கைவிடப்பட்டுச் சாரமான கருத்துப் போதும் என்கிற நிலை வந்துவிட்டது;மரபிலக்கண உரைக் கூறுகளை எடுத்துக் காட்டுவதே ஆராய்ச்சி எனும் நிலையை எட்டிவிட்டது.  இக்கட்டுரையும் ஓர் உரைக் குறிப்பை எடுத்துக் காட்டி விளக்குவதுதான்; ஆராய்ச்சியன்று. ஆனால் ஆராய்ச்சியைத் தூண்டும் வினாக்கள் உண்டு.

மரபிலக்கண மூலம் போலவே மரபுரைகளும் செவ்வியல் இலக்கணப் பயிற்சிக்குரியவை என்பதை ஆய்வறிஞர்கள் சொல்லிவருகிறார்கள். எடுத்துக்காட்டுகளும்கூட கருத்தூன்றிப் பயிலப்படவேண்டும்

தொல்காப்பிய எழுத்ததிகாரத்திற்குக் கிடைத்துள்ள மரபுரைகள் இரண்டேயாகும்.  அவை இளம்பூரணமும் நச்சினார்க்கினியமும்.

“இளம்பூரணருரையே…. பல ஆண்டுகள் சான்றோரிடையே போற்றப்பட்டு வந்தது.  போதகாசிரியர் பலரும் அவ்வுரையையே மாணாக்கர்க்குப் பயிற்றி வந்தனர்.  மதுரையாசிரியர் நச்சினார்க்கினியரும் தாம் தொடக்கத்தில் பயின்றதும் தம் மாணாக்கர்க்குப் பயிற்றியதும் இளம்பூரணர் வரைந்த தொல்காப்பிய எழுத்துப்படல உரையே என்பதில் ஐயமில்லை

“சில நுட்பமான இடங்கள் தவிரப் பிறாண்டெல்லாம் இளம்பூரணர் உரைத்தவற்றையே தாமும் கொண்டு உரை வரையும் நச்சினார்க்கினியர் சில இடங்களில் மாத்திரம் மிகுதியான எடுத்துக்காட்டுத் தந்துள்ளார்” என்கிறார் T.S. கங்காதரன் ( பக்.35 & 36).

ஒருவேளை எழுத்து, சொல்லதிகார உரையில் பேராசிரியரும் இளம்பூரணரையே பெரிதும் பின்பற்றியிருக்கலாம்; நச்சரும் தொடர்ந்திருக்கலாம். 

தொல்காப்பிய எழுத்ததிகாரத்தின் உரையில் அதிகாரம் நுதலியது கூறித்தொடங்கும் இளம்பூரணரை அப்படியே பின்பற்றி, எடுத்துக்காட்டுகளைத் தந்து விளக்கும் நச்சினார்க்கினியர் வேறுபடும் ஓர் இடத்தை மட்டும் துலக்கிக் காட்ட முயல்கிறது இக்கட்டுரை.

தொல்காப்பியர் எழுத்தை எட்டு வகையானும் எட்டிறந்த பல வகையானும் உணர்த்தினாரென்கிறார் இளம்பூரணர்.

நச்சினார்க்கினியர் அதே எட்டுவகையை ஏற்று விளக்கி “இனி, எட்டிறந்த பலவகைய என்பார் கூறுமாறு…” எனப் பிறவற்றைப் பிறிதொருசாரார் கொள்கைபோல் கூறுதல் நச்சினார்க்கினியரிடம் காணப்படும் சிறிய வேறுபாடு.

1. எழுத்து இனைய 

2. இன்ன பெயரின

3. இன்ன முறையின

4. இன்ன அளவின

5. இன்ன பிறப்பின

6. இன்ன புணர்ச்சிய 

7. இன்ன வடிவின

8. இன்ன தன்மைய

எனும் எட்டனுள் தன்மையும் வடிவும் ஆசிரியர் உணர்ந்திருப்பினும் நமக்கு உணர்த்தல் அருமையின் ஆசிரியர் உரைத்திலர் என்பதில் இருவர்க்கும் உடன்பாடே.

இனி, எட்டிறந்த பல வகை என்பதற்கு மேலும் பதினைந்தைக் கூறி இளம்பூரணர் “இன்னோரன்னவும் என இவை” என்று முடிக்கிறார்;   " இவையெல்லாம் ஆமாறு மேல் வந்த வழிக் கண்டுகொள்க" என்கிறார்; எட்டு, பதினைந்து ஆகிய எதனையும் விளக்கவில்லை.

இளம்பூரணர் கூறும் இப்பதினைந்தனுள் முதலாவதாகக் கூறும் ‘உண்மைத் தன்மை’ எனும் ஒன்று தவிரப் பிற பதினான்கையும் அதே வரிசையில் கூறி “இன்னோரன்ன பலவும் ஆம்” என்று முடிக்கிறார் நச்சர். 

இளம்பூரணர் கூறும் பதினைந்தாவன:

1. உண்மைத் தன்மை

2. குறைவு

3. கூட்டம்

4. பிரிவு

5. மயக்கம்

6. மொழியாக்கம்

7. நிலை

8. இனம்

9. ஒன்று பலவாதல்

10. திரிந்ததன் திரிபு அது என்றல்

11. திரிந்ததன் திரிபு பிறிது என்றல்

12. திரிந்ததன் திரிபு அதுவும் பிறிதும் என்றல்

13. நிலையிற்று என்றல்

14. நிலையாது என்றல்

15. நிலையிற்று நிலையாது என்றல்

(இன்னோரன்னவுமாம்)

ஒருவேளை நச்சர் உரைப்படிகளில் ஏடு எழுதியோர் ‘உண்மைத் தன்மை’ என்பதைத் தவற விட்டுவிட்டனர் என்று கருதலாமெனின் அதற்கு வாய்ப்பில்லை.  ஏனெனில், அனைத்திற்கும் எடுத்துக்காட்டுத் தந்து விளக்கும் நச்சர் உண்மைத் தன்மை பற்றி ஏதும் கூறவில்லை. எனவே, நச்சர் உண்மைத் தன்மையை இங்குக் கொள்ளவில்லை என்றே கருதவேண்டியுள்ளது.

ஆனால் அவர் உண்மைத் தன்மை பற்றிப் பேசாமலுமில்லை.

தொல்காப்பிய உரைவளப் பதிப்பாசிரியர் ஆ. சிவலிங்கனார் ‘நூன்மரபு’க்குப் பின்னிணைப்பாகத் தந்த ‘உரைச்சொற்றொடர் விளக்கம்’ எனும் பகுதியில்

உண்மைத்தன்மை: எழுத்துக்களின் குறுமை, நெடுமை, வன்மை, மென்மை, இடைமைகளும், பிறப்புத்தன்மைகளும் 'மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும்' என்றாற்போன்ற இயக்கத் தன்மைகளும் பிறவுமாம்" என்று விளக்கம் தந்துள்ளார்(ப.149)

இவ்விளக்கத்திற்கான சான்றெதுவும் தராவிடினும் நச்சினார்க்கினியர் கருத்தையும் வாங்கி எழுதியுள்ளார் என்பது வெளிப்படை.

 'மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும்' (தொல். எழுத்து. 46) எனும் நூற்பாவுரையில் நச்சினார்க்கினியர் “ஒருவன் தனிமெய்களை நாவால் கருத்துப் பொருளாகிய உருவாக இயக்கும் இயக்கமும், கையால் காட்சிப் பொருளாகிய வடிவாக இயக்கும் இயக்கமும் அகரத்தொடு பொருந்தி நடக்கும்” என நூற்பாக் கருத்தைத் தருகிறார்.  நச்சினார்க்கினியர் ஒலியுருவிலும் மெய்கள் அகரத்தொடு பொருந்தி நிற்கும் என்று உரைப்பது நோக்கத்தக்கதாகும்.  

மேலும் இதனை விளக்கும் போது, 

" மெய்க்கண் அகரம் கலந்து நிற்குமாறு போலப் பதினொருயிர்க் கண்ணும் அகரம் கலந்து நிற்கும் என்பது ஆசிரியர் கூறாறாயினார். அந்நிலைமை தமக்கே புலப்படுதலானும் பிறர்க்கு இவ்வாறு என்று உணர்த்துதல் அரிதாகலானும் என்றுணர்க.  இறைவன் இயங்குதிணைக்கண்ணும் பிறவற்றின் கண்ணும் அவற்றின் தன்மையாய் நிற்குமாறு எல்லார்க்கும் ஒப்ப முடிந்தாற்போல, அகரமும் உயிர்க்கண்ணும் தனிமெய்க் கண்ணும் கலந்து அவற்றின் தன்மையாயே நிற்கும் என்பது சான்றோர்க்கெல்லாம் ஒப்ப முடிந்தது.  இதனால் உண்மைத்தன்மையும் சிறிது கூறினாராயிற்று "என்கிறார் நச்சினார்க்கினியர்.   

இங்கும் 'உண்மைத்தன்மை' சிறிது கூறப்பட்டதாகத்தான் சொல்கிறாரர். அப்படியானால் முழு உண்மைத்தன்மை எது?

“உண்டென் கிளவி உண்மை செப்பின்” (தொல்.430) எனும் நூற்பாவின் பதவுரையில் உண்மை என்பதற்கு “ஒரு பொருள் தோன்றுங்கால் தோன்றி அது கெடுந்துணையும் உண்டாய் நிற்கின்ற தன்மையாகிய பண்பு…” என நச்சர் பொருள்தருதலும் ஈண்டு இயைத்து நோக்கற்குரியது.

உண்மை எனும் சொல்லமைப்பைச் சற்றே காணுதல் தகும்.  இச்சொல்லை உள் + மை என மேலும் பகுக்க இயலும்.  இஃதொரு பண்புப் பெயர்.  அஃதாவது உள்ளார்ந்த தன்மை என்பதைக் குறிக்கும்.  தன்மை என்பது ஒவ்வொன்றின் தனித்த பண்பையும் (இச்சொல்லும் தன் + மை என நிற்றல் காண்க) உண்மை என்பது தன்மையினும் உள்ளார்ந்த அதி நுண்பண்பையும் குறிப்பதாக இங்குக் கொண்டு நச்சினார்க்கினியர் விளக்கத்தைப் புரிந்து கொள்ளலாம்.

 ——— ———————— ———————— ———————— ————

' எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து ...'  என்னும் பிறப்பியல்  நூற்பாவை விளக்கும் வே.வேங்கடராஜுலு ரெட்டியார்,  ' அந்தணர் மறைத்து ' என்பதற்கு " துரீயம் வாசம் மனுஷ்யா வதந்தி " என்னும் வேத வாக்கியத்தைக் காட்டி, 'அகத்தெழுவளியிசை ...எழுந்து புறத்திசைக்கும் மெய்தெரிவளியிசை ' என்பவற்றை

 விளக்க,  " நாம் பேசுஞ்  சப்தத்தின்  உருவம் நான்காவதாகும் என்பது அறியப்படும் . அதற்கு முன் மூன்று உருவம் உண்டு. இந்நான்கும்  பரா,  பஶ்யந்தீ , மத்யமா , வைகரீ என்னும் பெயரன. நாம் பேசுஞ் சப்தம் (எழுந்து புறத்திசைப்பது) வைகரீ எனப்படும் " என்கிறார் ( ப.86.)

 இக்கருத்தை இளம்பூரணர் முன்பே  , " புறத்திசைப்பதன் முன்னர் அகத்திசைக்கும் வளியிசையை அம் மறைக்கண் ஓர் எழுத்திற்கு மூன்று நிலையுளதாகக் கூறுமஃது ஆமாறு அறிந்து கொள்க " எனத் தமக்கேயுரிய முறையில் செறிவாகக் கூறியுள்ளார்.



ச.பாலசுந்தரம் ," தமிழ் மறையினை நவிலும், அந்தணர் தாம் யோகநிலையில் அமர்ந்து ... மூலாதாரத்தினின்று எழும் நாதத்தை உதானனென்னும் காற்றான் உந்தி ,

ஆறு ஆதாரங்களிலும் ஏற்றி அவ்வவ் இடங்களில் உள்ள ஆற்றல்களை அட்சர உருவான் அசபையாக உருவேற்றுவர் . அங்ஙனம் உருவேற்றப்பெறும் மந்திர ஒலிகள் இடத்திற்கேற்ப அளவை வேறுபடுமென்பர். அவைதாமும் அவர்தம் அகச்செவிக்கே புலனாம் என்ப. அஃது ஈண்டு வேண்டப்படாமையின் 'அஃதிவண் நுவலாது ' என்றார் "என விளக்கி , அந்தணர் மறைக்கண் " சூக்குமை முதலாக அகத்தெழும் தன்மைகளையன்றி மாத்திரையளவு பற்றிக் கூறப்படாமையின் அது பொருந்தா தென்க " என்கிறார் ( ப. 127)

இத்தகு வேறுபட்ட விளக்கங்களில் ஒரு பொதுத் தன்மை உள்ளது. அது தொல்காப்பியம் சொல்வதுதான்- அகத்தெழு வளியிசை . அகம் என்பது உள்ளார்ந்தது.அஃதாவது , உள்+மை என்னும் உண்மை. 

இது ஒரு வகையில் எழுத்தின்  உள்-மைத் தன்மையும் ஆகும் எனலாமோ?

தொல்காப்பியர் பிறப்பியல் நிறைவில் கூறுவது இதைத்தானோ? 

 ஆமெனில் , இந்த உண்மைத்தன்மை தொல்காப்பியர்க்கும் உடன்பாடெனலாமோ?

இங்கு ஒன்றைக் கருதுதல் வேண்டும்.

 அதையும் தொல்காப்பியரிடமிருந்தே தொடங்க வேண்டும். அந்தணர் மறைத்தாகிய அகத்தெழுவளியிசையை ஆய்வறிவு நேர்மையுடன் குறிப்பிடும் தொல்காப்பியர் அதனைக் கொள்ளவில்லை. ஏன்?

இங்கு இளம்பூரணர் கூறும் பொருளொன்றைப் பார்த்து வைத்துக்கொள்வோம்: "வளி என்னாது 'வளியிசை' என்றது, அவ்வாறு நெஞ்சின்கண் நிலைபெறுமளவே வளியெனப்படும் ; பின்னர் நெஞ்சினின்றும் எழுவுழியெல்லாம் வளித்தன்மை திரிந்து எழுத்தாந் தன்மையதாம் என்பது விளக்கி நின்றது " . இது தனியே நோக்குதற்குரியது.


உத்தி வகைகளை விளக்கும் பேராசிரியர் , 'பிறன் கோட் கூறல்' என்னும் உத்திக்குத்  "தன்னூலே பற்றாகப் பிற நூற்கு வருவதோர் இலக்கணம் கூறல்" எனப்பொருள் தந்து,

'அரையளபு  குறுகும் மகரம்...' , '... இசையொடு சிவணிய நரம்பின் மறைய' , 'பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருள்...' ஆகிய மூன்றையும் காட்டி, " இவை அவ்வந்நூலுட் கொள்ளுமாற்றான் அமையும் என்றவாறு ஆயின " என்று காட்டியுள்ளார் ( ப.531)

அதனொடு நிறுத்தாமல் மேலும் , "  ' அளபிற் கோடல் அந்தணர் மறைத்து ' என்பது அதற்கு இனமெனப்படும். என்னை? அவர் மதம்[கொள்கை] பற்றி இவர் கொள்வதொரு பயனின்றாகலின் " (பக். 531 - 532)என்று முடிக்கிறார்.

வழக்கம்போல் பேராசிரியரின் கருத்தை , பிறப்பியல் இறுதி நூற்பாவுரையில் வழிமொழிந்தாண்டுள்ளார் நச்சர் . 'அகத்தெழு வளியிசை - மூலாதாரத்தில் எழுகின்ற காற்றின் ஓசை'  என்பது நச்சர் தரும் பொருள்.

தொல்காப்பியர் அகத்தெழுவளியிசை கொள்ளாமைக்குச் சமயவுணர்ச்சியும் காரணமாகலாம். 

'மொழிமுதற் காரணமாம் அணுத்திரள் ஒலி ...' என்னும் நன்னூல் எழுத்தியல் நூற்பா (3) உரையில்  சங்கர நமச்சிவாயர் , 

" சிதலது நீர் வாய்ச் சிறுதுகளால் பெரும்புற்று அமைந்த பெற்றியதென்ன ஐம்புலப் பேருரு ஐந்தும் ஐந்து அணுவால் இம்பரிற் சமைவது யாவரும் அறிதலின் அநாதி காரணமாகிய மாயையினை ஈண்டுக் கூறாது , ஆதிகாரணமாகிய செவிப்புலன் ஆம் அணுத்திரளை எழுத்திற்கு முதற்காரணம் என்றார். இவ்வாசிரியர்க்கு [பவணந்தி முனிவர்க்கு] மாயை உடன்பாடு அன்று ; அணுத்திரள் ஒன்றுமே துணிவு எனின் பிறிதொடு படாஅன் தன் மதம் கொளல் என்னும் மதம்படக் கூறினார் என்று உணர்க. ஈண்டு அணு என்றது ஒலியினது நுட்பத்தை " என்கிறார்.

வைதிகச் சைவரான சங்கர நமச்சிவாயர் தமக்கு உடன்பாடன்றெனினும்  , சமண மெய்யியல் சார்ந்த பவணந்தியாரின் அணுக்கொள்கையை நேர்மையாகச் சுட்டுகிறார்; ஆதிகாரணம் என்கிற அளவில் ஏற்கிறார்.

அவ்வாறே தொல்காப்பியரும் உடன்பாடன்றாயினும் 'அந்தணர் மறைத்தாகிய அகத்தெழுவளியிசையை' நூற்பாவிலேயே காட்டுகிறார் எனக் கொள்ள வாய்ப்புண்டு. இவ்வாறாயின் தொல்காப்பியர் சமணர் என்னும் கருத்து வலியுறும். 

இவ்வளவும் 'உண்மைத்தன்மை' பற்றிய தேடலில் கிடைத்தவை. புறத்தே ஒலிவடிவாகப் புலனாகும் நிலைமையன்றி அதற்கு முன்பான அக நிலை இயல்பினைத் தன்மை எனவும் அதனினும் உள்ளார்ந்த நுண்ணிலையை  உண்மைத்தன்மை எனவும் கொள்ளலாம். 'உண்மைத் தன்மை'யைத் தொல் காப்பியர் விதந்து சுட்டவில்லை. உரையாசிரியன் மார் கூற்றைக் கொண்டே தேடல் நிகழ்த்தப் பட்டது. 

உண்மைத் தன்மை வேத வழிப் பட்டதெனில், அதனைச் சமணரான இளம்பூரண அடிகள் கூறியதற்குச் சமாதானம்  தேடியாக வேண்டும்.

வாய்மொழி வழியாக ஒலி மாறாமல் கேள்வி (சுருதி)யாக வேதங்களைப் பேணிய மரபில் அன்றாட , புறவயப்பட்ட மொழிக்கும் மந்திர உருவேறிய அகநிலை மொழிக்குமான இடை வெளி மிகுந்திருக்கும் என்பதும் அகத்தெழு மொழி புனிதச் செறிவுடன் மூடுண்ட நிலையில் பேணப்படும் என்பதும் வெளிப்படை. அதிலும் வருணப் படிநிலை கருதிய ஒரு மரபில் அதன் மூடுண்ட தன்மை உச்சத்தைத தொட்டது வரலாறு கண்ட உண்மை.

மாறாக ஏடும் எழுத்தும் கல்வியும் சமயப் பணிகளில் ஒன்றாகக் கொண்ட அவைதிக மரபில் மொழி அந்த அளவு மூடுண்டதாக இருக்க இயலாது.

ஒருவேளை அந்த 'உண்மைத் தன்மை' அவரவர் சமயஞ்சார்ந்த விளக்கம் கொண்டிருக்கலாம். சமயஞ்சாராத இலக்கண மரபொன்றைச்  சார்ந்ததாதகவும் இருக்கலாம். 

எழுத்தை எட்டு வகையானும் எட்டிறந்த பல வகையானும் உணர்த்துவதாகக் கூறும் வகைமை எந்த மரபின் வழி வந்தது ? எட்டும் பதினைந்தும் பிறவும் என்பது ஏன்? என்னும் வினாக்களுக்கும் விடை தேட வேண்டும்.

" எட்டு வகையும் எட்டிறந்த பல்வகையும் என்ன வேண்டுவாருமுளராக , இந்நூலுடையார்[நேமிநாத ஆசிரியர்] எழுவகைய என்று சொல்ல வேண்டிற்று என்னையோ எனின் , அவையெல்லாம் இவ்வேழினுள்ளே அடங்கும் ஆகலான் என்பது, அன்றியும்

'எண்பெயர் முறைபிறப் பளவியல் வடிவு

புணர்தலோ டேழும் பொருந்திய வழக்கே ' என்றார் அவிநயனார் " என்கிறார் நேமிநாத உரையாசிரியர்.  இது பூரணரும் நச்சரும் கூறும் எட்டனுள் தன்மை நீங்கலாக ஏழினைக் கூறுகிறது. 

" எண்பெயர் முறைபிறப் புருவ மாத்திரை

முதலீ றிடைநிலை போலி யென்றா

பதம்புணர் பெனப்பன் னிருபாற் றதுவே "  எனத் தொகுத்துச் சுட்டும் நூற்பாவை (எழுத்தியல் 2) வடித்துத் தொடர்ந்து வகுத்துக்காட்டுவனவாக நன்னூல் நூற்பாக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

'பதவியலின் ஊற்றிடம் புத்த மித்திரனாரின் வீரசோழியமும் அதன் பெருந்தேவனார் உரையும்' எனினும் , " நன்னூலுக்கு முன்பு உள்ள இலக்கண மூலநூல் எதிலும் இல்லாத  புதிய இயலமைப்பு பதவியல் " என்கிறார் க. வீரகத்தி (பக்.212 - 13)

பவணந்தியார் மரபை ஏற்றுத் தாம் புதிதாகச் செய்தவற்றையும் - பதம் முதலியவற்றை - இணைத்து உள்ளடக்க அட்டவணை போல்  ௸ நூற்பாவை யாத்துள்ளார். 

பூரணரும் நச்சரும் கொள்ளும் எழுத்துணர்த்து வகை எட்டனோடு அவிநயமும்  நன்னூலும் கூறுவன பேரளவு ஒத்துப்போகின்றன .

'எட்டும் எட்டிறந்த பல்வையும்' என்னும் எழுத்துணர்த்து வகை மரபின் தோற்றம் , தொடர்ச்சி தேடினால் 'உண்மைத்தன்மை'யின் உண்மைையை நெருங்கலாம்.


துணை நூல்கள்

1. கங்காதரன் ,T.S.(பதிப்பாசிரியர்),  தொல்காப்பியம் எழுத்ததிகாரம் -

  உரைக்கொத்து (முதற்பகுதி), சரசுவதி மகால், தஞ்சாவூர், 2007.

2. கங்காதரன், திருவையாறு சாமி, (பதிப்பாசிரியர்), , தொல்காப்பியம் எழுத்ததிகாரம் -

  உரைக்கொத்து (இரண்டாம் பாகம்), சரசுவதி மகால், தஞ்சாவூர்,2009.

3. குணவீர பண்டிதர், (பதிப்பாசிரியர் கா.ர. கோவிந்தசாமி முதலியார்), நேமிநாதம் - உரையுடன் , தி.தெ.சை. சி. நூ. கழகம், சென்னை, 1964.

4.சங்கர நமச்சிவாயர், ( பதிப்பாசிரியர் அ. தாமோதரன் ) நன்னூல் - விருத்தியுரை,

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 1999.

 5. சிவலிங்கனார், ஆ.,(பதிப்பாசிரியர்),  தொல்காப்பியம் - நூன்மரபு, 

 உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 1980.

6.பாலசுந்தரம் ,ச., தொல்காப்பியம்- எழுத்ததிகாரம் ஆராய்ச்சிக்காண்டிகையுரை, பெரியார் பல்கலைக்கழகம், சேலம்,2012.

7.பேராசிரியர் (உரை. ) ,  தொல்காப்பியம் பொருளதிகாரம் - மெய்ப்பாட்டியல்,   உவமவியல், செய்யுளியல் , மரபியல் , தி.தெ.சை.சி. நூ. கழகம், சென்னை, 1972.

8.க. வீரகத்தி , பிற்கால இலக்கண மாற்றங்கள் (எழுத்து), குமரன் புத்தக இல்லம் , சென்னை,2011.

 



Monday, October 19, 2020

பயிர்ப்பா? பயிற்பா?

 பயின் என்னும் பிசினும்

பயிர்ப்பு என்னும் பாடமும்


‘பயிர்ப்புறு பலவின்’ , ‘பலவின் பயிர்ப்புறு தீங்கனி’ என்னும் தொடர்கள் முறையே அகநானூற்றிலும் (348:4), கலித்தொகையிலும் (50:12) இடம்பெற்றுள்ளன.

கலித்தொகைத் தொடருக்கு, “பலாவினது பிசினையுடைத்தாகிய… இனிய பழம்” என்று உரை காண்கிறார் நச்சினார்க்கினியர். அகநானூற்றுத் தொடருக்கு, “பிசினையுற்ற பலவினது" என உரை கண்டுள்ளனர் ந.மு. வேங்கடசாமி நாட்டாரும், ரா. வேங்கடாசலம் பிள்ளையும்,

'பயிர்-‘ என்னும் சொல் சான்றோர் செய்யுளுள் அழைத்தல், கூவுதல் என்னும் பொருட்பரப்பில் வழங்கியுள்ளது.

‘பயிர்ப்பு- பயிலாத பொருட்கண் அருவருத்து நிற்கும் நிலைமை’ என்கிற இறையனார் களவியல் உரை விளக்கும் சொல்/ பொருள் பிற்காலத்தது.

பயிர்ப்பு என்பது பிசினை அல்லது பிசினின் தன்மையை - பிசுபிசுப்பை - குறிக்குமா?

பயின் என்னும் சொல் அகநானூற்றிலும் (1:5; 356:9), பரிபாடலிலும் (10:54) இடம்பெற்றுள்ளது.

"சிறுகாரோடன் பயினொடு சேர்த்திய கல்" (அகம்.1:5 & 356:9-10) - என்பதற்கு,“அரக்கொடு சேர்த்தியற்றிய கல்”, "அரக்கொடு சேர்த்தியற்றிய சாணைக்கல்” என்று ந.மு.வே. & ரா.வே. உரை கண்டுள்ளனர். 

பயின் என்பதற்கு அரக்கு எனப் பொருள் காண இயலுமா?

பல்கிழி யும்பயி னும்துகில் நூலொடு

நல்அரக் கும்மெழு கும்நலம் சான்றன

அல்லன வும்மைமத்(து) ஆங்(கு)எழு நாளிடைச்

செல்வதொர் மாமயில் செய்தனன் அன்றே

    - சீவகசிந்தாமணி, நாமகள் இலம்பகம் , 235.

  என்னும் செய்யுளை நோக்கப் பயினும் அரக்கும் வெவ்வேறானவை என்றறியலாம். இங்கு, 'பயின் - பற்றுதற்குரியன' என்று சொற்பொருள் தந்துள்ளார் நச்சர்.

"சிதையுங் கலத்தைப் பயினாற் றிருத்தும் "(பரிபாடல் 10:54) என்பதற்கு , “கலங்களை ஓட்டும்” என்று  சுருக்கவுரை தருகிறார் பரிமேலழகர். இங்குப் பயின் என்பதற்குச் சுக்கான் என்று பொருள் கொள்வர். இது மேலும் ஆய்தற்குரியது.

 பிசின் என்பது பயின் என்பதன் மரூஉ வாகலாம். ‘பிசுபிசு > பிசு > பிசின் என்கிறது செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி. யாமறியோம்.

அகநானூற்றின் ‘பயிர்ப்பு’ என்பதற்குப் பாடவேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை (முனைவர் வெ. பழநியப்பன், தமிழ்நூல்களில் பாடவேறுபாடுகள், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 1990).

கலித்தொகையில்,  ‘பயிற்பு’  என்னும் பாட வேறுபாட்டை இ.வை . அனந்தராமையர் குறிப்பிட்டுள்ளார். உ .வே .சா.நூலக ஓலைச்சுவடியொன்றிலும் இப்பாடம் உள்ளது[த. இராஜேஸ்வரி(பதி.), கலித்தொகை மூலமும் நச்சினார்க்கினியர் உரையும் – செம்பதிப்பு (தொகுதி1), பிரெஞ்சு ஆசியவியல் ஆய்வுப்பள்ளி, 2015, ப.250].

பசைபோன்ற ஒட்டும் பொருளின் தன்மை குறித்து, - பு என்னும் பண்புப் பெயர் விகுதி பெற்றுப் பயின்+பு = பயிற்பு என்றாதல் இயல்பே.

எனவே அகநானூறு, கலித்தொகை இரண்டிலும் பயிற்பு என்னும் பாடம் ஏற்றது எனத் தோன்றுகிறது.

_____________________

SaravananP:

'செவ்வரக்கு' என்பதை சாதிலிங்கம் என்பாா் நச்சா் (நெடுநல்வாடை :80 உரை )




-நன்றி: SaravananP
20 அக்.2018 முகநூல் இடுகை


சாமி சொன்னிச்சு.

 சாமி சொன்னிச்சு.

-------------------------------------------




 "அப்பா எழுதிக்கிட்ருக்காங்க"

 [அப்பா எழுதிக் கொண்டிருக்கிறார்கள்]

 "மாமா பேசிக்கிட்ருக்காங்க"

  [மாமா பேசிக்கொண்டிருக்கிறார்கள்]

  

"அம்மா சமச்சிக்கிட்ருக்கு"

[அம்மா சமைத்துக்கொண்டிருக்கிறது]

"அக்கா படிச்சிக்கிட்ருக்கு"

[அக்கா படித்துக்கொண்டிருக்கிறது]


கணவைன் மனைவியை...

"அவ(ள்) சொல்லிக்கிட்டேயிருக்கா(ள்)"


மனைவி கணவனை...

"அவரு கேக்க மாட்டேங்குறாரு"/"அவுங்க ... ங்க" 

[...ர்/ ...ர்கள்]


நாங்கள்  இப்படித்தான் பேசிக்கொண்டிருந்தோம்.நாங்கள் என்றால்  தஞ்சை வட்டாரத்தின் பெரும்பான்மைச் 'சூத்திர'ச் சாதியினர்.

"அம்மா சொன்னாங்க" என்பது போல வழங்கும் சில விலக்குகள் உண்டு. "அப்பா தூங்குது" என்று அப்பா உட்பட எல்லாரையும் ஒன்றன் பால் விகுதியால் சுட்டுவாரும் மேற்படி சாதியாருள்  உண்டு. 


அகவையில் இளையோராயின் , "தம்பி விளையாடுறா(ன்)", "தங்கச்சி பாடுது " - என்று முறையே ஆண்பாலாகவும் ஒன்றன் பாலாகவும் சுட்டுவது வழக்கம்.


பிராமண வழக்கில் " அப்பா எழுதிண்டிருக்கார்", "மாமா பேசிண்டிருக்கார்"

"அண்ணா சாப்பிட்டுண்டிருக்கா(ன்)","அம்பி விளையாடிண்டிருக்கா(ன்)"

"அம்மா சமச்சிண்டிருக்கா(ள்)", "அக்கா படிச்சிண்டிருக்கா(ள்)" என்பன போலச் சுட்டுவார்கள்.                      


அப்பா/மாமா(தாத்தா/பெரியப்பா/சித்தப்பா முதலிய பெரியவர்களாயின்) ---- ---ஆர்கள்

[ பிராமண வழக்கில் ... ஆர்]


அம்மா( பாட்டி,அத்தை/ சின்னம்மா, பெரியம்மா/அக்கா,தங்கச்சி  முதலிய பெண் பாலாராயின்)--- --- து[பிராமண வழக்கில் ...ஆள்]


தங்கச்சி பாடுறா(ள்) - என்பது போல அகவையில் குறைந்த பெண்களைக் கூட ,  - ஆள் விகுதியால் சொல்வது, பிராமணரல்லாச் சாதியாரால், உறவு முறைக்குத் தகாதது என்று கருதப்பட்டது.  இவர்களை "என்னடி " , "ஏன்'டி'  " என '- டீ ' போடுவதும் இல்லாமலிருந்தது.


இப்போது இச்சாதியாரிடையே அகவையிற் குறைந்த பெண்களை மட்டும் - 'ஆள்' விகுதி கொண்டு சுட்டுவதும் 

' டீ ' போடுவதும் தலையெடுத்துவருகிறது.


நான் கள ஆய்வு ஏதும் செய்யவில்லை; பட்டறிவுதான். குடும்ப உறவு முறை சார்ந்தும் பிற சமூக உறவு நிலைகள் சார்ந்தும் தமிழகத்தின் வட்டார, சமூகக் கிளைமொழிகளுக்கேற்ப மேற்குறித்த வழக்குகளில் சில மாற்றங்கள் இருக்கலாம். அவற்றைத்தொகுத்துப் பதிவு செய்யலாம் .


பிராமண வழக்குதான்  பெரும்பாலும் மரபிலக்கண விதிக்கு இணக்கமாயிருக்கிறது. இவ்வழக்கில் உயர்திணையில் அஃறிணை விகுதி மயங்குவதில்லை.


அப்படியானால் , அம்மா சொன்னுச்சு, அக்கா கேட்டுச்சு முதலியனவாக உயர்திணைப் பெயர்களை அஃறிணை விகுதியால் முடிப்பது வழுவா?


இல்லை.வழுவமைதி எனலாம்.


ஏன் இந்த வழுவமைதிகள்?


 இவை குடும்ப, சமூக உறவு நிலைகளின் ஏற்றத் தாழ்வான மதிப்புகளை மட்டுமன்றி உணர்வுபூர்வமான தொடர்பின் தொலைவையும் உள்ளடக்கியிருக்கின்றன.

 ஒன்றன்பால் விகுதியால் சுட்டுவதில் ஒரு நெருக்கம் புலப்படும். மரியாதை ஒருமையில் (...ங்க /ர்கள்) தொலைவு புலப்படும்.


உயர்திணையில் ஒன்றன்பால் விகுதிப் புழக்கம் குறித்துத் தெ.பொ.மீ.அவர்கள் எழுதியுள்ளதாக நினைவு .இப்போது தேடி எடுக்க இயலவில்லை. இவ்வழக்குகள் பற்றி மொழியியலார் ஏற்கெனவே ஆராய்ந்துமிருக்கலாம். பார்க்க வேண்டும்.


இந்த வகையில்,  சமய - குறிப்பாகச் சைவ- நிறுவனங்களில் சுவையான மரபொன்று வழக்கத்தில் உள்ளது.



எடுத்துக் காட்டாக, குறுந்தொகையை முதன்முதலில் பதிப்பித்த சௌரிப் பெருமாள் அரங்கனார் அப்பதிப்பிற்கு எழுதிய உதவியுரையைப் பார்ப்போம்.


சோழவந்தான் கிண்ணி மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச ஸ்வாமிகளாகிய 

'ஸ்ரீமஹா ஸந்நிதாந'த்தை அடிகள் என்று குறிப்பிடும் அரங்கனார், " அடிகள் ...திருவாய் மலர்ந்தருளியது.", " அடிகள்...கையிற் கொடுத்திட்டது " என்று ஒன்றன் பாலால் வினை முற்றுவிக்கிறார்.




சாமி சொன்னிச்சு, சாமி குடுத்துச்சு - என்றெல்லாம் சைவ மடாதிபதிகளைச் சுட்டுவதை நானே கேட்டிருக்கிறேன்.


'- கள்' அஃறிணைப் பலவின்பால் விகுதிதான்.

அது, உயர்வினும் உயர்வு குறித்து வழங்குகிறது.

ஒன்றன்பால் விகுதி மீயுயர்வு- 'தெய்வீக' உயர்வு குறிக்கிறது.


இவை யாவும் மொழி  தேவை கருதித் தானே தனக்குள் அமைத்துக் கொள்ளும் நெகிழ்வுகள்.


வழுவமைதி.

                                                            ------×------


RengaiahMurugan:

துறவின் இலக்கணப் படி உறவாகக் கொள்ளாமல் பொதுவாக விளிக்கும் மரபு உள்ளது. தாங்கள் குறிப்பிடும் படி ஒன்றன்பால் விகுதிமீயுயர்வுவில் தான் பேசுவார்கள். கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் வரலாற்றில் முழுவதும் அது வருது இது போகுது எனவுள்ளது.


நந்தனார் மட நிறுவனர் சகஜானந்தர் தண்ணீர் தாகமெடுக்கையில் பானையில் உள்ள தண்ணீரைப் பருகி விடுவார். அதனைக் கண்ட ஆதிக்கச் சாதியைச் சார்ந்த ஒருவர் சகஜானந்தரைத் திட்ட அச்சமயம் 'சுவாமிகள் அப்படியா செய்தது சகஜானந்தம் அப்படியா செய்தது.இனிமேல் செய்யாது'. 


இது போன்று ஆண்பாலாகவும் பெண்பாலாகவும் விளிக்காமல் ஒன்றன்பாலாக விளிப்பதை சுவாமிகள் வரலாற்றில் பார்க்க முடிகிறது. 


தாங்கள் குறிப்பிடும் சோழவந்தான் கிண்ணிமடம் சிவப்பிரகாச சுவாமிகள் சமாதிக்கு அடிக்கடி சென்று வருபவன் நான். புலவர் அரசன் சண்முகனார் மற்றும் இராமசாமி கவிராயர் போன்றோர் இவரிடம் இலக்கணம் பயின்றவர்கள். இவரது மடத்தில் ஏராளமான இலக்கண மற்றும் மருத்துவ சுவடிகள் கொண்ட பழைய இரும்பு பெட்டி களவாடப்பட்டு அப்பெட்டியில் ஏதோ விலையுயர்ந்த சாமான் இருக்கிறது என்று எண்ணி அந்தப் பெட்டியை திறக்காமல் பல வருடங்கள் கழித்து பெட்டியை திறந்து பார்க்க எல்லா இலக்கண மருத்துவட் சுவடிகளும் பூச்சிகளால் அரிக்கப்பட்டு வீணாகப் போனது.பின்பு வைகைக் கரையில் தூக்கி எறிந்து விட்டார்கள். அதிலிருந்து ஒரு சில வைத்திய சுவடிகள் கிண்ணிமங்கலத்தைச் சார்ந்த ஒருவரால் காப்பாற்றப் பட்டு வருகிறது. மதுரை நாயக்க மன்னர்கள் வம்சாவளியினர் குறித்த ஏட்டுச் சுவடியை என்னிடம் காண்பித்தார். அதை நான் படியெடுத்தேன். அச்சமயம் என்னிடம் அவர் , காவல் கோட்டம் நாவலாசிரியர் அவர்களிடம் இச்சுவடியைக் காண்பித்ததாகவும்  ஆனால் அவர் பெயரை நன்றியுரையில் குறிப்பிடவில்லை என்றும் வருத்தப்பட்டார். அவர் மிகவும் சாதாரணமான ஆள்.நம்ம ஆராய்ச்சியாளர்கள் இயல்பு தெரியாது போலும். உண்மைத் துறவிகள் ஆண் பெண்பாற் கடந்து சமமாகப் பாவிப்பதால் ஒன்றன்பால் விகுதியாக முடித்துப் பேசுவதைக் காணமுடிகிறது. 


- 20 அக்.2019 முகநூல் இடுகை. தலைப்பு மட்டும் மாற்றப்பட்டுள்ளது.

Sunday, October 18, 2020

- கள் ளைத் தேடிய கதை

 

- கள் ளைத்தேடிய கதை
விளக்கத்திலிருந்து வரலாற்றுக்கு

ஆங்கிலத்தில் ஏன் சில பெயர்கள் மட்டும் பன்மை விகுதி பெறவில்லை என்று தேடத் தொடங்கியபோது விளக்க மொழியியலிலிருந்து வரலாற்று மொழியியலுக்குப்  போக நேர்ந்துவிட்டது.

ஆங்கிலத்திலுள்ள Sheep பற்றி வலையுலகில் புகுந்து தேடினேன். ஆக்ஸ்போர்ட் அகராதி வலைப்பூவில்(blog.oxforddictionaries.com) ஒரு சிறு வரலாறு கிடைத்தது. போதாதா!

ஆங்கிலத்தில் கடனாளப் பெற்ற சில சொற்கள் வழக்கில் ஆங்கில இலக்கண மரபுக்குள் உள்வாங்கப்பட்டாலும் சில, தம் மூல மொழி இலக்கண மரபைத் தொடர்கின்றன.

இவ்வகையில் சில சொற்கள் - swine, Sheep, deer, folk ஆகியன - தொல்பழஞ் செருமானியத்திலிருந்து (earliest Germanic) வந்தவை; பெரும்பாலானவை நீளடிப்(long-stem)  பெயர்கள். சில, காலப்போக்கில் ஆங்கிலத்தில் ஒப்புமையாக்கமாக
- s போன்ற பன்மை விகுதிகள் பெற்றன  (thing என்பதன் பன்மை விகுதியற்ற  நிலையிலிருந்து மாறி  இப்போது things எனப்படுகிறது).

தமிழில் இதனையொத்த ஓர் உள்ளார்ந்த மாறுதல் நிகழ்ந்ததென்று கருத இடமுண்டு.
கள்ளொடு சிவணும் அவ்வியற் பெயரே
கொள்வழி உடைய பலவறி சொற்கே (தொல்.சொல்.சேனா.நூ.169 )
1. குதிரை வந்தது
2. குதிரை வந்தன
ஒருமை, பன்மைப் பெயர் இரண்டின் வடிவமும் ஒன்றுதான். பன்மையுணர்த்தக் - கள் சேர்க்கலாமென்கிறது தொல்காப்பியம்.

சில வடிவங்களுக்கு மட்டும் பன்மை விகுதியில்லாத ஆங்கிலம் போலன்றித் தமிழில் உறழ்ச்சியாக -  விகுதியின்மை, விகுதி சேர்த்தல் ஆகிய இரண்டும் சரி என  - கொள்ளப்படுகிறது.

பண்டு அஃறிணை இயற்பெயர்களின் ஒருமை வடிவமே பன்மைக்கும் வழங்கியிருக்கவேண்டும். காலப்போக்கில் - கள் சேர்க்கும் புதிய வழக்கத்தைத் தொல்காப்பியம் பதிவு செய்கிறது.

பிற்கால இலக்கணிகள் பால்பகா அஃறிணைப் பெயரென்று கூறிய, அஃறிணை இயற்பெயர்கள் மிகப் பெரும் பாலானவை - அதுவும் தொல்காப்பிய, செவ்வியல் இலக்கியக் காலத்தில் - தமிழுக்கேயுரிய வேரும் அடியும் கொண்டவை; கடனாளப்பட்டவையல்ல.

தொல்காப்பியத்தில் ‘மக்கள்’ என்னும் பிரிப்பப்பிரியாச் சொல்லாட்சியில் மட்டும் உயர்திணையில் ‘-கள்’ளைக் காணமுடிகிறது. மக, மகவு, மகன், மகள், மகார் என்பன ‘மக்-‘ என்னும் வேரில் (root) கிளைத்தவை.

தமிழுக்குள்ளேயே அரிதான வடிவமான மாக்கள் என்பது மக்களையும் குறிக்க வழங்கியது.

மக்- வேர், மக - அடி எனில், -கள் இணையும்போது, மககள் என்பதைவிட மக்கள் எளிதாகவும் இயல்பாகவும் இருந்திருக்கலாம்; மாக்கள் என்று நீண்டது ஒரு வகை ஈடுசெய் நீட்டமாக இருக்கலாம். இருக்கட்டும்.

அந்தக் -கள், அஃறிணை இயற்பெயர்களிலும் விகுதியாக நுழையத் தொடங்கிய ஒரு கட்டத்தைத் தொல்காப்பியம் சொல்கிறது போலும்.

அப்புறம் உயர்திணையில் உயர்வின்மேல் உயர்வின் அடையாளமாய்க் -கள் பரிணமித்ததை மு.வ. தம் ‘கள் பெற்ற பெருவாழ்வு’ என்னும் கட்டுரையில் விவரித்திருப்பார்.

மன்னன்     - உயர்திணை ஆண்பால் ஒருமை (இலக்கணம்)
மன்னர்         - உயர்வின் அடையாளமாக ஒருமையைப்
                               பன்மையாக்கல் (வழக்கு)
மன்னர்கள்    - உயர்வில் பன்மை (வழக்கு)
மன்னரவர்கள் - மிகுஉயர்வு (வழக்கு)
இப்பெயர்கள் வினைமுற்றிலும் இயைபு (concord) கொண்டன:

மன்னர் வந்தார்
மன்னரவர்கள் வந்தார்கள்.

ஆங்கிலம் கடனாட்சிகளைத் தன்வயப்படுத்தியதெனில், தமிழ் தெளிவும் உயர்வும் கருதித் தனக்குள்ளேயே மாறுதல்களைச் செய்து கொண்டது.

விளக்க மொழியியல் வரலாற்றைக் கருதுவதில்லை. அவ்வகையில்தான் பன்மையில் சுழியுருபைக் (zero morph) கொள்கிறது ஆங்கிலம்.



தொல்காப்பிய நோக்கில் அஃறிணை இயற்பெயர்கள் சுழியுருபு கொண்டிருந்தன என்று விளக்கலாமா?

மெல்ல மெல்ல வந்து , நம் காலத் தமிழில்  அஃறிணைப் பன்மைகளில்  - கள் இன்றியமையாததாகிவிட்டது என்றே சொல்லலாம்.

கொசுறு:
வேடிக்கை என்னவென்றால், 'பேருந்துகள் ஓடாது' , 'பள்ளிகள் திறக்கப்படாது' - என்றெல்லாம்  ஏடுகளிலும் பேச்சுவழக்கிலும் வினைமுற்றில் பன்மை காணாமல்போனதுதான்.

அட , தமிழில் இவற்றின் தடம் !

 அட, தமிழில் இவற்றின் தடம் !

சால்பியம் (classicism)

—————————————

தமிழ் முதுகலை மாணவர் களுக்குப் பாடத்திட்டப்படி, இலக்கிய இயக்கங்கள் சிலவற்றை அறிமுகப்படுத்த வேண்டியதாயிற்று. நான் அறிமுகப்படுத்திக் கொள்ள , கிடைத்த நூல்களைப் படித்தேன். 


"When used to refer to an aesthetic attitude classicism invokes those characteristics normally associated with the art of antiquity, harmony, clarity, restraint, universality,and idealism" - என்கிற சால்பியத்துக்கான பிரித்தானியக் கலைக்களஞ்சிய வரையறையைப் படித்து உள்வாங்கிக் கொண்டிருந்த போது, கம்பனின் ,


புவியினுக் கணியாய் ஆன்ற

         பொருள் தந்து புலத்திற்றாகி

அவியகத்  துறைகள் தாங்கி

          ஐந்திணை நெறியளாவிச்

சவியுறத் தெளிந்து தண்ணென்

          றொழுக்கமும் தழுவிச் சான்றோர்

கவியெனக் கிடந்த கோதா

          வரியினை வீரர்கண்டார்

          (கம்பராமாயணம், மூன்றாவது ஆரணிய காண்டம், சூரப்பனகைப் படலம், 1., வை.மு.கோ. பதிப்பு, 1936)

- என்னும் பாட்டு நினைவில் மின்னியது. இதனைக் கவிதைக்கான பொது வரையறை தருவது என்றே பலரும் கருதியும் சொல்லியும் வந்தனர். மேற்படி, சால்பிய வரையறை கண்ட பின்புதான் நான் கம்பனின் மேதைமை கண்டுணர்ந்தேன். 

இதனை விளங்கிக் கொள்ளக் கம்பனின் தமிழ் ஊற்றம் இராமாவதாரத்தில் ஆங்காங்குப் புலப்படுவதைக் கருத வேண்டும்.தமிழை, தமிழ்த் தன்மைகளை, தமிழ்க் கலைகளை, தமிழ்நாட்டை வாய்ப்பு நேருமிடமெல்லாம் போற்றுவது ( ச. சிவகாமி, கம்பன் களஞ்சியம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2009, பக். 132 - 133)வெற்றுப் புகழ்ச்சியன்று கம்பன் உற்றுணர்ந்த உண்மை


யுத்தகாண்டத்தில் வரும் ஒரு பாட்டைப் பார்ப்போம்


குமிழி நீரோடும் சோரி கனலொடும் கொழிக்கும் கண்ணான்

தமிழ் நெறி வழக்கம் அன்ன தனிச் சிலை வழங்கச் சாய்ந்தார் 

அமிழ் பெரும் குருதி வெள்ளம் ஆற்று வாய்முகத்தின் தேக்கி

உமிழ்வதே ஒக்கும் வேலை ஓதம் வந்து உடற்றக் கண்டான்

[ கவிச்சக்கர வர்த்தி கம்பர் இயற்றிய இராமாயணம், யுத்த காண்டம் ( ஐந்தாம் பாகம்)     இராவணன் களங்காண் படலம், 24(9779),    அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 1970 ]*

என்பது , இராவணனின் படைவீரர்கள் செத்து மாய்தலை இராவணன் துன்பமும் சினமுமாகக் கண்டு சோரும் காட்சிகளுள் ஒன்று. இதில், 'தமிழ் நெறி வழக்கம்' என்னும் தொடர் ஊன்றி நோக்கத்தக்கது. ' தமிழ் மொழியில் மரபாகவுள்ள வழக்குகள்' எனப் பொத்தாம் பொதுவாகப் பொருள் கூறியுள்ளார் வை.மு.கோபாலகிருஷ்ணமாசார்யார் [கம்பராமாயணம் ஆறாவது யுத்தகாண்டம் (பிற்பகுதி), இராவணன் களங் காண் படலம் 25 ( 3602) மூர்த்தி பிரிண்டிங் ஒர்க்ஸ், 1948]

*௸ அண்ணாமலைப் பல்கலை.ப் பதிப்பில் இப்பகுதிக்கு உரை எழுதிய வித்துவான் செ.வேங்கடராமச் செட்டியார், ' தமிழ்க்குரிய அகப்பொருளில் வரும் நெறிமுறைகள் '

என்பார். குறிப்புரையில் , ' தமிழ்நெறி என்றது அகப்பொருள் நெறியை . தமிழ் நெறி விளக்கம் என ஓர் அகப்பொருள் நூல் உண்மையும் இங்கு நினையலாம் ' என்பார்.

ஆம். அது அகப்பொருள் நெறியே என்பதைப் , ' புவியினுக் கணியாய்...'.  முன்னறிவிக்கிறது.அது தமிழுக்கேயுரிய, வகைமை வளம் சான்ற, தனிநெறி என உணர்ந்து, " தமிழ்நெறி வழக்கம் அன்ன தனிச் சிலை " என இராமபிரானின் ஒருதனி  வில்லுக்கு உவமையாக்குகிறான் கம்பன்.

அன்பொடு புணர்ந்த ஐந்திணை நெறி , வன்பொடு புணர்ந்த விற்படைக்கு உவமையாகிறது.

வன்பொருளுக்கு நுண்பொருள் உவமை. இப்போதைக்கு இந்தக் கம்ப நயத்தை விளக்குறுத்துநர்களிடம் - வியாக்கியான கர்த்தாக்களிடம் - விட்டுவிடுவோம்.

அகப்பொருள் நெறி தமிழ்நெறி என்பதை வெறும் மரபாக , வழிவழி வந்த வாய்பாடாக அன்றி ,  அவ்விலக்கியங்களில் திளைத்து , உள்ளார்ந்த இயல்புகளை  உணர்ந்து தன் காலக் காப்பியச் செய்யுள் மரபிற்கியைய- இரட்டுற மொழியும் கவித்துவத் திறம் தோன்ற - அகப்பொருளியல்புக் கூறுகளைத் தொகுத்துப் பதிவு செய்திருக்கிறான் கம்பன்.

புவியினுக்கணி             Universality       

ஆன்ற பொருள்              Idealism         

அவி (யகத்துறை)          Restraint

தெளிந்து                          Clarity

ஒழுக்க(மு)ம் (ஒழுங்கு) Harmony

சான்றோர் (கவி)             Antiquity


என்று ஏறத்தாழப் பிரித்தானியக் கலைக்களஞ்சிய வரையறை ஒத்துப் போவதைக் கண்டு மெய்சிலிர்த்தது. 

கம்பன் முதலிற் குறிப்பது 'புவியினுக்கு அணி'யாதலையே.'பூமிக்கு அலங்காரமாய் '

என்பது வை.மு.கோ.வின் பதவுரை. இப்பாட்டில் அகப்பொருள் முதன்மைப்படுத்துவது பற்றிச் சற்று விரிவாகவே ஆசார்யார் உரைவரைந்துள்ளார். விரிப்பிற் பெருகும்.

ஒன்று மட்டும். ' புலத்திற்றாதல் - தன்னைக் கற்பேர்க்கு நுண்ணறிவை விளைப்பது' . இது பிரித்தானியக் கலைக்களஞ்சிய வரையறையில் விதந்தோதப் படாதது.

பண்டை உரையாசிரியர்கள் சங்கப் பாக்களைச் சான்றோர் செய்யுள் என்றே பரவலாகக் குறிப்பிடுவார்கள்.

கம்பன், சான்றோர் கவி எனக் குறித்தது சங்கச் சான்றோரைத்தாம் என்பது தெளிவு.

எனவே , தமிழ் மரபில் classicism என்பதைச் சால்பியம் எனல்  பொருந்தும். வழக்கின் வன்மை கருதிச் செவ்வியம் எனலும் சாலும்.

சால்பியல்/செவ்வியல் என்பதைக் classic/classical என்பதைக் குறிக்க வழங்கலாம்.



பழந்தமிழர் வாழ்வியலை விளக்கும் தம் நூலுக்குத் தமிழறிஞர் சு.வித்தியானந்தன்

'தமிழர் சால்பு'(1954) என்று பெயரிட்டது எவ்வளவு பொருத்தம்!

மேலைச் செல்வாக்குக் கம்பனிடமோ , கம்பனின் செல்வாக்கு மேலையரிடமோ இருக்க வாய்ப்பில்லை என்பது உறுதி!

பிறகு எப்படி, இவ்வளவு துல்லியமான ஒற்றுமை?

ஒன்றின் மீது ஒன்று செல்வாக்கு/தாக்கம் செலுத்தாமலேயே உலகப்பொதுவான  உணர்திறன் சில நிலவலாம் என்பதற்கு இது வன்மையான சான்று.


 

                                                                        -x-


பனுவலின்பம் ( The Pleasure of the Text)

————————————————————————

திரு. வே.மு.பொதியவெற்பன் அவர்கள், " வாசிப்பு என்பதே உரையாடல்தான் " (இந்து தமிழ், 28.07.2018) என்றதைப் படித்தவுடன் பாரதிதாசன் நினைவுக்கு வந்தார். 

அவர் வாசிப்பை எப்படிச் சொல்கிறார் பாருங்கள் :

தனித்தமைந்த வீட்டிற்புத் தகமும் நானும்

     சையோகம் புரிந்ததொரு வேளை     தன்னில் 

இனித்தபுவி இயற்கையெழில் எல்லாம் கண்டேன்;

      இசைகேட்டேன்! மணம்மோந்தேன்! சுவைகள்

                                                                             உண்டேன்! 

மனித்தரிலே மிக்குயர்ந்த கவிஞர் நெஞ்சின்

     மகாசோதி யிற் கலந்த தெனது நெஞ்சும்

சனித்ததங்கே புத்துணர்வு! புத்த கங்கள்

      தருமுதவி பெரிது!மிகப்பெரிது கண்டீர்!(புத்தக சாலை)

சையோகம் = கலக்கை, இரு பொருள்களின் கூடல், புணர்ச்சி - எனப் பொருள்கள் தருகிறது சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி (LEXICON). 

பாரதிதாசன் எப்பொருளில் கையாண்டுள்ளார்? 

" மங்கை ஒருத்தி தரும் சுகமும்-எங்கள் 

மாத்தமிழ்க் கீடில்லை என்றுரைப் போம் " 

என்று பாடியவராயிற்றே!அவர் பாடல்களில் தோய்ந்தவர்கள் சையோகம் என்பதைப் 'புணர்ச்சி' என்னும் பொருளில்  கையாண்டிருக்க வாய்ப்பு மிகுதி என்பதை உணர்வர்.

வாசிப்பை இப்படியா சொல்வது!

அமைப்பியம், குறியியல், பின் அமைப்பியம் முதலியவற்றில் செல்வாக்குச் செலுத்திய ரோலண்ட் பார்த்-திடம் போவோம்.


பனுவலின்பம் ( பிரஞ்சில் Le plaisir du texte ; ஆங்கில மொழிபெயர்ப்பில் The Pleasure of the Text) என்பது அவரது நூல் (1973)




அவர்,பனுவலின் விளைவுகளை , இன்பம் (plaisir - pleasure) , பேரின்பம்/கலவி உச்சம் ( jouissance- bliss\orgasm) - என இரண்டாகப் பகுக்கிறார்.

பனுவலை  படிப்பாளப் பனுவல் / படிப்புறு பனுவல்(texte lisible- readerly text/ readable text)  எழுத்தாளப் பனுவல்/ எழுத்துறு பனுவல்(texte scriptible- writerly text/writable text) என்று வகைப்படுத்துகிறார்.

பனுவலின்பம் படிப்பாளப் பனுவலோடு தொடர்புடையது.

பனுவல் பேரின்பம் எழுத்தாளப் பனுவலோடு தொடர்புடையது; இலக்கிய மரபுகளைத் தகர்த்து படிக்குநரின் தன்னிலை நோக்கை முறித்து வெளியேறச் செய்வது (நன்றி : Wikipedia)

பார்த்து-க்கு முன்பே பாரதிதாசன் பனுவலின்பக் கோட்பாட்டைக் கண்டு விட்டார் என்றோ , பாரதிதாசன் பார்த்-துக்குக் கோட்பாட்டுப் பாதை போட்ட முன்னோடி என்றோ  -தாழ்வு மனப்பான்மையால் -  வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட வேண்டியதில்லை.

பிரஞ்சுப் புதுவையில் வாழ்ந்த பாரதி தாசன் பனுவலின்பத்தைக் கலவியின்பமாகக் கண்டிருக்கிறார் என்பது கருத வேண்டியதாகும்.

பழகிய பாரதிதாசன் வழியாக, ரோலண்ட் பார்த்-தின் புதிய கொள்கை நோக்கி மாணவர்களை அழைத்துச் செல்வது எளிது என்பது என் ஆசிரியப் 'பனுவல்' .

   

கொசுறு:

பாரதிதாசன் புத்தகத்தைப் பெண்ணாக உருவகித்துச் சையோகம் புரிந்தார்.

பெண்ணைப் புத்தகமாக உருவகித்து  " புத்தம் புதிய புத்தகமே ! உன்னைப் புரட்டிப் பார்க்கும் புலவன் நான் " என்று வாலி பாட்டெழுதினார். 

இவை கருத்துநிலையிலும் ஒன்றுக்கொன்று மறுதலையாவை.

                                           -x-



நகைக் கருங்கூத்து (Black Humor)

————————————————————

2018இல் வந்த 'கோல மாவு கோகிலா' என்னும் திரைப்படத்தைச் சிலர் Black Comedy வகையினதாகக் கண்டு மதிப்புரைத்திருந்தனர். அதன் தூண்டலால் இக்கட்டுரை இயன்றது.



Black Comedy/Dark Comedy/Gallows Humor-எனப்படுவது இடக்கர், அமங்கலம், அருவருப்பு முதலிய இழி சூழல் சார்ந்த நகை .

Black Humor (பிரஞ்ச்: humour noir ) என்பது மீநடப்பியக் கொள்கையாளர் ஆந்திரே பிரத்தான் (1896-1996) 1935 இல் ஆக்கிய தொடர் . இவ்வகைப் போக்குக் கிரேக்க நாடக ஆசிரியர் அரிஸ்டோபனிஸ் (ஏறத்தாழப் பொ.கா.மு. 446 - 386) காலத்திலிருந்தே காணப்படுவதாகத் திறனாய்வாளர்கள் கருதுகின்றனர்.


ஏறத்தாழ 1500 ஆண்டு களுக்கு முந்தைய கலித்தொகையில் (பா.65) இழி சூழல் சார்ந்த நகைக்கூத்தொன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதனைக் குறிக்கக் கருங்கூத்து என்னும் தொடரும் இடம் பெற்றிருப்பது வியப்புக்குரியது.

நச்சினார்க்கினியர் அப்பாட்டைத் தோழி  தலைவியிடம் (காதலியிடம் ) கூறுவதாகவும் , ஆனால், இரவில் தன் காதலியைச் சந்திக்க வந்து, காதலியின் வீட்டிற்கு வெளிப்புறத்தில் நிற்கிற தலைவன் (காதலன்) பற்றித் தெரியாதது போல் அவன் காதில் விழுமாறு கூறியதாகவும் கொள்கிறார்; தோழி கூறுவதும் நிகழ்ந்ததன்று , கற்பனை என்கிறார்; இவற்றைத் தொல்காப்பிய விதிகள் கொண்டு நிறுவ முற்படுகிறார்.

 நச்சினார்க்கினியரின் இந்த நோக்கிற்குப் பாட்டில் அகச் சான்று ஏதுமில்லை. 

தலைவி கூறும் உண்மை நிகழ்ச்சி என்று கொள்ளும்படியாகப் பாடல் அமைந்துள்ளது.

நள்ளிருளில் தன் வருகையைத் தெரிவிக்கத் தலைவன் எழுப்பும் ஒலிக்குறிப்புகளை உற்றுக் கேட்கத் தலைவி நள்ளிரவில் வீட்டுக்கு வெளியே சென்றாள். அப்போதுதான் அந்தக் கூத்து நடந்தது. அதைத்தோழியிடம் விவரிக்கிறாள்.

வழுக்கைத் தலையும் கருங்குட்டத்தால் குறைந்த கை கால்களும் கொண்ட முடவனாகிய கிழட்டுப் பார்ப்பனன் காமச் சீண்டலையே கடமையாகக் கொண்டு தெருவில் ஒளிந்து திரிவதைப் பற்றிய எச்சரிக்கையைக் கேளாமல் நள்ளிரவில் போனதால் ஊரே சிரிக்க வாய்ப்பான அந்த நகைக்கூத்து நடந்ததென்கிறாள்  தலைவி.

"பெண்கள் வரும் நேரமல்லாத இந் நள்ளிரவில் இங்கு நிற்கும் நீ யார்?" என்று குனிந்து பார்த்தவாறு வினவி,

 " சிறு பெண்ணே, என்னிடம் அகப்பட்டுக் கொண்டாய்" என்று வைக்கோலைக் கண்ட மாடு போல நகராமல் நின்று, "இந்தா வெற்றிலை போடு" என்று தன் சுருக்குப் பையைத் திறந்து, " எடுத்துக் கொள்" என்று தந்தான்.

 அவள் எதுவும் பேசவில்லை. அவள் பிசாசோ என்று அஞ்சிய கிழவன், " பெண் பிசாசே, நான் ஆண் பிசாசு, என்னை வருத்தினால் உன் பலியை (உணவை) நான் பிடுங்கிக் கொள்வேன்" என்று உளறிக் கொட்டினான். அவள் மணலை அள்ளி அவன் மேல் எறிந்தாள். தனியாக நிற்கும் பெண்களிடம் காமச் சீண்டல் புரிவதையே கடமையாகக் கொண்ட அவன் அலறிக் கூச்சலிட்டவாறு ஓடினான்.

" பெரு நகை அல்கல் நிகழ்ந்தது " ( கலி. 65 : 2 ) என்று தொடங்கும் பாட்டு "முது பார்ப்பான்/ வீழ்க்கைப் பெருங்கருங்கூத்து " (கலி. 65 : 28 - 29) என்று முடிகிறது.

பெரு நகை , பெருங்கருங்கூத்து - என்னும் இரு தொடர்களையும் இயைத்துக் காண வேண்டும். (பெரு)  நகைக் கருங்கூத்து என்பது கருத்து .

நகைக் கருங்கூத்து என்பதிலிருந்துதான், Black Comedy உருவாக்கப்பட்டதென்று கருத இடமேயில்லை. என்றாலும் சிந்தனை ஒத்திருப்பது விந்தைதான்.


- கம்பன் கண்ட சால்பியம்(25 சூலை 2018),பனுவலின்பம்: பாரதிதாசனும் பார்த்-தும் (29சூலை2018),நகைக் கருங்கூத்து (செப்.8, 2018) என்னும் முகநூல் இடுகைகளின் தொகுப்பு. 'கம்பன் கண்டசால்பியம்' இப்போது விரிவுபடுத்தப்பட்டுள்ளது.


 

இலக்கண மறுப்பு என்னும் பொறுப்பின்மை

வட்டார வழக்குதான் மக்கள் மொழி .அதுதான் உயிருள்ளது என்று மிகையழுத்தம் தரும் குழு ஒன்று விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்படித்தான் எழுத...