Thursday, February 15, 2024

அம்மாவின் உறுதி! (பாலசுந்தரனார் நாட்குறிப்புகளில் ...)



 அம்மாவின் உறுதி! 

(பாலசுந்தரனார் நாட்குறிப்புகளில் ...)


சென்னைப் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளில் இளநிலைப் பட்ட வகுப்புகளுக்குப் பகுதி I தமிழில் பாலசுந்தரனாரின் ' புலவர் உள்ளம் (தொண்டு) ' பாடமாக வைக்கப்பட்டுவிட்டது. அந்தக் காலத்தில் திங்கள் தோறும் ஊதியம் வராது. கீழ்த்திசை (Oriental) மொழியாசிரியர்களுக்கு ஊதியமும் குறைவு.பெரும் எண்ணிக்கையில் அச்சிட அவரிடம் பணமில்லை. வெளிப் பதிப்பகங்களுக்குக் கொடுக்க மனமில்லை (இது சரியானது).


இந்த நிலையில் வேறு வழி தோன்றாமல்  மாமனாரிடம் - கடனாகத்தான் -  கேட்டுப் பார்க்கலாம் என்ற எண்ணம் எழுந்ததது .  துணைவியார் பங்கசவல்லி அம்மையாரிடம் தெரிவித்தார். இது பற்றி 1971 பிப்பிரவரி 20 ஆம் நாட்குறிப்பில் எழுதியுள்ளார்.


துணைவியார் மறுத்துவிடுகிறார். 


       கொண்ட கொழுநன் குடிவறன் உற்றெனக்     

       கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள் ( நற்றிணை 110)


 என்றது  இலக்கியக்  குறிக்கோளன்று ; நடப்பு - இருபதாம் நூற்றாண்டிலும்.


அம்மாவிடமிருந்த இந்தச் சமரசமற்ற உறுதியை, பிடிவாதத்தை, கடுமையை நான் நன்குணர்ந்தவன். இதனால் உறவினர் பலரும் அவரிடம் ஒரு பாதுகாப்பான தொலைவைப் பேணிக்கொண்டிருந்தார்கள். 


இத்தகைய சூழல்களில் பிடிவாதமான நிலையெடுத்து நிற்கும் குணம் ஓரளவாவது என்னிடம் இருப்பதற்குக் காரணம் அம்மாதான் என்று எண்ணுகிறேன்.


அப்பாவுக்கு நண்பர் உதவியதை பிப்.22 ஆம் நாட்குறிப்பில் எழுதியுள்ளார்.

No comments:

Post a Comment

வள்ளுவன் கள்வன்*

 வள்ளுவன் கள்வன்* ————————————--- காமம் என்பது பழந்தமிழில் காதலைக் குறித்தது. திருக்குறள் மூன்றாம் பாலின் சொல்லாட்சி எண்ணிக்கையில் வாக்கெடுப...