Thursday, February 15, 2024

"தேவாரத் திருமுறைகளுக்கு ஒரு நல்ல பதிப்பு"பாலசுந்தரனார் நாட்குறிப்பு




 " தேவாரத் திருமுறைகளுக்கு ஒரு நல்ல பதிப்பு"-மூதறிஞர் நீ.கந்தசாமிபிள்ளை

______________________________________________________________________________________


பாவலரேறு ச.பாலசுந்தரனார் நாட்குறிப்பு எழுதும் வழக்கத்தை 1970 இலிருந்து  தொடங்கியிருக்கவேண்டும். 1970 முதல் 2003 வரை அவர் எழுதியுள்ள நாட்குறிப்பேடுகள் - இடையில் ஓரிரு ஆண்டு விடுபாடுகளுடன் - கிடைத்துள்ளன.


அவர் நாட்குறிப்பேடுகளை விலை கொடுத்து வாங்கியதில்லை ;  அன்பளிப்பாகக் கிடைத்தவற்றில் எழுதியுள்ளார்.  முந்தைய ஆண்டின் ஏட்டில் அச்சிடப்பட்ட நாள் முதலியவற்றைத் திருத்தியும் , தாமே தைத்த ஏட்டில் நாளிட்டும் எழுதியுள்ளார். 


கல்லூரி நிகழ்வுகள், ஊதியம், வங்கி இருப்பு , பணம் எடுத்தல் போடுதல், கொடுக்கல் வாங்கல்கள், நிகழ்ச்சிகளுக்குச் செல்லல், மதிப்பூதியம் , நூலாக்கத்திற்கான புற அகத் தூண்டல்கள், நூல் அச்சாக்கம்,  நூல்களை விற்பனைக்கு அனுப்புதல், நூலக ஆணை,வரவு செலவு , மாதாந்திர அன்றாடச் செலவுகள் , இவற்றால் நேரும் இன்ப துன்ப மன நிலைகள் , சந்திப்புகள் , உடல் நலக்குறைவு , ஆங்காங்கு இவை சார்ந்த கருத்துகள் முதலியன இடம் பெற்றுள்ளன. 


ஒரு கட்டத்தில் தொடர்ந்த குருதிப் போக்கும், பிற்காலத்திய தலை சுற்றலும் பற்றி அவ்வக் கட்டத்தில் மீண்டும் மீண்டும் எழுதியுள்ளார்.


சில நாள்களில் , "எங்கும் செல்லவில்லை "  என்று மட்டுமே இருக்கும் ; ஓரிரு சொற்களில் காரணத்தை எழுதுவதுமுண்டு. சில நாள்கள் எதுவும் எழுதாமல் விடுவது முண்டு.


ஒரு கட்டத்தில் துணிகளைத் துவைத்துப் பெட்டி போட்டது பற்றி அவ்வப்போது எழுதியுள்ளார்.¹


சலிப்பூட்டும் குறிப்புகளோடும் ,இடையிடையே சில போது , குடும்பம், உறவு, நட்பு , தமிழ்ப் புலமையுலகம் முதலியன பற்றிய நெருடலான குறிப்புகளோடும் அவர் எழுதியவற்றை  அப்படியே  இப்போது வெளிப்படுத்த இயலாது; கூடாது ( அவர் இருந்திருந்தால் நானே கூட இவற்றில் தலையிட்டிருக்கமாட்டேன்).


வெளிப்படுத்த வாய்த்த சிலவற்றைத் தேர்ந்தெடுத்து - காலவரிசை கருதாமல் - அவ்வப்போது பகிர்ந்துகொள்ளலாம் என்று கருதுகிறேன்.


1970 பிப்பிரவரி 02 ஆம் நாள், " மாலை N.K. அவர்களிடம் சென்றிருந்தேன்... தேவாரத் திருமுறைகளுக்கு ஒரு நல்ல பதிப்பு அடையாறு நூல் நிலையத்திற்காகச் செய்ய வேண்டுமென்றார் " என்று எழுதியுள்ளார் ச. பா.

தொடர்ந்து ,  பிப்பிரவரி 13 அன்று நீ.க. 26 பதிகங்களைப் பிரித்தெழுதச் சொன்னதாகவும் , மார்ச் 03 அன்று பிரித்தெழுதிய தாள்களை ஒப்படைத்ததாகவும் எழுதியுள்ளார். ஆனால் இப்பதிப்பு வந்ததாகத் தெரியவில்லை. கையெழுத்துப் படிகள் ஏதும் அடையாறு ( பிரம்ம ஞான சபை ?) நூலகத்தில் இருக்குமா? ²


-----------------------------------------------------


1.   துணிகளை வாரிப்போட்டு - சோப்பும் வீணாகாமல் துணியும் நோகாமல் மாங்கு மாங்கென்று துவைத்து , காயப்போடும் போதே முடிந்த வரை சுருக்கம் நீக்கிவிடுவார்.


பெட்டி போடுவதற்குச் சடங்கு போன்ற வரிசையான செயல்முறைகள் உண்டு. முதலில் தரையில் ஒரு கெட்டிச் சமுக்காளம் பரப்பி அதன்மேல்  தூய விரிப்பைச் சுருக்கமில்லாமல் மெத்தென்று விரித்துக்கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரையும் ஒரு துணி முடிச்சையும் ஆயத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பெட்டி போடப்படும்  துணியில் சுருக்கம் இருந்தால் நீரைத் துணியில் நனைத்து நீவவேண்டியிருக்கும். இருப்புச் சலவைப்பெட்டியில் கரி நிரப்பி எரியூட்டிச் சூடேற்ற வேண்டும்.  சலவைப்பெட்டியின் வழவழப்பான கீழ்ப்பக்கத்தைத் தரையில் வைக்கக் கூடாது; அதற்கென்று உள்ள மனையில்தான் வைக்க வேண்டும். அவ்வப்போது கரியில் பூக்கும் சாம்பலை விசிறிவிட வேண்டும்.தீப்பொறி படாதவாறு காற்றுக்கு எதிர்த்திசையில் அமர வேண்டும்.  பொறி விழாதவாறு துணிகளையும் அத்திசையில் வைத்துக் கொள்ள வேண்டும். சலவைப்பெட்டியின் எடை ஒரு கிலோவுக்குக் குறையாது. குத்துக் காலிட்டுத் தரையில் அமர்ந்து சலவைப் பெட்டியைத்தூக்கித் துணியின்மேல் வைத்துக் குறிப்பிட்ட திசையில் தேய்ப்பதற்குக் குறைந்தபட்சத் தொழில் திறனும், உடல் வன்மையும் வேண்டும். ஏறத்தாழ முப்பது துணிகளை ஒரே அமர்வில் பெட்டிபோட்டுவிடுவார்.அப்புறமும் துணிகளை அடுக்கி வைத்தல் பெட்டியிலுள்ள சாம்பல் பூத்த கரியைக் கொட்டிவிட்டு , பெட்டியில் கீறல் விழாமல் உரிய இடத்தில் வைத்தல் முதலியவற்றையும் நறுவிசாகச் செய்து முடிப்பார். 


அது , ஏறத்தாழ முழு நாளை எடுத்துக் கொள்ளும். எனவேதான் அதனைக் குறிப்பிட்டுள்ளார் என்று தோன்றுகிறது.



2.  பிரஞ்சு இந்தியக் கழகம் வாயிலாக,  பேரறிஞர் பண்டித வித்துவான் தி.வே.கோபாலையர் பதிப்பித்து மூன்று பகுதிகளாக (1984, 1985, 1991 ) வெளியிட்ட தேவாரம் - பண்முறைப் பதிப்பு , தேவாரப் பதிப்புகளின் உச்சம். தேவார ஆய்வுத்துணை என்னும் மூன்றாம் பகுதி ஒரு தேவாரக் களஞ்சியம். இப்பதிப்புக்கு நீ. க. அவர்களின் திருவாசகப் பதிப்பை முன்னோடி எனலாம் ]

No comments:

Post a Comment

இலக்கண மறுப்பு என்னும் பொறுப்பின்மை

வட்டார வழக்குதான் மக்கள் மொழி .அதுதான் உயிருள்ளது என்று மிகையழுத்தம் தரும் குழு ஒன்று விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்படித்தான் எழுத...