Saturday, January 2, 2021

தொல்காப்பியரின் அரசியல் நுண்ணுணர்வு !

 தொல்காப்பியரின் அரசியல் நுண்ணுணர்வு !

  

       பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே 

       அங்கதம் முதுசொ லவ்வேழ் நிலத்தும் 

       வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின் 

        நாற்பே  ரெல்லை யகத்தவர் வழங்கும் 

        யாப்பின் வழியது என்மனார் புலவர் (செய்யுளியல் 77 )


என மூவேந்தர் ஆட்சிப்பரப்பைக் கொண்டு தொல்காப்பியர் தமிழக  எல்லையை வரையறுக்கிறார். இஃது அகச்சான்று என்பது குறிப்பிடத்தக்கது (பனம்பாரனார் பாயிரம் புறச்சான்று). செய்யுளியலில் உள்ள இந்த நூற்பாவில்  தொல்காப்பியர் மூவேந்தரை 'வண்புகழ்' என்னும் அடைகொடுத்துப் போற்றுவது உண்மைதான்; அவர்கள்பால் அவர் கொண்ட மதிப்புப் புலனாவதும் உண்மைதான். ஆனால் வேந்தரைப் போற்ற இஃது இடமில்லை; தொடக்கத்தில் போற்றியிருந்தாலும் பொருளுண்டு. அவ்வாறெனில் ஏன் செய்யுளியலின் இடையிலே - தொல்காப்பியத்தின் 1339 ஆவது நூற்பாவில் - இந்தப் போற்றல். 


இதற்கு முந்தைய நூற்பா:

        எழுத்து முதலா ஈண்டிய அடியின்

        குறித்த பொருளை முடிய நாட்டல் 

        யாப்பென மொழிப யாப்பறி புலவர் ( செய்யுளியல் 76)

        

யாப்பு என்பதன் பொதுப் பொருளை வரையறுத்து, அதன் வகைகளைக் கூறும் தொகைச் சூத்திரத்தில் அந்த வகைகள் இத்தனை எனச் சுட்டி , எண்ணிக்கையை வரையறுத்து, அவை வழங்கும் 'நாற்பேரெல்லை'களைக் குறிப்பிடுகிறார் தொல்காப்பியர்.


 பனம்பாரனார் பாயிரம் போல் நில எல்லையை மட்டும் தருவதுதான் ஓர் இலக்கண நூலின் தன்மைக்குப் பொருத்தமானது. வடவேங்கடம் தென்குமரி ஆயிடை நிலப்பரப்பின் வழக்கும் செய்யுளும் முந்துநூலும் பற்றி அந்தக் காலத்தில் எவ்வளவு இயலுமோ அவ்வளவு முயன்று புலமையும் பட்டறிவும் எய்திய தொல்காப்பியரின் உள்ளுணர்வில் ஆட்சிப் பரப்பின் - அரசியல் தன்மையின் - முக்கியத்துவம் உறைந்துள்ளது என்றே தோன்றுகிறது. 

 

அவர் தமிழோடு  பாகதம் (பிராகிருதம்) , சங்கதம் (சமற்கிருதம்) ஆகியவற்றில் பயிற்சியும் வழக்கில் இருந்த வேறுபிற மொழிகள் பற்றிய அறிவும் உடையவராக இருந்திருக்கவேண்டும்; இவ்வறிவால் இலக்கண அறிஞராக மட்டுமன்றித் தம் காலச் சமூக அரசியல் வரலாறு பற்றிய நுண்ணறிவும் உடையவராக இருந்திருக்கவேண்டும் என்று உய்த்துணர முடிகிறது.


எனது இந்த உய்த்துணர்வுக்குக் காரணம் தொல்லெழுத்தியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்களின் ஆய்வு  நூல்.தமிழகத்தில் தமிழ் வழங்கிய அதே காலத்தில் (பொதுக் காலத்திற்கு முன் 3 ஆம் நூற்றாண்டு முதல் பொதுக் காலம் 6 ஆம் நூற்றாண்டு வரை என்பது மகாதேவன் கருத்து) கன்னடம் , தெலுங்கு ஆகியன மக்கள் மொழிகளாகப் புழக்கத்தில் இருந்ததற்கும் அவற்றில் இலக்கியங்கள் தோன்றியதற்கும்  சான்றுகள் உள்ளன. ஆனால் அத்தொல்லிலக்கியங்கள் கிட்டவில்லை.


 தமிழ்ப் பிராமிக் காலத்தில் [ 'தமிழி' எழுத்துக் காலத்தில்*]கன்னட, தெலுங்கு மொழிகள் பேச்சுவழக்கில் இருந்த பகுதிகளில் கல்லில் , செம்பில், காசில் , முத்திரையில் , பானையோட்டில் பிராகிருதமே இடம்பெற்றது என்கிறார் ஐராவதம் மகாதேவன் (ப.198). காரணம் அப்பகுதிகள் அயலவராகிய நந்தர்- மௌரியர் ஆளுகை எல்லைக்குள் இருந்தன. ஆளுவோர் மொழியே வரிவடிவில் செல்வாக்குச் செலுத்தியது. 

பொ.கா. முதலாம் நூற்றாண்டில் சாதவாகன மரபில் வந்த ஹாலா என்னும் மன்னன் தொகுத்த [மராத்திய] பிராகிருத நூலாகிய 'காதா சப்தசதி'யில் ஏறத்தாழ 30 தெலுங்குச் சொற்கள் கண்டறியப்பட்டுள்ளன (௸,ப.199)


ஆனால் தமிழகத்தில் எழுத்தறிவின் (literacy) நிலைமை வேறாக இருந்ததற்கு அரசியல்  சுதந்திரத்தை ( political independence) முதற்காரணமாகச் சொல்கிறார் ஐராவதம் மகாதேவன் (௸,ப. 199). தொல்காப்பியர் இதனை உணர்ந்திருப்பார் என்பதற்குச் சான்றோர் செய்யுளுள் உள்ள குறிப்புகள் சில இணக்கமாயிருக்கின்றன.

'மண்டிணி கிடக்கைத்  தண்டமிழ்க் கிழவர்

முரசு முழங்கு தானை மூவர்...' 

- என்கிறார் வெள்ளைக்குடி நாகனார் (புறநானூறு 35: 3 - 4) .இதற்கு  " மண் செறிந்த உலகத்தின்கண் குளிர்ந்த தமிழ்நாட்டிற்கு உரியராகிய முரசொலிக்கும் படையினையுடைய மூவேந்தர் ..." என்று உரை காண்கிறார் பழைய உரையாசிரியர்.ஏறத்தாழத் தொல்காப்பியர் கூறும் 'தண்பொழில் வரைப்பு'.


தமிழின் தனித்த மரபை  - ஒலி வடிவம், வரிவடிவம், சொல் வகைகள் , வழக்குகள் ,செய்யுளாக்கம் ஆகியவற்றின் மரபை - பேணுவதில் தன்னாட்சிக்குரிய பங்கை அவர் நுண்ணிதாக உணர்ந்திருக்கிறார். எனவேதான் இலக்கண நூலில் தமிழ் வேந்தரைக் குறிப்பிட்டுத் தமிழக எல்லையை வரையறுத்திருக்கிறார்

இஃது 'என்மனார் புலவர் ' என்னும் மேற்கோள் வாய்பாட்டு நூற்பா. இந்த வாய்பாடு யாப்பு வகைகளுக்கானதா? வகை எல்லை இரண்டுக்குமானதா? என்று தெரியவில்லை. 

மூவேந்தர் ஆட்சியைச் சுட்டித் தமிழக எல்லையை வரையறுக்கும் பார்வை தொல்காப்பியருக்கு முந்தையதாகவும் இருக்கலாம். 

இந்த மரபை மேற்காட்டிய புறப்பாட்டும் (35) உறுதிசெய்கிறது.

இவ்வாறாயின் , இதில் தொல்காப்பியர்க்கும் உடன்பாடு என்பதோடு இலக்கண நூலுக்கும் இஃது ஏற்புடையது என்று அவர் கருதியிருப்பது அவரது அரசியல் நுண்ணுணர்வைக் காட்டுவதாகவே அமைகிறது.





பட விளக்கம்:

நேகனூர்ப் பட்டித் தமிழ்ப் பிராமிக் கல்வெட்டில் 'தாயியரு' (தாயார்) , 'சேக்கந்தண்ணி' (சேக்கந்தி அண்ணி) ஆகியன கன்னட வழக்கு வழிப்பட்ட சொற்கள்  என்கிறார் ஐராவதம் மகாதேவன்; அண்ணி என்பது சமணப்பெண் துறவியைச் சுட்டும் பெண்பால் உயர் சொற்கிளவி என்கிறார்.


[எருமி நாடு  ( = தமிழ் - எருமை , கன்னடம் , துளு - எர்மெ , கோண்டி - எர்மி ),    பொசில்=வாயில் (கன்னடம் : ஹொசிலு)முதலிய கன்னட வழக்கு வழிப்பட்ட வேறு சில சொற்களையும் இனங்கண்டுள்ளார் மகாதேவன் (௸,பக். 452 - 53)  ]


துணை


1.தொல்காப்பிய மூலம் - பாடவேறுபாடுகள் : ஆழ்நோக்காய்வு ( பதிப்பாசிரியர்கள்: கே. எம். வேங்கடராமையா முதலியோர்), பன்னாட்டுத் திராவிட மொழியியற் கழகம் , திருவனந்தபுரம் , 1996


2. Mahadevan ,Iravatham, Early Tamil Epigraphy - From the Earliest to the Sixth Century C.E., CICT , Chennai, 2014


3. Rajan K , Early Writing System - A Journey from Graffiti to Brāhmī , Panda Nadu Centre for Historical Research , Madurai, 2015 , 

கா.ராஜன் தமிழ்ப் பிராமியின் மேல் எல்லை பொ.கா. ஐந்தாம் நூற்றாண்டு என்கிறார்- ௸,ப. 397.


*பந்நவணா - ஸுத்த என்னும் சமண நூல் பொ.கா.மு. முதல் நூற்றாண்டிலேயே 64 வகை வரிவடிவங்களைச் சுட்டுகிறது ; அவற்றுள் ஒன்று தமிழி என்கிறது. எனவே இப்பெயர் நம் காலத் தமிழ்ப் பற்றின் விளைவன்று.

Friday, January 1, 2021

ஆய்வுத் தரம்

 

ஆய்வுத் திருட்டும்   சேயிழைச் செறிவும்
🙄💘🙄💘🙄💘🙄💘🙄💘🙄💘🙄💘🙄💘

"சிறுகுழந்தை விழியினிலே ஒளியாய் நின்றாள்"



அழகைப் பெண்ணாக உருவகித்து, அந்த அழகு சிரிக்கும் இடங்களைக் கவிதையாய்க் கோத்த பாவேந்தர் , சிறு குழந்தை விழியினிலே ஒளியாய் நின்றாள்    எனச் சிறு குழந்தை விழியின் ஒளியில் மலரும் அழகையும் பதிவு செய்கிறார்.

சிறு குழந்தைகளின் விழிகள்  தட்டுப்பட்ட எல்லாவற்றையும்  அறிந்துணர  முயலும் ஆர்வத்தின் பரபரப்பில் மின்னுவதைப் பாருங்கள் . அந்த மின்னொளியாய் அழகு நிற்பதாய் உணர்கிறேன். பாவேந்தர் கவி வரியை அப்படித்தான் உணர்கிறேன்.

அறிந்துணரும் ஆர்வம்; தேடி அறியும் முயற்சி இவையெல்லாம் மக்களினத்தின் உள்ளார்ந்த இயல்பு. இது என்ன? இது எதற்கு? இது எப்படி? என்று நமக்குச் சலிப்பூட்டுமளவுக்குக் குழந்தைகள் வினவிக்கொண்டே இருக்கும்.

கல்வியின் பேரால் நாம் விடைகளைத் திணித்து வினாக்களைத் தொடுக்கிறோம். குழந்தைகள் வினாத் தொடுத்தது போய், திணிக்கப்பட்ட விடைகளைப் பிடுங்கி எடுக்கச் செய்கிறோம்.

மொழி, இலக்கியக் கல்விக்குள் வருவோம்.

எல்லாக் குழந்தைகளுக்கும் அம்மை உளங்கனிந்து அறிவுப்பாலூட்ட முடியுமா? எனக்குத் தெரிந்து ஒருவரைத் தவிரப் பதின்மூன்று நூற்றாண்டாய் அவ்வாறு ஞானத்தோடு சம்பந்தமுடைய வேறொருவரை அறியேன்.

மழலையர் கல்வி தொட்டு மொழிகளையும் மொழிவழிக் கலையாகிய இலக்கியங்களையும் ஆர்வமூட்டுமாறு பயிற்ற வேண்டும்; பயிற்ற முடியும்.

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்

என்கிறார் தெய்வப்புலவர்.

அறிதோ றறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு

என நம்முடைய தெய்வப்புலவர்  எதை எங்கே கொண்டுவருகிறார் பாருங்கள்!

இந்தக்குறள் இடம்பெற்றுள்ள அதிகாரம் புணர்ச்சி மகிழ்தல். காதலன் 'புணர்ச்சியை மகிழ்ந்து கூறியது' என்பது பண்டைய உரையாசிரியர்தம் ஒரு மித்த கருத்து.
இக்குறளில் புணர்ச்சி இன்பத்திற்கு உவமை அறிவின்பம்.அறிய அறிய முந்தைய அறியாமை கடந்து புதிய அறிவு புலப்படுகிறது.காதலியோடு கூடுந்தோறும் முன்னறியாப் புதுமை புலப்பட்டுக்கொண்டேயிருக்கிறது. இரண்டுமே இன்பம்.

யாம் பலவகைப்பட்ட நூல்களையும் கற்று அவற்றின் கருத்து அறியுந்தோறும் அறியுந்தோறும் மற்று அது ஒழிந்த நன்னூலும் அவ்வாறு கற்று இனிது அறியப்பெறாமையாகிய விரும்புதலை நெஞ்சில் கண்டு செல்கின்ற அதுவே போலும் ; இந்தச் சேயிழையாளை யாம் செறியுந்தோறும் செறியுந்தோறும் இவள் திறத்து நமது உள்ளம் செல்கின்ற காமச்சுவையும்

என்று காதலன் கூற்றாக உரை வரைந்துள்ளார் காளிங்கர். பண்டை உரையாசிரியர் பிறரிடம் காணா நுட்பம் இது.

'முன்பு நல்ல நூல்களைப் பயின்று அறியுந்தோறும் அத்தகைய பிற நல்ல நூல்களையும் அவ்வாறு கற்று அறியவில்லையே என விரும்பித் தேடுதல் போல இவளிடம் இன்னும் இன்னும் நல்லின்பம் நாடுகிறது உள்ளம்' என்கிறானாம் காதலன்.

நல்ல நூல்களை ஒன்றிலிருந்து மற்றொன்றாய்த் தேடிப் பயின்றோர் காளிங்கரின் உரையை உணரமுடியும்.

நமது உயர்கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சிப் பட்டத்திற்கு  முதலில் தற்காலிகப் பதிவு செய்தல், அப்புறம் ஆய்வறிஞர் குழு அமைத்தல் , குழு ஆய்வாளரை ஆய்ந்து நிறைவடைந்தபின் பதிவு உறுதியாதல் , ஆய்வின் பரந்த களம் சுட்டல், அடுத்த ஆய்வறிஞர் கூட்டத்தில் ஆய்வாளர் திரட்டிய தரவுகள், அவற்றின் அடிப்படையில் ஆய்வைத் தொடரும் வாய்ப்பு ஆகியவற்றைச் சீர்தூக்கித் தலைப்பை வரையறுத்தல், தொடர்ந்து குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வறிஞர் குழுவிற்கு ஆய்வு முன்னேற்ற அறிக்கையளித்தல், இந்த அறிக்கைகளை ஏற்று ஆய்வறிஞர் குழுவின் சார்பில் நெறியாளர் அவற்றைப் பல்கலைக் கழகத்திற்கு மேலனுப்புதல், ஆய்வு நிறைவுக்கட்டத்தை எட்டும் நிலையில் எழுத்தாக்கல், குறைந்தது மூன்று படிநிலைகளில் ஆய்வுரையை மேம்படுத்துதல், ஆய்வுரைச் சுருக்கம் ஆயத்தப்படுத்துதல்,ஆய்வுச் சுருக்கத்தை ஆய்வறிஞர் குழு முன்னிலையில் அரங்கில் முன்வைத்தல் * விவாதித்தல் , விவாத அடிப்படையில் சுருக்கத்தைச் செம்மைப்படுத்திப் பல்கலைக்கழகத்திற்கு அனுப்புதல், பின்னர் ஆய்வேட்டினையும் செம்மைப்படுத்தி ஆய்வுக்காலத்தில் ஆய்வாளர் எழுதி, பல்கலைக்கழக நிதிநல்கை ஆணையத்தால் ஏற்பளிக்கப்பெற்ற ஆய்விதழ்களில் வந்த இரண்டு கட்டுரைகள்* , ஆய்வுக்களவின்மைச் சான்றிதழ்*, களவின்மையைச் சரிபார்த்ததற்கான ஆதாரம்* முதலியவற்றோடு பல்கலைக்கழகத்திற்கு அனுப்புதல், அந்த ஆய்வேடு அறிஞர் மூவரால் மதிப்பிடப் பெறல் , மதிப்பிட்டு ஏற்கப்பெற்றால் பொது அரங்கில் வாய்மொழித் தேர்வு நடத்துதல் , வாய் மொழித் தேர்வுக்கு முன் குறைந்தது 15 நாட்களாவது எவரும் படித்துப்பார்க்க வாய்ப்பாக நூலகத்தில் ஆய்வேட்டைப் பொதுவாக வைத்தல், தலைப்பு முதலியவற்றோடு வாய்மொழித் தேர்வைப் பலரும் அறியச்செய்தல், எனப் பல கட்டங்கள் கடந்து ஆய்வாளர் வாய்மொழித் தேர்விலும் தேர்ச்சியடைந்தால்தான் அவர் பட்டம் பெறமுடியும்.

ஓர் ஆய்வு, முறையாகவும் தரமாகவும் நிகழ மேற்குறித்த படிநிலைகளே போதுமானவை. அவற்றுள்ளும் சில * 1990 கள் வரை இல்லாமல் பிற்காலத்தில் ஒவ்வொன்றாகச் சேர்க்கப்பட்டவை.

அண்மையில் எதைக்கேட்பது எதை விடுவது எனத் திக்குமுக்காடுமளவுக்கு வலையரங்குகள் நிகழ்ந்து வருகின்றன. ஆய்வியல் சார்ந்த சில உரைகளைக் கேட்டேன்.அவற்றில் பரவலாக ஆய்வுத் திருட்டு (plagiarism) தொடர்பான அங்கலாய்ப்புகள் வெளிப்படுகின்றன.

திருட்டு மட்டுமன்றி வேறு பல முறைகேடுகளையும் தடுக்க ஆய்வேட்டை வாய்மொழித் தேர்வுக்கு முன் இணையத்தளத்தில் போடுதல்,   காணொலி மூலம் அரங்கில் இல்லாதோரும் வாய்மொழித் தேர்வில்  கலந்துகொள்ள வாய்ப்பளித்தல் முதலியனவாக நடைமுறைகளை மேலும் இறுக்க வேண்டுமென்கிறார்கள். 

கோவிட் 19 ஒட்டுமொத்த வாய்மொழித் தேர்வையும் காணொலியில் நடத்த வேண்டிய நெருக்கடியை உண்டாக்கிவிட்டது. இந்தத் தேர்வு நடவடிக்கை முழுவதையும் ஒளிப்பதிவு செய்து பல்கலைக் கழகத்திற்குத் தரவேண்டும் என்னும் விதியும் நடைமுறைக்கு வந்துவிட்டது. இந்தத் தேர்வுகளிலும் முறைகேடுகள் நிகழாமலில்லை.


* தேடத்தேடக் கிடைக்கும் புதுப்புதுத்  தரவுகள்,

 
* தொடர்பற்றவை போலத் தோன்றுகிற வெவ்வேறு தரவுகளினூடாகத் தோன்றும்        தொடர்புகளின்  மின்னல் கீற்றுகள்,

*  ஆய்விற்குள் செல்லச்செல்லப் புலப்பட்டு நீளும் பாதை 

 
என ஒவ்வொரு கட்டத்தில் செறிதோறும் ஆய்வுப் பேரின்பக் கணங்களில் திளைக்க இயலுமெனில் , ஆய்வுத் திருட்டைப் பற்றிய எண்ணமே எழாது.

ஆனால், ஆராய்ச்சி உணர்வு என்பது முதுநிலைப் பட்டம் பெற்றதும் வரும் திடீர் ஞானோதயமன்று.

மழலைப்பருவந் தொட்டு அறிவுத்தேட்டத்தை இயல்பாகக் கொண்ட மக்கட் பண்பை மலரச் செய்வதாக ஆராய்ச்சிக் கல்வி அமையவேண்டும்.

தமிழ் உயராய்வுத் துறைகளுக்கு வரும் பெரும்பாலான தமிழக மாணவர்களின் (சிறு பான்மை ஆசிரியர்களின்?) மொழித்திறன்  இரங்கத்தக்கதாயிருப்பது வெளிப்படை; அன்றாடத் தொடர்பிற்குக் கூட இலாயக்கற்றது எனலாம்.



* தொடக்கப் பள்ளி தொட்டே தமிழ்ப் பயிற்சியின் தரம் உயர்த்தப் படவேண்டும் (முதல் குறிப்புரை- comment - காண்க)
* உயர்கல்வி நிலையில் தமிழ் மொழி & இலக்கியப் பாடப்பிரிவுகளின் தரமும் மதிப்பும் உயர    வேண்டும்.

எப்படி?



இலக்கண மறுப்பு என்னும் பொறுப்பின்மை

வட்டார வழக்குதான் மக்கள் மொழி .அதுதான் உயிருள்ளது என்று மிகையழுத்தம் தரும் குழு ஒன்று விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்படித்தான் எழுத...