Wednesday, October 7, 2020

இலக்கணக் குறிப்பு - சில குறிப்புகள்

                             இலக்கணக் குறிப்பு - சில  குறிப்புகள் 

                                           (10ஆக.2019 &7 அக்,2019)

                                                                  ௧

அண்மையில் கல்லூரி ஆசிரியர்களுக்கான புத்தொளிப் பயிற்சியில் (06.08.2019) இலக்கணக் குறிப்புப் பற்றி உரையாட நேர்ந்தது.

இலக்கணக் குறிப்பின் நோக்கம் இலக்கணப் புலமை காட்டுவதன்று; மொழிப் புழக்கத்தில் குறிப்பிட்ட சூழலில் ஒரு சொல் / தொடரின் இலக்கண அமைதியை (அமைப்பைத்) தெளிவுபடுத்துவதும்  பொருளைப் புரிந்து கொள்ள உதவுவதும்தான்.

'ஒரு தனிச்சொல்லுக்கோ  சில சொற்களால் அமைந்த தொடருக்கோ தனித்து இலக்கணக் குறிப்புத் தரலாம்தான்.ஆனால், அவை வரும் இடம், முன் பின் தொடர்ச்சி அறிந்து  இலக்கணக் குறிப்புத் தரும் போதுதான் அது சரியானதாக அமையும்' என்றேன் நான்.

இதற்காகவே நான் கைவசம் 'மெல்லிலை' யை வைத்திருக்கிறேன். 



'மெல்லிலைக்கு இலக்கணக் குறிப்புக் கூறுங்கள்' என்றேன். பலரும் பண்புத்தொகை என்றனர். எவரும் வினைத் தொகை என்று சொல்லவில்லை.

"நச்சினார்க்கினியர் வினைத் தொகை என்கிறார்" என்றேன். 

"பண்புத்தொகை என்பது தவறா?" என்று வினவினார் ஒருவர்.

"தவறென்று சொல்ல முடியாது... " என்று இழுத்தேன் நான்.

அப்புறம்?

சீவக சிந்தாமணிப் பாட்டடியையும் உரையையும் இலக்கணக் குறிப்பையும் எடுத்துச் சொன்னேன்

அந்தச் சீவக சிந்தாமணிப்பாட்டையும் உரையையும் படமெடுத்து இங்கே  பகிர்ந்திருக்கிறேன்.


மெல்(லுதல்) + இலை = மெல்லிலை . மெல்லுதற்குரிய இலையாகிய வெற்றிலை . மெல்- வினையடி .

இதில் நச்சினார்க்கினியக் 'கைவரிசை' ஏதுமில்லை. திருத்தக்க தேவரே வெற்றிலை என்னும் பொருளில் மெல்லிலை என்பதை ஆண்டுள்ளார். 

இந்தப் பாட்டில் (62/2) முதன்முதலில் வரும்போது நச்சினார்க்கினியர் வினைத் தொகை என்று குறிப்புத் தருகிறார். பின்னரும்

நான்கு இடங்களில் மெல்லிலை இதே பொருளில் ஆளப்பட்டுள்ளது.

மென்மை+ இலை = மெல்லிலை எனில் பண்புத்தொகை .

வள்ளுவச் சொல் விளையாட்டொன்றையும் சொன்னேன். அந்தக் குறளையும், பரிமேலழகர் உரையோடு படமெடுத்துத் தந்துள்ளேன். ஒரே குறளில் இரு வேறு எதிரெதிரான பொருளில் முழுதொத்த வடிவங்களை ஆண்டுள்ளார்.



திருக்குறள் வெறும் அற நூலன்று; அற இலக்கியம். அதனைக் காட்டும் இடங்களுள் ஒன்று இது. (இத்தகு சொல் விளையாட்டுகளையே இலக்கிய அடையாளமாகச் சுட்ட முடியாதுதான். ஆனால் இவற்றுக்கும் சற்று இலக்கிய மதிப்பு இல்லாமலில்லை. சொல்லைக் கலை நுட்பங்களோடு கையாளும் இலக்கியக் கலைஞன், சொற்களோடு விளையாடுவதும் ஒரு கலை. அதிலும் அறத்தை இலக்கியமாக்குவது கல்லைப் பிசைந்து கனியாக்கும் கடும் பணி. வள்ளுவன் விளையாடிச் சோர்வு நீக்கிக் கொள்கிறான்.) 

என் + அல் 

இங்கு -அல் என்பது வியங்கோள் விகுதி. என்க/ என்று சொல்க என்பது பொருள் ;  - க என்பது வியங்கோள் விகுதி. 

- அல் தொழிற்பெயர் விகுதியாக வழங்குவது நம் காலத் தமிழில் பெரும்பான்மை. 

ஆடல், பாடல், பேசல் முதலியன தொழிற்பெயர்களாகப்   பரவலாக வழங்குகின்றன. ஆடுதல், பாடுதல், பேசுதல் என, - தல் என்னும் தொழிற்பெயர் விகுதியும் பரவலான வழக்குத்தான்.

அதே குறளில்,  எனல் = என்று சொல்லற்க (என்று சொல்லாதிருப்பீர்களாக) என்னும் பொருளிலும் இடம் பெற்றுள்ளது. இங்கு - அல் எதிர்மறை வியங்கோள் விகுதி. 

ஒன்றை உடன்பாடாகவும் (என்று சொல்லுக), மற்றொன்றை எதிர்மறையாகவும் (என்று சொல்லற்க) அவற்றை நேர்ப் பேச்சின் தொனிகளால் உணர்த்த முடியும். வேறு சில குறட்பாக்களிலும் இத்தகு பேச்சுத் தொனி உண்டு.

----------------------------------------------------------

                                                    உரையாடல்

பேரா. தெய்வசுந்தரம் நயினார்:  // 'ஒரு தனிச்சொல்லுக்கோ சில சொற்களால் அமைந்த தொடருக்கோ தனித்து இலக்கணக் குறிப்புத் தரலாம்தான்.

ஆனால், அவை வரும் இடம், முன் பின் தொடர்ச்சி அறிந்து இலக்கணக் குறிப்புத் தரும் போதுதான் அது சரியானதாக அமையும்' - பேரா.மதிவாணன் பாலசுந்தரம்.// 100 விழுக்காடு உண்மையான கருத்து. கணினிவழியாக இன்றைய தமிழை ஆராயும்போது, இதுதான் சிக்கல். 'வருகிறது ' என்பது 'மாடு வருகிறது' என்பதில் வினைமுற்று. 'அங்கு வருகிறது எது?' என்பதில் வினையாலணையும்பெயர். 'நீ வருகிறது எனக்குப் பிடிக்கவில்லை' என்பதில் தொழில்பெயர். முன்பின் வருகிற சொல்களையும் தொடர்களையும்கொண்டுதான் இங்குச் சரியான விடையைப் பெறமுடியும். மூன்றிலுமே பகுப்பாய்வில் கிடைக்கிற உறுப்புகள் ஒன்றுதான். வா { கிறு+ அது  ; சில இடங்களில் இரண்டு வேறுபட்ட உறுப்புகள் கிடைக்கும். 'வந்தவரை ' = வந்த + வரை ; வா + ந்த் + அர் + ஐ ; முதலில் கிடைப்பது வினையடையாகப் பயன்படுகிற வினையெச்சம்; இரண்டாவதில் கிடைப்பது வினையாலணையும்பெயர் + 2 ஆம் வேற்றுமை விகுதி; இதுபோன்ற சிக்கலைத் தீர்ப்பதுதான் கணினிமொழியியல். இந்த மயக்கத்தைத் தீர்ப்பதற்கான கருவிகளே இயற்கைமொழி ஆய்வுக்கருவிகள் ஆகும் Concordancer, N-gram போன்ற கருவிகள் இச்சிக்கலைத் தீர்க்கப் பயன்படுகின்றன.


Magudeswaran Govindarajan : மெல்லுதல் என்னும் வினைவழியே பெறப்படும் பண்புதான் மென்மை. கடினமாயுள்ளதை வாயிட்டு நீர்விட்டு அரைத்து மென்மையாக்கும் செயலே மெல்லுதல். மெல்லுதலால் ஒன்றின் கடுமை, திண்மை நீக்கி மென்மையாக்குகிறோம். அதனால் மென்மை என்னும் பண்புக்கும் மெல் என்னும் வினையடியே தோற்றுவாய். அதன்படி மெல்லிலை என்பதனைப் பண்புத் தொகையாய்க் கருதுவதைக் காட்டிலும் வினைத்தொகையாய்க் கொள்ளலே சிறப்பு.

மதிவாணன்: தங்கள் சொற்பிறப்பியல் முடிபு பற்றிக் கருத்துச் சொல்லும் தகுதி எனக்கில்லை. 

ஆனால், இயங்கு நிலையில் வினையாகவும், பண்புப் பெயராகவும் காணப்படுவதால், சூழல் நோக்கி இருவேறு குறிப்புகள் தருவதே நல்லது.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


                                                                       ௨

மரபிலக்கண அறிமுக வகுப்புகளில் என் கைவசமுள்ள (Stock)சில தொடர்களைக் காட்டி, வினவி, விடைகள் பெற்று அவற்றிலிருந்து அடுத்து நகர்வது என் வழக்கம். 

அவற்றுள் ஓர் இணை:

" 1.ஓடாக் குதிரை

    2.ஓடா குதிரை - இவற்றில் எது சரி?" என்பேன். 

ஏறத்தாழ எல்லோரும், " 1 சரி ; 2 தவறு" என்பார்கள்.

நான் "இரண்டுமே சரி. பொருளில் சற்றே வேறுபடும் " என்று விளக்குவேன்.

1. ஓடாத குதிரை - ஓடாத என்பதன் இறுதி (=ஈறு) கெட்டு ஓடா என்றாகிக் குதிரை என்னும் வருமொழியோடு புணரும் போது வல்லொற்று மிகும் (-க்- தோன்றும்); ஓடாக் குதிரை என்றாகும். இதற்கு,  ' ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் ' என்ற நீண்ட தொடரை இலக்கணக் குறிப்பாகத் தருவார்கள்.

2.   குதிரை (கள்) ஓடா என்பது எழுவாய்த் தொடர். 

       ஓடா குதிரை (கள்) என்பது எதிர்மறை வினைமுற்றுத் தொடர். இங்கு வல்லொற்று மிகக் கூடாது.குதிரை என்பது பால்பகா அஃறிணைப் பெயர். அது ஒரு குதிரையையோ பல குதிரைகளையோ குறிக்கும். பலவின்பாலை உணர்த்தக் - கள் விகுதி சேர்க்கலாம், சேர்க்காமலும் இருக்கலாம் என்பது மரபு. [தற்காலத் தமிழில் பலவின்பாலை உணர்த்தக் - கள் விகுதி சேர்ப்பதே நல்லது].


திருச்சிப் பேருந்து நிலையத் தகவல் பலகை ஒன்றில் ' இடை நில்லா பேருந்து'  என்று உள்ளது. வாக்கியமாக இல்லாமல் இரு சொற்கள்  கொண்ட தொடர் மட்டும் இருந்தால் , இப் பேருந்துகள் இடையில் நில்லா - எனப் பொருள் கொள்ளலாம். பிழை இல்லை.

மாறாக, அதிலுள்ள வாக்கியத்தை நோக்க, இடை நில்லாப் பேருந்து - என ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சமாகவே கொள்ள வேண்டும். இப் பெயரெச்சம் பெயர் அடை போல அமைகிறது. 

எதிர்மறை வினை முற்றுத் தொடர் இயக்கம் குறிக்கும். ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச் சத் தொடர் இயல்பு குறிக்கும். இவற்றிடையிலான வேறுபாடு நுட்பமானது.

பேருந்து நிலைய அறிவிப்பில் ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சத் தொடராக அமைந்துள்ளது .எனவே வல்லொற்று மிக வேண்டும். மிகாமையால் அது பிழை. 


3 comments:

இலக்கண மறுப்பு என்னும் பொறுப்பின்மை

வட்டார வழக்குதான் மக்கள் மொழி .அதுதான் உயிருள்ளது என்று மிகையழுத்தம் தரும் குழு ஒன்று விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்படித்தான் எழுத...