Friday, October 17, 2025

இருபதாம் நூற்றாண்டின் ஒரு தனிக் ' கோவை '

 இருபதாம் நூற்றாண்டின் 

ஒரு தனிக் ' கோவை '


சிலம்பு நா. செல்வராசு அவர்களின் 'இருபதாம் நூற்றாண்டுச் சிற்றிலக்கியங்கள்' - என்னும் நூலைப் படித்தபோது, அப்பாவின் ' கரந்தைக் கோவை ' தான் இருபதாம் நூற்றாண்டின் ஒரே கோவை இலக்கியம் என அறிந்தேன்.


செல்வராசு , இருபதாம் நூற்றாண்டில் கோவை நூல் இயற்றப்படவில்லை என்கிறார்.அவர்பார்வையில் அப்பாவின் கோவை படாததற்கு அவரைக் குறை சொல்ல முடியாது.


அதிலிருந்துதான் அப்பாவின் கோவை ஒன்று மட்டுமே இருபதாம் நூற்றாண்டின் கோவை என்னும் முடிவுக்கு வந்தேன். இருபதாம் நூற்றாண்டில் 400க்கு மேற்பட்ட துறைகளமைத்துக் கோவை பாடுதல் எளிதன்று. எனவே பிறர் யாரும் பாடியிருக்க இயலாதென்று உறுதியாக நம்புகிறேன்.


கோவை ஒரு சிற்றிலக்கிய வகை.

சிற்றிலக்கியங்களின் பொதுத்தன்மை , அவை ஒரு பாட்டுடைத்தலைவர் அல்லது தலம் முதலியவற்றைப் பலபடப் போற்றிப் புகழும் நோக்கின என்பதே . இந்த ஒற்றை மையம் காரணமாகச் சிற்றிலக்கியம் எனல் பொருந்தும். 


பாராட்டுக்குரியவருக்கு மாலை, பூச்செண்டு, பொன்னாடை முதலியன அணிவித்துப் போற்றும் மரபில் பாமாலையால் போற்றுவதும் அடங்கும்.


மாலை முதலியவற்றின் வேலைப்பாடு போன்றதுகோவை முதலியவற்றின் புலமைசான்ற செய்திறம்.இந்தச் செய்திறம் சார்ந்து அவற்றின் இலகிய மதிப்பு அமையும்.


நவீனக் கவிதை நோக்கில் அவற்றை மதிப்பிடக் கூடாது.சிற்றிலக்கியங்கள் கவித்துவத்தை விடவும் புலமைசால் செய்திறனுக்கே முதன்மை தந்தன.


தமிழ் நவீனக் கவிதை முன்னோடி பாரதிதானும் சிற்றிலக்கியம் புனைவதினின்றும் தப்பி விடவில்லை என்பதை உளங்கொள்ள வேண்டும்.


இந்தப் பின்னணியில் அப்பாவின் கரந்தைக் கோவையை மதிப்பிட்டால் ,  முதலிடத்தில் நிற்பது அதன் தங்கு தடையற்ற ஓட்டம் . மரபில் ஊறித் திளைத்தால் மட்டுமே இது வாய்க்கும்.


யாப்பு மரபிலமைந்த பா வடிவங்களின் உள்ளார்ந்த ஓசை உணராமல், புறநிலைப் பட்ட வெற்றுவிதிகளைக் கொண்டு சொற்களைக் கோக்கும்போது உரைநடையாகவே நின்று வற்றும்.


கரந்தைத் தமிழ்ச் சங்கத்தைப் பாட்டுடைத் தலமாகக் கொண்டு , தம் நன்றியறிதலைப் புலப்படுத்திப் போற்றும் வண்ணம் 469 கட்டளைக் கலித்துறைப் பாடல்களால் - தலைவன் தலைவியின் காதல் நிகழ்ட்சிகளின் தொகுப்பாக - ஆனது இக்கோவை. அத்தனை பாடல்களும் மரபார்ந்த ஓசையும் ஓட்டமும் குன்றாதவை.


கரந்தைத் தமிழ்ச் சங்கம், கல்லூரி, சங்கத்தின் தமிழுணர்வு, தமிழ்ப் பணிகள்,  சங்கத்தோடு தொடர்புடைய சான்றோர் , தம் தமிழ்ப் புலமை, தமிழ் மொழி, இலக்கிய, இலக்கணங்கள் பற்றிய பார்வை,  தமிழ் உணர்வு யாவற்றையும் இடைமிடைந்து யாப்பின்வரம்பு பிறழாமலும் கோவை மரபு இகவாமலும் இலக்கியச் சுவை குன்றாமலும் புனைந்திருக்கிறார்; புகுந்து விளையாடியிருக்கிறார்.

(இக் கோவை பற்றிய மதிப்பீட்டினை - நூல் நிறை, தென் மொழி - கட்டளைக் கலித்துறையிலேயே பாடியளித்தவர் பாவலர் ம .இலெ.தங்கப்பா என்பதைப் புலவர் செந்தலை கவுதமன் அவர்கள் சொல்லித் தெரிந்து கொண்டேன்.

No comments:

Post a Comment

வள்ளுவன் கள்வன்*

 வள்ளுவன் கள்வன்* ————————————--- காமம் என்பது பழந்தமிழில் காதலைக் குறித்தது. திருக்குறள் மூன்றாம் பாலின் சொல்லாட்சி எண்ணிக்கையில் வாக்கெடுப...