Friday, October 17, 2025

மென்சுவைமேல் நடந்தானோர் ஆசிரியன்


 மென்சுவைமேல் நடந்தானோர் ஆசிரியன்


" மலரினும் மெல்லிது காமம் " என்றார் வள்ளுவர்.


இறையனார் களவியல் உரையாசிரியர் "  மென்சுவை " என்கிறார் 


               ஓதல் காவல் பகைதணி வினையே

               வேந்தர்க் குற்றுழி பொருட்பிணி பரத்தையென்று

               ஆங்க ஆறே அவ்வயிற் பிரிவே (௩௫)

               

எனக் கற்புக்காலத்தில் (இல்லறத்தில்) தலைவனின் அறுவகைப் பிரிவை (தலைவியைப் பிரிந்து செல்லலை) வரையறுக்கிறது இறையனார் களவியல்.


பரத்தையிற் பிரிவு பற்றிய நூற்பா (௪௦)வுரையில்


" மற்றைப் பிரிவெல்லாம் வேண்டுக ஆள்வினை மிகுதி உடைமையான் ; இப்பிரிவு எற்றிற்கோ எனின் , மற்றைப் பரத்தையிற் பிரிந்தான் தலைமகன் என்றால், ஊடலே புலவியே துனியே என்றிவை நிகழும். நிகழ்ந்தால், அவை நீக்கிக் கூடின விடத்துப் பெரியதோர் இன்பமாம்; அவ்வின்பத் தன்மையை வெளிப்படுப்பன அவை எனக்கொள்க. இவன் மென்சுவைமேல் நடந்தானோர் ஆசிரியனாகலான் இப்பிரிவு வேண்டினான் என்பது." என்கிறார் நக்கீரர்.


ஆள்வினை x மென்சுவை  என எதிர்வுகளைக் கொள்கிறார்.


" பத்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய " சேக்கிழாரும் நினைவுக்கு வருகிறார்.

பத்திச்சுவை மட்டுமன்று இலக்கியச் சுவையும் நனி சொட்டச் சொட்டப் பாடியவர் அவர். இறையற்புத நம்பிக்கைகளோடு கூடிய அண்மைக்கால வாழ்க்கை  வரலாறு சார்ந்த கதைகளைப் பாடிய சேக்கிழாருக்கு வரம்புகள் மிகுதி ; உரிமை குறைவு. 


இந்தக் குறைந்த உரிமையைக் கொண்டே நடப்பியச் சாயலும் உணர்வு நுட்பமும் பொதுளக் கதை வடித்தார் சேக்கிழார். ஓர் இடம் :


            அளவு_இலா மரபின் வாழ்க்கை மண் கலம் அமுதுக்கு ஆக்கி

            வளர் இளம் திங்கள் கண்ணி மன்று உளார் அடியார்க்கு என்றும்

            உளம் மகிழ் சிறப்பின் மல்க ஓடு அளித்து ஒழுகும் நாளில்

            இளமை மீது ஊர இன்பத் துறையினில் எளியர் ஆனார்

(பெரியபுராணம்,தில்லைவாழந்தணர் சருக்கம்,திருநீலகண்ட நாயனார் புராணம் 03)


" இளமை மீதூர இன்பத் துறையினில் எளியரானார் " -  இந்த ஒற்றைத் தொடரில்  சொட்டும் நாகரிகமும் நயமும்  சேக்கிழார்தம்  இலக்கியப் பேராற்றலின் மின்னற்கீற்று !


" எளியரானார் - அது வலிமைபெறத் தாம் அதன் ஆட்சிக்குட்பட்டு

எளியராக ஆயினார் " என்பார் சிவக்கவிமணி சி.கே.சுப்பிரமணிய முதலியார்.


எளிமை x அருமை எனல் பெரும்பான்மை. ௸ பாட்டில், எளிமை x வலிமை எனக் கொள்கிறார் சிவக்கவிமணி.


" எளியார் வலியாம் இறைவா சிவதா " எனச் சிவகாமி ஆண்டார் கூற்றில் எளிமை x வலிமை எனச் சேக்கிழாரே ஆண்டுள்ளார் (இலை மலிந்த சருக்கம்,எறிபத்த நாயனார் புராணம் 16)


திருநீலகண்டர் எளியரானார் என்பதை மெலியரானார் என்று கொண்டாலும் இழுக்கில்லை.


"இந்நூல்[ களவியல்] செய்தார் யாரோ எனின், மால்வரை புரையும் மாடக்கூடல் ஆலவாயிற் பால்புரை பசுங்கதிர்க் குழவித்திங்களைக் குறுங்கண்ணியாகவுடைய அழலவிர் சோதி அருமறைக் கடவுள்" அஃதாவது சிவபெருமான். அந்தச் சிவபெருமான்தான்  " மென்சுவைமேல் நடந்தானோர் ஆசிரியன் "

No comments:

Post a Comment

வள்ளுவன் கள்வன்*

 வள்ளுவன் கள்வன்* ————————————--- காமம் என்பது பழந்தமிழில் காதலைக் குறித்தது. திருக்குறள் மூன்றாம் பாலின் சொல்லாட்சி எண்ணிக்கையில் வாக்கெடுப...