பாடல் பெற்ற பறவை!
பத்திமையில் தோய்ந்தவர்கள் பாடல்பெற்ற தலமென்பார்கள்.
எனக்கோ , சான்றோர் செய்யுள்களின் தெய்வம் உணா மா மரம் புள் பறை செய்தி முதலியன பின்னரும் தொடரக் காணும்போது சிலிர்க்கும். என்னளவில் அவைதாம் பாடல் சால் சிறப்பின. இது இலக்கியச் சிலிர்ப்பு! பண்பாட்டுச் சிலிர்ப்பு!
வானம்பாடி (1963) என்னும் படத்திற்குக் கண்ணதாசன் " தூக்கணாங் குருவிக்கூடு
தூங்கக் கண்டான் மரத்திலே ..." என்றொரு பாட்டெழுதினார்.
தூக்கணாங்குருவி , பாடல் பெற்ற பறவை.
கிரியாவின் 'தற்காலத் தமிழ் அகராதி' தற்காலப் பெருவழக்கான தூக்கணாங்குருவி என்னும் ஒரு வடிவத்தை மட்டுமே தருகிறது. சரியானதுதான்.
சென்னைப் பல்கலை.த் தமிழ்ப்பேரகராதி (TAMIL LEXICON) ,
தூக்கணங்குரீஇ tūkkanan-kurīi , n. " தூக்கணங்குரீஇ ... பெண்ணைத் தொடுத்த கூடினும் (குறுந்.374)" - என அகரவரிசையில் வாய்த்த முதற் பதிவைத் தருகிறது.
உ.வே.சாமிநாதையர் குறுந்தொகைப் பதிப்பை எடுத்து 374 ஆம் பாடலைப் பார்த்தேன். அடடா !
அந்தக் காதலர்கள் பற்றி ஊர் பலவாறு அலர் தூற்றிக்கொண்டிருந்தது. காதலியின் தோழி பெற்றோரிடம் பக்குவமாகத் தெரிவித்தாள் (அறத்தொடு நிற்றல் ) . காதலன் வீட்டாரும் முறைப்படி பெண் கேட்டுவந்தனர். பெண் வீட்டார் ஏற்றனர்.
நன்றுபுரி கொள்கையின் ஒன்றா கின்றே
முடங்கல் இறைய தூங்கணங்* குரீஇ
நீடிரும் பெண்ணை°த் தொடுத்த
கூடினும்¶ மயங்கிய மையல் ஊரே
(* உ.வே.சா. தரும் பாடம் இதுவே. ° பெண்ணை = பனை . ¶ கூட்டினும் என்பது பாட்டில் எதுகை நோக்கிக் கூடினும் எனத் திரிந்தது)
வளைந்த சிறகையுடைய தூக்கணங்குருவி உயர்ந்த பெரிய பனையில் அமைத்த கூட்டை விடவும் சிக்கலான பல்வகைக் குழப்பம் கொண்டிருந்த ஊராரும் நன்மை புரியும் மணச் செய்தியால் இப்போது ஒன்றிய கருத்தினராகிவிட்டனர் - என்கிறது பாட்டு.
பெரும்பாலும் உயரமான பனையில் கூடு கட்டுவது தூக்கணாங்குருவியின் இயல்பு¹. அந்தக் கூடு சிக்கல் மிகுந்ததாக இருப்பது அதன் தன்மை.
சிக்கலுக்குக் கூட்டின் பின்னல் உவமை; குழப்பத்திற்கு அதன் தொங்கல் உவமை. நுண்பொருளுக்குப் பருப்பொருள் !
சான்றோர் செய்யுள்களில் உவமை , தத்துவ இயலின் பிரமாணமோ அலங்காரவியலின் அணியோ அன்று. அதுவே பொருளுமாகி நிற்கும். 'உவமப்பொருள்' என்பார் தொல்காப்பியரும்.
துல்லியம் ! பிற்கால இலக்கியம் எதிலும் காண இயலாத துல்லியம்.இந்தத் துல்லியமே சான்றோர் இலக்கியத் தனித்துவம்! இந்தத் தனித்துவமே இலக்கிய இன்பம்!
சங்கத் தமிழ் நூல்களின் இன்பம் , 'அடங்கா இன்பம்' என்றார் பாவேந்தர் பாரதிதாசன். சும்மாவா?
ஐயர் ' தூக்கணங் குருவியின் கூடு : புறநா.225: 11.' என்று ஒத்த பகுதி பற்றிய குறிப்பையும் தருகிறார்.
'வியத்தகு பெரும்படையும் வீரமும் கொண்ட சோழன் நலங்கிள்ளி இருந்தவரை அவனுக்கு அஞ்சிப் பிற மன்னர்கள் வலம்புரிச்சங்கினை முழக்காமல் தூக்கணங்குருவியின் கூடு போலத் தொங்கவிட்டிருந்தனர். இப்போது, போர் கருதாமல் , அவர்களின் பள்ளியெழுச்சிக்காலத்தில் அவை முழங்கும் போதும் , நான் நோகின்றேன் ' என்னும் கருத்தமைந்தது ஆலத்தூர் கிழாரின் கையறுநிலைப் பாட்டு.
இங்கே பருப்பொருளுக்குப் பருப்பொருள் என்கிற நிலையில் தூக்கணங்குருவிக்கூடு உவமையாகிறது. குறுந்தொகை (374)நுட்பத்தை நோக்கக் குறைந்ததாயினும் இதுவும் துல்லிய உவமைதான்.
தூங்கு (தல்) = தொங்கு(தல்) - தன்வினை . தூக்கு (தல்) = தொங்கச் செய்(தல்)- பிறவினை.
" தூக்கணங்குருவி tūkkanan-kuruvi , n. தூக்கணம் + குருவி. Weaver bird , Ploceus baya , building hanging nests ; தொங்குங் கூடுகட்டும் குருவி வகை." - சென்னைப் பல்கலை.த் தமிழ்ப்பேரகராதி (TAMIL LEXICON).
கூட்டைத் தொங்குமாறு செய்து வசிக்கும் குருவி, தூக்கணங்குருவி .இது காரணப்பெயர் .
'தூக்கணாங் குருவிக்கூடு தூங்கக் கண்டான் மரத்திலே' என்று செவ்வியல் வழக்குத் திரைத் தமிழில் கண்ணதாசனிடம் உயிர்த்தெழுந்து தன்னை நிறுவிக் கொண்டிருக்கிறது
என்றுமுள தென்றமிழ்!
எப்போது கேட்டாலும் இனிக்கும்.
_________________________________________
1.இறையனார் அகப்பொருள் உரையாசிரியர் 'மடலேறுவேன்' என்ற தலைவனின் அருள் உள்ளத்தைச் சுட்டி , 'உம்மால் இயலுமோ?' எனத் தோழி கூறுவதாக ஒரு பாட்டை எடுத்துக்காட்டியுள்ளார்.
வெள்ளாங் குருகின் பிள்ளையும் பலவே
அவையினும் பலவே சிறுகருங் காக்கை
அவையினும் அவையினும் பலவே குவிமடல்
ஓங்கிரும் பெண்ணை மீமிசைத் தொடுத்த
தூங்கணங் குரீஇக் கூட்டுள சினையே .
இதிலும் தூக்கணங்குருவி பனையின் மீது கூடுகட்டுவது கூறப்பட்டுள்ளது.
பாடல் பெற்ற பறவை...ரசித்தேன்.
ReplyDeleteநன்றி!
Delete