Wednesday, October 28, 2020

தொல்காப்பிய வியப்பு 2: உறழ் துணைப் பொருளும் ஆய்வுரை நடையும்

 

தொல்காப்பிய வியப்பு 2: உறழ் துணைப் பொருளும் ஆய்வுரை நடையும்

ஆராய்ச்சி மொழிநடை பற்றிச் சில சொல்லவேண்டிய தேவை கருதி, ஆங்கெலிக்கா  எச் . ஹோஃப்மன்  அம்மையாரின்  SIENTIFIC WRITING AND COMMUNICATION-PAPERS , PROPOSALS, AND PRESENTATIONS¹ என்னும் நூலைப் புரட்டிக் கொண்டிருந்தேன். 


அதிலுள்ள, FAULTY COMPARISONS என்னும் பகுதியைப் படித்த போது , அட! என வியந்தேன். நூற்பா முந்துற்றது.

செப்பினும் வினாவினும் சினைமுதற் கிளவிக்(கு)
அப்பொரு ளாகும் உறழ்துணைப் பொருளே " (கிளவியாக்கம்16)

எடுத்துக்காட்டுகளைப் பொறுமையாகப் பார்த்துவிட்டு நூற்பாவின் பொருளுக்குப் போகலாம்.

I.செப்பு
    1) இவள் கண்ணின் இவள் கண் பெரிய ----------சினை - உறழ்ச்சி
    2) இவள் கண் ஒக்கும் இவள் கண் ------------------------௸   - துணை
   
     3) நும் அரசனின்  எம் அரசன் முறை செய்யும்---முதல் - உறழ்ச்சி
     4) எம் அரசனை ஒக்கும் நும் அரசன் ----------------------௸ - துணை

II. வினா
     5) இவள் கண்ணின் இவள் கண் பெரியவோ?-----சினை - உறழ்ச்சி
     6) இவள் கண் ஒக்குமோ இவள் கண்?-------------------௸ - துணை

     7) எம் அரசனின் நும் அரசன் முறை செய்யுமோ?---முதல் - உறழ்ச்சி
     8) எம் அரசனை ஒக்குமோ நும் அரசன்?-------------------௸ - துணை
    
[ எ.கா. 1 & 2 .கண்ணின் = கண்களை விட ;  பெரிய = பெரியவை ; ஒக்கும் = ஒத்திருக்கின்றன .
எ.கா. 3&4 அரசனின் = அரசனை விட ; முறை செய்யும் = முறை(ப்படி ஆட்சி) செய்கிறான் ; ஒக்கும் = ஒத்திருக்கின்றான் . எ.கா. 1-4 இன் பொருள்  5 - 8 க்கும்...]

சேனாவரையர் தந்த எடுத்துக்காட்டுகளை , வசதி கருதி வரிசை மாற்றித் தந்துள்ளேன்.

செப்பு (தல்) - சொல்லுதல், தெரிவித்தலாகிய வாக்கிய வகை (declaration or statement as a sentence type)²
வினா -  வினவுதல் ( தெரிந்த பொருள்தான்)

சினை - உறுப்பு (கண் ஓர் உறுப்பு)
முதல் - உறுப்பை உடைய முழுமை( அரசன் முழுமை-யானவன்)³

உறழ் பொருள் - [ஒன்றுக்கொன்று] மாறுபடக் கூறப்படுவது( சேனா. & நச்.)
துணைப் பொருள்   - ஒப்புமை கூறப்படுவது                                  (              ௸      )

அப்பொருள் - " அவ்வப்பொருட்கு அவ்வப்பொருளே " (என்னும்,  தெய்வச்சிலையார் தரும் பொருள் சுருக்கமும் தெளிவும் உடையது. அதை எடுத்துக்கொள்வோம்)

செப்போ வினாவோ சினையைச் சினையோடு உறழவேண்டும் அல்லது ஒப்பிட வேண்டும் என்பது விதி.

வேறு வகையாகவும் ஒப்பிடல் -  உவமை - இலக்கியங்களில் காணப்படுகின்றனவே!
ஆம். உரையாசிரியர்கள் அவை பற்றிப் பேசாமல் இருப்பார்களா? பேசியிருக்கிறார்கள்.

' அவை அணியியலுள் பெறப்படும் என்றும்,  வழக்கிலும் வருகின்றனவே ? என்பதற்கு அவை உரை என்னும் செய்யுள் ' என்றும் கூறும் சேனாவரையர் விளக்கத்தை மட்டும் மாதிரிக்காகத் தந்து நிறுத்திக்கொள்கிறேன்.

உரையாசிரியர்களிடையிலான கருத்துவேறுபாடுகளும் , அவரவர் கூறும் தொடர்புடைய பிற அமைப்புகளும் காணத்தக்கவைதாம் . இப்போது வேண்டாம். 

ஆங்கெலிக்கா அம்மையாரின் , ஆய்வு நடை  பற்றிய அடிப்படை விதி 22க்குப்
( BASIC RULE 21: Avoid faulty comparisons) போவோம்.  



இளம்பூரணர், கல்லாடனார்,[பெயர் தெரியாத ] ஒருவர் - ஆகிய மூவரும் உறழ், துணை இரண்டையும் உள்ளடக்கிய பொதுச் சொல்லாகப்  பொரூஉ என்பதைக் கொண்டுள்ளனர். இந்தப் பொரூஉதான் comparison.

Faulty comparisons can arise because of ambiguous comparisons and incomplete comparisons.

Ambiguous comparison

👎Example
Our conclusions are consistent with Tamseela et al.(2013)

Comparisons such as this are confusing for the reader, as they compare unlike things.To avoid such Ambiguous Comparisons, make sure that you are comparing like items.

தொல்காப்பியம் " அப்பொருள்" என்று சொல்வது, "like items" எனப்படுகிறது. கீழே அவர் திருத்தமாகத் தரும் எடுத்துக் காட்டில், conclusions  'அப்பொருளா'கிய conclusions உடனேயே ஒப்புக் கூறப்பட்டுள்ளது காண்க:

👍Revised Example
Our conclusions are consistent with the conclusions of Tamseela et al.(2013)

இனி, உறழ் பொருளைப் பார்ப்போம்.

Incomplete comparisons

👎Example
This study tested 24 subjects compare to Menon's study

👍Revised Example
a      This study tested 24 subjects; Menon's study tested only 8 subjects.

b       In this study, the number of subjects tested (24 subjects) was three times that of Menon's    
          study (8 subjects)
         
இங்கு உறழப்படும் 'அப்பொருள்'  number of subjects tested  என்பது.

தொல்காப்பியர் முன்பே சொன்னவற்றைத்தாம் ஆங்கெலிக்கா இப்போது சொல்கிறார் என்று சாதிப்பது என் நோக்கமன்று. ஆறு பகுதிகள் ( Parts)கொண்ட அம்மையார் நூலின் முதல் பகுதியை மட்டும் நுனிப்புல் மேய்ந்த அளவிலேயே பிரமித்தேன்.

ESL( English as a Second Language) advice :
In certain foreign languages , incomplete Comparisons occur often.Avoid these when writing in English என்று விதந்து சுட்டுகிறார் .

தொல்காப்பியம் தெரிந்த ஒருவருக்கு , அம்மையார் கூறும் பொரூஉ ( Comparison ) விவகாரம் புதியதாகத் தோன்றாது.

மறுபுறம்,
தொடக்கநிலை மாணவருக்குப் புரியவைப்பது போன்ற ,  மரபுரையாசிரியர்களின் எளிய, எடுத்துக்காட்டுகள் வழிப்பட்ட புரிதலைக் கடந்து மேம்பட்ட தளத்தில் இந்த நூற்பாவைக் காணவேண்டிய நுட்பத்தை நோக்கி இட்டுச் சென்றிருக்கிறார் அம்மையார்.

- - - - - - - - - - - - - - - - - - - - - -- - - - - - - - - - - - - - - - - - - - - -

1.Angelika H. Hofmann, SIENTIFIC WRITING AND COMMUNICATION-PAPERS , PROPOSALS, AND        PRESENTATIONS, OUP, New York,2010.

2.க.பாலசுப்பிரமணியன் ,தொல்காப்பியச் சொற்பொருளடைவு, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் , 2016.

3. முதல், சினை என்பன ஒப்பீட்டளவிலானவை. இவையெல்லாம் முதல், இவையெல்லாம் சினை என்னும் நிலைத்த வரையறையில்லை.
சாத்தன் - முதல் எனில் , கை - சினை; கை - முதல் எனில் விரல் - சினை.
" முதலும் சினையும் பொருள்வேறு படாஅ
  நுவலுங் காலைச் சொற்குறிப் பினவே " (வேற்றுமை மயங்கியல், 6)
  என்று தொல்காப்பியமே அதனைத் தெளிவுபடுத்துகிறது.

- 8 நவம். 2018 முகநூல் இடுகை இப்போது சற்று விரிவாக...

1 comment:

  1. 👍Revised Exampleஇல் பின்வருமாறு வருவதற்குக்கூட வாய்ப்பு உள்ளது ஐயா.
    c This study tested 24 subjects whereas/while Menon's study tested only 8 subjects.

    ReplyDelete

இலக்கண மறுப்பு என்னும் பொறுப்பின்மை

வட்டார வழக்குதான் மக்கள் மொழி .அதுதான் உயிருள்ளது என்று மிகையழுத்தம் தரும் குழு ஒன்று விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்படித்தான் எழுத...