பயின் என்னும் பிசினும்
பயிர்ப்பு என்னும் பாடமும்
‘பயிர்ப்புறு பலவின்’ , ‘பலவின் பயிர்ப்புறு தீங்கனி’ என்னும் தொடர்கள் முறையே அகநானூற்றிலும் (348:4), கலித்தொகையிலும் (50:12) இடம்பெற்றுள்ளன.
கலித்தொகைத் தொடருக்கு, “பலாவினது பிசினையுடைத்தாகிய… இனிய பழம்” என்று உரை காண்கிறார் நச்சினார்க்கினியர். அகநானூற்றுத் தொடருக்கு, “பிசினையுற்ற பலவினது" என உரை கண்டுள்ளனர் ந.மு. வேங்கடசாமி நாட்டாரும், ரா. வேங்கடாசலம் பிள்ளையும்,
'பயிர்-‘ என்னும் சொல் சான்றோர் செய்யுளுள் அழைத்தல், கூவுதல் என்னும் பொருட்பரப்பில் வழங்கியுள்ளது.
‘பயிர்ப்பு- பயிலாத பொருட்கண் அருவருத்து நிற்கும் நிலைமை’ என்கிற இறையனார் களவியல் உரை விளக்கும் சொல்/ பொருள் பிற்காலத்தது.
பயிர்ப்பு என்பது பிசினை அல்லது பிசினின் தன்மையை - பிசுபிசுப்பை - குறிக்குமா?
பயின் என்னும் சொல் அகநானூற்றிலும் (1:5; 356:9), பரிபாடலிலும் (10:54) இடம்பெற்றுள்ளது.
"சிறுகாரோடன் பயினொடு சேர்த்திய கல்" (அகம்.1:5 & 356:9-10) - என்பதற்கு,“அரக்கொடு சேர்த்தியற்றிய கல்”, "அரக்கொடு சேர்த்தியற்றிய சாணைக்கல்” என்று ந.மு.வே. & ரா.வே. உரை கண்டுள்ளனர்.
பயின் என்பதற்கு அரக்கு எனப் பொருள் காண இயலுமா?
பல்கிழி யும்பயி னும்துகில் நூலொடு
நல்அரக் கும்மெழு கும்நலம் சான்றன
அல்லன வும்மைமத்(து) ஆங்(கு)எழு நாளிடைச்
செல்வதொர் மாமயில் செய்தனன் அன்றே
- சீவகசிந்தாமணி, நாமகள் இலம்பகம் , 235.
என்னும் செய்யுளை நோக்கப் பயினும் அரக்கும் வெவ்வேறானவை என்றறியலாம். இங்கு, 'பயின் - பற்றுதற்குரியன' என்று சொற்பொருள் தந்துள்ளார் நச்சர்.
"சிதையுங் கலத்தைப் பயினாற் றிருத்தும் "(பரிபாடல் 10:54) என்பதற்கு , “கலங்களை ஓட்டும்” என்று சுருக்கவுரை தருகிறார் பரிமேலழகர். இங்குப் பயின் என்பதற்குச் சுக்கான் என்று பொருள் கொள்வர். இது மேலும் ஆய்தற்குரியது.
பிசின் என்பது பயின் என்பதன் மரூஉ வாகலாம். ‘பிசுபிசு > பிசு > பிசின் என்கிறது செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி. யாமறியோம்.
அகநானூற்றின் ‘பயிர்ப்பு’ என்பதற்குப் பாடவேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை (முனைவர் வெ. பழநியப்பன், தமிழ்நூல்களில் பாடவேறுபாடுகள், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 1990).
கலித்தொகையில், ‘பயிற்பு’ என்னும் பாட வேறுபாட்டை இ.வை . அனந்தராமையர் குறிப்பிட்டுள்ளார். உ .வே .சா.நூலக ஓலைச்சுவடியொன்றிலும் இப்பாடம் உள்ளது[த. இராஜேஸ்வரி(பதி.), கலித்தொகை மூலமும் நச்சினார்க்கினியர் உரையும் – செம்பதிப்பு (தொகுதி1), பிரெஞ்சு ஆசியவியல் ஆய்வுப்பள்ளி, 2015, ப.250].
பசைபோன்ற ஒட்டும் பொருளின் தன்மை குறித்து, - பு என்னும் பண்புப் பெயர் விகுதி பெற்றுப் பயின்+பு = பயிற்பு என்றாதல் இயல்பே.
எனவே அகநானூறு, கலித்தொகை இரண்டிலும் பயிற்பு என்னும் பாடம் ஏற்றது எனத் தோன்றுகிறது.
_____________________
SaravananP:
'செவ்வரக்கு' என்பதை சாதிலிங்கம் என்பாா் நச்சா் (நெடுநல்வாடை :80 உரை )
No comments:
Post a Comment