- கள் ளைத்தேடிய கதை
விளக்கத்திலிருந்து வரலாற்றுக்கு
ஆங்கிலத்தில் ஏன் சில பெயர்கள் மட்டும் பன்மை விகுதி பெறவில்லை என்று தேடத் தொடங்கியபோது விளக்க மொழியியலிலிருந்து வரலாற்று மொழியியலுக்குப் போக நேர்ந்துவிட்டது.
ஆங்கிலத்திலுள்ள Sheep பற்றி வலையுலகில் புகுந்து தேடினேன். ஆக்ஸ்போர்ட் அகராதி வலைப்பூவில்(blog.oxforddictionaries.com) ஒரு சிறு வரலாறு கிடைத்தது. போதாதா!
ஆங்கிலத்தில் கடனாளப் பெற்ற சில சொற்கள் வழக்கில் ஆங்கில இலக்கண மரபுக்குள் உள்வாங்கப்பட்டாலும் சில, தம் மூல மொழி இலக்கண மரபைத் தொடர்கின்றன.
இவ்வகையில் சில சொற்கள் - swine, Sheep, deer, folk ஆகியன - தொல்பழஞ் செருமானியத்திலிருந்து (earliest Germanic) வந்தவை; பெரும்பாலானவை நீளடிப்(long-stem) பெயர்கள். சில, காலப்போக்கில் ஆங்கிலத்தில் ஒப்புமையாக்கமாக
- s போன்ற பன்மை விகுதிகள் பெற்றன (thing என்பதன் பன்மை விகுதியற்ற நிலையிலிருந்து மாறி இப்போது things எனப்படுகிறது).
தமிழில் இதனையொத்த ஓர் உள்ளார்ந்த மாறுதல் நிகழ்ந்ததென்று கருத இடமுண்டு.
கள்ளொடு சிவணும் அவ்வியற் பெயரே
கொள்வழி உடைய பலவறி சொற்கே (தொல்.சொல்.சேனா.நூ.169 )
1. குதிரை வந்தது
2. குதிரை வந்தன
ஒருமை, பன்மைப் பெயர் இரண்டின் வடிவமும் ஒன்றுதான். பன்மையுணர்த்தக் - கள் சேர்க்கலாமென்கிறது தொல்காப்பியம்.
சில வடிவங்களுக்கு மட்டும் பன்மை விகுதியில்லாத ஆங்கிலம் போலன்றித் தமிழில் உறழ்ச்சியாக - விகுதியின்மை, விகுதி சேர்த்தல் ஆகிய இரண்டும் சரி என - கொள்ளப்படுகிறது.
பண்டு அஃறிணை இயற்பெயர்களின் ஒருமை வடிவமே பன்மைக்கும் வழங்கியிருக்கவேண்டும். காலப்போக்கில் - கள் சேர்க்கும் புதிய வழக்கத்தைத் தொல்காப்பியம் பதிவு செய்கிறது.
பிற்கால இலக்கணிகள் பால்பகா அஃறிணைப் பெயரென்று கூறிய, அஃறிணை இயற்பெயர்கள் மிகப் பெரும் பாலானவை - அதுவும் தொல்காப்பிய, செவ்வியல் இலக்கியக் காலத்தில் - தமிழுக்கேயுரிய வேரும் அடியும் கொண்டவை; கடனாளப்பட்டவையல்ல.
தொல்காப்பியத்தில் ‘மக்கள்’ என்னும் பிரிப்பப்பிரியாச் சொல்லாட்சியில் மட்டும் உயர்திணையில் ‘-கள்’ளைக் காணமுடிகிறது. மக, மகவு, மகன், மகள், மகார் என்பன ‘மக்-‘ என்னும் வேரில் (root) கிளைத்தவை.
தமிழுக்குள்ளேயே அரிதான வடிவமான மாக்கள் என்பது மக்களையும் குறிக்க வழங்கியது.
மக்- வேர், மக - அடி எனில், -கள் இணையும்போது, மககள் என்பதைவிட மக்கள் எளிதாகவும் இயல்பாகவும் இருந்திருக்கலாம்; மாக்கள் என்று நீண்டது ஒரு வகை ஈடுசெய் நீட்டமாக இருக்கலாம். இருக்கட்டும்.
அந்தக் -கள், அஃறிணை இயற்பெயர்களிலும் விகுதியாக நுழையத் தொடங்கிய ஒரு கட்டத்தைத் தொல்காப்பியம் சொல்கிறது போலும்.
அப்புறம் உயர்திணையில் உயர்வின்மேல் உயர்வின் அடையாளமாய்க் -கள் பரிணமித்ததை மு.வ. தம் ‘கள் பெற்ற பெருவாழ்வு’ என்னும் கட்டுரையில் விவரித்திருப்பார்.
மன்னன் - உயர்திணை ஆண்பால் ஒருமை (இலக்கணம்)
மன்னர் - உயர்வின் அடையாளமாக ஒருமையைப்
பன்மையாக்கல் (வழக்கு)
மன்னர்கள் - உயர்வில் பன்மை (வழக்கு)
மன்னரவர்கள் - மிகுஉயர்வு (வழக்கு)
இப்பெயர்கள் வினைமுற்றிலும் இயைபு (concord) கொண்டன:
மன்னர் வந்தார்
மன்னரவர்கள் வந்தார்கள்.
ஆங்கிலம் கடனாட்சிகளைத் தன்வயப்படுத்தியதெனில், தமிழ் தெளிவும் உயர்வும் கருதித் தனக்குள்ளேயே மாறுதல்களைச் செய்து கொண்டது.
விளக்க மொழியியல் வரலாற்றைக் கருதுவதில்லை. அவ்வகையில்தான் பன்மையில் சுழியுருபைக் (zero morph) கொள்கிறது ஆங்கிலம்.
தொல்காப்பிய நோக்கில் அஃறிணை இயற்பெயர்கள் சுழியுருபு கொண்டிருந்தன என்று விளக்கலாமா?
மெல்ல மெல்ல வந்து , நம் காலத் தமிழில் அஃறிணைப் பன்மைகளில் - கள் இன்றியமையாததாகிவிட்டது என்றே சொல்லலாம்.
கொசுறு:
வேடிக்கை என்னவென்றால், 'பேருந்துகள் ஓடாது' , 'பள்ளிகள் திறக்கப்படாது' - என்றெல்லாம் ஏடுகளிலும் பேச்சுவழக்கிலும் வினைமுற்றில் பன்மை காணாமல்போனதுதான்.
No comments:
Post a Comment