Monday, December 23, 2024

வேரில் வெந்நீர் விடவேண்டாம்!*

 



எனது மொழியியல் அறிவு பாமர அளவினது . நான் அறிந்தவரை விளக்க மொழியியல் என்பது சமகால/ஒருகால மொழியமைப்பை விளக்குவது. எழுத்து வழக்கற்ற மொழிகளுக்கு இலக்கணம் உருவாக்க வல்லது. விளக்கட்டும் ; இலக்கணம் வகுக்கட்டும். பிரச்சினையில்லை.


தமிழ்நாட்டில் மொழியியல் அறிமுகமானபின் அறிஞர் சிலர்   தற்காலத் தமிழில் தீட்டிக் கூர் பார்க்கத் தொடங்கியது இயல்புதானே ! தமிழின்  ஐ , ஒள- களை நீக்கலம் ழ  ற க்களை  நீக்கலாம்  க, ச, ட , த, ப  ஆகியவற்றுக்கு இனமான ஒலிப்புடைத் தடையொலிகளைச் சேர்க்கலாம் என்றெல்லாம்  பரிந்துரைக்கத் தொடங்கினார்கள்.

(மரபிலக்கணம் விதிக்கிறது . நாங்கள் விளக்குகிறோம் என்றவர்கள் விளக்கி  விதிக்கத் தொடங்கியது நகை முரண்.)


சோ ராமசாமி சில காலம்   ை Fல்  F̊ , F  , Fா , Fி (ஃப் , ஃப ,ஃபா , ஃபி ...) என்று அச்சிட்டார்(  இதுகளுக்குத் தமிழ் என்றால்  கிள்ளுக் கீரை. அது சரி! தமிழுக்குத் தகும் உயர்வளிக்கத் தோன்றிய பாரதியே தடுமாறியபோது,      இந்தத் தொகளக் அறிவுச் சீவி வகையறா பற்றிச் சொல்லவேண்டியதில்லை)


கிரந்த வரிவடிவங்கள் தமிழுக்காக உருவாக்கப்பட்டிருக்கலாம் (விவாதத்திற்குரியது); தற்காலத்தமிழில் பரவலாகக் கையாளப்படலாம்; கற்பிக்கவும் படலாம். ஆனால் அவை தமிழல்ல என்ற தெளிவு வேண்டும். 


' வட சொற் கிளவி ' பற்றிய தொல்காப்பிய விதியைக் கம்பன் போன்ற மேதைகள் - கிரந்தம் புகுந்ததற்குப் பின்னும் , வீரசோழியத்திற்குப் பின்னும் - கடைப்பிடித்தார்களே !    [கம்பன் ' என்றுமுள தென்றமிழ் ' என்றானே ! ] அவர்கள் மொழி மாற்றங்களை அறியாத மூடர்களா என்ன ?


    

                                                               ***


மொழி மாறவில்லை என்று யாரும் சொல்ல முடியாது . மாற்றம் வெளிப்படை . வட்டார வழக்குகளுக்குத் தமிழ் மரபிலேயே இடமிருக்கிறது. அவற்றின் உயிரோட்டத்திலும் எனக்குக் கருத்துவேறுபாடில்லை. வட்டார வழக்கை எழுத்தில் ஆள்வதையும் நான் மறுக்கவில்லை; ஏற்கிறேன். மொழியியல் அடிப்படையில் விளக்கமுறை இலக்கணம் வரைந்து அவற்றைக் காலந்தோறும்ஆவணப் படுத்தவேண்டும். ஆனால், இக்கால வழக்குத் தமிழ் மட்டுமே தமிழ் என்று சொல்ல முடியாது.


வரலாறும் மரபு வழி இலக்கிய இலக்கணமும் உடைய மொழிகளின் இக்கால வழக்கில்

மரபுக்கும்  கணிசமான இடம் உண்டு. மரபும் சேர்ந்ததுதான் தற்காலத் தமிழ் ; எழுத்துத் தமிழ். மரபே ஒருங்கிணைக்கும் ஆற்றலாக இயங்குகிறது; இதில் வரி வடிவ மரபுக்கும் கணிசமான பங்குண்டு . இந்த  ஒருங்கிணைப்பாற்றலைச் சீர் திருத்த, சேர்திருத்தங்களால் சிதைப்பது மொழி என்னும் பண்பாட்டுத் தொடர்ச்சியைத் துண்டித்து அடையாளமழித்துவிடும் .


தமிழின் தகுமொழி நிலை பற்றி எழுதப்போவதாக எனது வேறோர் இடுகையில் எழுதியிருந்தேன்.தொடர்பு கருதி அதனையும்  இங்குப் பார்த்துவிடலாம்.  எனது பாமர மொழியியல் அறிவிலிருந்து ஓர் ஊகத்தை முன்வைக்கிறேன். மொழியியல் வல்லுநர்களின் தெளிவுறுத்தலைக் கோருகிறேன் .


Standard dialect: That dialect of a language which has gained literary cultural supremacy over other dialects and is accepted by the speakers of other dialects as the most proper form of that language[ Dictionary of Linguistics, M.A. Pei & B. Gaynor (Ed.) ] 


என்பதைக் காட்டி, அறிஞர்  செ.வை. சண்முகம் அவர்கள் ,


" தகுமொழி என்பது ஒரு மொழியில் வழங்கும் பல கிளை மொழிகளில் அரசியல் முக்கியத்துவம், வணிகச்சிறப்பு, கலாச்சார நடவடிக்கைகளின் மையம் போன்ற காரணங்களினால் சிறப்பு வாய்ந்த ஒரு கிளைமொழியே. அந்தக் கிளைமொழி பிற கிளை மொழி மக்களாலும் அறிந்து பயன்படுத்தப்படும் என்று மொழியியலார் தகுமொழிக்கு விளக்கம் கொடுத்துள்ளார்கள் " என உடன்பட்டுத் தமிழாக்கித் தந்துள்ளார்.(சொல்லிலக்கணக் கோட்பாடு - தொல்காப்பியம் - முதல் பகுதி , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் , சென்னை , 2008, பக். 60 - 61)


ஆனால் இக்காலத் தமிழின்  எந்தக் கிளைமொழியும் பொது எழுத்துமொழியாகவில்லை; அதாவது, தகுமொழியாகவில்லை. மரபு வழித் தமிழ்   இக்காலத்தில் எய்திய ஒரு கட்டமைப்பே தமிழின் தகுமொழி. 


எந்தக் கிளை மொழியிலிருந்தும்  உருவாகாததால் தமிழ் இரு நிலை வழக்கு மொழியாக - பேச்சுத் தமிழிலிருந்து எழுத்துத் தமிழ் வேறுபட்டு - காணப்படுகிறது.


ஒரே நேரத்தில் இரட்டைக் குதிரையில் செல்லும் நிலைதான் .  சமநிலை தடுமாறும்தான் . தடுமாறினாலும்  இரண்டையும் பேணியாக வேண்டும் . இது தமிழின் இயல்பு.ஒன்றைக் கொன்று மற்றொன்றைக் கொள்வது வசதியானதென்று  தமிழை ஊனப்படுத்தக்கூடாது.


மொழி பண்பாட்டுப் பொறுப்போடு கையாளவேண்டிய கருவி.

- முகநூல் இடுகை, 22 டிசம்பர் 2013

____ ____ ____ ____ ____ ____ ____ ____ 

* மொழியியலறிஞர் தெய்வ சுந்தரம் நயினார்   அவர்களின் ' கிரந்த எழுத்துக்களும் மொழியியலும்' என்னும் இடுகை பற்றிய என் கருத்தாக இதனை எழுதினேன். ஆனால் எழுத்தெண்ணிக்கை வரம்பு காரணமாக முகநூல் ஏற்க மறுத்துவிட்டது. தனி இடுகையாகத் தந்துள்ளேன்.

Thursday, June 27, 2024

அகப்பொருள் உவமையும் அலங்கார உவமையும்


 

அகப்பொருள் உவமையும் அலங்கார உவமையும்

" சான்றோர் செய்யுள்களில் உவமை , தத்துவ இயலின் பிரமாணமோ  அலங்காரவியலின் அணியோ அன்று. அதுவே  பொருளுமாகி நிற்கும். 'உவமப்பொருள்' என்பார் தொல்காப்பியரும் " ( எனது முகநூல் இடுகை ,'பாடல் பெற்ற பறவை! ' 30 அக்டோபர் 2020) - என்று எழுதியிருந்தேன்.

இக்கருத்து வீரசோழியத்தாலும் வலிமையுறுகிறது.

தொல்காப்பியத்திற்குப்பின் தம் காலத்துப் பன்மொழி வரவையும் உலக வழக்கின் இயல்புகளையும் சங்கத இலக்கண மேலாதிக்கத்தையும் உளங்கொண்டு புத்த மித்திரர் வீரசோழியமியற்றினார். அவருடைய மாணாக்கராகிய பெருந்தேவனார் அந்நூலுக்கு இயற்றிய விரிவுரை நூலோடு இயைந்தது ; பிந்தைய இலக்கணப் போக்குகளில் செல்வாக்குச் செலுத்தியது.

இன்று கிடைக்கும் தமிழ் இலக்கண நூல்களுள் - எழுத்து , சொல், பொருள், யாப்பு, அணி எனும் -  ஐந்திலக்கணங் கூறும் முன்னோடி நூல் வீரசோழியம் .

வீரசோழியப் பொருட்படலத்தில் அகப்பொருளுக்கு உரை என 27 கூறுகள் சுட்டப்பட்டுள்ளன (காரிகை 90 ,  91). இவை தொல்காப்பியப் பொருளதிகாரச் செய்யுளியல் கூறும் திணை, கைகோள் முதலிய செய்யுள் உறுப்புகளையும் , நம்பியகப்பொருள் கூறும் அகப்பாட்டுறுப்புகளையும் ஒத்தவை.

அந்த 27 உரைகளில் ஒன்றாக உவமை இடம்பெற்றுள்ளது. இந்த உவமை பற்றிப் பெருந்தேவனார் தம் உரைச் சூத்திரங்களுடன் (?) விரிவாக விளக்கியுள்ளார்.

அலங்காரப் படலத்தில் " ... அலங் காரங்கள் தண்டிசொன்ன/ கரைமலி நூலின் படியே யுரைப்பன்"(காரிகை 143) என்கிறார் புத்தமித்திரனார். அந்த அலங்காரங்களுள் ஒன்று உவமை என்பது சொல்லித்தெரியவேண்டியதில்லை( அப்போது தமிழ்த் தண்டியலங்காரம் வரவில்லை என்பது மனங்கொள்ளத்தக்கது)

உவமையணி பற்றி மிகச் சுருக்கமாகவே உரை வரைந்துள்ளார் பெருந்தேவனார்.

தொல்காப்பியத்திற்கும்  சான்றோர் செய்யுள்களுக்குமிடையிலான சில இடைவெளிகள் இயைபின்மைகள் ஏற்கெனவே அறியப்பட்டவைதாம்.

எட்டுத் தொகையின் குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, புறநானூறு (அகமும் புறமும்) ஆகியவற்றின் உவமை இயல்புகளுக்கும்  தொல்காப்பிய உவமையியலும் பிற இயல்களின் உவமை பற்றிய கருத்துகளும் காட்டும் உவமை இலக்கணத்திற்கும் இடைவெளிகள் இயைபின்மைகள் காணப்படலாம் என்று தோன்றுகிறது.

அவ்வாறெனில் சங்கதச் செல்வாக்கிற்குட்பட்ட , பிற்காலத்து வீரசோழியம் அதனை இட்டு நிரப்ப இயலுமா என்ன!

சான்றோர் செய்யுள் மரபில் - குறிப்பாக அகப்பொருளில் - வரும் உவமை வேறு ; சங்கத அலங்கார இலக்கண வழிவந்த உவமை வேறு எனப் புத்த மித்திரனாரும் பெருந்தேவனாரும் உணர்ந்திருக்கின்றனர். அந்த அளவில் வீரசோழியம் போற்றத்தக்கது.

Sunday, March 3, 2024

இலக்கண மறுப்பு என்னும் பொறுப்பின்மை

வட்டார வழக்குதான் மக்கள் மொழி .அதுதான் உயிருள்ளது என்று மிகையழுத்தம் தரும் குழு ஒன்று விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்படித்தான் எழுத்துச் சீர்திருத்த, சேர்திருத்த, இலக்கண மறுப்புக் குழுக்களும். 

தமிழில் அரசாணை வழி எழுத்துச் சீரைத் திருத்தியது தவறான முன்னுதாரணம்.

தமிழில் கிரந்த வடிவங்கள் சில புழங்குகின்றன ; மிகுதியாகப் புழங்குகின்றன. ஆனாலும் அவை  அயல் வரவு என்கிற நிலையில்தான் கற்பிக்கப்படுகின்றன. அவற்றையும் வேறுபல கிரந்த வடிவங்களையும் தமிழில் சேர்க்க வேண்டுமென்கிறவர்கள் பேசாமல் தெலுங்கு அல்லது கன்னடத்தை வரித்துக்கொள்வதுதான் நேர்மை. குறைந்தது மலையாளத்தின் பக்கம் போய்விடலாம்.

சங்கத வருக்க எழுத்துகளையும் பிறவற்றையும் ஏற்றபின்னும் - மலையாளத்தை விட்டு விடுவோம் - தெலுங்கும் கன்னடமும் இருவேறு மொழிகளாக இயங்குவது ஏன் ? ஒவ்வொரு மொழிக்கும் அதற்குரிய தனித்தன்மை உண்டு.

மொழி என்பது பயன்படு கருவியாகவும் பண்பாட்டுச் சொத்தாகவும் ஒருசேர இயங்குவது. உள்ளார்ந்து நிகழும் மாற்றங்களையும் பிறமொழி ஆதிக்கத்தால் நேர்ந்த மாற்றங்களையும் காட்டி , வலிந்து மாற்றங்களைத் திணிக்கக் கூடாது. 

பயன்பாடு கருதி ஆங்கிலம் போன்ற அயல் மொழிகளை - அவ்வவற்றின் இலக்கணம் பிறழாமல் - கற்கும்போது ; கற்க முடியும்போது, தமிழுக்கு மட்டும் இலக்கணம் வேண்டாம் என்பது உள்நோக்கமுடையது.



இந்த உள்நோக்கத்துக்கு வரலாற்று, அறிவியல் முலாம் பூசி மருட்டும்போது தாழ்வு மனப்பான்மையுள்ள தமிழ்த் துறையினர் சிலர் ஆமாஞ்சாமி என்கின்றனர்.

இலக்கணம் தமிழ் மொழிக்கு மட்டுமன்று ; உலகத்து மொழி யாவற்றுக்கும் உண்டு. மரபார்ந்த மொழிகள் வெறும் தற்காலப் பேச்சு வழக்கை மட்டுமே கணக்கில் கொள்ளக்கூடாது. தமிழ் போன்ற இரு நிலை ( பேச்சு, எழுத்து) வழக்கு மொழிகளில் எழுத்து வழக்குக்கும் உயிர் உண்டு. 

விதிவிலக்குகள் இருக்கலாம் ; கருத்து வேறுபாடுகள் , விவாதங்கள் இருக்கலாம்,

'கல்த்தாரைக் கல்த்தாரே காமுறுவர் 'என்பது போன்ற - டி.கே.சி. வகையறாக் - குறுக்குச் சால்கள் இருக்கலாம்.

இவை இலக்கண மறுப்பிற்குரிய நியாயங்கள் அல்ல. இலக்கணம் இருப்பதால்தான் இவை உயிர்த்திருக்கின்றன.

இலக்கணம் தெரியாதிருப்பது குற்றமில்லை. மொழிப் பயிற்சி காரணமாக இலக்கணம் தெரியாமலே , மீறியே கூட, தம் நடையில் நுட்பங்களைக் கொணர்ந்த எழுத்தாளர் பலருண்டு.

வானொலி நேர்காணல் ஒன்றில், " தமிழ்'ல எழுதறவாளுக்குத் தமிழ் இலக்கணம் தெரிஞ்சிருக்கணுமா என்ன ?" என்று,போகிற போக்கில் , எதிர்மறையான விடைக்குக் கொக்கிபோடும்  உள் நோக்க வினாவைத் தொடுத்தார் அந்த எழுத்தாள அம்மையார்.

" தெரிந்திருக்கக் கூடாதா என்ன ?" என்று தாமொரு கொக்கியை விடையாக மாட்டினார் ஜெயகாந்தன்.

தமிழ்த் துறையாளர்கள் இலக்கணப் பெருமிதத்தை அணிந்து நின்றிடுக.

[ கொசுறு : சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எனக்கு இலக்கணம் தெரியாது. அதனாலேயே இலக்கண மறுப்புக்குத் தலையாட்டுவது ... தனம்]

Thursday, February 15, 2024

அம்மாவின் உறுதி! (பாலசுந்தரனார் நாட்குறிப்புகளில் ...)



 அம்மாவின் உறுதி! 

(பாலசுந்தரனார் நாட்குறிப்புகளில் ...)


சென்னைப் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளில் இளநிலைப் பட்ட வகுப்புகளுக்குப் பகுதி I தமிழில் பாலசுந்தரனாரின் ' புலவர் உள்ளம் (தொண்டு) ' பாடமாக வைக்கப்பட்டுவிட்டது. அந்தக் காலத்தில் திங்கள் தோறும் ஊதியம் வராது. கீழ்த்திசை (Oriental) மொழியாசிரியர்களுக்கு ஊதியமும் குறைவு.பெரும் எண்ணிக்கையில் அச்சிட அவரிடம் பணமில்லை. வெளிப் பதிப்பகங்களுக்குக் கொடுக்க மனமில்லை (இது சரியானது).


இந்த நிலையில் வேறு வழி தோன்றாமல்  மாமனாரிடம் - கடனாகத்தான் -  கேட்டுப் பார்க்கலாம் என்ற எண்ணம் எழுந்ததது .  துணைவியார் பங்கசவல்லி அம்மையாரிடம் தெரிவித்தார். இது பற்றி 1971 பிப்பிரவரி 20 ஆம் நாட்குறிப்பில் எழுதியுள்ளார்.


துணைவியார் மறுத்துவிடுகிறார். 


       கொண்ட கொழுநன் குடிவறன் உற்றெனக்     

       கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள் ( நற்றிணை 110)


 என்றது  இலக்கியக்  குறிக்கோளன்று ; நடப்பு - இருபதாம் நூற்றாண்டிலும்.


அம்மாவிடமிருந்த இந்தச் சமரசமற்ற உறுதியை, பிடிவாதத்தை, கடுமையை நான் நன்குணர்ந்தவன். இதனால் உறவினர் பலரும் அவரிடம் ஒரு பாதுகாப்பான தொலைவைப் பேணிக்கொண்டிருந்தார்கள். 


இத்தகைய சூழல்களில் பிடிவாதமான நிலையெடுத்து நிற்கும் குணம் ஓரளவாவது என்னிடம் இருப்பதற்குக் காரணம் அம்மாதான் என்று எண்ணுகிறேன்.


அப்பாவுக்கு நண்பர் உதவியதை பிப்.22 ஆம் நாட்குறிப்பில் எழுதியுள்ளார்.

நிருவாகம் : அதிகாரப் பொழுதுபோக்கும் வக்கிரமும் (பாலசுந்தரனார் நாட்குறிப்புகளில் ...)

 நிருவாகம் : அதிகாரப் பொழுதுபோக்கும் வக்கிரமும்

(பாலசுந்தரனார் நாட்குறிப்புகளில் ...)


ஆசிரியர் x நிருவாகம் → பணி நீக்கம்

சம்பளப் பிடித்தம் என்னும் அச்சுறுத்தல் 

- ஆகிய இரண்டு இடுகைகளில் , 31.01.1969 ஆம் நாளிட்ட  சம்பளப் பிடித்தம் பற்றிய கடித நகலைத் தந்து பாலசுந்தரனாருக்கு நிருவாகம் இடையூறு செய்தது பற்றி முகநூலில் எழுதியிருந்தேன்  (31 Jul 2023)  . தொடர்ந்தும் ஏதேனும் வாய்ப்புகள் தேடி இடையூறிழைத்து - முதல்வர் கு.சிவமணி அவர்களைப் போல் - வெளியேற்றி விடுவதே நோக்கம். பாலசுந்தரனாரும் அந்த மன நிலைக்கு வந்து விட்டதை இந்த நாட்குறிப்புகள் புலப்படுத்துகின்றன.






1970 மார்ச் 23 : வெளி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முன்னனுமதி பெற வேண்டும் என்று விதித்து, இது, ஒரு முறைமைக்கான ஏற்பாடுதான் , போய் வந்தபின் தெரிவித்தால் கூடப்  போதும்  என்று சொல்லி [ இது அண்டியவர்களுக்கானது], அப்புறம் முன்னதாகத்  தெரிவிக்காமல் போனது பற்றி எச்சரிக்கும் இத்தகு நடைமுறைகள் நிருவாகத்தின் அதிகாரப் பொழுதுபோக்கு.


1970 அக்டோபர் 12 :தனிப்பாடல் திரட்டு, சம காலத்தில் விவாதத்திற்குரிய எதுவும் இல்லாத ஒரு தொகை நூல்;  சரசுவதி மகால்  வெளியீடு. இத்தகு பதிப்புப் பணியில் ஓர் ஆசிரியர் ஈடுபடுவது அவர் பணியாற்றும் நிறுவனத்தின் மதிப்பைக் கூட்டும். ஆனால் நிருவாகங்கள் அதிகாரப் பொழுதுபோக்கில் தொடங்கி வக்கிர முடிவுகளை எடுக்கும் எல்லைவரை போவதை இன்றும் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்.


1970 டிசம்பர் 18 : ஒரு வக்கிரம். முதல்வர் கு.சிவமணி அவர்களுடன் நிருவாகம் முரண்பட்டது. அவரும் வெளியேறிவிட்டார். ஆனால் கரந்தைத் தமிழ்ச் சங்க/ புலவர் கல்லூரி நிருவாகம் திரு .கு.சிவமணி அவர்களின் தந்தையார் என்னும் ஒரே காரணத்திற்காகத்  திரு. சிவ.குப்புசாமி பிள்ளையவர்கள் மறைந்த போது கூட உரிய மரியாதை செய்யாமல் புறக்கணித்தது வக்கிரத்தின் உச்சம். 


இத்தனைக்கும் திரு. சிவ.குப்புசாமி பிள்ளையவர்கள் தமிழவேள் உமா மகேசுவரனாராலேயே மதிக்கப்பட்டவர்; வெள்ளிவிழா மலரில் படம் இடம்பெறுமளவு முதன்மை பெற்றவர் ; ஓய்வுக்குப் பின்னும் சங்கப் பணிகளில் ஈடுபட்டவர். தமிழ்ப் பொழிலில் குன்றக் கூறலாக  ஒரு குறிப்பு இடம் பெற்றதே நிருவாகத்தின் ' பெருந் ' தன்மை என்று கொள்ளவேண்டியதுதான். (நானும் என் பங்கிற்குக் கல்லூரி நிருவாகத்தின் வக்கிரத்தால் துன்புற்றவன்தான்!)

"தேவாரத் திருமுறைகளுக்கு ஒரு நல்ல பதிப்பு"பாலசுந்தரனார் நாட்குறிப்பு




 " தேவாரத் திருமுறைகளுக்கு ஒரு நல்ல பதிப்பு"-மூதறிஞர் நீ.கந்தசாமிபிள்ளை

______________________________________________________________________________________


பாவலரேறு ச.பாலசுந்தரனார் நாட்குறிப்பு எழுதும் வழக்கத்தை 1970 இலிருந்து  தொடங்கியிருக்கவேண்டும். 1970 முதல் 2003 வரை அவர் எழுதியுள்ள நாட்குறிப்பேடுகள் - இடையில் ஓரிரு ஆண்டு விடுபாடுகளுடன் - கிடைத்துள்ளன.


அவர் நாட்குறிப்பேடுகளை விலை கொடுத்து வாங்கியதில்லை ;  அன்பளிப்பாகக் கிடைத்தவற்றில் எழுதியுள்ளார்.  முந்தைய ஆண்டின் ஏட்டில் அச்சிடப்பட்ட நாள் முதலியவற்றைத் திருத்தியும் , தாமே தைத்த ஏட்டில் நாளிட்டும் எழுதியுள்ளார். 


கல்லூரி நிகழ்வுகள், ஊதியம், வங்கி இருப்பு , பணம் எடுத்தல் போடுதல், கொடுக்கல் வாங்கல்கள், நிகழ்ச்சிகளுக்குச் செல்லல், மதிப்பூதியம் , நூலாக்கத்திற்கான புற அகத் தூண்டல்கள், நூல் அச்சாக்கம்,  நூல்களை விற்பனைக்கு அனுப்புதல், நூலக ஆணை,வரவு செலவு , மாதாந்திர அன்றாடச் செலவுகள் , இவற்றால் நேரும் இன்ப துன்ப மன நிலைகள் , சந்திப்புகள் , உடல் நலக்குறைவு , ஆங்காங்கு இவை சார்ந்த கருத்துகள் முதலியன இடம் பெற்றுள்ளன. 


ஒரு கட்டத்தில் தொடர்ந்த குருதிப் போக்கும், பிற்காலத்திய தலை சுற்றலும் பற்றி அவ்வக் கட்டத்தில் மீண்டும் மீண்டும் எழுதியுள்ளார்.


சில நாள்களில் , "எங்கும் செல்லவில்லை "  என்று மட்டுமே இருக்கும் ; ஓரிரு சொற்களில் காரணத்தை எழுதுவதுமுண்டு. சில நாள்கள் எதுவும் எழுதாமல் விடுவது முண்டு.


ஒரு கட்டத்தில் துணிகளைத் துவைத்துப் பெட்டி போட்டது பற்றி அவ்வப்போது எழுதியுள்ளார்.¹


சலிப்பூட்டும் குறிப்புகளோடும் ,இடையிடையே சில போது , குடும்பம், உறவு, நட்பு , தமிழ்ப் புலமையுலகம் முதலியன பற்றிய நெருடலான குறிப்புகளோடும் அவர் எழுதியவற்றை  அப்படியே  இப்போது வெளிப்படுத்த இயலாது; கூடாது ( அவர் இருந்திருந்தால் நானே கூட இவற்றில் தலையிட்டிருக்கமாட்டேன்).


வெளிப்படுத்த வாய்த்த சிலவற்றைத் தேர்ந்தெடுத்து - காலவரிசை கருதாமல் - அவ்வப்போது பகிர்ந்துகொள்ளலாம் என்று கருதுகிறேன்.


1970 பிப்பிரவரி 02 ஆம் நாள், " மாலை N.K. அவர்களிடம் சென்றிருந்தேன்... தேவாரத் திருமுறைகளுக்கு ஒரு நல்ல பதிப்பு அடையாறு நூல் நிலையத்திற்காகச் செய்ய வேண்டுமென்றார் " என்று எழுதியுள்ளார் ச. பா.

தொடர்ந்து ,  பிப்பிரவரி 13 அன்று நீ.க. 26 பதிகங்களைப் பிரித்தெழுதச் சொன்னதாகவும் , மார்ச் 03 அன்று பிரித்தெழுதிய தாள்களை ஒப்படைத்ததாகவும் எழுதியுள்ளார். ஆனால் இப்பதிப்பு வந்ததாகத் தெரியவில்லை. கையெழுத்துப் படிகள் ஏதும் அடையாறு ( பிரம்ம ஞான சபை ?) நூலகத்தில் இருக்குமா? ²


-----------------------------------------------------


1.   துணிகளை வாரிப்போட்டு - சோப்பும் வீணாகாமல் துணியும் நோகாமல் மாங்கு மாங்கென்று துவைத்து , காயப்போடும் போதே முடிந்த வரை சுருக்கம் நீக்கிவிடுவார்.


பெட்டி போடுவதற்குச் சடங்கு போன்ற வரிசையான செயல்முறைகள் உண்டு. முதலில் தரையில் ஒரு கெட்டிச் சமுக்காளம் பரப்பி அதன்மேல்  தூய விரிப்பைச் சுருக்கமில்லாமல் மெத்தென்று விரித்துக்கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரையும் ஒரு துணி முடிச்சையும் ஆயத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பெட்டி போடப்படும்  துணியில் சுருக்கம் இருந்தால் நீரைத் துணியில் நனைத்து நீவவேண்டியிருக்கும். இருப்புச் சலவைப்பெட்டியில் கரி நிரப்பி எரியூட்டிச் சூடேற்ற வேண்டும்.  சலவைப்பெட்டியின் வழவழப்பான கீழ்ப்பக்கத்தைத் தரையில் வைக்கக் கூடாது; அதற்கென்று உள்ள மனையில்தான் வைக்க வேண்டும். அவ்வப்போது கரியில் பூக்கும் சாம்பலை விசிறிவிட வேண்டும்.தீப்பொறி படாதவாறு காற்றுக்கு எதிர்த்திசையில் அமர வேண்டும்.  பொறி விழாதவாறு துணிகளையும் அத்திசையில் வைத்துக் கொள்ள வேண்டும். சலவைப்பெட்டியின் எடை ஒரு கிலோவுக்குக் குறையாது. குத்துக் காலிட்டுத் தரையில் அமர்ந்து சலவைப் பெட்டியைத்தூக்கித் துணியின்மேல் வைத்துக் குறிப்பிட்ட திசையில் தேய்ப்பதற்குக் குறைந்தபட்சத் தொழில் திறனும், உடல் வன்மையும் வேண்டும். ஏறத்தாழ முப்பது துணிகளை ஒரே அமர்வில் பெட்டிபோட்டுவிடுவார்.அப்புறமும் துணிகளை அடுக்கி வைத்தல் பெட்டியிலுள்ள சாம்பல் பூத்த கரியைக் கொட்டிவிட்டு , பெட்டியில் கீறல் விழாமல் உரிய இடத்தில் வைத்தல் முதலியவற்றையும் நறுவிசாகச் செய்து முடிப்பார். 


அது , ஏறத்தாழ முழு நாளை எடுத்துக் கொள்ளும். எனவேதான் அதனைக் குறிப்பிட்டுள்ளார் என்று தோன்றுகிறது.



2.  பிரஞ்சு இந்தியக் கழகம் வாயிலாக,  பேரறிஞர் பண்டித வித்துவான் தி.வே.கோபாலையர் பதிப்பித்து மூன்று பகுதிகளாக (1984, 1985, 1991 ) வெளியிட்ட தேவாரம் - பண்முறைப் பதிப்பு , தேவாரப் பதிப்புகளின் உச்சம். தேவார ஆய்வுத்துணை என்னும் மூன்றாம் பகுதி ஒரு தேவாரக் களஞ்சியம். இப்பதிப்புக்கு நீ. க. அவர்களின் திருவாசகப் பதிப்பை முன்னோடி எனலாம் ]

Sunday, February 4, 2024

' மட்டையாட்ட மான்மியம் '

 ' மட்டையாட்ட மான்மியம் ' 



 2015ஆம் ஆண்டு டென்னிசு விளையாட்டாளர்  மரியா சரபோவா, ' சச்சின் டெண்டுல்கர் யாரென்று தெரியாது ' என்று சொல்லப்போக  அப்போது  அவரைச் சமூக ஊடகங்களில் மாற்றி மாற்றி வறுத்தெடுத்துவிட்டனராம்.  

இப்போது  ' உழவர் போராட்டம் எங்கள் உள்நாட்டுப் பிரச்சினை '  என்றும் ' இந்திய இறையாண்மை ' என்றும்  டெண்டுல்கர் கீச்சிட , போராட்ட  ஆதரவு உணர்வுடன்,    அப்போது  ‘சச்சினைத் தெரியாது’ என்று கூறிய மரியா சரபோவாவிடம் மன்னிப்புக் கேட்டுச் சரமாரியாகக் கீச்சிடுகிறார்களாம். இது செய்தி.


இனிக் கதை !


நாங்கள் தஞ்சாவூர் வடக்கு வீதியில் வசித்துவந்தோம். இருபுறமும் நான்கைந்து மணித்துளிகளில் நடந்து சென்றடைய வாய்ப்பாகத் தூய பேதுரு பள்ளி, கலியாண சுந்தரம் பள்ளி ஆகிய புகழ்மிகு பள்ளிகள் இருந்தன. 


ஆனால், ஏறத்தாழ இருபது மணித்துளிகளுக்குக் குறையாமல் நடந்து செல்லும் தொலைவிலிருந்த , நகரம் சிற்றூர் இரண்டுக்கும் இடைப்பட்ட, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் உமாமகேசுவரர் பள்ளியில் நான் படித்தேன். சங்கம் நடத்திய புலவர் கல்லூரியில் பணியாற்றியதால் அப்பா என்னையும் உடன் அழைத்துச் சென்றார்கள்.


எனக்குப் பள்ளி நண்பர்கள் வேறு; தெரு நண்பர்கள் வேறு. 


உமாமகேசுவரர் பள்ளியில் அப்போது சாஃப்ட் பால் அல்லது பேஸ்பால் எனப்படும் குண்டாந்தடி ஆட்டத்தில் வல்ல உடற்பயிற்சி ஆசிரியர் இருந்ததால் அதுவே பயிற்றுவிக்கப்பட்டது.


நான் வேடிக்கை பார்ப்பேன். விளையாடியதில்லை.


தூய பேதுரு பள்ளி விளையாட்டுத் திடலில் இக்பால் அரங்கில் , ஆண்டுதோறும் ஒருவார காலத்திற்குக் குறையாமல்  நடக்கும் அனைத்திந்திய அளவிலான கூடைப்பந்துப் போட்டிகளைத் தவறாமல் பார்ப்பேன்.  கூடைப்பந்தில் ஆர்வமிக்க பார்வையாளர்கள் கணிசமாக வருவார்கள். ஆனால் ,தெரு நண்பர் எவருக்கும் அதில் ஆர்வமில்லை. நான் தனியாகத்தான் செல்வேன்.பெரிய அளவுக்கு விதிகளோ ஆட்ட நுணுக்கங்களோ தெரியாவிட்டாலும் அதன் விறுவிறுப்பு என்னை ஈர்த்தது. 


கோலிக்குண்டு , கிட்டிப்புள் , பம்பரம் (தலையாரி என்றொரு ஆட்டம் விறுவிறுப்பானது) முதலியவற்றில் தெரு நண்பர்களோடு நானும் விளையாடுவேன் ; குறிப்பாகக் கிட்டிப்புள் நன்றாக ஆடுவேன். கிட்டிப்புள்ளில் இருந்துதான் கிரிக்கெட் வந்தது என்று கலைச்சொல்லறியாக் காலத்திலேயே பண்பாட்டாராய்ச்சிப் பகடி செய்திருக்கிறேன்.


அப்போது, தெருவில் சந்து பொந்துகளில் எல்லாம் சிறுவர்கள் தாமே அமைத்துக் கொண்ட  சிறுசிறு மட்டையாட்டக் குழுக்கள்  இருக்கும். ஒவ்வொரு குழுவுக்கும் நீள் வடிவ ஓவிய ஏடு  ஆட்டப் பதிவேடாக இருக்கும் . குழுக்களுக்குள் கையெழுத்துப் பந்தயம்(மேட்ச்)நடக்கும். ஓட்டங்களும் விக்கெட்டுகளும் இன்ன பிறவும் முறையாகப் பதிவாகும். இரு அணியின் வெற்றி தோல்விகள் பதிவாகும். ஆட்டம் உணர்ச்சிகரமாக இருக்கும். சண்டை சச்சரவுகள் சிலவேளை அடிதடியாகக் கூட முற்றிவிடும்.


தெருக் குழுக்களில் வேறுபாடற்றுச் சிறுவர்கள் உறுப்பினர்களாக இருந்தார்கள். என்றாலும் என் விருப்பின்மைக்கு விறுவிறுப்பின்மை மட்டுமல்ல , மட்டையாட்டம் மேட்டுக்குடி/மேற் சாதிச் சார்புடையது என்று உள்ளத்தில் பதிந்து போனதே  காரணம்.

அலட்டுவார்கள். 


ஆனால் , தெருக் குழுக்களின் பந்தயங்களில் பார்வையாளனாக மணிக்கணக்கில் கலந்துகொள்வேன்.  அப்போது , திரைப்படச் செய்திக்காட்சியில் சில மணித்துளிகள் பெரிய ஆட்டத்தின் முனைப்பான காட்சிகளைக் காண்பது தவிர , ஏடுகளில் வரும் படங்களும் வானொலி நேர்முக வருணனைகளும்தாம் வடிகால்கள். 


மட்டையடி, பந்துபிடி முதலியன இயக்க விறுவிறுப்புடன் காட்சி வடிவில் ஏடுகளில்  இடம்பெறும். அவற்றைக் கத்தரித்து விவரங்களுடன் ஏட்டில் ஒட்டி மட்டையடிப் படத்தொகுப்புகளாகப் பலரும் வைத்திருப்பார்கள். எம் தெருச் சிறுவர்கள் அத்தகு நிலைக் காட்சிகளை உளங்கொண்டு , பந்தை அடித்தல் பிடித்தல் முதலியவற்றின்போது சில நொடிகள் நிலைக்காட்சியில் உறைந்திருப்பார்கள்.சிறுவர்களின் பாவனைகள் - அவர்களையொத்தவனே ஆனாலும் - எனக்குக் கேலிக்கூத்தாய் நகை நல்கும் ; கிண்டலடித்துக்கொண்டிருப்பேன். அதுஎன் இரசனை. மற்றபடி அந்த ஆட்டம் பற்றித்  தானாக வந்து சேர்ந்ததற்கு மேல்  நான் ஏதும் தெரிந்துகொள்ள முயலவில்லை. (என் இரசனை முறையால் நண்பர்கள் எரிச்சலுறுவார்கள் . வாயாலாகாதவர்கள் கை ஓங்குவதும் உண்டு. எனினும்  என்னைத் தவிர்க்க மாட்டார்கள்) இன்றளவும் தொலைக்காட்சியில் போகிறபோக்கில் கூட அதைப் பார்ப்பதில்லை.


அந்தக் காலத்தில் வானொலிப் பெட்டியில் நேர்முக வருணனை கேட்காத மட்டையாட்டப் பித்தர்கள் இல்லை என்றே சொல்லிவிடலாம். 


கல்லூரி மாணவர் சிலர் கையடக்க வானொலியை ஒய்யென வருணனை  இரையக் காதில் வைத்துக்கொண்டு போவார்கள். 'முற்போக்காளர்' கள் சிலர் கூட இதற்கு விதிவிலக்கில்லை. கையடக்க வானொலி அரிதான காலத்தில் ,

பித்து இல்லையென்றாலும் கொஞ்சம் தொற்று உள்ளவர்கள் ஓட்ட எண்ணிக்கை , விக்கெட் வீழ்ச்சி பற்றியெல்லாம் ' அவல் மெல்லு 'மளவுக்காவது கேட்டறிவார்கள். அதுவும் தெரியாதவர்கள்  

நவீன இந்திய வாழ்க்கைக்கே இலாயக்கற்றவர்களாகிவிடுவார்களே ! இந்த மனநிலையிலிருந்துதான் மரியா சரபோவாவை அன்று பார்த்திருக்கிறார்கள்.


கையடக்க வானொலிக் கால்நடைகளைக் கண்டால் பற்றிக்கொண்டு வரும். கல்லூரிக் காலத்தில் ,கையடக்கக் குறள் நூல் எனக்குக் கைகொடுத்தது. அதைக் கைக்குட்டையில் சுற்றிக் காதருகே பிடித்துக்கொண்டு உற்றுக் கேட்பது போன்ற பாவனையில் ( மட்டையடி வருணனை கேட்பதற்கென்றே வியப்பை, அதிர்ச்சியை இன்ன பிறவற்றைக் காட்டும் ஒரு பாவனை உண்டு)  நடப்பேன். பின்தொடர்வோர்   சிலர் பலராகி " ஃபிரண்டு ரன் எத்தன? " என்பார்கள் . எதுவும் சொல்லாமல் கைக்குட்டையைப் பிரித்துக் குறளைப் பிற புத்தகங்களோடு சேர்த்துக்கொண்டு நடப்பேன். வக்கிரம் !


ஊடகங்களில் என்னை மீறிப் புலன்களில் படும் பட்டோடி நவாப் முதல் சச்சின் டெண்டுல்கர் வரை பெயரளவில் மட்டுமே சிலரை அறிவேன். இப்போது தமிழ்நாட்டு நடராசனை மேட்டிமை ஊடகங்கள் கையாளும் முறை பற்றி மட்டுமே கருத்துச் செலுத்தினேன். மற்றபடி மிக மிக மிகப் பெரும்பாலான மட்டையாடுநரை இன்றளவும் எனக்குத் தெரியவே தெரியாது.


வாணாள் வீணாள் கழித்துவிட்டேன். அகவை அறுபத்துமூன்று கடந்துவிட்டது.

வேரில் வெந்நீர் விடவேண்டாம்!*

  எனது மொழியியல் அறிவு பாமர அளவினது . நான் அறிந்தவரை விளக்க மொழியியல் என்பது சமகால/ஒருகால மொழியமைப்பை விளக்குவது. எழுத்து வழக்கற்ற மொழிகளுக்...