Tuesday, February 22, 2022

தமிழ்ச் சொல்லாக்கம்

 



பேராசிரியர் முனைவர் ஆ.திருநாகலிங்கம் (Thirunagalingam Arumugam) தம் முகநூல் இடுகையில் ஒரு பழைய விவாதத்தை மீண்டும் தொடங்கியிருக்கிறார் : 

நாட்டுப் புறவியலா? நாட்டார் வழக்காற்றியலா? என்ற Folklore இன் தமிழாக்கம் பற்றிய விவாதம் புதிதன்று.


நான் நாட்டுப்புறவியலாளன் அல்லேன். தயக்கத்துடனேயே இதில் நான் தலையிடுகிறேன். 


ஒரு மொழியிலிருந்து (தருமொழி) பிறிதொரு மொழி(பெறுமொழி) சொல்லை / சொற்றொடரைப் பெற்றுத் தன்வயமாக்கும்போது, பெறுமொழியில் ஏற்கெனவேயுள்ள சொற்களையே ஒருபுடை ஒப்புமை கருதிப் பயன்படுத்த நேருகிறது. 

ஆங்கிலம் (தருமொழி) > தமிழ் (பெறுமொழி) என்று கொள்வோம். Folklore ஐயே எடுத்துக் கொள்வோம்.

அது, ஆங்கிலத்தின் வழியாகத் தமிழுக்கு அறிமுகமான

தொடக்க காலத்தில் தமிழ்ச் சமூகம் அதனை எவ்வாறு உள்வாங்கியதோ அந்த உணர்வுக்கேற்ற தொடரைத் தமிழிலிருந்தே ஆக்கிக் கொண்டது .


'நாட்டுப்புறம்' என்னும் சொல் தமிழ் மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் இருப்பதாகச் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி (Tamil Lexicon) சுட்டுகிறது; தமிழில் பெருங்கதையிலேயே," நாட்டுப்புறமாக்களும் வேட்டுவத் தலைவரும் " ( உஞ்சைக்.43.54) என்னும் தொடர் இருப்பதைக் காட்டுகிறது; countryside, moffussil ; பட்டிக்காடு என்று பொருள் தருகிறது. தமிழின் அன்றாட வழக்கிலும் இது நிலவுகிறது. அதிலிருந்து, நாட்டுப்புறம் + இயல் = நாட்டுப்புறவியல் என்ற புதுத் தொடரை Folklore க்கு இணையாகப் படைத்துக் கையாளும் வழக்கம் ஏற்பட்டு நிலைபெற்றது. ( நாட்டுப்புரம் ?)


இங்கு ஒன்றைக் கருதுதல் வேண்டும். சொற்கள் பொருளைக் குறிப்பனவேயன்றிப் பொருளுடையன அல்ல. எனவே, Folklore என்ன பொருள் குறிக்கிறதோ அதை நாட்டுப்புறவியலும் குறிக்கும். துல்லியம் கருதி வேறு பிற தொடர்களைப் படைத்து இடர்ப்பட வேண்டியதில்லை.


ஆனால், பிறழ உணர்ந்து சற்றும் பொருந்தாமல் ஆக்கப்படும் சொற்களைத் துல்லியம் நோக்கிக் கைவிடலாம். புனைகதைக் கூறுகளுள் ஒன்றாகிய

plot என்பதைச்  சூழ்ச்சி, சதி, கரு என்றெல்லாம் தமிழாக்கியதுண்டு. இவை பொருந்தா. புதுமைப்பித்தன் கதைப் பின்னல் என்றார். இது ஏற்புடையது. கதைக் கோப்பு, கதைப் புணர்ப்பு முதலியனவும் ஏற்புடையன எனினும், புதுமைப் பித்தனின் ஆக்கம் நிலை பெற்றுவிட்டது. 


தமிழாக்கத்தில் பிறிதொரு சிக்கல் இருப்பதையும் கருத வேண்டும். Romanticism என்பது புனைவியல் என்று தமிழாக்கப்பட்டது [புனைவியம் எனலே பொருந்தும். இது பற்றிய எனது 'இயமும் இயலும் ' என்னும் (Jul 22, 2018) முகநூல் இடுகை காண்க]. 


புனைவியல் பற்றிய சில கட்டுரைகளில் புனைவு என்னும் தமிழ்ச் சொல்லின் முந்தைய பொருள்களையும் எடுத்து, புனைவியலைக் குழப்பியிருப்பது கண்டேன்.

Romanticism என்னும் ஆங்கிலச் சொல் குறிக்கும் பொருளை மட்டுமே புனைவியலும் குறிக்கும். 

புனைவியல் என்பது ஒரு புடை ஒப்புமை கருதிய புதுச் சொல்லாக்கம். புனைவு என்பதன் முந்தைய பொருள் அனைத்தையும் இது குறிக்காது.


சில வேளை, நயமுடை இணை கிடைத்துவிடும். கணினித் துறையின் mouse தமிழில் 'சுட்டெலி'யானது. இது தருமொழியை விடவும் நயமானது எனலாம்.

No comments:

Post a Comment

இலக்கண மறுப்பு என்னும் பொறுப்பின்மை

வட்டார வழக்குதான் மக்கள் மொழி .அதுதான் உயிருள்ளது என்று மிகையழுத்தம் தரும் குழு ஒன்று விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்படித்தான் எழுத...