Friday, February 11, 2022

அதிகாரம் : ஊ ழல்

 


1.ஆட்சியிற் பேராற்றல் யாவுள மற்றெந்த

   சூழ்ச்சியினும் முந்துறும்ஊ  ழல்

- இதன் கருத்தாவது ஆட்சியின் ஆற்றல் ஊழலே என்பது.


2.பெற்றதனால் ஆயபய னென்கொல் பதவி

   உற்றபின்செய் யாக்கால்ஊ  ழல்

-(இ - து) பதவியால் ஆய பயன் ஊழலே என்பது.


3.அவரவர் ஆனவரை செய்யலாம் ஆமாம்

    இவரும்செய் தாலென்ஊ  ழல்

- (இ - து) ஊழலின் நடப்பியல் அறம் இன்னதென்பது.


4. வழக்கெனினென் வாட்டும் சிறையெனினென் ஆள்வார்க்(கு)

   அடிபணிந்தே செய்திடின்ஊ ழல்

- (இ-து) இடையூறு நிகழினும் பொருட்டன்று என்பது.


5.திட்டம்  நிதியொதுக்கீ  டொப்பந் தமிம்மூன்றால்

   வெட்டுக வெல்லும்ஊ  ழல்

6.பெரிதின் பெரிதாய்க் கடன்பெற்றோர்  ஓட

    உரியன செய்தலும்ஊ  ழல்

7. நடுவ ணரசின்தாள் சேர்ந்தவர் தம்வழக்கைத்

   தடுத்துத்தப் பச்செயும் ஊ  ழல்

8.வேண்டியோர்க்(கு)  ஆக்கம்  விளைய விதிவளைத்துத்

   தாம்தூயர் ஆதலும்ஊ  ழல்

- இவை நான்கும் ஊழற்கு வரைவிலக்கணம்.


9.ஊழலை ஊழலால் வெல்வர் வாழ்முறையாக் 

     கொள்வா ரதுவும்ஊ  ழல்

- (இ-து) ஊழலை வெல்லும் வழி ஊழலே என்பது.


10.சட்டம்  ஒறுப்பினும்  நீங்கினுயிர் ஈகநினை

      கட்டிடமும் நல்கும்ஊ ழல்

- (இ-து)ஊழல் ஈகப்புகழ் நினைவகம் தரும் என்பது.


[பாவிலன்றி ஊழல் பழகிலேன் நாவிலிவை 

வந்தவா  றேநவின்றேன் நான்]

No comments:

Post a Comment

வள்ளுவன் கள்வன்*

 வள்ளுவன் கள்வன்* ————————————--- காமம் என்பது பழந்தமிழில் காதலைக் குறித்தது. திருக்குறள் மூன்றாம் பாலின் சொல்லாட்சி எண்ணிக்கையில் வாக்கெடுப...