Friday, February 11, 2022

கட்டுரைப் பயிற்சியும் கருப்பட்டி அல்வாவும்


 

i) 'மொழிப் பொறுப்பு' என்பதொன்று உண்டு. எந்த மொழியானாலும் பொறுப்பின்றி ஆளக் கூடாது. தமிழோ இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுக்கு மேற்பட்ட ஏடறிந்த வரலாற்றைக் கொண்டது;எத்தனையோ ஊறுகளை எதிர் கொண்டு கடந்தது; இன்றளவும் தொடர்வது.நம்மால் அதற்கு எதுவும் நேர்ந்துவிட்டால் அது பாவச்செயலாகிவிடும்.

ii)ஐந்திலிருந்து பத்து மணித்துளிகள் நம் உடல் நிலை பற்றி ஆய்ந்தறியும் மருத்துவருக்கு ஆலோசனைக் கட்டணம் நியாயமென்றால், மெய்ப்புப் பார்க்கவும், அதனின் மேலாகச் செவ்விதாக்கம் செய்யவும் கட்டணம் கோருவது நியாயமல்லவா! அந்தக் கட்டணத்தை மனமுவந்து தரவேண்டுமல்லவா! தராவிடினும் அதன் மதிப்புணர வேண்டுமல்லவா!

 -இந்த இரண்டும் என் பயிற்றுரையின் முத்தாய்ப்பு.

                 *************

மதுரைத் தமிழ்ச்சங்கச் செந்தமிழ்க் கல்லூரியும் சான்லாக் ஆய்விதழும் இணைந்து  நடத்திய,  ஆய்வுக்கட்டுரை எழுதுவதன் அடிப்படைகளைப் பயிற்றும் , அரங்கில் (10. 02.2020) பிற்பகலில்ஆய்வு நடையின் அடிப்படைகளை அறிமுகப்படுத்துவது என் பணி. 

முற்பகலைக் கோயிலில் செலவிடும் நோக்கில் துணைவியார், அவர் தோழி ,  என் தம்பி மகள் எனக் குழுவாய்ப் புறப்பட்டோம்.

மதுரைத் தொடர்வண்டி நிலையத்திலிருந்து வெளியே வந்ததுமே எதிர் வரிசையில் லாலா கடை . அதைக் கடந்துதான் அங்கயற்கண்ணி அம்மன் கோயில் செல்லவேண்டும். கருப்பட்டி இனிப்பில் விருப்பு மீதூர மாலையில் வாங்கிக்கொள்ளலாம் என்று முடிவு செய்தேன். கால்நடையாக (!)மேலக்கோபுர வாயில் அடைந்தோம் ; அம்மையையும் அப்பனையும் வழிபட்டோம்.

நான் பயிலரங்கு நோக்கிச் சென்றேன்!

                                                 *************

திரு. முருகேசபாண்டியன் அவர்களிடம் விடைபெற்றபோது, தொடர் வண்டி நிலையம் சென்று , லாலா கடை இனிப்பை வாங்கிக்கொண்டு , மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் போகும் திட்டத்தைச் சொன்னேன்.

" ஏன் அலைகிறீர்கள் . மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு எதிரிலேயே ஒரு கடை திறந்துவிட்டார்கள் " என்று என் இனிப்புத்தேடலுக்கும் வழிகாட்டினார்.

என் நலனுக்கெதிர் இரைப்பும் ¹ கொழுப்பும் ² ; நல்லவேளை இனிப்பு ³ இல்லை. மதுரை, மதுரை கடந்து தென் தமிழகம் செல்வதெனில்  நாட்டுப்புற இனிப்புகளின் நினைப்பே நாவூறச்செய்துவிடும்.

பிரேமா விலாசில் , முதலில் 50 கிராம் ... தணியவில்லை.(நான் மட்டும்) மேலும் 50 கிராம் - 100 கிராமையும் இடைப் பிற வராமல் அல்ல்ல்வாவாகவே உண்டேன். ' சூடும் சுவையும் ' என்கிற பிரிவிலாத் தொடரின் பொருள் நாக்கில் கரைய உள்ளம் உணர்ந்தது. அப்புறம் 25 கிராம் அளவு மிளகு காரச்சேவும் வடி காப்பியும்... அடடா!

கருப்பட்டி அல்வாவைப் பொட்டலமாகவும் வாங்கிக் கொண்டேன். 

                                      ************,****

திரு நீறும் குங்குமமும் இட்ட நெற்றியோடுதான் பயிலரங்கிற்குச் சென்றேன். முற்பகல் 11.00 மணியளவில் இட்டவை, வீடு திரும்பி ஆடியில் பார்த்தபோது, இரவு 09.00 மணிக்கும் எந்தமிழ் போல் அழியாது துலங்கின. ஆய்வாளர்களால் தமிழுக்கு ஒன்றும் ஆகிவிடாது என்ற நம்பிக்கையோடு துயிலத் தொடங்கினேன்.

------------------

1. Wheezing  2.Cholesterol , 3.Diabetes

(ஆய்வு நடை பற்றிப் பேசிவிட்டு அடிக்குறிப்பு இல்லையென்றால் எப்படி!)

No comments:

Post a Comment

இலக்கண மறுப்பு என்னும் பொறுப்பின்மை

வட்டார வழக்குதான் மக்கள் மொழி .அதுதான் உயிருள்ளது என்று மிகையழுத்தம் தரும் குழு ஒன்று விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்படித்தான் எழுத...