Monday, August 9, 2021

'இலக்கணக் குறிப்பு'- ஒரு குறிப்பு

 


அண்மையில் கல்லூரி ஆசிரியர்களுக்கான புத்தொளிப் பயிற்சியில் (06.08.2019) இலக்கணக் குறிப்புப் பற்றி உரையாட நேர்ந்தது.


இலக்கணக் குறிப்பு என்பது இலக்கணப் புலமை காட்டுவதன்று; மொழிப் புழக்கத்தில் சொல்/ தொடரின் பொருளைப் புரிந்து கொள்ள உதவுவது.


'ஒரு தனிச்சொல்லுக்கோ  சில சொற்களால் அமைந்த தொடருக்கோ தனித்து இலக்கணக் குறிப்புத் தரலாம்தான்.

ஆனால், அவை வரும் இடம், முன் பின் தொடர்ச்சி அறிந்து  இலக்கணக் குறிப்புத் தரும் போதுதான் அது சரியானதாக அமையும்' என்றேன் நான்.


இதற்காகவே நான் கைவசம் 'மெல்லிலை' யை வைத்திருக்கிறேன். 


'மெல்லிலைக்கு இலக்கணக் குறிப்புக் கூறுங்கள்' என்றேன். பலரும் பண்புத்தொகை என்றனர். எவரும் வினைத் தொகை என்று சொல்லவில்லை.


"நச்சினார்க்கினியர் வினைத் தொகை என்கிறார்" என்றேன். 


"பண்புத்தொகை என்பது தவறா?" என்று வினவினார் ஒருவர்.


"தவறென்று சொல்ல முடியாது... " என்று இழுத்தேன் நான்.


அப்புறம்?


சீவக சிந்தாமணிப் பாட்டடியையும் உரையையும் இலக்கணக் குறிப்பையும் எடுத்துச் சொன்னேன்





மெல்(லுதல்) + இலை = மெல்லிலை . மெல்லுதற்குரிய இலையாகிய வெற்றிலை . மெல்- வினையடி .

இதில் நச்சினார்க்கினியக் 'கைவரிசை' ஏதுமில்லை. திருத்தக்க தேவரே வெற்றிலை என்னும் பொருளில் மெல்லிலை என்பதை ஆண்டுள்ளார். 


இந்தப் பாட்டில் (62/2) முதன்முதலில் வரும்போது நச்சினார்க்கினியர் வினைத் தொகை என்று குறிப்புத் தருகிறார். பின்னரும்

நான்கு இடங்களில் மெல்லிலை இதே பொருளில் ஆளப்பட்டுள்ளது.


மென்மை+ இலை = மெல்லிலை எனில் பண்புத்தொகை .


                                (❛ ᴗ ❛)


வள்ளுவச் சொல் விளையாட்டொன்றையும் சொன்னேன். ஒரே குறளில் இரு வேறு எதிரெதிரான பொருளில் முழுதொத்த வடிவங்களை ஆண்டுள்ளார்.




திருக்குறள் வெறும் அற நூலன்று; அற இலக்கியம். அதனைக் காட்டும் இடங்களுள் ஒன்று இது. (இத்தகு சொல் விளையாட்டுகளையே இலக்கிய அடையாளமாகச் சுட்ட முடியாதுதான். ஆனால் இவற்றுக்கும் சற்று இலக்கிய மதிப்பு இல்லாமலில்லை. சொல்லைக் கலை நுட்பங்களோடு கையாளும் இலக்கியக் கலைஞன், சொற்களோடு விளையாடுவதும் ஒரு கலை. அதிலும் அறத்தை இலக்கியமாக்குவது கல்லைப் பிசைந்து கனியாக்கும் கடும் பணி. வள்ளுவன் விளையாடிச் சோர்வு நீக்கிக் கொள்கிறான்.) 


என் + அல் 

இங்கு -அல் என்பது வியங்கோள் விகுதி. என்க/ என்று சொல்க என்பது பொருள் ;  - க என்பது வியங்கோள் விகுதி. 


- அல் தொழிற்பெயர் விகுதியாக வழங்குவது நம் காலத் தமிழில் பெரும்பான்மை. 

ஆடல், பாடல், பேசல் முதலியன தொழிற்பெயர்களாகப்   பரவலாக வழங்குகின்றன. ஆடுதல், பாடுதல், பேசுதல் என, - தல் என்னும் தொழிற்பெயர் விகுதியும் பரவலான வழக்குத்தான்.


அதே குறளில்,  எனல் = என்று சொல்லற்க (என்று சொல்லாதிருப்பீர்களாக) என்னும் பொருளிலும் இடம் பெற்றுள்ளது. இங்கு - அல் எதிர்மறை வியங்கோள் விகுதி. 


ஒன்றை உடன்பாடாகவும் (என்று சொல்லுக), மற்றொன்றை எதிர்மறையாகவும் (என்று சொல்லற்க) அவற்றை நேர்ப் பேச்சின் தொனிகளால் உணர்த்த முடியும். வேறு சில குறட்பாக்களிலும் இத்தகு பேச்சுத் தொனி உண்டு.

-------------


தெய்வ சுந்தரம் நயினார்:


// 'ஒரு தனிச்சொல்லுக்கோ சில சொற்களால் அமைந்த தொடருக்கோ தனித்து இலக்கணக் குறிப்புத் தரலாம்தான்.

ஆனால், அவை வரும் இடம், முன் பின் தொடர்ச்சி அறிந்து இலக்கணக் குறிப்புத் தரும் போதுதான் அது சரியானதாக அமையும்' - பேரா.மதிவாணன் பாலசுந்தரம்.// 100 விழுக்காடு உண்மையான கருத்து. கணினிவழியாக இன்றைய தமிழை ஆராயும்போது, இதுதான் சிக்கல். 'வருகிறது ' என்பது 'மாடு வருகிறது' என்பதில் வினைமுற்று. 'அங்கு வருகிறது எது?' என்பதில் வினையாலணையும்பெயர். 'நீ வருகிறது எனக்குப் பிடிக்கவில்லை' என்பதில் தொழில்பெயர். முன்பின் வருகிற சொல்களையும் தொடர்களையும்கொண்டுதான் இங்குச் சரியான விடையைப் பெறமுடியும். மூன்றிலுமே பகுப்பாய்வில் கிடைக்கிற உறுப்புகள் ஒன்றுதான். வா { கிறு+ அது  ; சில இடங்களில் இரண்டு வேறுபட்ட உறுப்புகள் கிடைக்கும். 'வந்தவரை ' = வந்த + வரை ; வா + ந்த் + அர் + ஐ ; முதலில் கிடைப்பது வினையடையாகப் பயன்படுகிற வினையெச்சம்; இரண்டாவதில் கிடைப்பது வினையாலணையும்பெயர் + 2 ஆம் வேற்றுமை விகுதி; இதுபோன்ற சிக்கலைத் தீர்ப்பதுதான் கணினிமொழியியல். இந்த மயக்கத்தைத் தீர்ப்பதற்கான கருவிகளே இயற்கைமொழி ஆய்வுக்கருவிகள் ஆகும் Concordancer, N-gram போன்ற கருவிகள் இச்சிக்கலைத் தீர்க்கப் பயன்படுகின்றன.


Magudeswaran Govindarajan:

மெல்லுதல் என்னும் வினைவழியே பெறப்படும் பண்புதான் மென்மை. கடினமாயுள்ளதை வாயிட்டு நீர்விட்டு அரைத்து மென்மையாக்கும் செயலே மெல்லுதல். மெல்லுதலால் ஒன்றின் கடுமை, திண்மை நீக்கி மென்மையாக்குகிறோம். அதனால் மென்மை என்னும் பண்புக்கும் மெல் என்னும் வினையடியே தோற்றுவாய். அதன்படி மெல்லிலை என்பதனைப் பண்புத் தொகையாய்க் கருதுவதைக் காட்டிலும் வினைத்தொகையாய்க் கொள்ளலே சிறப்பு.


(முகநூலில் ...10 Aug 2019)

No comments:

Post a Comment

இலக்கண மறுப்பு என்னும் பொறுப்பின்மை

வட்டார வழக்குதான் மக்கள் மொழி .அதுதான் உயிருள்ளது என்று மிகையழுத்தம் தரும் குழு ஒன்று விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்படித்தான் எழுத...