Sunday, May 9, 2021

அம்மாச்சி வீட்டுக் காப்பி என்னும் காப்பி மான்மியம்

 

எனக்கு அரசியல், ஆன்மீக இன்ன பிற அம்மாக்கள் கிடையாது. அம்மா என்பது என்னைப் பெற்ற நற்றாயை மட்டுமே குறிக்கும். 


வேறொரு தேவை கருதிப் பழைய படங்களின் தொகுப்புகளைத் துழாவியபோது


 அம்மாவும் நானும்


 இருக்கும் இந்தப் படம்

கிடைத்தது.




அம்மா பிறந்து வளர்ந்தது திருச்சியில். தாத்தா - அம்மாவின் அப்பா- வுக்குப் பூர்வீகம் துவாக்குடி ( துழாய்க்குடி?)க்கு அருகிலுள்ள வாழவந்தான் கோட்டை( வழக்கில் வளந்தான் கோட்டை).திருச்சி காந்தி சந்தையில் மளிகைக் கடை நடத்திவந்தார். சிறிது நிலமும் ஊரில் ஒரு வீடும் உண்டு. பின்னாளில் திருச்சியில் இரட்டை வீடு கட்டினார்.

ஒத்திக்குக் குடியிருந்த வீட்டையும் வாங்கினார்.


தஞ்சையில்,அப்பாவின் குடும்பம் ஓரளவு வசதியாயிருந்து சற்றே நொடித்துப் போயிருந்தது. அம்மாவின் பிறந்த வீட்டுடன் ஒப்பிடுகையில் அப்பா குடும்பம் வசதிக் குறைவானதுதான்.


திருமணம் 1950 இல். நான் 1957இல் பிறந்தேன். எனக்கு விவரம் தெரிந்தபின்னும் நிலைமை மாறவில்லை. ( பிற்காலத்தில் 1970களிலிருந்து மெல்ல மெல்ல எங்கள் குடும்பப் பொருளாதாரம் ஏறுமுகங் கண்டது தனிக்கதை.)


அம்மாச்சி வீட்டுக்கு, திருச்சிக்கு , வருவது எனக்கு மிகவும் பிடிக்கும்.

அம்மாச்சி வீட்டில் மின்வசதி உண்டு. மார்க்கோனி என்னும் பெயரிலேயே பெரிய வானொலிப் பெட்டி உண்டு . தாத்தா வீட்டு வசதியை விடவும் திருச்சி நகரம் என்னை ஈர்த்தது.ஆனால் இரண்டு இரவுக்கு மேல் திருச்சியில் தங்க என் இளைப்புநோய் இடந்தராது.ஆனாலும் திருச்சி பிடிக்கும். அந்த ஏக்கம் சற்றே தீரும் வகையில் இப்போது நான் திருச்சிவாசியாகிவிட்டேன்.நிற்க.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அப்பா ஒரு நிகழ்ச்சியைச் சொல்வார். அவர்களுக்குத் திருமணமான புதிது. அப்பா அம்மாவை அழைத்துக் கொண்டு அம்மாச்சி வீட்டுக்குச் சென்றாராம்.

(அப்போது, பேருந்தில் சென்றால், வண்டி செங்கிப் பட்டி, காச நோய் மருத்துவ மனை சென்று பத்து மணித்துளி நின்று திரும்பவும் வந்து திருச்சி நோக்கிச் செல்லும்.

இரண்டு மணிநேரப் பயணம். ஒரு வசதி, காந்தி சந்தை நிறுத்தத்தில் இறங்கி, சந்தைக்குள் நுழைந்து எங்கள் அம்மாச்சி வீட்டுக்கு, பத்து மணித்துளியளவில் நடந்து சென்றுவிடலாம்.) வீட்டுக்குள் முழுதாக நுழையக் கூட இல்லையாம் அம்மா, " ஒரு வாய் காப்பி குடு" என்று அம்மாச்சியிடம் கேட்டார்களாம். 


தஞ்சைப் பேருந்து நிலையத்திலோ, செங்கிப்பட்டியிலோ கேட்டிருந்தால் அப்பாவாங்கிக்கொடுத்திருப்பாராம். ( அம்மாவின் செயல் அவரது கௌரவத்துக்கு இழுக்கு என்பதும் அந்தக் காலத்தில்  அம்மாவின் போக்கு அப்படியிருந்தது என்பதும் குறிப்பு. வெளிப்படையாகச் சொல்லமாட்டார்.)


எனக்கு விவரம் தெரிந்தபின் அம்மா செய்ததே இயல்பானது; சரியானது என்று உணர்ந்தேன்.


அம்மாச்சி வீட்டில் மாடுகள் இருந்தன. காப்பிக்கு வீட்டுப் பால்தான். பச்சைக் காப்பிக் கொட்டை வாங்கி வைத்திருப்பார்கள். காப்பி போடவேண்டுமென்றால் தேவையான அளவு கொட்டையை எடுத்து வாணலியிலிட்டு வறுத்துக் கொள்வார்கள்;சுவரில் பொருத்தியிருக்கும்  சிறிய எந்திரத்தில் இட்டு , கைப்பிடியைச் சுழற்றிப் பொடியாக்குவார்கள்; பிறகு வடிப்பானில்( filter ) மெத்தென்று பரப்பி வெந்நீர் உகுத்து , காப்பிச் சாற்றை(decoction) வடித்தெடுப்பார்கள்; வீட்டுப் பாலைக் கொதிக்க வைத்து அளவாகச் சாறு கலந்து சர்க்கரை சேர்த்து நுரைக்க நுரைக்க ஆற்றி வெண்கல லோட்டாவில் தருவார்கள்.


எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்வதுபோல் தோன்றினாலும்  அம்மாச்சியின் அநாயாசமான கைப்பக்குவத்திற்கு ஈடு இணை இல்லை.


காப்பி அனுபவம், வறுக்கும் போது வரும் மணத்திலேயே தொடங்கிவிடும் , படிப் படியே மேலேறிக் கள்ளிச் சொட்டுக் காப்பி நாக்கில் படப்பட உச்சத்திற்குப் போகும். 


அப்படியொரு காப்பியை அன்று அப்பாவால் வாங்கித் தந்திருக்கவே

முடியாது. எங்கள் வீட்டிலும் போட்டிருக்கவே முடியாது.இன்றும் இனியும் அப்படியொரு காப்பிக்கு வாய்ப்பே இல்லை.


அந்தக் காலத்து அம்மாச்சி வீட்டுக் காப்பி இல்லாவிட்டாலும் காப்பிப் பழக்கம்  காப்பி போதையாகித் தொடர்கிறது.


அம்மாவிடம் பிறந்த வீட்டு வசதிபற்றிய மேட்டிமையுணர்வு இருந்ததேயில்லை. கடுகடுவென்றிருப்பார். அது, அவரது உறுதியின் வெளிப்பாடு.

இருப்பதில் நிறைவு கொண்டிருந்தார். வசதி மேம்பாடு குறித்தோ, பிறரோடு ஒப்பிட்டோ அப்பாவை நச்சரித்ததில்லை.

1 comment:

இலக்கண மறுப்பு என்னும் பொறுப்பின்மை

வட்டார வழக்குதான் மக்கள் மொழி .அதுதான் உயிருள்ளது என்று மிகையழுத்தம் தரும் குழு ஒன்று விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்படித்தான் எழுத...