Monday, February 8, 2021

ஆய்வு நடையும் ஓசையுடைமையும்

 ஆய்வு நடையும்   ஓசையுடைமையும்

♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪




ஆய்வுரை எழுதுவதற்குரிய மொழிநடை பற்றிப் பேசுவதானால் தமிழிலக்கண அறிமுகமுடையோர் பத்து அழகு, பத்துக் குற்றம் ஆகியவற்றைக் குறிப்பிடாமல் நகர்வது அரிது.

பத்து அழகுகளுள் ஒன்று,  ஓசையுடைமை .  ஓசை , பாவடிவங்களில் பயில்வது. நவீன உரைநடைக் காலத்திற்கு முந்தைய தமிழ் நூல்கள் பெரிதும் (முற்றிலும்?) பாக்களால் ஆனவை.

எனவே ஓசையுடைமை என்பது பா யாப்பில் அமைந்த நூல்களுக்குரியது என்று கருதலாம்.

உரையையும் யாப்புக்குள் அடக்குகிறார் தொல்காப்பியர். உரைக்கும் ஒரு கட்டமைப்பு ( யாப்பு) உண்டு. உரைக்கு ஓசை உண்டா?

"பாட்டிடை வைத்த குறிப்பினானும் ..." என்ற நூற்பாவுரையில் இளம்பூரணர், " ஓசை தழீஇய வற்றைப் பாட்டென்றார். ஓசையின்றிச் செய்யுட்டன்மைத்தாய் வருவது நூலெனப்பட்டது" என்றார். ( தழீஇய = தழுவிய . செய்யுட்டன்மை = செய்யுள் தன்மை)

" ஓசை தழீஇ வருவன பாட்டென்றும் ஓசையின்றிச் செய்யுட்டன்மைத்தாய் வருவது நூலென்றும் ஓசையும் செய்யுட்டன்மையுமின்றி வருவது உரை என்றும் இளம்பூரணர் தரும் இவ் விளக்கம் மிகவும் பொருத்தமுடையதாகும்" என்பார் தொல்காப்பியச் செய்யுளியல் உரைவளப் பதிப்பாசிரியர் க.வெள்ளைவாரணன் (மதுரை காமராசர் பல்கலை. பதிப்பு).

"அவ்வியல் பல்லது பாட்டாங்குக் கிளவார் " என்னும் நூற்பாவுரையிலும் இளம்பூரணர்,  "ஓசையின்றி, அடியுந் தொடையும் பெற வந்ததாயினும் நூலின்பாற் படுதல் உரையின் பாற்படுதல் ... "  என விளக்கியுள்ளார்.

நூலுக்கும் உரைக்கும் ஓசை தேவையில்லை என்பது இளம்பூரணர் கருத்து . 

ஆனால்,

தொல்காப்பிய முதல் நூற்பா " எழுத்தெனப் படுப" என்று தொடங்குகிறது. தொல்காப்பிய விதிப்படி  எழுத்தெனப் படுவ (படுவ= படுவன) என்பதுதான் சரியானது படுப (படுப =படுபவர்கள்)என்பது இங்குப் பிழையானது.

" செய்யுளின்பம் நோக்கி 'எழுத்தெனப் படுப ' என வகரம் நீக்கிப் பகரமிடப்பட்டது " என்கிறார் இளம்பூரணர் . ஓசையின்பம் என்று அவர் சொல்லாவிட்டாலும்  செய்யுளின்பம் என்பது ஒசையின்பம்தான் என்பதை ,  " படுப என்பது இன்னோசைத்தாய் நிற்றலின் ஈண்டுப் ',படுப ' என்றே பாடம் ஓதுக" என்னும் நச்சினார்க்கினியர் விளக்கம் தெளிவாக்குகிறது ( விவாதிக்க வேண்டிய சிறு சிக்கல் உள்ளது. இங்கு இப்போது வேண்டியதில்லை ) . 

நூல் பா(நூற்பா) வுக்கும் சற்று ஓசையின்பத்தைக் கருதலாமென்கின்றனர். அடியும் தொடையும் பெறுதலோடு இந்த ஓசையின்பமும் சேர்ந்தமைவது செய்யுள் தன்மை எனலாம்.

எஞ்சியிருப்பது உரைதான். உரைக்கு ஓசை தேவையில்லை. எனவே ' ஓசையுடைமை' செய்யுள் தன்மையுடைய நூல்களுக்கேயுரியது என்று கருதலாமா?

மீண்டும் இளம்பூரணரிடம் போவோம். " எழுநிலத் தெழுந்த செய்யுள் ... " என்னும் நூற்பாவுரையில், "எழு நிலமாவன பாட்டு, உரை, நூல், வாய் மொழி, பிசி, அங்கதம், முதுசொல் என்பன " என்கிறார். எனவே உரையும் செய்யுள்தான்; செய்யுள் தன்மையுடையதுதான். அப்படியென்றால் சற்றேனும் ஓசைக்கும் இடமுண்டு எனலாமா? பார்க்க வேண்டும்.

நிற்க.

பயிலரங்கு ஒன்றுக்காக ஆய்வு மொழி நடை  பற்றித் தேடிச் சற்று 'வலை' யில் உலவினேன்.  அதில் SciTechEdit INTERNATIONAL என்னும்  நிறுவனத்தின் தளம் கண்ணில் பட்டது. அதன்18 TIPS TO IMPROVE YOUR SCIENCE WRlTING என்னும் ஆலோசனைக் குறிப்புகளைப் பார்த்தேன்.18ஆவது குறிப்பைக் கண்டபோது, அட ! என மகிழ்ந்தேன்.

18. Read your writing out loud

Read yor final paper out loud to check the rythm , find words and phrases that are repeated too many times within and between sentences and paragraphs . You will often find words that are unnecessary and can be completely eliminated or replaced with alternative word choices.

ஆய்வு நடைக்கும் ஓர் இலயம் (rythm)வேண்டும். அந்த இலயம்தான் ஓசையுடைமை எனலாம்.

ஆக , ஓசையுடைமை ஆய்வு நடைக்கும் பொருந்தும்தானே !

ஆனால் வெறும் எதுகை மோனை இயைபு முதலிய பாயாப்புத் தொடைகளைப் பொருள் நுட்பம் கருதாமல் வாரி இறைப்பதல்ல ஓசையுடைமை என்கிற எச்சரிக்கையும் வேண்டும்.



No comments:

Post a Comment

இலக்கண மறுப்பு என்னும் பொறுப்பின்மை

வட்டார வழக்குதான் மக்கள் மொழி .அதுதான் உயிருள்ளது என்று மிகையழுத்தம் தரும் குழு ஒன்று விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்படித்தான் எழுத...