Saturday, November 21, 2020

நகார் என்னும் பல்

 

நகார் என்னும் பல்



சான்றோரிலக்கியங்களில் 'நகார்' எனும்  சொல்  இரண்டிடத்தும்  (ஐங்குறுநூறு,85:5;  கலித்தொகை , 93:18) அளபெடை  பெற்ற  நகாஅர்  (சிறுபாணாற்றுப்படை, 57)  எனும்  வடிவம் ஓரிடத்தும்  வருகின்றன.
ஐங்குறுநூற்றில் (நகு+ஆ+ர்) எதிர்மறையாக நகைக்கமாட்டார் எனும் பொருளில் வருகிறது.
நம் நற்பேறு பத்துப்பாட்டு , கலித்தொகை இரண்டிற்கும் நச்சினார்க்கினியர் உரை கிடைத்திருப்பது.

" ...             ...            ...      மடவோர்
நகாஅர் அன்ன, நளி நீர் முத்தம் " (சிறுபாண். 56 - 57) என்பது மதுரை வளங் குறித்தது.

" மடப்பத்தையுடைய மகளிருடைய எயிற்றை[பற்களை]யொத்த செறிந்த நீர்மையையுடைய முத்து " என்பது நச்சர் தரும் பொருள்.

93 ஆம் கலிப்பாட்டு சுவையான மருதத்திணைப் பாட்டு.
பரத்தையிற் பிரிந்த தலைவன் , தலைவிக்கு அஞ்சிக் கடவுளைக் கண்டு புறத்தே தங்கியதாகப் புனைந்துரைக்கிறான். அது கேட்ட தலைவி எள்ளலாக நீ கண்ட கடவுளர் இவர்தாமோ என வினவுகிறாள்.

" பெறல் நசை வேட்கையின் நின் குறி வாய்ப்பப்
பறி முறை நேர்ந்த நகாராகக் கண்டார்க் (கு)
இறு முறை செய்யும் உருவொடு, நும் இல்
செறி முறை வந்த கடவுளைக் கண்டாயோ? " (கலி. 93:17 - 20)

உன்னைப் பெறும் ஆசையால் , [பிறர் அறியாதவாறு] நீ குறிப்பிட்ட  இடத்திற்குத் தவறாமல் வந்து , கண்டவர்  மயங்கிவிழச்செய்யும் வடிவழகுடன் , விழுந்து முளைத்த பற்களையுடையராக [இளையராக] உன் இல்லத்திற்கு வரும் வழக்கத்தோடு வந்த கடவுள்களை நீ கண்டாயோ¹ - என எள்ளுகிறாள்.
' நகார் - ஆகுபெயர் ' என இலக்கணக் குறிப்புத் தருகிறார் நச்சர்.
' நகார்  ' என்பதன் ஆர் பலர்பால் விகுதி அன்று. அது பல் என்னும் பொருளைக் குறிக்கும் பெயர்ச் சொல்.
இங்கு நகார் என்பது பல்லை உடைய மகளிரைக் குறித்தலின் ஆகுபெயர் என்கிறார்.² 

" nakāar tooth, as appearing in laughter "³ எனத் திராவிட வேர்ச்சொல் அகராதி (DED) விளக்கம் தருகிறது. இதற்கு வாய்ப்பிருக்கிறது. எனினும் ஆய்வுக்குரியது.

------------------
குறிப்புகள்

1." நின்னைப் பெறுதலை நச்சின ஆசையாலே நீ செய்த குறியிடத்தே தப்பாமல் வந்த கடவுள்; கண்டவர்களுக்கு இறந்துபடும் நிலைமையைச் செய்யும் வடிவோடே விழுந்தெழுந்த முறைமை சேர்ந்த எயிற்றினையுடையராய் நும்மனையிடத்தே சேரும் முறைமையோடே வந்த கடவுளரை நீ கண்டாயோ வென்றாள் " - நச்சினார்க்கினியர்.

2. பல் , பல்லை உடையவர்க்கு ஆகி வருவதால் சினையாகுபெயர்.

சிறுபாணாற்றுப்படையில்  அச்சொல்லுக்கு  இலக்கணக்  குறிப்புத்  தராத  நச்சினார்க்கினியர் கலித்தொகையில் 'ஆகுபெயர் ' எனக் குறிப்புத் தருகிறார். காரணம் சிறுபாணாற்றுப்படையில் அது பல் என்னும் நேர்ப்பொருளில் வருவதுதான்.
இதனை உணராமல் நச்சினார்க்கினியர் தடுமாறியதாகக் கூறுவாரும் உள்ளனர்.
தடுமாற்றம் நச்சினார்க்கினியரிடம் இல்லை.

3. https://dsalsrv04.uchicago.edu/cgi-bin/app/burrow_query.py?page=321

2 comments:

  1. தடுமாற்றம் நச்சினார்க்கினியரிடம் இல்லை என்ற குறிப்பானது வாசிப்போருக்குத் தெளிவினைத் தரும் ஐயா.

    ReplyDelete

இலக்கண மறுப்பு என்னும் பொறுப்பின்மை

வட்டார வழக்குதான் மக்கள் மொழி .அதுதான் உயிருள்ளது என்று மிகையழுத்தம் தரும் குழு ஒன்று விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்படித்தான் எழுத...