Tuesday, November 17, 2020

எழுதி வழித்தல்

 புனைஞாண்

புனை, புனைகதை , புனைந்துரை , புனைபெயர் , புனைவு - ஆகிய  புனை - என்பதனடியாகப் பிறந்த சொற்கள் ; கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதியில் உள்ளன. 

புனைசுருட்டு போன்றவையும் புழக்கத்தில் உள்ளன.புனைவியல் - என்பது தமிழ்க்கல்வியுலகில் புழங்குகிறது. இவை அருஞ்சொற்களல்ல.

தமிழில் புனை - தலுக்குச் சங்கச் சான்றோரிலக்கியந் தொட்டுத் தொடர்ச்சியான வரலாறுண்டு. பொருள் மாற்றங்களும் பொருள் வழக்கு விடுபடல்களும் இயல்புதான்.

கலித்தொகையில் ஓர் இடத்தைப் பார்ப்போம். தலைவன் தன் வில்லை ஆயத்தப்படுத்துகிறான்; அம்புகளைத் தேர்ந்தெடுக்கிறான் ; தேர்ச்சக்கரத்தின்[மூட்டு] வாயை நீவுகிறான். 

இவற்றைக் கண்ட தோழி அவன் பொருள் தேடிச் செல்ல முயல்வதை உணர்கிறாள். ' நீ முயன்று செய்யும் பொருள் இவள் இன்னுயிர் தருமோ?' என வினவுகிறாள். அவன் தலைவியைப் பிரிந்தால் , தலைவியின் உயிர் பிரியும் என உணர்த்தி , அவன் செல்வதைத் தடுப்பதே தோழியின் நோக்கம்.


" நீயே        ...                           ...            நின்

கைபுனை வல்வில் ஞாணுளர் தீயே "(கலி. 7: 5-6)

என்பதற்கு " நீ ... நின்னுடைய கையாலே எழுதி வழித்த வலிதாகிய வில்லின் நாணைத் தடவாநின்றாய்[தடவுகின்றாய்]" என்று பொருள் தருகிறார் நச்சினார்க்கினியர். 

சான்றோர் செய்யுள்களில் புழங்கும் புனை (-தல்) என்னம் சொல்லுக்கு, புலமைக் கூர்மையும் உழைப்புத் திறமும் மிக்க அறிஞர்கள் இயன்றவரை பொருள் கண்டு தொகுத்துள்ளனர் (அவை அடியில் இணைக்கப்பட்டுள்ளன)ஆனால்  நச்சர் தந்துள்ள மேற்குறித்த , 'எழுதி வழித்த(ல்)' என்னும் பொருள் இடம்பெறவில்லை.

இங்கு எழுதி வழித்தல் என்றால் ?


வில்லின் நாணை மெழுகால் மெருகிட வேண்டும். இன்றும் விளையாட்டுத் துறையாளர்களின் வில் நாண்கள் முறைப்படி மெருகிடப்படுகின்றன(waxing).

மெழுகால் முதலில் நன்றாக இழைத்துக்கொண்டு பிறகு பிசிறில்லாமல் வழித்தெடுக்க வேண்டும். இப்படி மெருகிடும் செயல்முறையைத்தான் நச்சர் எழுதி வழித்தல் என்கிறார். 

எழுதுதல் என்கிற சொல் பரந்த பொருளுடையது. தோலில் வலியுடன் கொப்புளம் தோன்றும் அக்கி என்னும் நோய்க்குச் செம்மண் குழம்பால் மெழுகும் மரபுவழி மருத்துவத்தை  அக்கி எழுதுதல் என்பார்கள். நான் சிறுவனாக இருந்தபோது இதை நேரில் கண்டிருக்கிறேன். 

பொதுக் காலம் 14 ஆம் நூற்றாண்டினராகிய நச்சினார்க்கினியர் வில்லின் நாண் எழுதிவழிக்கப்படுவதை நன்கு அறிந்திருக்க வாய்ப்புண்டு.

புனை (தல்) என்னும் சொல்லைக் கொண்டு வில்லை ஆயத்தப்படுத்தும் ' எழுதி வழித்தல் ' என்னும் நடைமுறையைச் சொல்வது நச்சினார்க்கினியப் புலமைத்திறம்.  புனை (தல்) என்பதற்கு எழுதி வழித்தல் நேர்ப்பொருளன்று.

ஒரு சொல் பல பொருள் குறிக்கலாம். அவற்றின் அடிப்படை வேறுபாடு கருதலாமேயன்றி, வழக்கில் விரிந்து தரும் பல்வேறு பொருள்களையும் கருத இயலாது.

புனை¹-தல் - 3. To make ready; சித்தஞ்செய்தல் என்னும் சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி (TAMIL LEXICON) இங்குப் பொருந்தும்.

அகராதியாக்கப் பணி  சுவையும் சோர்வும் ஒருங்கு தரும் அரும்பணி. நூற்றுக்குநூறு எல்லாப் பொருளும்  குறிக்கும் அகராதி என்பது  எட்ட வியலாக் குறிக்கோள்.

சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி (TAMIL LEXICON),  கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி போன்றவை சாதனைகள். அதிலும் கிரியா அகராதி இரண்டாவது முறையாகச் சேர்க்கை , செப்பங்களுடன் மூன்றாம் பதிப்பாக வருவது அருஞ்சாதனை. சென்னைப் பல்கலை. பேரகராதியின் புதிய பதிப்பு இரண்டு பகுதிகள் (?) வந்து நின்றுபோய்விட்டது அவலம்.

இந்த அகராதிகளில் குறை காணலாம் , குற்றங் கூட சாற்றலாம். ஆனால் ஈடுபட்டுப்பார்த்தால்தான் இடையூறுகள் மலைமலையாய் எதிர்ப்படுவதை உணரமுடியும். பயன்படுத்திப் பார்க்கப் பார்க்கத்தான் அவற்றின் பின்னுள்ள உழைப்புப் புலப்படும்.

__________________________________________


புனை¹-தல் puṉai- , 4 v. tr. [M. punayuga.] 

1. To dress, put on, as clothes, garlands, jewels; தரித்தல். பூமாலை புனைந்தேத்தி (தேவா. 727, 3). 

2. To adorn, decorate; அலங்கரித்தல். புனை தேர் பண்ணவும் (புறநா. 12).

 3. To make ready; சித்தஞ்செய்தல். 

 4. To paint; சித்திர மெழுதுதல். புனையா வோவியங் கடுப்ப (நெடுநல். 147). 

 5. To plait, as an ola basket; முடைதல். போழிற் புனைந்த வரிப்புட்டில் (கலித். 117). 

 6. To string, bind; கட்டுதல். ஆய்பூ வடும்பி னலர்கொண்டு . . . கோதை புனைந்த வழி (கலித். 144).

  7. To wear; சூடுதல். அவன்கண்ணி நீ புனைந்தாயாயின் (கலித். 116).

   8. To put in order; ஒழுங்காக அமைத்தல். படைபண்ணிப் புனையவும் (கலித். 17). 

   9. To use laudatory language, praise; சிறப்பித் துக் கூறுதல். புனையினும் புல்லென்னு நட்பு (குறள், 790). 

10. To exaggerate; கற்பித்தல். புனைந்து பேசி (தேவா. 1224, 3). 

11. To compose, as poetry; செய்யுளமைத்தல். நாவிற்புனைந்த நன்கவிதை (பரிபா. 6, 8).     12. To make, form; செய்தல். வரிமணற் புனைபாவைக்கு (புறநா. 11).

  புனை² puṉai , n. < புனை-. 

1. Beauty; அழகு. (பிங்.) 

2. Attractive appearance; பொலிவு. (பிங்.) 

3. Decoration; அலங்காரம். (பிங்.)

4. Ornament, jewel; ஆபரணம். கைபுனை புனைந்தும் (கல்லா. 84, 3).

5.  5. Fetters, shackles; தளைக்கும் விலங்கு. புனைபூணும் (குறள், 836).

6. Cloth, vestment; சீலை. (W.) 7. Newness, recency; புதுமை. (W.)


 புனை³ puṉai , n. cf. புனல்¹. Water, flood; நீர். அமுதளாவிய புனைவர வுயிர்வரு முலவை (கம்ப ரா. அகத். 4).

புனைகுழல் puṉai-kuḻal , n. < புனை- +. See புனைகோதை. (W.)

புனைகோதை puṉai-kōtai , n. < id. +. Lady, as having beautiful locks; கூந்தலழகுள்ள பெண். (W.)

புனைசுருட்டு puṉai-curuṭṭu , n. < id. +. Deceitful conduct, underhand dealing; மோசம்.

புனைந்துரை puṉainturai , n. < id. +. 1. Rhetorical language or poetic embellishment; அலங்கரித்துரைக்கும் வாசகம்.(நம்பியகப். 2.)2. Preface, introduction;பாயிரம்.(நன்.2.)

புனைந்தோர் puṉaintōr , n. < id. Artisans, mechanics; கம்மாளர். (சூடா.)

புனைபெயர் puṉai-peyar , n. < id. +. Pen-name, pseudonym; கற்பித்துக்கொண்ட பெயர். Mod.

புனைமொழி puṉai-moḻi , n. < id. +. Rhetorical expression; அலங்காரச் சொல். Loc.

புனையல் puṉaiyal , n. < id. Garland, necklace; மாலை. உருத்திரமாமணிப் புனையல் (உபதேசகா. சிவநாம. 173).

புனையிழை puṉai-y-iḻai , n. < id. +. Lady, as wearing beautiful ornaments; சிறந்த பெண். புனையிழை யிழந்தபின் (பு. வெ. 10, சிறப்பிற்பொது, 3, கொளு). (சூடா.)

புனையிறும்பு puṉai-y-iṟumpu , n. < id. +. Grove; செய்காடு. புதைந்திருடூங்கும் புனையிறும்பு (திருக்கோ. 148).

புனைவன் puṉaivaṉ , n. < id. Mechanic, artisan, architect; கம்மியன். (திவா.) வானவர் புனைவற்கொண்டே . . . பாசறை புனைவித்து (கந்தபு. யுத்தகாண். வரவுகேள். 26).

புனைவிலி puṉaivili , n. < புனைவு +. The thing chosen for comparison; உபமானப் பொருள். (W.)

புனைவிலிபுகழ்ச்சி puṉaivili-pukaḻcci , n. < புனைவிலி +. (Rhet.) A figure of speech. See பிறிதுமொழிதல். (அணியி. 27, பக். 17.)

புனைவு puṉaivu , n. < புனை-. 1. Beauty; அழகு. 2. Ornament, decoration; அலங்காரம். 3. Fertility, fruitfulness; செழிப்பு. 4. Making, producing; செய்கை. (அக. நி.)

புனைவுப்பெயர் puṉaivu-p-peyar , n. < புனைவு +. See புனைபெயர்.

புனைவுளி puṉaivuḷi ,n.< id. +.The object described by a simile; உவமேயப்பொருள்.(W.)

TAMIL LEXICON

 - - - - - - - - - - - - -- - - - - - - - - - -

புனைதல் - அலங்கரித்தல் , சித்திரம் எழுதுதல் , கட்டுதல் , சூடுதல் , ஒழுங்காக அமைத்தல் , செய்யுள் அமைத்தல் , செய்தல், முடைதல் , கைசெய்தல் , பொத்துதல்

புனைமாண் அம்பு - புனைதல் மாட்சிமைப்பட்ட அம்பு

பாட்டும் தொகையும் , 'சொல், தொடர் விளக்கம்' , சாந்தி சாதனா (மர்ரே ராஜம்), ப.124.

- - - - - - - - - - - - - -- - - - - - - - - - - -

புனை (தல்) - சூடுதல் , கட்டப்படுதல் , கை செய்தல் - அலங்கரித்தல் , பாராட்டல் , செய்யப்படுதல் , நிரம்புதல் , அணிசெய்தல் , அணிதல் , சூட்டுதல்

— புலவர்மணியன்,சங்க இலக்கிய வினை வடிவங்கள் (என்னால் தொகுத்துத் தரப்பட்டுள்ளது)

- - - - - - - - - - - - - -- - - - - - - - - - - - -

புனை - (வி)

 1. (உடை, மாலை,ஆபரணம் முதலியவை) அணி, தரி, உடுத்து, put on (as clothes, garland,      jewels)

 2. சூடு, wear

 3. அலங்கரி, decorate, adorn 

 4. செய், படை, உருவாக்கு, make, create 

 5. ஓவியம் தீட்டு, paint, draw 

 6. செய்யுள் அமை, கவிதை, கதை ஆகியவை இயற்று, compose a poetry, write fiction

  7. கட்டு, string, bind 

  8. முடை, பின்னு, plait, as an ola basket 

  9. (பூக்கள் போன்றவற்றைத்)தொடு, link together; to string, as beads; 10. உண்டாகு, ஏற்படு, come into existence

புனைஇழை - (பெ) அன்மொழித்தொகை, transferred epithet

புனைவு - (பெ) 1. வேலைப்பாடு, உருவாக்கம், workmanship, making 2. ஒப்பனை, அலங்காரம், ornamentation, decoration

— முனைவர் ப.பாண்டியராஜா, சங்கச் சோலை, ' சங்க இலக்கிய அருஞ்சொற்களஞ்சியம் (sangacholai.in)

No comments:

Post a Comment

இலக்கண மறுப்பு என்னும் பொறுப்பின்மை

வட்டார வழக்குதான் மக்கள் மொழி .அதுதான் உயிருள்ளது என்று மிகையழுத்தம் தரும் குழு ஒன்று விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்படித்தான் எழுத...