Tuesday, October 6, 2020

குற்றியலுகரமும் குரங்கும்

 குற்றியலுகரமும் குரங்கும்

(அக்.7, 2018 முகநூல் இடுகை - கலந்துரையாடலுடன்)

அன்றாடம் நம் பேச்சில் புழங்கும் சில சொற்றொடர்களைப் பார்ப்போம் :

1. பசுவ வச்சி அரசியல் பன்றானுங்க 

     ( பசு + ஐ = பசுவை)

2. காச எறிஞ்சா கால்'ல உழுவானுங்க

     ( காசு + ஐ = காசை)

3. வாரிசா நீ?(வாரிசு + ஆ = வாரிசா)

4. சொத்தப் பெருக்கு (சொத்து + ஐ =

     சொத்தை)

5. பந்தாடு (பந்து + ஆடு = பந்தாடு)

6. மார்புல சுடு (மார்பு + இல் = மார்பில்)


பசு, காசு - இரண்டும்  - சு வில் முடிகின்றன;

இன்னும் சரியாகச் சொல்வதானால்(ச் + உ)

-உவில் முடிகின்றன. 

ஆனால்,

இரண்டு -உ வும் வேறு வேறு. எப்படி?

பசு   + ஐ =    பசுவை  மாறாகக் 

காசு + ஐ = *காசுவை இல்லை ; காசை.   

ஏன்?

பசு வில் உள்ளது உகரம்.

காசில் உள்ளது குற்றியலுகரம் (குற்று + இயல் + உகரம்) குன்றிய / குறுகிய / குறைந்த  இயல்பை உடைய உகரம்.

2 முதல் 6 முடியவுள்ள காசு, வாரிசு, சொத்து, பந்து, மார்பு  என்பவற்றின் இறுதியில் இருப்பவை குற்றியல் உகரங்களே.

கண்ணாடி முன் நின்று ( டார்வினைத் தியானித்து)  குரங்கு என்று இயல்பாகச் சொல்லிப், பாருங்கள். முதல் கு- விற்கு உதடுகள் குவியும்; இறுதிக் - கு விற்கு  உதடுகள் விரிந்திருக்கும்.



¶ஒலிக்கும் கால அளவும் வேறுபடும் . முதல் உ - 1 மாத்திரை (நொடி), இறுதியில் உள்ள குற்றியல் உகரம் - 1/2 மாத்திரை.

மாத்திரையளவில் குறுகுவதால் குற்றியலுகரம் என்பது மரபு.

குற்றியலுகரத்திற்கு மூன்று நிபந்தனைகள்  உண்டு :


1.^ வல்லின மெய்யோடு நிற்கும்.

2. √ சொல்லின் இறுதியில் நிற்கும்.

3. °தனிக் குறில் எழுத்துக்கு அடுத்து 

      நிற்காது.

^க், ச், ட், த், ப், ற் - ஆறும் வல்லின மெய்கள். இவற்றோடு - உகரம் சேர்ந்த(க் + உ=கு, ச் + உ=சு, ட் + உ=டு, த் + உ= து, ப்+உ= பு, ற் + உ=று ) கு,சு, டு,து, பு, று ஆகிய ஆறும்தாம் குற்றியலுகரங்களாக முடியும்.

√குற்றியலுகரம் நிற்கும் இடத்தின் அடிப்படையில் ஆறாக வகைப்படுத்துவது மரபு(சற்று வேறாக வகைப் படுத்துவதும் உண்டு) . பேச்சில் புழங்கும் என்று மேலே நாம் பார்த்தவற்றையே எடுத்துக் கொள் வோம்;சொல்லின் இறுதியில் நிற்பதை நோக்குவோம் :

1.நெடில் தொடர்க் குற்றியலுகரம்(காசு)

2. உயிர்த்தொடர்க்            "                 (வாரிசு)

3. வன்றொடர்க்                 "                 (சொத்து)

4. மென்றொடர்க்               "                 ( பந்து)

5. இடைத்தொடர்க்            "                  (மார்பு)

6. ஆய்தத்தொடர்க்           "                   (எஃகு)

(பேச்சு வழக்கில் இப்போது ஆய்தம் இல்லை. வகைக்கான காரணத்தைப் பிறகு பார்ப்போம்)

°பசு என்பதில், சொல்லின் இறுதியில் (ச் +உ) வல்லின மெய்யோடு உகரம் இறுதியில் நிற்கிறது. ஆனால் இது குற்றியலுகரமில்லை. ஏனென்றால், தனிக் குறிலை / தனிக் குற்றெழுத்தை அடுத்து நிற்கிறது ( அ, இ, உ, எ, ஒ ஐந்தும் உயிர்க் குறில்கள். இவை  க் முதல் ன் முடியவுள்ள 18 மெய்களோடு சேர்ந்து க, கி, கு, கெ, கொ ... என உயிர்மெய்க் குறில்களாகும்).

நம் அன்றாடப் பேச்சிலும் குற்றியலுகரம் தொடர்கிறது . காரணம் அதன் இயல்பு.

சரி.சொல்லுக்கு முதலில் குற்றியலுகரம் வருமா? வராது.

விதிவிலக்காகத் தொல்காப்பியம் மட்டும் ஒரே ஒரு சொல்லில் குற்றியலுகரம் ஒரு மெய்யோடு சேர்ந்து முதலில் வரும் என்கிறது.

ந் என்னும் எழுத்தை , அதன் பழைய ஒலிப்பை, விளங்கிக் கொள்ளத்தான் குற்றியலுகரம் பற்றிப் பார்க்க வேண்டியதாகிவிட்டது.

————————————————————————————————

                              உரையாடல்

 பேரா. தங்கப்பா செங்கதிர்:

¶ துளிர் சீனிவாசன் என்ற கணிப்பொறி அறிவியலாளர், கணிப்பொறியின் துணை கொண்டு உகரம் பலுக்கப்படும் காலத்தை அளவிட்டிருக்கிறார். குற்றியலுகரம் குறைந்த மாத்திரை அல்ல என்பதும் ஆனால் ஒலியின் வலிமை intensity குறைவு என்பதும் அவருடைய கருத்து .

பேரா.தெய்வசுந்தரம் நயினார்:

இத்துடன் ஒரு கருத்தையும் முன்வைக்கிறேன். குற்றியலுகரத்திற்கு ஒரு வரலாறு உண்டு என்று நினைக்கிறேன். ஒரு காலக்கட்டத்தில் தமிழில் வல்லின ஒற்றுகள்( காற்று தடைசெய்யப்படுவதால் பிறக்கும் பேச்சொலிகள்) வெளியிடுவதற்காக இணைந்த ஒன்றே குற்றியலுகரமாக இருக்கலாம். (பேரா. தெ.பொ.மீ அவர்களின் கருத்து என்று நினைக்கிறேன்.)  பின்னர் ஒற்றுகளில் முடியாமல் அவற்றை விடுவிக்க வந்த ஒலி குற்றியலுகரமாக இருக்கலாம். இன்று பேச்சுவழக்கில் வல்லினம் அல்லாத  மெய் ஒற்றுகள் ( மெல்லினம், இடையினம்) சொல் இறுதியில் வந்தாலும், அவற்றுடன் ஏதாவது ஒரு உயிர் சேரும். (பெரும்பாலும் இ, குற்றியலுகரம்) . கண் - கண்ணு, தேன் - தேனு, கால்- காலு, தேள்-  தேளு, கூழ்- கூழு, வாய்- வாயி, அவர் - அவரு, . ஆனால் ம் ஒற்றுமட்டும் மறைந்து, அதனுடைய மூக்கினப் பண்பு, முந்தைய உயிரை மூக்கொலித்தன்மையுடையதாக மாற்றும். மரம், வரம் சொல்லிப் பாருங்கள். மேலும் புணர்ச்சியில் நிலைமொழி இறுதியில் ஒரு உயிர் (குற்றியலுகரம் அல்லாத உயிர்கள்)  வந்து, வருமொழி முதலில் ஒரு உயிரும் வந்தால், இடையில் உடம்படுமெய்கள் சேர்கிறது. வாழை+இலை = வாழையிலை, தெரு+இல்= தெருவில். ஆனால் குற்றியலுகரம் நிலைமொழியின் இறுதியில் வந்து, வருமொழியில் வேறு ஒரு உயிர் வந்தால், குற்றியலுகரம் , மறைந்துவிடும். 'விட்டு ஓடி விடும்'. ஏனென்றால் நிலைமொழியின் மெய் ஒற்றை விடுவிக்க வருமொழியில் ஒரு உயிர் வந்துவிடுகிறது. ஆனால் முற்றியலுகரம் சொல்லின் பகுதியாக ( மெய்யை விடுவிக்கும் உயிராக இல்லாமல்) வருவதால், வருமொழியில் மற்றொரு உயிர் வரும்போது உ, விட்டு ஓடாமல், நிற்கிறது. பசு+இல் = பசுவில், தெரு+இல் = தெருவில்.  எனவே குற்றியலுகரம் தற்காலிகமாகச் சொல் இறுதியில் வல்லின ஒற்றுக்கு உதிவ செய்யவருகிறது. ஆனால் வருமொழியில் ஒரு உயிர் வந்துவிட்டால், நிலைமொழி இறுதி ஒற்றுகளுக்கு உதவி தேவையில்லை. இப்படியும் சிந்தித்துப் பார்க்கலாம் அல்லவா?

மதிவாணன்:

ஆம்.  " புனைதா ரகலம் புல்லு" என்பன போலச் செய்யுளிலும் ஒலித் துணை உகரம் நிற்பதுண்டு. "முற்றுமற் றொரோவழி " எனச் சில முற்றுகரங்கள் (எ.கா. கதவு) உயிர் வரின் கெடுவதையும் மரபிலக்கணம் பேசியுள்ளது. பிறமொழிச் சொற்களையும் புக் > புக்கு, ரோட்> ரோடு, ஹால் > ஹாலு ... என ஒலிப்பதும் ஒலித்துணையே .

பேரா.தெய்வசுந்தரம்:

முற்றுகரமும் சில இடங்களில் கெடுகிறது. ஆனால் குற்றியலுகரத்திற்கு விதிவிலக்கே கிடையாது. 

மதிவாணன்:

தற்காலத்தில் வடிவமுழுமை கருதி,  கொழும்புவில் என்பது போல எழுதுகிறார்கள். காலச்சுவடில் எனக் குற்றுகரம் ஏறிய வல்லெழுத்து இரட்டாமல் எழுதுவதையும் பார்க்க முடிகிறது. 


பேரா.முல்லை ஆதவன்:

பேராசிரியர் தெ.பொ மீ -=  குற்றியலுகரம்  என்பது குறுகிய உகரம் அல்ல என்ற கருத்துடையவர் என்பது என் அறிதல் -- அது உகரத்திற்கு அப்பாலான ஒரு ஒலிப்பு - அது Release Function -க்காக வந்தது =   என்று அவர் கருதியதாக நான் புரிந்துகொண்டிருக்கிறேன்.


பேரா.தெய்வசுந்தரம்:

உண்மை ஐயா. பேரா. தெ.பொ.மீ. கருத்து அதுதான். அதைத்தான் நானும் கூறியுள்ளேன். ஆனால் அது வல்லின மெய்யொற்றுகளான தடையொலிகளுக்கு உதவிசெய்யவே வருகிறது என்பதில் ஐயமில்லை. மேலும் எனக்கு ஒரு ஐயம். குற்றியலுகரம் சொல்லிறுதியில் வருகிறது என்று கூறுகிறோம். காடு, நாடு.. இவை 'கள்' என்ற பன்மை விகுதிகள் இணைக்கப்படும்போது, காடுகள், நாடுகள் என்று ஆகின்றன. இப்போது  குற்றியலுகரம் இடையில் வருகிறது என்று கூறலாமா? அல்லது குற்றியலுகர விதியானது  அடிச்சொல் அல்லது வேர்ச்சொல்லுக்கு மட்டுமே உரியது என்று கூறலாமா? எனவே நாடுகள் என்பதில்  இடையில் உள்ள உகரம் குற்றுகரம் இல்லை என்று கூறலாமா? இந்த ஐயம் எனக்குக் கணினியில் வேலைசெய்யும்போது ஏற்பட்டது. சொல்லின் இறுதியில்தான் குற்றியலுகரம் என்று விதியை மென்பொருளில் சேர்த்தால், நாடுகள் என்பதில் உகரம் இறுதியில் வராததால் அது முற்றியலுகரம் என்று கூறுகிறது. இது சரியா?

மதிவாணன்:

ஐயா, மரபிலக்கண உரையாசிரியர்களிடமே இது பற்றிய கருத்து வேறுபாடு உள்ளது.

" அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும்

எல்லா விறுதியும் உகர நிறையும்"   

                                       (தொல். 409)

என்னும் குற்றியலுகரப் புணரியல் நூற்பாவிற்கு "அல்வழியைச் சொல்லுமிடத்தும் வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக் கண்ணும் ஆறீற்றுக் குற்றியலுகரமும் நிறைந்தே நிற்கும் " என்கிறார் இளம்பூரணர் . நிலை மொழியில் குற்றியலுகர ஈறாக இருப்பினும் புணர் மொழிகளில் உகரம் நிறைந்து - முற்றியலுகரமாக - நிற்கும் என்பது அவர் கருத்து எனத் தெரிகிறது. 

இந் நூற்பாவிற்கு "உகரம் நிலையும்" என்று பாடங்கொண்ட நச்சினார்க்கினியர் , இளம்பூரணர் (முதலியோர்?) கருத்தை மறுக்கிறார். 


                                                        

No comments:

Post a Comment

வேரில் வெந்நீர் விடவேண்டாம்!*

  எனது மொழியியல் அறிவு பாமர அளவினது . நான் அறிந்தவரை விளக்க மொழியியல் என்பது சமகால/ஒருகால மொழியமைப்பை விளக்குவது. எழுத்து வழக்கற்ற மொழிகளுக்...