Tuesday, October 6, 2020

நடைப் பழமை கண்டார் உரைப் புதுமை காணார்

 நடைப் பழமை கண்டார்

 உரைப் புதுமை காணார்


பேராசிரியர் முனைவர் ச. சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 'காலங்கள்' தமிழக அரசின் பரிசு பெற்றது. அதற்காக ஒரு பாராட்டு விழா நடத்தத் தஞ்சை , தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

வெறும் பாராட்டால் பயன் என்ன? அந்த நூல் அறிமுகமும் நடந்தால் விழாவிற்கு வளம் சேர்க்கும் என்றேன். ஆலோசனையாளன் தலையில் அறிமுகப்பணி சுமத்தப்பட்டது.

மகிழ்ந்து ஏற்றேன். 


12.07.2003 அன்று ஐம்பதின்மர் அளவில் கூடிய ஒரு சிற்றரங்கில் விழா. 

' பாவலர் பாலசுந்தரனாரின் [ அப்பாவின்] தொல்காப்பிய உரை , எழுதிய அவருக்கு அத்துபடி. அடுத்து அந்த உரையின் ஐந்து தொகுதிகளையும் முழுமையாகப் படித்தவர் ஐந்துக்கும் ஆய்வு முன்னுரை எழுதிய பண்டித வித்துவான் தி.வே.கோபாலையர் மட்டுமாகத்தான் இருப்பார் .  




'காலங்கள்' பற்றியும் அப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது.இந்த நூலை எழுதியவர் என்பதால் பேரா. சுபாஷ் ஐயாவுக்கு நூல் அத்துபடியாயிருக்கும் . அடுத்து இந்நூலை முழுமையாகப் படித்தவர் அணிந்துரை எழுதிய பேராசிரியர் பி. விருத்தாசலம்[பி.வி.] ஐயா  . மூன்றாவதாக முழுமையாகப் படித்தவன் நானாகத்தான் இருக்கும். காரணம் இலக்கணம் , மொழியியல் இரண்டிலும் ஓரளவாவது அறிமுகமில்லாமல் இதற்குள் நுழையவே இயலாது' - என்று அதன் அருமை உணர்த்தும் நோக்கில் தொடங்கினேன்[வாய்க் கொழுப்பு!]


பரிசு பெற்ற ஒரு நாவலை அறிமுகப்படுத்த வந்திருந்த மருத்துவர் இளங்கோவன் அவர்கள் உடன் குறுக்கிட்டு, ' உண்மைதான் .  'காலங்கள்' நூலையும் படித்துவிடலாம் என்று கொஞ்சம் நுழைந்து பார்த்தேன். ஆனால் அவ்வளவு எளிதில்லை என்பதால் விட்டுவிட்டேன் ' என்று ஆமோதித்தார்


ஆனால், அரங்கில் அமர்ந்திருந்த பேரா. பி. வி. ஐயா சினத்துடன் குறுக்கிட்டு , " யோவ் அவர் உரையப் படிக்கலேன்னு சொல்ல வந்திட்டியா! போய்ப்படிய்யா'என்றார் அவருக்கேயுரிய உரத்த குரலில்.


அரங்கம் சில நொடிகள் அமைதியில் ஆழ்ந்து மீண்டது. பி.வி. ஐயா எம் கல்லூரி முதல்வர். ஆனால் நான் தொடக்கப் பள்ளிச் சிறுவனாக அந்த வளாகத்தில் உலவிய காலந்தொட்டு என்னை உணர்ந்தவர். உரிமையோடு கண்டிப்பவர். இது இயல்பான நிகழ்வுகளில் ஒன்று என்பதை அரங்கில் உள்ளோர் அறியாராதலின் அந்த அமைதி.


நான் தொடர்ந்தேன் [அப்பாவின் உரையை இப்போதும் முழுமையாகப் படிக்கவில்லை].

————————————————————————————————————

அண்மையில் (செப்.12),   தமிழ்ப்பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ம. திருமலை ஐயா ( Thirumalai Mahalingam)"இந்நூல் தொல்காப்பிய ஆர்வலர்கள் படிக்க வேண்டியது.மிக மிக நுட்பமான உரை! வியப்புடன் படித்துக் கொண்டிருக்கிறேன்." என்று முகநூலில் அப்பாவின் உரை பற்றிக் கருத்துத் தெரிவித்திருந்தார்கள். திரு. பொதியவெற்பன் ( Pothi)அவர்கள் , அதில் என்னைக் கொளுவியிருந்தார். நான் ஏதும் சொல்லவில்லை. அவரது உரைக்கான கடும் மறுப்புகளிலும் நியாயம் இருக்கலாம். அப்பாவின் உரைக்கு நான் வக்காலத்து இல்லை. 

ஆனால்,

அவர் தமக்கென ஒரு பார்வையுடன் அந்த உரையை எழுதினார்; தொல்காப்பியப் பித்தர் என்று சொல்லுமளவுக்கு உணர்ச்சிகரமான  ஈடுபாடு கொண்டிருந்தார். அதன் நடைப்பழமை கண்டு உரைப்புதுமை காணாதார் அதில் ஒன்றுமில்லை என்று சொன்னதுண்டு.  கோபாலையர் அவர்களின் ஆய்வு முன்னுரைகளைப் படித்தாலே அப்பாவின் புதுப் பார்வை புலப்படும். நானும் என் பங்குக்கு அவர் கொண்ட புதிய பாடங்களைத் தொகுத்து 'தொல்காப்பியம் - பால. பாடம்' என்று ஒரு நூல் ( கட்டுரைதான்)எழுதினேன்.



————————————————————————————————————

இப்போது,


இலக்கண - மொழியியல் அறிஞர் பேராசிரியர் முனைவர் க. பாலசுப்பிரமணியன் அவர்களின் 'தொல்காப்பியத்தின் ஒருமையும் முழுமையும்' படித்துக்கொண்டிருக்கிறேன். அதில் ,


முன்னிலை தன்மை ஆயீ ரிடத் தொடு

மன்னா தாகும் வியங்கோட் கிளவி 


என்னும் தொல்காப்பிய நூற்பாவிற்கு எழுதிய உரைவிளக்கத்தை எடுத்து விவாதித்து,

" பாலசுந்தரனாரின் இவ்வுரையும் விளக்கமும் தொல்காப்பியரின் வினை பற்றிய விதிகள் அனைத்தையும் உட்கொண்டு, அவை கூறப்படும் வரிசையையும் கருத்திற் கொண்டவை. அவை தெளிவாகத் தொல்காப்பிய விதிக்கும் அவர் மொழிப் பயன்பாட்டிற்கும் எவ்வித முரணும் இல்லை ; பழைய உரையாசிரியரும் அவர்களை ஒட்டி இன்றைய ஆய்வாளரும். விதியின் பொருளைப் புரிந்துகொண்டதே தவறு என்பதைக் காட்டுகின்றன " என்கிறார் பேரா. பாலசுப்பிரமணியன் அவர்கள். 



உரைவிளக்கத்தின் பொருத்தம் ஒருபக்கம் இருக்கட்டும், படிக்க மகிழ்ச்சியாய் இருக்கிறது.





1 comment:

  1. பேராசிரியர் பி.விருத்தாசலனார் அவர்கள் உரிமையோடு கண்டித்ததை ரசித்தேன் ஐயா

    ReplyDelete

வேரில் வெந்நீர் விடவேண்டாம்!*

  எனது மொழியியல் அறிவு பாமர அளவினது . நான் அறிந்தவரை விளக்க மொழியியல் என்பது சமகால/ஒருகால மொழியமைப்பை விளக்குவது. எழுத்து வழக்கற்ற மொழிகளுக்...