Thursday, August 19, 2021

நடை நெகிழ்த்த விதி



நான் ஒரே கட்டுரையிலேயே , ' மிகு பெரு நூலகம் ' , ' அரும்பெரும் நூலகம் ' என்னும் தொடர்களைக் கைப்பழக்கத்தில் எழுதிவிட்டேன்;பிறகுதான் பார்த்தேன். இலக்கண மரபின்படி பெருநூலகம் என்பதே சரியானது.ஆனால் அரும் பெரும் நூலகத்தைத்  'திருத்த' முற்படவில்லை.

பெரு(மை)* என்னும் பண்புப்பெயர் நின்று  நாற்கணங்களும் வரும்போது புணரும் மரபைப் பார்ப்போம்.


உயிர்க் கணம்

பெரு(மை) + அணி = பேரணி

பெரு(மை) + ஆசிரியர் = பேராசிரியர் 

பெரு(மை) + இடி = பேரிடி

- இவற்றில் வருமொழி முதலில் நிற்பவை உயிரெழுத்துகள் (அ , ஆ , இ ...)


வன்கணம்

பெரு(மை)+ கடல் = பெருங்கடல்

பெரு(மை) + சிறப்பு =பெருஞ்சிறப்பு

பெரு(மை) + தன்மை =பெருந்தன்மை

பெரு(மை) + புகழ் =பெரும்புகழ்

- இவற்றில் வருமொழிமுதலில் நிற்பவை வல்லெழுத்துகள் ( க் , ச் , த் , ப்). 

மென்கணம்

பெரு(மை) + ஞானம் =பெரு ஞானம்

பெரு(மை) + நகர் =பெரு நகர்

பெரு(மை) + மன்றம் =பெரு மன்றம்

 இவற்றில் வருமொழிமுதலில் நிற்பவை மெல்லெழுத்துகள் ( ஞ் , ந் , ம்). 

இடைக்கணம்

பெரு(மை) + யாறு= பேரியாறு°

பெரு(மை) + வாழ்வு =பெரு வாழ்வு

இவற்றில் வருமொழிமுதலில் நிற்பவை இடையெழுத்துகள் ( ய், வ்). 

முப்பெரு விழா என்பது மரபு. முப்பெரும் விழா என்பது  வழக்கில் பெருகி விட்டது;  குற்றமன்று. முப்பெருவிழா எனலே நல்லது.

ஆனால், அரும்பெரு நூலகம் என்றால் சமனிலையின்றி,  ஓசை குன்றுவதாகத் தோன்றுகிறது. அரும் , பெரும் என்னும் எதுகை  நடையில் இறுதி மகரங்கள் நின்று சமனிலை பேணுகின்றன ; ஓசை நயம் நல்குகின்றன.

-------------

* நன்னூல் நெறியில்  பண்புப் பெயர் நிலை மொழிகள் மை விகுதிபெறும். இதுபற்றிக் கருத்து வேறுபாடு உண்டு.

° நம் காலத்தில் இவ்வாறு யகர வருமொழி வரின் (குற்றியல்) இகரம் பெறுதல் வழக்கில் இல்லை (பேரியாறு →பெரியாறு  என்றாகி , பெரியாறு→பெரியார் எனத் திரிந்து பிழைபட்டது)


No comments:

Post a Comment

இலக்கண மறுப்பு என்னும் பொறுப்பின்மை

வட்டார வழக்குதான் மக்கள் மொழி .அதுதான் உயிருள்ளது என்று மிகையழுத்தம் தரும் குழு ஒன்று விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்படித்தான் எழுத...