Wednesday, July 28, 2021

பனுவலின்பம்

 

பாரதிதாசனும் பார்த்- உம்



தனித்தமைந்த வீட்டிற்புத் தகமும் நானும்

       சையோகம் புரிந்ததொரு வேளை     தன்னில்,

       இனித்தபுவி இயற்கையெழில் எல்லாம் கண்டேன்;

       இசைகேட்டேன் !மணம்மோந்தேன் ! சுவைகள் உண்டேன் !

        மனித்தரிலே மிக்குயர்ந்த கவிஞர் நெஞ்சின்

        மகாசோதி யிற் கலந்த தெனது நெஞ்சும்!

        சனித்ததங்கே புத்துணர்வு! புத்த கங்கள்

         தருமுதவி பெரிது!மிகப் பெரிது கண்டீர்!   (புத்தக சாலை)

சையோகம் = கலக்கை, இரு பொருள்களின் கூடல், புணர்ச்சி - எனப் பொருள்கள் தருகிறது சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி (LEXICON)¹. பாரதிதாசன் எப்பொருளில் கையாண்டுள்ளார்? அவர் பாடல்களில் தோய்ந்தவர்கள் 'புணர்ச்சி' என்னும் பொருளில்தான் கையாண்டுள்ளார் என்பதை உணர்வர்.

வாசிப்பை இப்படியா சொல்வது!

அமைப்பியம், குறியியல், பின் அமைப்பியம் முதலியவற்றில் செல்வாக்குச் செலுத்திய ரோலண்ட் பார்த்-திடம் போவோம்.

பனுவலின்பம் ( பிரஞ்சில் Le plaisir du texte ; ஆங்கில மொழிபெயர்ப்பில் The Pleasure of the Text) என்பது  ரோலண்ட் பார்த்-தின் நூல் (1973). அவர்,

பனுவலின் விளைவுகளை , இன்பம் (plaisir - pleasure) , பேரின்பம்/கலவி உச்சம் ( jouissance- bliss\orgasm) - என இரண்டாகப் பகுக்கிறார்.

பனுவலை  படிப்பாளப் பனுவல் / படிப்புறு பனுவல்(texte lisible- readerly text/ readable text)  எழுத்தாளப் பனுவல்/ எழுத்துறு பனுவல்(texte scriptible- writerly text/writable text) என்று வகைப்படுத்துகிறார்.

பனுவலின்பம் படிப்பாளப் பனுவலோடு தொடர்புடையது.

பனுவல் பேரின்பம் எழுத்தாளப் பனுவலோடு தொடர்புடையது; இலக்கிய மரபுகளைத் தகர்த்து படிக்குநரின் தன்னிலை நோக்கை முறித்து வெளியேறச் செய்வது (நன்றி : Wikipedia)

பார்த்து -க்கு முன்பே பாரதிதாசன் பனுவலின்பக் கோட்பாட்டைக் கண்டு விட்டார் என்றோ , பாரதிதாசன் பார்த்-துக்குக் கோட்பாட்டுப் பாதை போட்ட முன்னோடி என்றோ -தாழ்வு மனப்பான்மையால் - வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட வேண்டியதில்லை.

பிரஞ்சுப் புதுவையில் வாழ்ந்த பாரதி தாசன் பனுவலின்பத்தைக் கலவியின்பமாகக் கண்டிருக்கிறார் என்பது கருத வேண்டியதாகும்.

பழகிய பாரதிதாசன் வழியாகப் புதிய ரோலண்ட் பார்த்-திடம் மாணவர்களை அழைத்துச் செல்வது எளிது என்பது என் ஆசிரியப் 'பனுவல்' .

கொசுறு:பாரதிதாசன் புத்தகத்தைப் பெண்ணாக உருவகித்துச் சையோகம் புரிந்தார்.பெண்ணைப் புத்தகமாக உருவகித்துப் " புத்தம் புதிய புத்தகமே ! உன்னைப் புரட்டிப் பார்க்கும் புலவன் நான் " என்று வாலி பின்னணிப் பாட்டெழுத , 'புரட்சி' த் தலைவர் வெண்திரையில் புரட்டுவது  தலைவரின் வழக்கமான ஆணாதிக்கம்.

------------

1.சையோகசம்பந்தம் caiyōka-campantam , n. < saṃ-yōga +. Conjunction between two objects;

    இரண்டுபொருள்கள் கூடியிருத்தலாகிய சம்பந்தம். (தருக்கசங். 31.)

    சையோகம் caiyōkam , n. < saṃ-yōga. 1. Union, absorption; கலக்கை. 2. See

    சையோகசம்பந்தம். (சி. சி.) 3. Sexual union; புணர்ச்சி. இரவுபக லேழையர்கள்

       சையோக மாயினோம் (தாயு. எங்குநிறை. 9).

      சையோகாட்சரம் caiyōkāṭcaram , n. < id. +. akṣara. Conjunct consonant in Sanskrit. See

      சம்யுக்தாட்சரம். (W.)

       சையோகி-த்தல் caiyōki- , 11 v. intr. < id. 1. To unite, mix; கலத்தல். (யாழ். அக.) 2. To

        copulate; புணர்தல்.

No comments:

Post a Comment

இலக்கண மறுப்பு என்னும் பொறுப்பின்மை

வட்டார வழக்குதான் மக்கள் மொழி .அதுதான் உயிருள்ளது என்று மிகையழுத்தம் தரும் குழு ஒன்று விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்படித்தான் எழுத...