Sunday, April 18, 2021

Que será, será ≠ வெண்ணிலா நிலா நிலா

 Que será, será  ≠  வெண்ணிலா நிலா நிலா 





பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம் பிறந்தநாளுக்கான  வானொலி உரைக்காகக் குறிப்பெடுத்த போது , காட்சிகளோடு கூடிய அவருடைய பாடல் தொகுப்புகள் சிலவற்றையும் யூடியூப்பில் கேட்டேன்.நான் 1980களில் ஆய்வு செய்தபோது இப்போதைய வசதிகள் இல்லை.இப்போது பெரும்பாலான படங்களும் கிடைப்பதால் முழுப் பின்னணியோடு பாடல்களைக் கண்டு கேட்கவும் வாய்ப்புள்ளது.

அவர் 'ஆரவல்லி' (1957) படத்திற்கு எழுதிய ' சின்னப்பெண்ணான போதிலே ' என்னும் பாட்டு உடன் எனக்கு ' என்ன ஆகும் எனது வாழ்க்கை?/ அன்றொரு நாள் அம்மாவைக் கேட்டேன் / என்ன ஆகும் எனது வாழ்க்கை ?  ' என்னும் மாலனின் நடப்பியக் கவிதையை நினைவூட்டியது.

திரைப் பாடல் மேலைமெட்டில் அமைந்திருப்பது அப்பட்டமாகத் தெரிந்தது. அது பற்றியும் சிறிது தேடியபோது, பல்லாண்டுக்கு முன்பே சிலர் அதன் ஆங்கில மூலப்பாட்டைத் தொடர்பு படுத்தி வெளியிட்டிருந்தது கண்டு வியந்தேன்.

அப்புறமென்ன! தேடல் ' The Man Who Knew Too Much ' (1956)என்கிற இட்சுகாக் (Hitchcock) படத்திற்குக் கொண்டுபோய்ச் சேர்த்தது. அந்தப் படத்தைப் பார்த்தேன். 

நீள் விடுமுறையில் டாக்டர் பெஞ்சமின்[மனைவி ஜோசஃபைன் , மகன் (சிறுவன்) ஆங்க்]குடும்பத்தினர் பிரஞ்ச்சு மொரோக்கோவுக்குச் செல்கின்றனர். அங்கு லூயிசு பெர்னார்ட் என்கிற பிரெஞ்சுக்காரரைச் சந்திக்கின்றனர். அவருடைய நடவடிக்கைகள் ஐத்திற்குரியவையாக இருக்கின்றன. 

மறுநாள் மொரோக்கோ சந்தையில் காவலர்கள் ஒருவனைத் துரத்திவருகின்றனர். ஓடுகிறவன் முதுகில் குத்துப்பட்டு , சாகும் தறுவாயில் பெஞ்சமினை நோக்கி வந்து சரிந்து விழுகிறான். அது மாறுவேடத்தில் உள்ள பெர்னார்ட் என்று பெஞ்சமினுக்குத் தெரிகிறது. 

அப்போது பெர்னார்ட் , இலண்டனில் அயலகத் தூதர் ஒருவர் படுகொலை செய்யப்படவிருப்பதாகவும் , அதுபற்றி உயரலுவலர்களிடம் சொல்லுமாறும் முணகிவிட்டு மடிகிறார்.

மறுபுறம் சிறுவன் ஆங்க்கைக் கடத்திய கொலைத்திட்டக் குழுவினர் , உண்மையைச் சொன்னால் ஆங்க்கைக் கொன்றுவிடுவோம் என்று அச்சுறுத்துகிறார்கள். 

மகனைத் தேடிப் பதைப்புடன் பெஞ்சமின் இனணயர் இலண்டன் செல்வதும் , கொலையாளிகளின் நடவடிக்கைகளுமாகப் படம் விறுவிறுப்புடன் போகிறது.

Que será, será பாட்டும் ஒரு மாந்தர் என்றே சொல்லவேண்டும். இந்திய , தமிழ்ப் படங்களின்  'குடும்ப்பாட்டு ' நமக்குத் தெரியாததல்ல. அப்படி Que será, será மகனைக் கண்டடையப் பெற்றோருக்கு உதவுகிறது.

ஜே லிவிங்ஸ்டன் , ரே இவான்சு  (Jay Livingston, Ray Evans)இருவரும் இணைந்து புனைந்த 'பாப்' பாட்டு அது. படத்தில் அமெரிக்கத் திரை நடிகையும் பாடகியுமான டோரிசு டே (Doris Day ) பாடி நடித்துள்ளார்.

படத்திற்கு முன் தனிப்பாட்டாகவும் ,பின்பு படப்பாட்டாகவும்  மிகவும் பிரபலமாகியிருக்கிறது.

படத்தின்  மர்ம முடிச்சுக்கு முந்தைய காட்சியில் தாயும் மகனும் பாடிக்கொள்வதுபோல் இயல்பாக அறிமுகமாகும் பாட்டு உச்சத்தில் முழுமையாக, நம்மை நாற்காலி நுனிக்கு நகர்த்துகிறது.

Que será, será என்பதன் மூலம் இத்தாலி என்றாலும் கருத்து ஸ்பானிசுக்கு இணக்கமாயிருப்பதாக ஒரு குறிப்புக் கிடைக்கிறது. இந்தப் பிறமொழித் தொடர் ஒரு பல்லவி போல வருவது பாட்டின் ஈர்ப்பைக் கூடுதலாக்கியிருக்கலாம். 

அதன் பொருள்: Whatever Will Be, Will Be /' எது நடக்குமோ அதுதான் அதுதான்' ; மர்மத் தொங்கல்கள் கொண்ட ஒரு படத்திற்குப் பொருத்தமானது. படத்தைவிடவும் பாட்டிலுள்ள வாழ்வியல்  நோக்கின் அடர்த்தி கூடுதல் என்று சொல்லலாம் ( நீர்வழிப் படூஉம் புணைபோல் /ஆருயிர் முறைவழிப் படூஉம்)

ஆங்கிலப் பாட்டின் அடர்த்தியும் இசை நயமும் கதையோடு கூடிய இயைபும் தமிழில் இல்லை. இதற்குப் பாடலாசிரியரை மட்டும் குறை சொல்லமுடியாது .அந்த மெட்டில் பாட்டெழுதச் சொன்னவர் மாடர்ன் தியேட்டர் சுந்தரமாக இருக்க வேண்டும் (தேட நேரமில்லை) . அவர் இந்த அளவு தமிழில் வந்ததே போதுமென்று கருதியிருக்கவேண்டும். ஆங்கிலப் பாட்டையும் தமிழ்ப்பாட்டையும் காண்க:

When I was just a little girl 

I asked my mother, what will I be

Will I be pretty

Will I be rich

Here's what she said to me


Que será, será

Whatever will be, will be

The future's not ours to see

Que será, será

What will be, will be


When I grew up and fell in love

I asked my sweetheart, what lies ahead

Will we have rainbows

Day after day

Here's what my sweetheart said


Que será, será

Whatever will be, will be

The future's not ours to see

Que será, será

What will be, will be


Now I have children of my own

They ask their mother, what will I be

Will I be handsome

Will I be rich

I tell them tenderly


Que será, será

Whatever will be, will be

The future's not ours to see

Que será, será

What will be, will be

Que será, será


சின்னப்பெண்ணான போதிலே

சின்னப்பெண்ணான போதிலே

அன்னையிடம் நான் ஓருநாளிலே

எண்ணம் போல் வாழ்வு ஈடேறுமா 

அம்மா

நீ சொல் என்றேன் ?


(சின்னப்பெண்ணான போதிலே)


வெண்ணிலா நிலா 

என் கண்ணல்ல வா கலா

உன் எண்ணம் போல் வாழ்விலே 

இன்பம் தானென்றாள்

வெண்ணிலா நிலா


கன்னியென்னாசை காதலே 

கண்டேன் மணாளன் நேரிலே

என்னாசை காதல் இன்பம் உண்டோ

தோழி நீ சொல் என்றேன்

வெண்ணிலா நிலா 

என் கண்ணல்ல வா கலா

உன் எண்ணம் போல் வாழ்விலே 

இன்பம் தானென்றாள்

வெண்ணிலா நிலா


கண் ஜாடை பேசும் என்னிலா

கண்ணாளன் எங்கே சொல் நிலா

என் கண்கள் தேடும் உண்மை தனை

சொல் நிலவே  என்றேன்.


*வெண்ணிலா நிலா 

என் கண்ணல்ல வா கலா

உன் எண்ணம் போல் வாழ்விலே 

இன்பம் காணலாம்

(*காதலன் பாடுதல்)

 



                                                               ————×———— 










No comments:

Post a Comment

இலக்கண மறுப்பு என்னும் பொறுப்பின்மை

வட்டார வழக்குதான் மக்கள் மொழி .அதுதான் உயிருள்ளது என்று மிகையழுத்தம் தரும் குழு ஒன்று விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்படித்தான் எழுத...