அனுமன் தேடிய மோதிரமும் ஆயிரக்கணக்கான இராமாயணமும்*
ஒரு நாள் இராமபிரான் தம் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த போது அவரது மோதிரம் கழன்று விழுந்து தரையைத் துளைத்துக் கொண்டு மறைந்து போயிற்று.அவரது காலடியில் அமர்ந்திருந்த அன்புத்தொண்டன் அனுமனிடம்," தொலைந்து போன என் மோதிரத்தைத் தேடிக் கொண்டு வா" என்று ஆணையிட்டார் இராம பிரான்.
மிகச்சிறிதினும் சிறிதாகவும் மிகப் பெரிதினும் பெரிதாகவும் மாறும் ஆற்றல் கொண்ட அனுமன் சிற்றுருவம் கொண்டு துளையினுள் புகுந்து கீழாக இன்னும் இன்னும் கீழாகப்போய்த் திடீரெனப் பாதாளலோகத்தில் வீழ்ந்தான்.அங்கிருந்த பெண்கள் சிலர்"பாருங்கள் இந்தக் குட்டிச்சிறு குரங்கை...மேலேயிருந்து விழுந்திருக்கிறது " என்று,அதனை ஒரு தட்டில் ஏந்தி,விலங்கிறைச்சி உண்ணும் ஆர்வமுடைய பாதாளலோகத் தலைவன் வழக்கமாக உண்ணும் உணவுடன் சேர்த்து அனுப்பினார்கள்.
பாதாளலோகம் இவ்வாறிருக்க பூவுலகில் இராமபிரானின் அவைக்குவசிட்டமுனியும் பிரமனும் வருகை புரிந்து,
" நாங்கள் உன்னிடம் தனியாகப் பேச வேண்டும்.நாங்கள் பேசுவதைப் பிறர் யாரும். கேட்டு விடக்கூடாது;எந்த க் குறுக்கீடும்கூடாது.சரியா?" என்றனர்.
"அப்படியே ஆகட்டும்.நாம் பேசுவோம்" என்றான் இராம பிரான்.
பிறகு அவர்கள்," நாம் பேசிக்கொண்டிருக்கும் போது எவரேனும் குறுக்கிட்டால் அவர் தலை துண்டிக்கப் பட வேண்டும் " என்றனர்.
"அப்படியே ஆகட்டும்" என்றான் இராம பிரான்.
அனுமன் மோதிரம் தேடப் போய்விட்டான்.நம்பககமான வாயிற்காப்பாளனாகத் தக்கவர் யார்?இலக்குவனே நம்பகமானவன் எனத் துணிந்து "எவரையும் உள்ளே விட வேண்டாம்" என்று ஆணையிட்டான் இராமபிரான். இலக்குவன் வாயில் காத்து நிற்கும் வேளையில் அங்கு வந்த விசுவாமித்திர முனிவர் ,
"நான் உடனே இராமனைப்பார்க்க வேண்டும் .அவசரம்.எங்கே இராமன் சொல்?" என்றார்.
"இப்போது வேண்டாம்.அவர் சிலருடன் முக்கியமான விஷயம் பேசிக்கொண்டிருக்கிறார்" என்று இலக்குவன் தடுத்தான். "என்னிடமே இராமன் மறைக்கத் தக்கது என்ன இருக்கிறது?நான் இப்போதே உள்ளே போகிறேன்" என்றார்.
"நான் அனுமதி பெற்று வருகிறேன்" என்றான் இலக்குவன். "சரி,போய்க் கேட்டுவா"
" இராமபிரான் வெளியே வந்தாலன்றி நான் கேட்க முடியாது.தாங்கள் காத்திருந்துதான் ஆக. வேண்டும்"
"நீ உள்ளே சென்று என் வருகையைத் தெரிவிக்காவிட்டால் அயோத்தி ராச்சியத்தையே என் சாபத்தால் எரித்து விடுவேன்" என்றார்விசுவாமித்திரர்.
'நான் உள்ளே சென்றால் இறப்பது உறுதி.செல்லாவிட்டால் சினந்து நிற்கும் விசுவாமித்திரர் சாபத்தால் இராச்சியமே பற்றியெரியும்;குடிகளும் பிற உயிர்களும் இறந்து படும்.அதற்குநான் ஒருவன் மட்டும் சாவதேமேல் ' என்று கருதி இலக்குவன் உள்ளே சென்றான்.
"என்ன விஷயம்" என்றான் இராமபிரான். "விசுவாமித்திரர் வந்திருக்கிறார்".
" உள்ளே வரட்டும்".
விசுவாமித்திரர் நுழையும் முன்பே 'இராமா மானுடவுலகில் உன் பணி நிறைவுற்றது.உனது இராமாவதாரம் முடிந்துவிட்டது.இம்மேனி துறந்து கடவுளருள் மீண்டும் கலந்திடுக.' எனப் பிரமனும் வசிட்டரும்சொல்லிமுடித்து விட்டனர். "என் தலையைத் துண்டித்துவிடுங்கள்" என்று இராமனை வேண்டினான் இலக்குவன். "நாங்கள் பேசி முடித்துவிட்டோம்.இனி உன் தலையை ஏன் துண்டிக்கவேண்டும்?". " தாங்கள் என் தமையன்.தங்களால் இயலாதுதான்.ஆனால்,அது தங்கள் வாய்மைக்கு இழுக்காகிவிடும்.தங்கள் மனையாளையே காட்டுக்கு அனுப்பினீர்களே.நான் தண்டிக்கப்பட வேண்டியவன்.போகிறேன் "என ஆதி சேடனின் அவதாரமாகிய இலக்குவன் சரயூ நதியில் மூழ்கி மறைந்தான்.
இராமன் , வீடணன் சுக்கிரீவன் முதலியோரை அழைத்து,லவ குசராகிய தம் மக்களுக்கு முடி சூட்ட ஏற்பாடு செய்து விட்டுத் தானும் சரயூ நதியில் இறங்கினான்.
அதே வேளையில் பாதாளலோகத்தில் ராம நாமத்தை இடைவிடாமல் ஓதிக்கொண்டிருந்தஅனுமன் அதன் தலைவன் முன் நிறுத்தப்பட்டான். "யார் நீ?".
"அனுமன்".
"அனுமன்? இங்கு ஏன் வந்தாய்?".
" இராமபிரான் மோதிரத்தை மீட்க".
தலைவன் ஒரு தட்டைச்சுட்டிக்காட்டினான்.அதில் ஆயிரக்கணக்கான மோதிரங்கள்கள். அனைத்தும் இராமனுடையவை.அத் தட்டை அனுமனிடம்தாழ்த்தி "உன் இராமனின் மோதிரத்தை எடுத்துக்கொள்" என்றான்.அவை யாவும் ஒரே மாதிரி இருந்தன.
" எது என்று தெரியவில்லை" எனத் தலை குலுக்கினான் அனுமன். "இந்தத் தட்டில் எத்தனை மோதிரங்கள் உள்ளனவோ அத்தனை இராமாயணங்கள் உள்ளன.நீ மண்ணுலகிற்குச் செல்லும்போது இராமனைக் காண முடியாது.இந்த ராமனின் அவதாரம் முடிந்து விட்டது.அவ்வாறு முடியும் தறுவாயில் அவன் மோதிரம் கழன்று வீழும்.அவற்றை நான் சேகரித்து வைப்பேன்.நீ போகலாம்" என்றான் பாதாளலோகத்தலைவன்அனுமன் அகன்றான்.
***
இக்கதை இந்தி நாட்டுப்புறக் கதைகளில் ஒன்று.தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களையும் பக்திப் பனுவல்களையும் ஆங்கில ஆக்கங்கள் வழி அகிலம் அறியச்செய்த ஏ.கே.இராமானுஜன் அவர்கள் தம் ,Three Hundred Ramayanas:Five Examples and Three Thoughts on Translation( The Collected Essays of A.K.Ramanujan, Edited by Vinay Dharwadker , Oxford University press, New Delhi ,2013 , pp.131 - 160)என்னும் கட்டுரையை இக் கதையிலிருந்துதான் தொடங்குகிறார்.இக்கட்டுரை தில்லிப் பல்கலைக்கழக வரலாற்று மாணவர்களுக்குத் துணைப் பாடமாயிருந்து, எதிர்க்கப்பட்டு,வழக்குமன்றக் கருத்தின்படி,அறிஞர் குழு ஆய்ந்து ஏற்ற பின்னும் பாடத்திலிருந்து துணைவேந்தரால் நீக்கப்பட்டது. (இப்போது வழக்குமன்றமே நீக்கிவிடுமோ!)
இராமபிரான் பிறப்பிடம் இப்போதைய - அதுவும் 'சர்ச்சை'க்குரிய மசூதி இருந்த இடம்தான் என்று நம்பிக்கை அடிப்படையில் உச்ச வழக்கு மன்றம் தீர்ப்பளித்துவிட்டது.
எந்த இராமாயண நம்பிக்கையின்படி?
ஒரே தேசம் ஒரே இராமன்!
*இது 17.10.2015 அன்று, எனது கைவிடப்பட்ட வலைப்பூவில் ,வந்தது.
அனுமன் படம்-நன்றி: https://encrypted-tbn0.gstatic.com/images
No comments:
Post a Comment